Skip to main content

மக்களவையில் பாஜகவைப் பதறவிட்ட தமிழக எம்.பி.க்கள்!

Published on 18/06/2019 | Edited on 18/06/2019

நமது வழியையும் ஆயுதத்தையும் எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள் என்று சொல்லப்படுவதுண்டு.
 

loksabha


புதிய மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்ச்சியில் ஆளும் பாஜக எடுத்த ஆயுதம், தமிழக எம்.பி.க்களின் ஆயுதத்தை தீர்மானிக்க உதவியிருக்கிறது.

மக்களவையில் இதுவரை இப்படி ஒரு நிகழ்வு நடந்ததில்லை என்று சொல்லுமளவுக்கு, இந்த பதவியேற்பு நிகழ்வு அமைந்துவிட்டது. புதிய உறுப்பினர்கள் உறுதியேற்பு நிகழ்வு ஜூன் 17 ஆம் தேதி திங்கள்கிழமை தொடங்கியது. பெரும்பான்மையோடு பாஜக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் என்ன நடக்கும் என்று இந்த நாடு அஞ்சியதோ அதன் தொடக்கமாகவே நேற்று அந்தக் கட்சியின் போக்கு அமைந்தது.

ஸ்மிருதி ராணி உறுதிமொழி ஏற்க அழைக்கப்பட்டவுடன் மோடி உள்ளிட்ட பாஜகவினர் நீண்ட நேரம் மேஜைகளைத் தட்டி ஆரவாரம் செய்தனர். இதுவே ஒருவிதமான அநாகரிகமாக கருதப்பட்டது. அமேதி தொகுதியில் ராகுலை தோற்கடித்ததை கொண்டாடும் வகையில் அவர்களுடைய செயல் அமைந்தது. எதிர்காலத்தில் இது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்று நடுநிலையாளர்கள் கூறினார்கள்.

இந்த அத்துமீறல் அத்துடன் முடிந்துவிடவில்லை. மத்திய அமைச்சர்கள் ஹர்ஷவர்தன், அஸ்வினி சவ்பே உள்ளிட்ட சிலர் இந்தியாவின் அலுவல் மொழியாகக்கூட இல்லாத சில ஆயிரம் பேர் மட்டுமே பேசக்கூடிய சமஸ்கிருத மொழியில் உறுதிமொழி ஏற்றார்கள். அவர்களைத் தொடர்ந்து பல்வேறு மாநில மொழிகளிலும் உறுதிமொழி ஏற்கத் தொடங்கினார்கள்.
 

 

loksabha


மாலேகான் குண்டுவெடிப்புக் குற்றவாளியான பிரக்யா தாகூர் உறுதிமொழி ஏற்றபோது தன்னை பெண்துறவி என்று கூறினார். மக்களவை விதிகளுக்கு புறம்பான இந்த வார்த்தைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. உடனே, மீண்டும் சாத்வி என்ற வார்த்தை இல்லாமல் பிரக்யா உறுதிமொழி ஏற்றார்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி.க்கள் சிலர் பதவியேற்க வந்தபோது பாஜக உறுப்பினர்கள் ஜெய்ஸ்ரீராம் என்று கோஷம் எழுப்பினார்கள். மக்களவை மரபுகளுக்கு மாறான இந்த நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்க தமிழக எம்.பி.க்கள் முடிவெடுத்தனர்.

அதன்படி செவ்வாய்க்கிழமை 18 ஆம் தேதி தமிழக எம்.பி.க்கள் அழைக்கப்பட்டபோது திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜெயக்குமார் தமிழில் உறுதிமொழி ஏற்று முடித்தவுடன் வாழ்க பெரியார் என்று கூறினார். இப்படித்தான் தொடங்கியது தமிழக எம்.பி.க்களின் அதிர்ச்சி வைத்தியம்.
 

loksabha


பெரியார் என்ற பெயர் பாஜகவினரிடம் பதற்றத்தை உருவாக்கியது. நீங்கள் ஸ்ரீராம் என்றால் நாங்கள் பெரியார் என்போம் என்கிற வகையில் இந்த உறுதியேற்பு தொடங்கியது.  மத்தியசென்னை உறுப்பினர் தயாநிதி மாறன் உறுதிமொழியை வாசித்தபிறகு வாழ்க தமிழ், வாழ்க கலைஞர், வாழ்க பெரியார் என்று உணர்ச்சிகரமாக முழக்கமிட்டார். இது பாஜகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. அடுத்துவந்த திமுக உறுப்பினர்களில் தர்மபுரி டாக்டர் செந்தில்குமார் கருப்புச்சட்டையுடன் வந்ததுடன், வாழ்க திராவிடம், வாழ்க பெரியார் என்று கூறினார்.

ஈரோடு கணேசமூர்த்தி எனது தாய்நாடு தமிழ்நாடு, தாயகத்தின் உரிமை காப்போம் என்று அதிரவைத்தார். திருமாவளவன் உறுதியேற்பின் போது வாழ்க அம்பேத்கர், பெரியார், வாழ்க ஜனநாயகம், சமத்துவம் என்றார். இந்திய ஜனநாயகக் கட்சி உறுப்பினர் பாரிவேந்தர் தமிழ் வாழ்க, இந்தியாவும் வாழ்க என்றார். கனிமொழி வாழ்க தமிழ், வாழ்க பெரியார் என்றார். சிபிஎம் உறுப்பினர் வெங்கடேசன் தமிழ் வாழ்க, மார்க்சியம் வாழ்க என்றார். சீனியர்களான டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோர் தமிழில் உறுதிமொழியை வாசித்ததோடு நிறுத்திக் கொண்டார்கள்.

காங்கிரஸ் உறுப்பினர்களில் திருநாவுக்கரசரும், கார்த்திக் சிதம்பரமும் கடவுளறிய உறுதிமொழி ஏற்பதாக கூறினர். அதிமுக உறுப்பினரான ரவீந்திரநாத் கடவுளறிய உறுதிமொழி ஏற்பதாக கூறியதுடன், வாழ்க எம்.ஜி.ஆர்., வாழ்க அம்மா, வந்தேமாதரம், ஜெய்ஹிந்த் என்று கூறி பாஜகவினரை பரவசப்படுத்தினார். பாஜக உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவாக மேஜைகளைத் தட்டினார்கள்.

மொத்தத்தில் பாஜக மேற்கொள்ளும் பிரிவினைவாத, மதவாத நடவடிக்கைகளை எதிர்கொள்ள எங்களிடம் பெரியார் இருக்கிறார் என்று தமிழக எம்.பி.க்களில் பெரும்பாலானோர் பகிரங்கமாகவே பதிவு செய்து, பாஜகவை பதற்றமடையச் செய்திருக்கிறார்கள்.

 

 

 

Next Story

மசூதி நோக்கி வில் அம்பு; சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க வேட்பாளர்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Controversial BJP candidate and Bow arrow towards the mosque in telangana

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில், மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. இங்கு பெரு நகரமாக பார்க்கப்படும் ஹைதராபாத் மக்களவைத் தொகுதி, கடந்த 1984ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஏஐஎம்ஐஎம் கட்சி வசம் உள்ளது. தனது தந்தைக்கு பிறகு, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவராக இருக்கும் அசாதுதீன் ஒவைசி ஹைதராபாத் மக்களவை தொகுதியில் எம்.பியாக உள்ளார். இவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில், உள்ளூர் பிரபலமான மாதவி லதா என்ற பெண் மருத்துவர் ஹைதராபாத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், நேற்று (17-04-24) நாடு முழுவதும் ராம நவமி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு அனைத்து மாநிலங்களில் உள்ள ராமர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளும், அதனையொட்டி ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. அந்த வகையில், தெலுங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் தலைமையில் ராம நவமி ஷோபா யாத்திரை, காவல்துறையின் தடையை மீறி நடத்தப்பட்டது. அந்த விழாவில் ஹைதராபாத் பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா பங்கேற்றார். அது தொடர்பாக ஊர்வலம் ஒன்றில் மாதவி லதா வலம் வந்த போது, அவரது செயல் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

இது தொடர்பான வீடியோவில், மாதவி லதா தனது கைகளில் வில், அம்பு பிடித்திருப்பது போல் பாவனை செய்து தொலைவிலிருக்கும் இலக்கை நோக்கி எய்கிறார். அதனைப் பதிவு செய்யும் கேமரா, அம்பின் திசை மற்றும் இலக்காக அருகில் இருக்கும் மசூதி ஒன்றை சுட்டிக்காட்டுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து, பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதாவுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதனையடுத்து, இந்த வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த மாதவி லதா, இந்தச் சம்பவத்திற்கு மன்னிப்பு கூறியுள்ளார். இது குறித்து பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா தனது ட்விட்டர் (எக்ஸ்) தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, “என்னுடைய வீடியோ ஒன்று ஊடகங்களில் பரவி எதிர்மறையை ஏற்படுத்துவது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது முழுமையடையாத காணொளி என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலும் இதுபோன்ற காணொளியால் யாருடைய உணர்வும் புண்பட்டிருந்தால், எல்லா நபர்களையும் மதிப்பதால் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்

Next Story

தாமரை வடிவில் அலங்காரம்; புகாரில் சிக்கிய வாக்குச்சாவடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Decoration in the shape of a lotus at the polling station

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாகூர் வாக்குச்சாவடியில் நுழைவு வாயிலில் தாமரை வடிவிலான அலங்காரம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், தற்பொழுது அவை நீக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் பாகூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் 11/23 என்ற எண் கொண்ட வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. அந்த வாக்குச்சாவடியின் நுழைவு வாயிலில் பேப்பரால் செய்யப்பட்ட தாமரைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. உடனடியாக இதுகுறித்து திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டிருந்த தாமரை வடிவிலான பேப்பர் பூக்களை அகற்றினர்.