வெறுப்பும், நெருப்பும்! மு.தமிமுன் அன்சாரி MLA  கவிதை

mjk

இறைவா...

பூவுலகின் தலைவா...

விண்ணுக்கும், மண்ணுக்கும்

இடையில்,

கண்ணுக்கு தெரியாத

ஒரு கிரிமியோடு,

நாங்கள்

மூன்றாவது உலகப் போரை

நடத்திக் கொண்டிருக்கிறோம் !

*

இது விசிறிக்கும்

வியர்க்கின்ற கோடை காலம்!

கூடவே

'கொரணா' காலம் !

*

அரசர்களுக்கும், அதிபர்களுக்கும்,

பிரதமர்களுக்கும் கலக்கம் !

வல்லரசுகளுக்கு நடுக்கம் !

சாதனைகள் எல்லாம்

சோதனைகளாக்கப்பட்டுள்ளன.

ஆட்டம் போட்டவர்கள்

எல்லாம் அடங்கி கிடக்கிறார்கள்

*

ஆனாலும்

என் தேசம் எனும்

பூங்காவனத்தில்

அமைதி புறாக்கள்

சிறகொடிந்து கிடக்கின்றன.

கொத்துக் கொத்தாய்

மனித உயிர்கள்

மாண்டுப் போகும் நிலையிலும்

மதங்கொண்ட

யானைகள் மட்டும்

மோதிக் கொண்டிருக்கின்றன.

பிணம் திண்ணும்

கழுகுகள்

சுற்றிக் கொண்டிருக்கின்றன.

*

சிலர்

வெறுப்பை விழுங்கி

நெருப்பை கக்குகிறார்கள்.

இதயங்களை

கிழிக்கிறார்கள்.

உறவுகளை பிரிக்கிறார்கள்.

*

சங்கரின் அடையாளம்

சகிப்புத் தன்மை!

சலீமின் அடையாளம்

சமாதானம்!

சைமனின் அடையாளம்

மன்னிப்பு!

இப்போது

சங்கரும், சலீமும்,

சைமனும்

கைக்கோர்த்த வீதிகளில்

கருநாகங்கள்

படை எடுப்பது

பதை பதைக்கிறது!

*

இறைவா...

சமயங்களில்

நெறிகளை படைத்தாயே...

சில சமயங்களில்

இவர்கள்

வெறியோடு அலைவதை

தடுப்பாயா?

'கொரணா' காலத்திலும்

'கொரில்லா'க்களைப் போல

தாக்கிக் கொள்கிறார்களே..

இது நியாயம்தானா?

*

அவர்களை இவர்களும்

இவர்களை அவர்களும்

சுட்டிக்காட்டி

சண்டைகளை போடுகிறார்கள்

mjk

சமரசம் செய்பவர்களை

விரட்டுகிறார்கள்.

சமூகத்தின் 'கணையங்களாக'

இருக்க வேண்டிய

இணைய தளங்களில்

சமாதிகளை கட்டுகிறார்கள்.

பதிலுக்கு பதில்

பழி தீர்க்கிறார்கள்.

அமைதிக்கு வேட்டு!

நட்புக்கு பூட்டு?

*

இறைவா...

மனிதர்களுக்கு

பேசும் கிளிகளும்

கூவும் குயில்களும்

ஆடும் மயில்களும்

வாழும்

நந்தவனங்களை

காட்டு...

அன்பையும்,

சகிப்புத்தன்மையையும்

சிந்திக்கும்

சகோதரர்களை தா...

கண்ணீரை துடைத்து

கட்டியணைக்கும்

நண்பர்களை தா...

அமைதிப் பூக்களை

ஏந்தி வரும்

உறவுகளை தா...

மாசற்றுப் பழகும்

நியாயவான்களை தா...

*

இறைவா....

நல்லிணக்க நதியில்

நீந்த விரும்பும் என்னை

சுழற்சியின் சுழியில் சிக்கி

மூழ்கடித்து விடாதே...

*

மனப் புழுக்கத்தில்

உருளும் எனக்கு

ஆறுதலை தா...

*

இறைவா...

உன்னிடம் மன்றாடி

கேட்கிறேன்...

என் கனவுகளை

விழிகளிலேயே

சிறை வைத்து விடாதே...

இது என் நலத்துக்கான

பிரார்த்தனை அல்ல...

நான் வாழும் நிலத்துக்கான

பிரார்த்தனை!

corona virus mjk THAMIMUN ANSARI
இதையும் படியுங்கள்
Subscribe