Skip to main content

2016 தேர்தல் முடிவில் அதிமுக -134, திமுக -98... 2019ல்??? எம்.எல்.ஏக்கள் போன பாதை...

Published on 19/04/2019 | Edited on 19/04/2019

தமிழ்நாட்டிலுள்ள 18 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இன்னும் 4 தொகுதிகளுக்கு வரும் மே 19 அன்று தேர்தல் நடக்க இருக்கிறது. 2016 தேர்தல் முடிவுகள் வெளியானது முதல் தற்போதைய நிலை வரை முழு விவரங்கள்...
 

tamilnadu assembly
 

2016ம் ஆண்டு 232 தொகுதிகளில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அதில் அதிமுக வெற்றி பெற்றது. அந்தத்தேர்தலில் அதிமுக கூட்டணி 134 இடங்களையும், திமுக கூட்டணி 98 இடங்களையும் பிடித்தது. இதில் கருணாஸ், தனியரசு, தமீமுன் அன்சாரி ஆகிய மூவரும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் வென்றவர்கள். வேறெந்த கட்சியும் வெற்றிபெறவில்லை. தஞ்சை மற்றும் அரவக்குறிச்சியில் பணப்பட்டுவாடா அதிகம் நடப்பதாகக் கூறி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது, திருப்பரங்குன்றத்தில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏ. சீனிவேல் பதவி ஏற்கும் முன்பே இறந்தார். அதனால் அதிமுக எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 134ல் இருந்து 133 ஆக குறைந்தது. மூன்று காலியிடங்கள் இருந்தன.

 
காலியாக இருந்த மூன்று தொகுதிகளுக்கும் கிட்டத்தட்ட ஆறுமாத இடைவெளியில் இடைத்தேர்தல் வைக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த மூன்று தொகுதிகளிலும் அதிமுகவே வென்றது. இதனால் அதிமுக கூட்டணி எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 136 ஆக உயர்ந்தது.


அதன்பின் 2016 டிசம்பர் 5 அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் இறந்தார். இதனால் ஆர்.கே.நகர் தொகுதி காலியானது. அதிமுக கூட்டணி எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 135 ஆக குறைந்தது. அதன்பின் 2017 டிசம்பரில் ஆர்.கே. நகர் தேர்தல் நடந்தது. இதில் அறுதிப்பெரும்பான்மையில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் வெற்றிபெற்றார். இதனால் அதிமுக கூட்டணி 135, திமுக கூட்டணி 98, சுயேட்சை 1 என எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை அமைந்தது. அதன்பின் ஓபிஎஸ் பதவியில் இருந்து இறக்கப்பட்டார். தர்மயுத்தம், சசிகலா சிறை, தர்மயுத்தம் முடிந்து ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். இணைந்தது இவையெல்லாம் முடிந்தபின்பு, டிடிவி தினகரனுக்கு எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர், தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என புதுக்கட்சி தொடங்கியது என பல அதிரடி அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன.
 

kalaignar jayalalithaa
 

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அப்போது ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவிடம் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் புகார் கொடுத்தனர். இதையடுத்து புகார் கொடுத்த 18 எம்.எல்.ஏக்களை சட்டப்பேரவைத் தலைவர் தனபால் கடந்த பிப்ரவரி மாதம் தகுதி நீக்கம் செய்தார். உயர்நீதிமன்றத்திற்கு இவ்வழக்கு வந்து, விசாரணை நடைபெற்றுகொண்டிருந்தது, முதலில் விசாரித்த இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், அவ்வழக்கு மூன்றாவது நீதிபதியிடம் சென்றது. மூன்றாவது நீதிபதி ஆகஸ்ட் 31 வரை இரு தரப்பினரையும் விசாரித்துவிட்டு தீர்ப்பை ஒத்திவைத்தார். 
 

இதற்கிடையில் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ-வான ஏ.கே.போஸ் காலமானார். அதைத்தொடர்ந்து திமுக தலைவர் கலைஞர் ஆகஸ்ட் 7ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதனால் திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகள் காலியானது. அப்போதுவரை அதிமுக கூட்டணி எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 134, திமுக கூட்டணி எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 97, சுயேட்சை 1, காலியிடங்கள் 2 என ஆனது.



இந்நிலையில்தான், அக்டோபர் 25 அன்று, 18 எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்கம் செல்லும் என மூன்றாவது நீதிபதி உத்தரவிட்டார். இதனால் அதிமுக 116, திமுக 97, சுயேட்சை 1(தினகரன்), என்பது எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையாகவும், காலியிடங்கள் 20 ஆகவும் ஆனது.


1998ல் ஓசூர் அருகே பாகலூரில் கள்ளச்சாரய விற்பனையை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டபோது பேருந்துகள் மீது கல்வீசியதாக பாலகிருஷ்ண ரெட்டி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம், 2019 ஜனவரி மாதம், 7ம் தேதி அன்று அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு தண்டனை வழங்கப்பட்டது. இதனால் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 115, திமுக எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 97, சுயேட்சை 1 என்ற நிலையில், 21 இடங்கள் காலியாக இருந்தது. 


மார்ச் 20ம் தேதி கோயம்புத்தூரிலுள்ள சூலூர் தொகுதி எம்.எல்.ஏ. கனகராஜ் மாரடைப்பால் காலமானார். இதைத்தொடர்ந்து அதிமுக 114, திமுக 97, சுயேட்சை 1 என்றானது. தற்போதுவரை 234 தொகுதிகளில், 212க்கு (114+97+1) எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர். 22 தொகுதிகள் காலியாக இருக்கிறது. இந்த 22 தொகுதிகளில் 18க்கு தற்போது தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. 4 தொகுதிகளுக்கு மே 19ம் தேதி தேர்தல் நடக்கிறது.

 

 

 

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.