Skip to main content

தேஜஸ் ரயில் தமிழ்நாட்டிற்குத்தான் புதிது... இந்தியாவிற்கு அல்ல...

Published on 01/03/2019 | Edited on 01/03/2019

தேஜஸ் அதிவேக விரைவு ரயில் சேவையை பிரதமர் மோடி, இன்று கன்னியாகுமரியில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கிவைக்கிறார். சென்னை-மதுரை இடையேயான 495 கி.மீ தூரத்தை இந்த ரயில் வெறும் 6 மணிநேரம் 30 நிமிடங்களில் இணைக்கிறது. 2018-ம் நிதியாண்டின் பட்ஜெட்டில் இந்த ரயில் சேவையைக்குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு தற்போது பயன்பாட்டிற்கு வருகிறது.

 

tejas

 

தேஜஸ் ரயிலின் சிறப்பு அம்சங்கள்:


தேஜஸ் ரயில் மொத்தம் 15 பெட்டிகள் கொண்டிருக்கிறது. 
 

ஒரு உயர் வகுப்பு பெட்டியும், 2 டீசல் ஜெனரேட்டர் பெட்டிகளும் அதில் அடங்கும்.
 

உயர்வகுப்பு பெட்டியில் இருபுறமும் எதிரெதிரே இரு இருக்கைகளோடு மொத்தம் நான்கு இருக்கைகள் ஒரு புறமும், அதேபோல் மற்றொரு புறமும் இருக்கிறது.
மற்ற பெட்டிகளில் பேருந்தில் அமைந்திருப்பதுபோல் வரிசையாக இருபுறமும் இரு இருக்கைகள் கொண்டிருக்கிறது. 

 

tejas


 

உயர் வகுப்பு பெட்டிகளில் எதிரெதிரே இருக்கும் இரு இருக்கைகளுக்கும் இடையில் அமைக்கப்பட்டிருக்கும் மேசையில் சிறிய வீடியோ திரைகள் இருக்கிறது. அது அந்த மேசையினுள் பதிந்து இருக்கும் வகையிலும், நமக்கு தேவை எனும்போது ஒரு பட்டன் மூலம் வெளியே வரவைத்து பயன்படுத்தும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.
 

மற்ற பெட்டிகளில் ஒவ்வொரு இருக்கைகளின் பின்புறமும் சிறிய வீடியோ திரைகள் இருக்கிறது. 
 

இந்த வீடியோ திரைகளில் ரயிலிலே கொடுக்கப்பட்டிருக்கும் வை-பை கொண்டு பயன்படுத்திக்கொள்ளலாம். அல்லது பயணிகள் தங்களின் பென்ட்ரைவ் கொண்டும் பயன்படுத்திக்கொள்ளலாம். 
 

ஒவ்வொரு பெட்டியின் நுழைவு வாயிலிலும் தானியங்கி டீ, காபி இயந்திரங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. 
 

ஒவ்வொரு இருக்கைக்கும் தனித்தனியே எல்.ஈ.டி. விளக்குகள்.
 

tejas

 

பெட்டியின் உட்புறமும் வெளிப்புறமும் தானியங்கி கதவுகள்.
 

பயணிகள் இருக்கைகளின் கைப்பிடியில் உள்புறம் மடக்கி அமைக்கப்பட்டுள்ள வெளியே தெரியாத சிற்றுண்டி மேசைகள் அமைக்கப்பட்டிருக்கிறது.
 

பயணிகள் இருக்கைகளின் கைப்பிடியின் பக்கவாட்டில் செல்போன் சார்ஜர் வசதி.
 

உயர் வகுப்பு பெட்டியில் 56 பேரும், இருக்கை வசதி கொண்ட பெட்டிகளில் தலா 78 பேரும் பயணிக்கலாம்.
 

இத்தனை சிறப்பு அம்சங்களும்கொண்ட இந்த ரயில் பெட்டியை தயாரித்தது சென்னையில் உள்ள ஐ.சி.எஃப். இரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை என்பது தனி சிறப்பு.
 

இன்று தொடங்கும் தேஜஸ் சொகுசு ரயில் சேவை நாளை முதல் பயன்பாட்டிற்கு வருகிறது. சென்னை-மதுரை இடையே பயனிக்கும் தேஜஸ் சொகுசு ரயில் திருச்சி, கொடைக்கானல் ரோடு ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும். இந்த ரயில் மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

tejas

 

சென்னை - திருச்சிக்கு ஏசி வசதிகொண்ட அமரும் வசதி கொண்ட பெட்டிகளில் (சேர் கார்) ரூ.690,முதல் வகுப்பு சொகுசு பெட்டிக்குரூ.1,485 கட்டணமாக நிர்ணயிக் கப்பட்டுள்ளது. 
 

சென்னை - மதுரைக்கு சேர் கார் பெட்டிகளில் ரூ.895, முதல் வகுப்பு சொகுசு பெட்டிக்கு ரூ.1,940 எனவும், இதுதவிர, உணவுடன் சேர்த்து டிக்கெட் முன்பதிவு செய்தால், கட்டணம் மேலும் ரூ.100 முதல் ரூ.200 வரை அதிகரிக்கும்.
 

சென்னையிலிருந்து மதுரை செல்லும் தேஜஸ் ரயிலின் எண் 22671 மற்றும் மதுரையில் இருந்து சென்னை வரும் தேஜஸ் ரயிலின் எண் 22672. வாரத்தில் ஆறு நாட்கள் இயங்கும் தேஜஸ் ரயில் வாரந்தோறும் வியாழன் அன்று மட்டும் இயங்காது.
 

சென்னை எழும்பூரில் காலை 6 மணிக்கு புறப்படும் தேஜஸ் ரயில், திருச்சிக்கு 10.23 மணிக்கு சென்றடைகிறது. அங்கிருந்து 10.25 மணிக்கு புறப்படும் ரயில் கொடைக்கானல் ரோடு ரயில் நிலையத்தை காலை 11.38 மணிக்கு சென்றடைகிறது. அங்கிருந்து 11.40 மணிக்கு புறப்பட்டு மதுரையை மதியம் 12.30 மணிக்கு சென்றடைகிறது. 


மதுரையில் இருந்து சென்னையை நோக்கி வரும் தேஜஸ் ரயில் எண் 22672, மதுரையில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு கொடைக்கானல் ரோடு ரயில் நிலையத்திற்கு 3.28 மணிக்கு வருகிறது. அங்கிருந்து 3.30 மணிக்கு புறப்படும் ரயில், மாலை 4.50 மணிக்கு திருச்சியை வந்தடைகிறது. அங்கிருந்து 4.52 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 9.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடைகிறது. 

 
தேஜஸ் விரைவு ரயில் இந்தியாவிற்கு புதிதல்ல. தேஜஸ் ரயில் 2017-ம் ஆண்டு மே மாதம் முதலே பயன்பாட்டில் இருந்துவருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் இல்லை. மும்பை சி.எஸ்.டி முதல் கோவா கர்மாலி வரை அந்த தேஜஸ் ரயில் இயக்கப்படுகிறது. இங்கு இயக்கப்படும் ரயில் பெட்டிகளை பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆர்.சி.எஃப். எனும் ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது. இந்த தேஜஸ் ரயில் வாரத்திற்கு ஐந்து நாட்கள் இயங்கிவருகிறது. இது 22119 மற்றும் 22120 எனும் ரயில் எண்ணில் இயங்கிவருகிறது. மும்பை சி.எஸ்.டி முதல் கோவா கர்மலி இடையேயான தூரம் மொத்தம் 551.7 கி.மீ. இந்த தூரத்தை மணிக்கு 56 கி.மீ எனும் அளவில் 8 மணி 30 நிமுடங்களில் இணைக்கிறது.

 

 

 

Next Story

பார் மேற்கூரை இடிந்து 3 பேர் உயிரிழப்பு; 12 பேர் மீது வழக்கு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Bar roof collapses, 3 lost live Case against 12 people

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமாக இயங்கி வந்த பாரின் முதல் தளத்தின் மேற்கூரை நேற்று இரவு திடீரென யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்தனர். உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த விபத்து குறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக் கொண்டுள்ளதாகத் தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின் போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் முதற்கட்டமாக 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள அபிராமபுரம் போலீசார், பாரின் மேலாளர் சதீஷ் உட்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.