Skip to main content

தமிழகத்தில் பணிபுரியும் 23,000 வடமாநில ஊழியர்களுக்குப் பணியிட மாறுதல் மட்டுமே தீர்வு !

Published on 17/06/2019 | Edited on 17/06/2019

சமீபத்தில் இந்தி மொழி கட்டாயம் என்கிற விதிமுறை கொண்டு வந்தபோது உடனே அனைத்து தொழிற்சங்கத்தினரும் குறிப்பாகத் திமுகவினர் எதிர்ப்பு காரணமாக உடனே வாபஸ் வாங்கப்பட்டது.
 

railway hindi imposition


சமீபத்தில் திருமங்கலத்தில் இரயில் விபத்து ஏற்பட்டதற்கு மொழி புரியாமல் இருந்ததால்தான் விபத்து ஏற்பட்டது என்று கண்டறியப்பட்டது. காரணம் அந்த இடத்தில் பணிபுரிந்தவருக்கு இந்தியை தவிர தமிழ், ஆங்கிலம் எதுவும் தெரியாதால்தான் இந்தப் பிரச்சனை என்கிறார்கள். இதற்கு இடையில் இந்த இந்தி பிரச்சனை குறித்துத் தொழிற்சங்கங்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவிக்கிறார்கள். அந்த வகையில் இந்தப் பிரச்சனை குறித்துத் தஷ்ணா ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் துணைப் பொதுச் செயலர் மனோகரன் பேசும்போது,

கேரளப்பகுதியில் 20 ஆயிரம் பேர், தமிழகப் பகுதிகளில் 62 ஆயிரம் பேர் எனத் தெற்கு ரயில்வேயில் 82 ஆயிரம் பேர் ஊழியர்களாகப் பணியாற்றி வருகிறார்கள். இது தவிர 20ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளது. இதில் 23 ஆயிரம் பேர் வட இந்தியர்கள். கடந்த பிப்ரவரி மாதம் தேர்வு செய்யப்பட்ட 1600 பேர் வட இந்தியர்கள் இன்னும் தெற்கு ரயில்வேயில் பணியில் சேரவில்லை. இவர்கள் தங்களின் தாய்மொழியான ஹிந்தியில் தேர்வு எழுதி எளிதாக வெற்றி பெற்று வருகிறார்கள்.

அதிகரித்து வரும் இவர்களால் தமிழகத்தில் உள்ள பணியிடங்களில் மொழி புரிதல் இல்லாமல் அன்றாடம் குழப்பம் நிலவி வருகிறது. மதுரை கோட்டத்தில், திருமங்கலம் அருகே ஒரு ரயில் விபத்து ஏற்பட மொழி காரணம் என்பது கண்டறியப்பட்டதை அடுத்து ஊழியர்கள் வேலை செய்வதற்கான தொடர்பு மொழி பற்றி நிலைப்பாடு எடுப்பதில் நிர்வாகம் குழப்பிக்கொண்டது.

இதனால் பலமான எதிர்ப்பு மற்றும் விமர்சனங்களைச் சந்தித்து மொழி கையாள போட்ட உத்தரவை திரும்பப்பெற நேர்ந்தது. வடமாநில ரயில்வே ஊழியர்களில் சுமார் 9ஆயிரம் ஊழியர்கள் சொந்த மாநிலங்களில் உள்ள ரயில்வேயில் பணியாற்ற விருப்பமாறுதலுக்காக விண்ணப்பித்து இருக்கிறார்கள்.

பணியில் சேர்ந்து 5 ஆண்டுகள் நிறைவு செய்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பது ரயில்வே விதி. இதனால் கடந்த சில வருடங்களாகத் தமிழகப் பகுதியில் ரயில்வே பணிகளில் சேர்ந்து 9 ஆயிரம் வடமாநில ஊழியர்கள் இடமாறுதலுக்காகப் பதிவுசெய்யக் காத்து இருக்கிறார்கள்.

5 வருடங்கள் காக்க வேண்டும் என்பதால் சில ஆயிரம் வடமாநில ரயில்வே ஊழியர்கள் இடமாறுதலுக்குப் பதிவு செய்யாமல் வேறு வேலைக்கு இங்கிருந்தபடியே முயற்சி செய்து வருகிறார்கள். பதிவு மூப்பு அடிப்படையில் வடமாநிலங்களில் உள்ள அனைத்து மண்டல ரயில்வேக்களுக்கு ஆண்டுக்கு சுமார் ஆயிரம் வட இந்தியர்களுக்கு இங்கிருந்து இடமாறுதல் கிடைக்கிறது.

நிலைய அதிகாரிகள், டிக்கெட் பரிசோதகர்கள், என்ஜின் ஓட்டுனர்கள், கடை நிலை ஊழியர்கள் எனப் பல பிரிவுகளுக்குத் தொடர்ந்து இவர்கள் தேர்வாகி வருவதால் வடமாநிலத்தவர்கள் எண்ணிக்கை படிப்படியாகக் கூடி வருகிறது. மற்ற மாநிலங்களுக்கு இடமாறுதல் பதிவு செய்ய 5 ஆண்டுகள் பணிமுடித்து இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை நீக்கவேண்டும். சிறப்பு விலக்கு வழங்கி இங்குள்ள 23 ஆயிரம் வடமாநிலத்தவர்களுக்கு விருப்ப இடமாறுதல் அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு உடனே வழங்கவேண்டும். 

இதனால் உருவாகும் 23 ஆயிரம் பணி இடங்கள் உட்பட நடப்பில் உள்ள 20 ஆயிரம் பணியிடங்கள் சேர்த்து 43 ஆயிரம் தெற்கு ரயில்வே பணியிடங்களுக்குத் தமிழகம், கேரளா பகுதியில் உள்ளவர்களை மட்டும் தேர்வு செய்ய வேண்டும். வடமாநில ஊழியர்களுக்கு விருப்ப இடமாறுதல் தந்து 37ஆயிரம் தமிழக இளைஞர்களைத் தெற்கு ரயில்வே பணியமர்த்தவேண்டும் இதுவே மொழிப்பிரச்சனைக்குத் தீர்வாகும். குறிப்பாக, தமிழகத்தைச் சேர்ந்த 37,000 இளைஞர்களை ரயில்வே துறை, தெற்கு ரயில்வேயில் பணியமர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். 
 

 

Next Story

ரயிலில் செல்போன்கள் திருட்டு; ஆந்திர வாலிபர் கைது

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Cell phones stolen from train passengers; Andhra youth arrested

ரயில் பயணிகளிடம் செல்போன்களை திருடிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் உறையூர் சாலை பகுதியை சேர்ந்தவர் முகமது ஜாசிம் (17). திருச்சி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கடந்த 3ஆம் தேதி நண்பர்களுடன் கோவையில் நடக்கும் போட்டோகிராபி போட்டியில் பங்கேற்க செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தார்.

ஈரோட்டில் ரயில் நின்றபோது முகமது ஜாசிம் தின்பண்டம் வாங்குவதற்காக ரயிலை விட்டு கீழே இறங்கினார். பின்னர் மீண்டும் ரயிலில் ஏறி தனது படுக்கைக்கு வந்தார். அப்போது அவர் வைத்திருந்த ரூ.20,000 மதிப்பிலான ஸ்மார்ட்போன் மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் ஈரோடு ரயில்வே போலீசில் புகார் செய்தார்.

இதனையடுத்து ஈரோடு ரயில்வே போலீசார் ஒவ்வொரு நடைமேடையாக சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஈரோடு ரயில் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக வாலிபர் ஒருவர் அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரித்த போது அவர் ஆந்திர மாநிலம் நெல்லூர் உதயகிரி பகுதியைச் சேர்ந்த ஓம்காரம் வெங்கட சுப்பையா (27) என்பதும், அவர் ரயில் பயணிகளிடம் செல்போன்களை திருடுவதை வாடிக்கையாக வைத்திருப்பது தெரிய வந்தது.

அவரிடமிருந்து 12 ஸ்மார்ட் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து ஈரோடு ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கட சுப்பையாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் உரிமையாளர்கள் விவரங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Next Story

ஓடும் இரயிலில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! 

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
young debate woman speaker rail issue

காரைக்காலில் இருந்து கடலூர் வழியாக பெங்களூர் சென்று கொண்டிருந்த பயணிகள் ரெயிலில் பட்டிமன்ற இளம் பெண் பேச்சாளரிடம் ஆபாசமாக நடந்துகொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

நேற்று காலை காரைக்காலில் இருந்து புறப்பட்டு நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விருத்தாசலம் வழியாக பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த ரெயிலில் மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த  இளம் பட்டிமன்ற பெண் பேச்சாளர் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ரயில் கடலூர் துறைமுகம்,  குறிஞ்சிப்பாடி நெய்வேலி இடையில் காலை சுமார் 10 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. அந்தப் பெண் பயணம் செய்த பெட்டியில் ஒரு சிலர் மட்டுமே இருந்துள்ளனர். அப்போது முழு மது போதையில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆசாமி அந்த இளம் பெண் எதிர் இருக்கையில் வந்து அமர்ந்தார்.

அப்படி அமர்ந்த அவர், அடிக்கடி அந்த இளம் பெண்ணை தவறான கண்ணோட்டத்தில் பார்த்ததோடு, திடீரென தனது ஆடையை விலக்கி இளம்பெண்ணை பார்த்து ஆபாசமாக, அருவருப்பான வகையில் செய்கை செய்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண், அந்த மனிதனை கண்டித்ததோடு அவரது செய்கையை செல்போனில் படம் பிடித்துள்ளார். இளம் பெண் கண்டித்தும் அந்த போதை ஆசாமி, தனது ஆபாச செய்கையை நிறுத்தவில்லை. இதனால் கோபமடைந்த அந்த பெண், அபாய சங்கிலியை பிடித்து இழுத்துள்ளார். ரயில் நெய்வேலி அருகே நிறுத்தப்பட்டது. 

பிறகு அதே ரயிலில் பயணிகள் பாதுகாப்புக்காக பயணம் செய்து கொண்டிருந்த ரயில்வே காவல்துறை சப் இன்ஸ்பெக்டர் சம்பவம் நடந்த பெட்டிக்கு விரைந்து சென்றார். அவரிடம் அந்த இளம் போதை ஆசாமி குறித்து புகார் தெரிவித்தார். அவரது புகாரின் பேரில் ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அந்த நபரை கைது செய்து விருத்தாசலம் ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரிடம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.