Skip to main content

இணை ஆணையர் ஆக்கிரமித்த 150 கோடி ரூபாய் கோயில் சொத்து! - குடிசைவாசிகளை மட்டும் விரட்டும் இந்து அறநிலைத்துறை!

Published on 22/01/2021 | Edited on 22/01/2021

 

“முப்பது வருசமா இங்கதான் குழந்தை குட்டிகளோடு வாழ்ந்துக்கிட்டிருக்கோம். எங்க குடிசைகளையே இடிக்கப்போறதா சொல்லி, சோத்துல மண்ணள்ளி கொட்டிட்டாங்க இந்து அறநிலையத்துறைக்காரங்க. எந்த நேரத்துல இடிக்க வருவாங்களோன்னு ஒவ்வொரு நிமிஷமும் பயந்து பயந்து செத்துக்கிட்டிருக்கோம்.  குழந்தை குட்டிகளோடு எங்கப் போவோம்னே தெரியல” என்று இந்து அறநிலையத்துறை ஆணையரிடம் மனு கொடுத்து கண்ணீரோடு கதறிக்கொண்டிருக்கிறார்கள் சென்னை பரங்கிமலை கிராமத்தைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட குடிசைவாசிகள்.

 

2021 ஜனவரி 12ந் தேதி சென்னை நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையிலுள்ள இந்து சமய அறநிலையத்துறை & அறக்கட்டளை ஆணையர் (Hindu Religious and Charitable Endowments Department) அலுவலகத்தில் திரண்ட மக்கள், “பரங்கிமலை (St. Thomas Mount ) கிராமத்தில் குவாரிகளில் வேலை பார்த்துக்கொண்டே கடந்த 35 வருடங்களுக்கு மேலாக வசித்துவரும் 15க்கும் மேற்பட்ட குடும்பங்களின்  குடிசைகளை அகற்றப்போவதாக கூறி நோட்டீஸ் அனுப்பியதோடு, அடையாளம் தெரியாத நபர்கள் மூலம் பணம் கேட்டு மிரட்டினார்கள் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ஹரிப்பிரியா மற்றும் திரிசூலம் உதவி ஆணையர் உள்ளிட்டவர்கள். அதனால், பணம் கேட்டு மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, எங்கள் குடிசைகளை இடிக்காமல் தடுக்கவேண்டும்” என்ற கோரிக்கை மனுவோடு ஆணையரை சந்திக்கச் சென்றார்கள். ‘ஆணையர் இல்லை டி.ஆர்.ஓவை பாருங்கள்’ என்றதால் அவரிடம் தங்களது மனுவை கொடுத்துவிட்டு வெளியில் வந்தார்கள்.

 

குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என வந்த அப்பகுதி மக்களிடம்  நாம் பேசியபோது, “பரங்கிமலை கிராமத்துல ஜல்லி உடைக்கும் வேலை பார்த்துக்கிட்டே  இராணுவத்துக்கு சொந்தமான மற்றும் புறம்போக்கு இடத்துல குடிசைகள் அமைத்து 30 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்துக்கிட்டிருக்கோம்ங்க. பிறகு, அந்த குவாரிகள் மூடப்பட்டதால, அக்கம்பக்கத்துல கூலிவேலைக்குப் போயித்தான் வாழ்க்கைய நடத்துறோம்.

 

திடீர்ன்னு, இந்த இடம் மாங்காளி அம்மன் கோயிலுக்கு சொந்தமான இடம்னும் இந்த இடத்தை இந்து அறநிலையத்துறை எடுத்துக்கிட்டதாகவும் நோட்டீஸ் அனுப்பிட்டாங்க. அதுக்கப்புறம், எங்கள் சார்பா ஜல்லி உடைக்கும் குவாரி வைத்திருந்த ஜவஹர் அலிங்குறவர் நீதிமன்றத்தில் தடை கேட்டு சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டுவருவதாக சொன்னாரு. அதற்குப் பிறகு, குடிசைகள் இடிக்கப்படவில்லை. ஆனா, கடந்த சில ஆண்டுகளாக இணை ஆணையர் ஹரிப்பிரியா மற்றும் உதவி ஆணையர் உள்ளிட்டவங்க அனுப்பினதாகவும் பணம் கொடுத்தால் இடிக்காமல் தடுக்கலாம். இல்லைன்னா அவங்களே தூண்டிவிட்டு வழக்கெல்லாம் போடவெச்சு சட்டப்படி நெருக்கடி கொடுப்பாங்கன்னும் சொல்லிக்கிட்டிருந்தாங்க. நாங்களே கூலி வேலை செஞ்சு வாழ்றவங்க. எங்க குடிசைகளைப் பாருங்க. நீங்க, கேட்குற பணத்தை நாங்க எப்படி கொடுக்கமுடியும்னு சொன்னோம்.   

 

2013 ஆண்டிலிருந்து இந்த இடம் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம்னு சொன்னா, எங்கக்கிட்ட சட்டப்படி வரி, வாடகை எல்லாம் வசூலிச்சிருக்கலாமே? ஆனா, எதுவும் செய்யாம மிரட்டி பணம் பறிக்கிறதிலேயே குறியா இருந்தாங்க இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு வேண்டப்பட்டவர்கள். அதனாலதான், இந்து அறநிலையத்துறை ஆணையரைச் சந்தித்து, இந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு எங்கள் குடிசைகளை இடிக்காமல் இருக்க உத்தரவிடுமாறு கோரிக்கை மனு கொடுக்கவந்தோம். இந்த, இடம் மாங்காளி அம்மன் கோயிலுக்கு சொந்தமான இடமே இல்ல. கோயிலே புறம்போக்கு இடத்துலதான் இருக்கிறதா வி.ஏ.ஓ., தாசில்தார் ஆஃபிஸுல இருக்கிற ‘அ’ பதிவேட்டில் தெளிவா இருக்கு. அப்புறம், எப்படி இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி இப்படி எங்களோட வாழ்வாதாரத்தை சீரழிக்கிறாங்கன்னு தெரியல” என்று கண்ணீர் வடித்து கதறுகிறார்கள்.

 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குதிரைமொழி கிராமத்தில் உள்ள சுந்தர நாச்சியம்மாள்  திருக்கோயிலுக்கு சொந்தமான, சர்வே எண்-143 லுள்ள 473 ஏக்கர் இடத்தில், சுமார் 150 கோடி  ரூபாய் மதிப்புள்ள 75 ஏக்கரை இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதியின் அப்பா, அம்மா, சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் பெயர்களுக்குப் பட்டா மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இதுகுறித்து, ‘நக்கீர’னில் ஏற்கனவே அம்பலப்படுத்தியிருக்கிறோம்.

 

அதாவது, இந்து அறநிலைத்துறையின் அதிகாரியாக ஜே.சி பாரதி இருக்கும்போதே தனது அப்பா பாலகிருஷ்ணன் அறங்காவலராக இருந்த, திருச்செந்தூர் வட்ட குதிரைமொழி கிராமத்திலுள்ள அருள்மிகு சுந்தர நாச்சியம்மாள் திருக்கோயிலுக்கு சொந்தமான  473 ஏக்கர்  கோயில் நிலத்திலிருந்து 75  ஏக்கர் நிலத்தைத் தனது உறவினர் தங்க வடிவம்மாளுக்கு விதிகளுக்குப் புறம்பாக 1993 ஆம் ஆண்டு குத்தகைக்கு கொடுத்துவிட்டார்.  

 

பிறகு,  1994 பிப்ரவரி-24 ந்தேதி தங்கவடிம்மாளிடமிருந்து தன்னுடைய  அப்பா பாலகிருஷ்ணன் பெயருக்கு (ஆவண எண் -866867/94)  போலியாக தனிநபர் பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோயில் நிலத்தை தனிநபர் பட்டா மாற்றம் செய்வதே சட்டப்படி குற்றம். அதற்குப்பிறகு, 2014  நவம்பர்-26 ந்தேதி இணை ஆணையர் பாரதியின்  சகோதர்கள் ராஜன், மாணிக்கம் ஆகியோரின் பெயர்களுக்கு தனிநபர் பட்டா மாற்றம் (ஆவண எண் 2547/2014) செய்யப்பட்டுள்ளது.

 

திருச்செந்தூர் சுப்பிரமணிய கோயிலில் பாரதிக்கு இணை ஆணையராக கூடுதல் பொறுப்பு வழங்கியபோது, மீண்டும்  இந்நிலத்தின்  பட்டாவை  தனது அப்பா ஜி.ஆர் பாலகிருஷ்ணன், சகோதரர்கள் ராஜன், மாணிக்கம், அம்மா எஸ்தர் கனி என்கிற கனகம் அம்மாள் மற்றும் உறவினர்கள் பெயர்களுக்கு 2019 மே மாதம் மோசடியாக மாற்றியிருக்கிறார் இணை ஆணையர் பாரதி. இந்த மோசடிக்கு திருசெந்தூர் கோட்டாட்சியர் உள்ளிட்டோர் துணையாக இருந்திருக்கிறார்கள். இதுகுறித்து, அப்போதைய நிர்வாக அதிகாரி எசக்கியப்பன் கொடுத்தப் புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மு.வீரப்பன் விசாரணை செய்து, மோசடி நடந்திருப்பது உண்மைதான் என உயரதிகாரிகளுக்கு ரிப்போர்ட் அனுப்பியுள்ளார்.

 

வீடுகளைக் காலி செய்யவேண்டும் என்று பரங்கிமலை கிராம மக்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய இணை ஆணையர் ஹரிப்பிரியா மீதும் பல்வேறு ஊழல் முறைகேடு குற்றச்சாட்டுகள் உள்ளன. மேலும், ஹரிப்ரியா மீது ஒப்பிலியப்பன் கோவில் புராதனமான ஆபரணங்களை உருக்கிட அனுமதி அளித்த குற்றச்சாட்டுக் குறிப்பாணையின் விதி 17(b) மெமோ கொடுக்கப்பட்டு சஸ்பெண்ட் (தற்காலிக பணி நீக்கம்) செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதுகுறித்து, இணை ஆணையர் ஹரிப்பிரியாவிடம் நாம் கேட்டபோது, “அரசாங்க பதிவேட்டில் அந்த இடம் மாங்களி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடம் என்று உள்ளது. அது, புறம்போக்கா பட்டாவா என்பதை ஆராயத் தேவையில்லை. அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் அந்த கோயில் வருவதால் ஆக்கிரமிப்பாளர்களை அகற்றச் சொல்கிறோம். ஏற்கனவே, நான் நோட்டீஸ் அனுப்பியபோது யாருடைய பேச்சைக் கேட்டுக்கொண்டோ அந்த மக்கள் ஆஜராகவில்லை. நான், பணம் கேட்டு யாரையும் அனுப்பவில்லை. அவர்கள், இந்து அறநிலையத்துறை ஆணையரிடம்தான் மேல்முறையீடு செய்ய வேண்டும். அவர்தான், அந்த இடத்திலிருந்து அம்மக்களை அகற்றுவதா? அல்லது அந்த இடத்துக்கான வாடகை வசூலிப்பதா என்பது குறித்து முடிவுசெய்வார்” என்றார் விளக்கமாக.   

 

dddd

 

பரங்கிமலை கிராம மக்களுக்கான நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதாக கூறும் குவாரி உரிமையாளர் ஜவஹர் அலியிடம், 15 குடும்பங்களுக்காக என்ன மாதிரியான சட்டப் போராட்டடத்தில் ஈடுபட்டு வருகிறீர்கள் என்று நாம் விளக்கம் கேட்டபோது, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் இதுகுறித்து எந்த தகவலையும் கூறமுடியாது என்று முழுமையாக விளக்கம் அளிக்க மறுத்துவிட்டார்.

 

இந்து அறநிலையத்துறையின் இணை ஆணையர்களே 150 கோடி ரூபாய் கோயில் சொத்துக்களை அபகரித்துக்கொள்வதும் ஊழல் முறைகேடுகள் என கொள்ளை அடிப்பதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அமைதி காக்கும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், தங்களது வாழ்வாதாரத்துக்காக கூலிவேலை செய்து வாழ்க்கையை ஓட்டும் குடிசைவாசிகளின் வீடுகளை இடித்து நடுத்தெருவில் நிற்கவைத்து, சட்டம் - நீதியை நிலைநாட்ட துடிப்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை. மேலும், 15 குடும்பங்களையும் எப்படியாவது விரட்டிவிட்டு தங்களது வியாபாரத்திற்காக அந்த இடங்களை ஆக்கிரமித்துக்கொள்ளலாம் என்று அப்பகுதி அரசியல் புள்ளிகள் காய்நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு, இந்து அறநிலைத்துறை துணைபோய்க்கொண்டிருக்கிறது.   

 

Next Story

ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sharmila handed over to Praveen parent

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணைக் கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்தக் காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால், ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியதோடு கொலைக்கு காரணமான தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஷர்மிளாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று (25.04.2024) வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Next Story

ஆஜரான மாவட்ட ஆட்சியர்கள்; விசாரணை இடத்தை மாற்றிய அமலாக்கத்துறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors present ed changed the place of investigation

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி, அரியலூர் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா, கரூர் ஆட்சியர் தங்கவேல், திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் இன்று (25.04.2024) காலை 10.30 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது மாவட்ட ஆட்சியர்களிடம் நுங்கம்பாக்கத்தில் மற்றொரு இடத்தில் உள்ள மண்டல கிளை அலுவலகத்திற்கு செல்லுமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.