Skip to main content

செந்தில் பாலாஜி கைது தலைப்பு செய்தியாகக் கூடாது; திட்டமிட்டுச் செயல்படுத்திய அமலாக்கத் துறை - மூத்த பத்திரிகையாளர் பாண்டியன்

Published on 17/06/2023 | Edited on 17/06/2023

 

 Tamizha Tamizha Pandian Interview

 

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத் துறையின் நடவடிக்கைகளுக்கு எதிராக திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு அவை விசாரணையில் இருக்கின்றன. இந்நிலையில், செந்தில் பாலாஜியின் கைது தொடர்பாக  மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியனை சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம். அதற்கு அவர் அளித்த பதில்கள் பின்வருமாறு...

 

செந்தில் பாலாஜி முழு ஒத்துழைப்பு தருகிறேன் எனச் சொன்ன பிறகும் அவருக்கு நெஞ்சுவலி வரும் அளவிற்கு நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறாரே?

 

தினசரி செய்தித்தாள்களில் செந்தில் பாலாஜி கைது என்ற விசயம் காலையில் தலைப்புச் செய்தியாக வந்துவிடக் கூடாது என்று அமலாக்கத் துறையினர் மிகவும் கவனமாக இருந்துள்ளனர். ஏனென்றால் அதிகாலை 1 மணிக்கு மேல் தான் அனைத்து முன்னணி பத்திரிகைகளும் தலைப்புச் செய்திகளை அச்சடித்து அனுப்புவார்கள். அதைக் கருத்தில் கொண்டுதான் அதிகாலை 2:30 மணி அளவில் அனைத்து பத்திரிகை, செய்தி ஊடகங்களையும் அமலாக்கத் துறையினர் அலுவலகத்திற்கு வாருங்கள் என்று அழைக்கிறார்கள்.

 

ஆனால், அதுவரை அமலாக்கத் துறையினர் செந்தில் பாலாஜியின் கைதைப் பற்றி தெரிவிக்கவில்லை. அதன் பிறகு தான் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி, உடல்நலக் குறைபாடு போன்ற செய்திகள் அனைத்துமே அடுத்த நாள் காலையில் வருகிறது. இதன் மூலம், அமலாக்கத் துறையினர் யாருடைய கட்டளைக்காகவோ காத்திருப்பதாகத் தெரிகிறது. செந்தில் பாலாஜிக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்ட போதும் அமலாக்கத் துறையினர் அவரை நம்பாமல் எய்ம்ஸ் மருத்துவக் குழு சோதித்தால்தான் நம்புவோம் என்று  சொல்லுகிறார்கள்.

 

செந்தில் பாலாஜி 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது அதிமுக தொழிற்சங்க மாவட்டச் செயலாளர்கள் மூலம் பணம் வாங்கப்பட்டது என்ற புகாரின் பேரில்தான் இந்த வழக்கு போடப்பட்டது. பின்பு திமுகவின் அமைச்சரான செந்தில் பாலாஜி அந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்கத் தயாராக இருந்தபோதும் அந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், பணத்தைக் கொடுத்த சாதாரண மக்கள் உச்சநீதிமன்றம் வரை செல்ல வாய்ப்பு இல்லை. ஆக, இதற்குப் பின்னால் அரசியல் இருக்கிறது என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும்.

 

தற்போது செந்தில் பாலாஜிக்கு நெருக்கடி கொடுக்க என்ன தேவை இருக்கிறது என்று பார்த்தால் திமுகவின் முதுகெலும்பாக இருக்கிறார் அவர். பல தேர்தல்களில் திமுக வெற்றி பெறுவதற்கு செந்தில் பாலாஜியின் பங்கு முக்கியமாக இருக்கிறது. அது தான் பாஜகவிற்கு மிகுந்த நெருக்கடியாக இருந்துள்ளது. தமிழகத்தில் 38 எம்.பி.க்களை வைத்திருக்கிற திமுக, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறக் கூடாது என்பது பாஜகவின் நிலைப்பாடு. ஆனால், 38 சீட்களையும் வெற்றி பெறுவதற்கு திமுகவிற்கு பக்கபலமாக இருப்பது செந்தில் பாலாஜி.

 

செந்தில் பாலாஜியை முடக்கினால் தான் திமுகவை முடக்க முடியும் என்ற நோக்கத்தில் அவருடைய இந்த இரண்டு ஆண்டுகளில் ஏதாவது ஊழல் நடந்திருக்கலாம் என்று அமலாக்கத் துறையின் மூலம் கிட்டத்தட்ட 40 இடங்களில் சோதனை நடத்தியுள்ளனர். தலைமைச் செயலகம் வரை சோதனை நடத்தியும் எந்த ஆவணங்களும் கிடைக்காததால் செந்தில் பாலாஜியின் பழைய வழக்கான 2011 ஆம் ஆண்டு நடந்த ஊழல் வழக்கை வைத்துக் கொண்டு செந்தில் பாலாஜியின் அரசியல் வாழ்க்கையை முடிக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

 

வருமானவரி துறையினர்கள் எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் மீது மட்டும் சோதனை நடத்துவார்களே தவிர பாஜகவினர்களை சோதனை நடத்தமாட்டார்கள். பக்கத்து மாநிலமான புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியில் இருந்த ஜான் குமார் மற்றும் அவருடைய மகனும் பாஜகவிற்கு மாறிய பிறகு பாஜகவின் எம்.எல்.ஏவாக இருக்கிறார்கள். முன்னாள் முதல்வர் நாரயணசாமி தலைமையில் ஆட்சி நடந்த போது அவருக்கு பக்கபலமாக அதிக இடங்களை பெற்றுத் தந்தவர் ஜான் குமார். அந்த ஜான் குமாரை முடக்க வேண்டும் என்பதற்காக அவரது வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர் பாஜகவினர். அதன் பிறகு, அந்த சோதனைக்கு பயந்து பாஜகவில் தான் மட்டுமல்லாமல் தனது மகனையும் இணைத்துக் கொண்டுள்ளார். பின்பு, அவருக்கும் அவரது மகனுக்கும் எம்.எல்.ஏ சீட்களை கொடுத்துள்ளனர் பாஜகவினர்.

 

அதே போல, புதுச்சேரியில் உள்ள தி.மு.க எம்.எல்.ஏ வெங்கடேசன், காங்கிரஸ் சபாநாயகர் சிவகொழுந்து, மற்றும் அவரது தம்பி ராமலிங்கம் போன்றவர்கள் வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். ஜான் குமாரை போல இவர்களும் பயந்து பாஜகவில் இணைத்து கொண்டுள்ளார்கள். இப்படி 4 எம்.எல்.ஏக்களை தன்வசப்படுத்தியுள்ளனர் பாஜகவினர். இதன் வெளிப்பாடாக நாரயணசாமி ஆட்சி கவிழ பாஜக முக்கியக் காரணமாக இருந்துள்ளது. இப்படித்தான் பாஜக புதுச்சேரியில் வளர்ந்துள்ளது. இதே போன்ற சூத்திரத்தைத் தான் தமிழகத்திலும் செயல்படுத்த பாஜக முன்னெடுத்து வருகிறது. ஆனால், செந்தில் பாலாஜியை பொருத்தவரையில் தனது கடைசி காலம் வரைக்கும் திமுகவில்தான் என்று உறுதியாக இருப்பார்.

 

 

Next Story

செந்தில் பாலாஜியின் மனு; அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
The court ordered the enforcement department! for Petition of Senthil Balaji

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதியதாக மனுத்தாக்கல் செய்தார். இதனையடுத்து, செந்தில் பாலாஜி புழல் சிறையிலிருந்து காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 21வது முறையாக நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். 

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘மோசடி வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யும் முன் அமலாக்கத்துறை வழக்கு விசாரணையை துவங்க முடியாது. எனவே, தனக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. அந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்த போது, அந்த மனுவுக்கு மறுப்பு தெரிவித்தது. மேலும், ‘அமலாக்கத்துறை வழக்கு ஆரம்ப நிலையில் உள்ளதால் எந்த நிவாரணமும் வழங்க முடியாது. எனவே, செந்தில் பாலாஜி மனுவுக்கு ஏப்ரல் 25ஆம் தேதிக்குள் அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும்’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. 

Next Story

செந்தில் பாலாஜியின் மனு; அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு 

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
 Court order to enforcement department fot Petition of Senthil Balaji

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

மேலும், அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதற்கு இன்று (16.02.2024) தேதி குறிக்கப்பட்டிருந்தது. இதற்காக, ‘செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட வேண்டும்’ என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டிருந்தார். அப்போது இந்த வழக்கை தள்ளி வைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கை, அமர்வு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் அமலாக்கத்துறை விசாரணை தொடர்பான செந்தில் பாலாஜியின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதியதாக மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “விசாரணை முடியும் வரை குற்றச்சாட்டு பதிவைத் தள்ளி வைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, செந்தில் பாலாஜி புழல் சிறையிலிருந்து காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 21வது முறையாக நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். 

இந்த நிலையில், அமலாக்கத்துறை வழக்கில் விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித முகாந்திரமும் இல்லை’ என்று கூறப்பட்டிருந்தது. அந்த மனு மீதான விசாரணை இன்று (20-02-24) நடைபெற்றது. அப்போது, செந்தில் பாலாஜி மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு விசாரணையை மார்ச் 4ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.