Skip to main content

தமிழகத்திலுள்ள முஸ்லிம்களின் வாக்குகள் யாருக்கு ?

Published on 04/04/2019 | Edited on 04/04/2019

பிரதமர் பதவியை மோடி தக்கவைத்துக் கொள்வாரா? என்கிற கேள்வி  இந்த தேர்தலில் பரபரப்பாக எதிரொலிப்பதால் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மக்களின் வாக்குகள் மிக முக்கியமாக கவனிக்கப்படுகிறது. அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உருவாகியுள்ளதால், அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக இருந்த சிறுபான்மையினரின் வாக்குகள் எந்தப் பக்கம் தாவும் என்கிற கேள்வியும் எதிரொலிக்கிறது. "தமிழகத்திலுள்ள முஸ்லிம்களின் வாக்குகள் யாருக்கு' என முஸ்லிம் தலைவர்களிடம் கேள்வி எழுப்பினோம்.

பேராசிரியர் ஜவாஹிருல்லா (தலைவர், மனிதநேய மக்கள் கட்சி) : 
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வரும் வழக்கமான தேர்தலாக தற்போதைய தேர்தலை முஸ்லிம் மக்கள் பார்க்கவில்லை. மதச்சார்பற்ற  ஜனநாயகத்தின்படி இந்தியா பயணிக்க வேண்டுமா? அல்லது சர்வாதிகார அரசாக தொடர வேண்டுமா என்பதை தீர்மானிக்கக் கூடிய தேர்தலாக இது இருக்கப்போகிறது. காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என சொல்கிறது பா.ஜ.க.! காங்கிரஸ் கட்சியை குறிப்பிடுவதாக இதனை கருதக்கூடாது. காங்கிரசால் உருவாக்கப்பட்ட மதச்சார்பற்ற அரசியலமைப்புச் சட்டத்தை சிதைப்போம் என்பதுதான் அதன் உள்ளார்ந்த அர்த்தம். அதனை நிரூபிக்க மோடி அரசு செய்திருக்கும் அரச பயங்கரவாதம் பல உண்டு.  

 

jawaharulla



தங்களுக்கு எதிரான அடக்குமுறைகளை சிறுபான்மையினர் கவனித்தபடிதான் இருக்கிறார்கள். முஸ்லிம் சமூகத்தின் உரிமையியல் பிரச்சனையான முத்தலாக் விசயத்தில் தலையிட்டு முஸ்லிம் ஆண்களை சிறைக்குள் தள்ளவேண்டுமென்கிற மோடியின் அராஜகத்தை முஸ்லிம்கள் மறக்கவில்லை. அதனால், மோடியை வீழ்த்தும் வலிமை மிகுந்த கூட்டணியை ஆதரிப்பதே முஸ்லிம் மக்களின் கடமையாக இருக்கிறது. அந்த வகையில் தி.மு.க. உருவாக்கியிருக்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்குத்தான் முஸ்லிம்களின் 90 சதவீத வாக்குகள் பதிவாகும். 

இக்கூட்டணியிலுள்ள தோழமை கட்சிகள் அனைத்தும்  சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்காக போராடுபவை. இன்றைக்கு முஸ்லிம்களுக்கு தேர்தலில் வாய்ப்பளிக்கப்படும் பிரதிநிதித்துவம் முக்கியமா? அடிப்படை உரிமைகளை தற்காப்பது முக்கியமா? என்கிற கேள்விகள் முன்னிறுத்தப்படுகின்றன. பிரதிநிதித்துவத்தைவிட, மதச்சார்பின்மையை பாதுகாத்து தேசத்தைக் காப்பாற்றுவதே முக்கியம் என்பதில் முஸ்லிம்கள் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறார்கள். அதேசமயம், சிறுபான்மை மக்களை திசை திருப்ப பா.ஜ.க.வின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள மூன்றாவது அணிக்குப் போடுகிற ஒவ்வொரு ஓட்டும் பா.ஜ.க.வுக்கு போடுகிற ஓட்டுதான்; அது மோடியை மீண்டும் பதவியில் அமர்த்துவதற்கே உதவும் என்பதையெல்லாம் உணர்ந்தேயிருக்கிறார்கள் முஸ்லிம்கள். அதனால், மோடியை வீழ்த்தும் வலிமை கொண்ட தி.மு.க. கூட்டணிக்குத்தான் முஸ்லிம்களின் வாக்குகள் பதிவாகும். 

தெஹலான் பாகவி (தேசிய துணைத்தலைவர், எஸ்.டி.பி.ஐ): 
மீண்டும் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமையக்கூடாது என்பதே முஸ்லிம் மக்களின் தெளிவான அரசியல். பா.ஜ.க.வை வீழ்த்தும் சக்தி தி.மு.க.வுக்குத்தான் இருக்கிறது என்பதை முஸ்லிம்கள் நம்பவில்லை. ஏற்கனவே பா.ஜ.க. கூட்டணியில் தி.மு.க. இருந்தது என்பதும், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தேவைப்பட்டால் பா.ஜ.க.வை ஆதரிக்க தி.மு.க. தயங்காது என்பதும் முஸ்லிம்களின் கருத்தாக இருக்கிறது. அதாவது, தி.மு.க.வுக்கு பா.ஜ.க. தீண்டத்தகாத கட்சி அல்ல என்பதை பிரச்சாரக் களத்தில் நாங்கள் முன்வைக்கிறோம். அதனால், பா.ஜ.க.வை எதிர்க்க தி.மு.க.தான் தீர்வு என்பது முஸ்லிம்களிடம் இல்லை. பா.ஜ.க.வுடன் எப்போதும் கூட்டணி இல்லை என தி.மு.க.வைவிட பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்து பா.ஜ.க.வுக்கு எதிரான அரசியலை கட்டமைத்திருப்பவர் டி.டி.வி.தினகரன். அதேபோல தினகரன் வளர்ந்துவிடக்கூடாது என அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, நீதித்துறை, தேர்தல் ஆணையம் மூலமாக நெருக்கடியை கொடுக்கிறது பா.ஜ.க. தலைமை. பா.ஜ.க.வை தினகரன் எதிர்ப்பது என்பதைவிட தினகரனை பா.ஜ.க. எதிர்க்கிறது என்பதுதான் முக்கியமானதாக இருக்கிறது. அந்த வகையில், பா.ஜ.க. எதிர்க்கும் தினகரனை வலிமைப்படுத்துவதுதான் சரியான அரசியலாக இருக்குமென்பதில் முஸ்லிம்கள் உறுதியாக இருப்பதால் முஸ்லிம்களின் முழுமையான ஆதரவு தினகரனின் அணிக்கே கிடைக்கும்.

 

thegalan bagavi



புதுமடம் ஜாஃபர் அலி ( முஸ்லிம் சமூக அரசியல் ஆய்வாளர், எழுத்தாளர்):
தமிழகத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் 80 லட்சம். சில தொகுதிகளில் தீர்மானிக்கும் சக்தியாகவும் பல தொகுதிகளில் பரவலாகவும் முஸ்லிம்களின் வாக்குகள் இருக்கின்றன. முஸ்லிம்களின் வாக்கு வங்கிக்கு நீண்ட காலமாகவே முக்கியத்துவம் அளித்து வந்தன தமிழக அரசியல் கட்சிகள். ஆனால், அண்மைக்காலமாக திராவிட கட்சிகள் அதிலிருந்து விலகிவிட்டன.
 

jaffer ali



மதச்சார்பற்ற அணியாக காட்டிக்கொள்ள மட்டுமே முஸ்லிம் கட்சிகளை பயன்படுத்திக்கொள்கின்றனர். அரசியல் கட்சிகளாகவும், அரசியல்சார்பற்ற அமைப்புகளாகவும் இச்சமூகம் சிதறியிருப்பதே இதற்குக் காரணம். மதச்சார்பற்ற கொள்கையைத் தூக்கிப் பிடிக்கும் தி.மு.க.-காங்கிரஸ் கட்சிகள் முஸ்லிம் வாக்குகளை தங்கள் பக்கம் கொண்டுவர எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இருப்பதால் முஸ்லிம் வாக்குகள் தாமாகவே தங்கள் பக்கம் வந்துவிடும் என மனக்கணக்குப் போடுகின்றன. இது தவறு. இந்தமுறை முஸ்லிம் வாக்குகள் ஓரிடத்தில் குவியாமல் சிதறுவதற்கே வாய்ப்பு அதிகம். அந்த வகையில், பா.ஜ.க.வை தீவிரமாக எதிர்க்கும் தினகரனுக்கு முஸ்லிம் இளைஞர்களின் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்குமென்பதே கள நிலவரம். சுமார் 80 லட்சம் மக்கள் தொகை கொண்ட முஸ்லிம் சமூகம் அரசியலில் ஆளுமை செலுத்தும் சக்தியை இழந்து வருவது பெரும்சோகம்.
 

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.