Skip to main content

“கலைஞரின் கருணைக்கு ஒரு சான்று...” - வைரமுத்து 

Published on 20/06/2023 | Edited on 20/06/2023

 

“A testament to the grace of the Kalaignar..” - Garamuthu
கோப்புப் படம்

 

மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞரின் 100வது பிறந்தநாள் இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடப்படும் என முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதனையொட்டி தமிழகம் முழுவதும் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை துறைமுக சட்டமன்ற தொகுதியில் இராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைச்சர் சேகர்பாபு கலைஞர் நூற்றாண்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தார். அந்த விழாவில் வைரமுத்து, மதுக்கூர் ராமலிங்கம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.

 

அதில் வைரமுத்து பேசியதாவது; எல்லாவற்றிலும் சிறந்த தானம் அது செய்தி தானமும், அறிவு தானமும் தான். அதை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்வது தான் சிறப்பு. அதனால் பத்திரிகை நண்பர்கள் அனைவரும் நான் சொல்லக்கூடிய செய்தியை மற்றவர்களுக்கு பகிர வேண்டும். தமிழர்கள் நன்றியுள்ள கூட்டமா இல்லையா என்று தமிழர்களை சோதிப்பதற்கு காலம் கலைஞரின் நூற்றாண்டை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.

 

ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து, தன்னை தானே செதுக்கி, பல்வேறு வசைப்பாடுகளைத் தாங்கி, தியாகம் செய்து இந்த தமிழ் மண்ணுக்கு அர்ப்பணித்து சென்றிருக்கிறார் கலைஞர். அப்படிப்பட்டவருக்கு தமிழர்களாகிய நாம் என்ன நன்றி காட்டப் போகிறோம்.

 

கலைஞர் இயல்பாகவே கருணை மிக்கவர். அதற்கு சான்றாக  கலைஞர் இரண்டாவது முறையாக முதலமைச்சராக இருந்த போது அரசு ஊழியர்கள் இறந்தால் இரக்கத் தொகையாக  10,000 ரூபாய் அவர்களது குடும்பத்திற்கு கொடுக்கப்படும் என்று அறிவிக்கிறார். இதைப் பற்றி கலைஞர், அரசு அதிகாரிகளிடம் பேசும் போது ஒரு அதிகாரி அந்த திட்டத்தை தடுக்கும் முயற்சியில் இந்த தொகை அதிகமாக தோன்றுகிறது என்று கூறுகிறார். அதற்கு இந்த 10,000 ரூபாய் இறந்த குடும்பத்துக்கு அதிகம் இல்லை என்று கலைஞர் கூறுகிறார். மேலும் இந்த தொகை இயல்பாக இறந்தவர்களுக்கு மட்டும் தானா? தற்கொலை செய்தவருக்கும் சேர்த்தா என்று அதிகாரி கேட்கிறார். அதற்கு கலைஞர் சற்றும் யோசிக்காமல் இந்த தொகை  இறந்தவர்களின் குடும்பத்துக்கு தானே தவிர இறந்தவர்களுக்கு கிடையாது. அவர் எப்படி இறந்தாலும் அனாதையாக இருப்பது அவரது குடும்பம் தான். அதனால் தற்கொலை செய்தவருக்கும் சேர்த்து தான் இந்த 10,000 ரூபாய் என்று கூறுகிறார். இப்படி கருணையுள்ளம் கொண்ட  கலைஞரை பற்றி தான் நீங்கள் மற்றவர்களுக்கு பகிரக்கூடிய செய்தியாக இருக்க வேண்டும்” என்றார். 

 

 

Next Story

“பாரதிதாசனை தி.மு.க குறியீடாக சுருக்கிவிட்டனர்” - வைரமுத்து  

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
vairamuthu about bharathidasan

பாவேந்தர் பாரதிதாசனின் 134வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள பாரதிதாசனின் உருவச்சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. இதனிடையே பாரதிதாசன் குறித்த நினைவுகளை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

அந்த வகையில் தமிழக முதல்வர், மு.க.ஸ்டாலின், தமிழக சார்பில் மரியாதை செய்யப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்து, “தமிழ்எங்கள் உயிரென்ப தாலே - வெல்லுந்தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே

பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு
திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா!
எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலியெனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!

எனக் கனல்தெறிக்கும் வரிகளால் திராவிட இனமானமும் தமிழுணர்வும் ஊட்டிய எம் புரட்சிக்கவி பாவேந்தருக்கு அவர்தம் பிறந்தநாளில் வீரவணக்கம்” என அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

இதையடுத்து கவிஞர் வைரமுத்து, “பாரதியாரை தேசியத்தின் குறியீடாகவும் பாரதிதாசனை திராவிடத்தின் குறியீடாகவும் ஆதியில் அடையாளப்படுத்தியவர்கள், காலப்போக்கில் பாரதியாரை காங்கிரஸ் குறியீடாகாவும் பாரதிதாசனை தி.மு.க குறியீடாகவும் சுருக்கிவிட்டனர். காங்கிரசும் தி.மு.கவும் கூட்டணி கொண்டாடும் இந்தக் காலகட்டத்திலாவது இருபெருங் கவிஞர்களையும் மீண்டும் தேசிய திராவிடக் குறியீடுகளாக மேம்படுத்த வேண்டுகிறேன். இருவரும் கட்சி கடந்தவர்கள்; தத்துவங்களுக்குச் சொந்தமானவர்கள். பாவேந்தர் பிறந்தநாளில் இந்த இலக்கியக் கோணல் நிமிர்ந்து நேராகட்டும்” என அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

Next Story

“சில வாரங்கள்; ஐந்தாண்டுகள்” - தேர்தல் குறித்து தனது ஸ்டைலில் வைரமுத்து

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
vairamuthu about election vote

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்ட வாக்குப் பதிவு நாளை (19.04.2024) தொடங்குகிறது. இதில் தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகள் அடங்கும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டதையடுத்து நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் ஆணையத்தின் விதிப்படி பிரச்சாரத்தை முடித்துக் கொண்டனர். 

இதனிடையே வாக்குரிமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் திரைப் பிரபலங்கள் பேசி வருகின்றனர். ஏற்கனவே விஜய் சேதுபதி, “நமக்காக இல்லைன்னாலும் நம்ம குழந்தைகளோட எதிர்காலத்திற்கும், நம்ம அடுத்த தலைமுறையோட எதிர்காலத்திற்கும் நிச்சயமா ஓட்டு போட வேண்டும். காசு வாங்கிட்டு ஓட்டு போடுவது, காசுக்காக ஓட்டை விற்பது எவ்ளோ பெரிய துரோகமோ, அதை விட பச்சை துரோகம் ஓட்டு போடாமல் இருப்பது” என விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டிருந்தார். பின்பு விஜய் ஆண்டனியும் சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பு அனைத்திலும் அனைவரும் ஓட்டு போட வேண்டும் என வலியுறுத்தி வந்தார். 

இவகளைத் தொடர்ந்து ஜெய் பீம் இயக்குநரும், “வாக்குரிமை என்பது என் உரிமைகளைக் காத்து, உணர்வுகளைப் புரிந்து ஆட்சி செய்கிற ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் சமூகக் கடமை” என அவரது எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டு இந்தியா கூட்டணிக்கு அனைவரும் வாக்களிக்குமாறு வேண்டுகோள் வைத்தார்.

இந்த வரிசையில் தற்போது வைரமுத்துவும், அவரது எக்ஸ் பக்கத்தில் வாக்குரிமையின் முக்கியத்தும் குறித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “விரலில் வைத்த கருப்புமை நகத்தைவிட்டு வெளியேறச் சில வாரங்கள் ஆகும். பிழையான ஆளைத் தேர்ந்தெடுத்துவிட்டால் அநீதி வெளியேற ஐந்தாண்டுகள் ஆகும். சரியான நெறியான வேட்பாளருக்கு வாக்களியுங்கள். வாக்கு என்பது நீங்கள் செலுத்தும் அதிகாரம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.