Skip to main content

தமிழக ஆளுனர்களின் கதை பகுதி-1

Published on 20/04/2018 | Edited on 20/04/2018

குதிரை பேரத்தை ஊக்குவித்த முதல் ஆளுநர்! 

 

‘ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை’ என்று அண்ணா கூறுவார். அது ஒரு அலங்காரப்பதவி என்பதே பொதுவான கருத்து.

 

சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகை 156.4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. செம்மரம், சந்தன மரம், நாவல் மரம் என 6 ஆயிரத்து 718 மரங்களுடன் பசுமையான பகுதி இது. ஆளுநர் மாளிகைக்கு தேவையான காய்கறித் தோட்டமும் உண்டு.

 

இவ்வளவு பெரிய நிலப்பரப்பை ஜனாதிபதியின் ஏஜெண்டாக செயல்படும் ஒருவருக்காக வீணடிப்பதா என்று அவ்வப்போது கேள்விகள் எழும். பிறகு அந்தக் கேள்விகளுக்கு பதிலே இல்லாமல் அடங்கிவிடும்.

 

கவர்னர் மாளிகை பல சமயங்களில் சர்ச்சைக்குரிய இடமாக மாறியிருக்கிறது. வயதான தலைவர்களுக்கு ஓய்வெடுப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் ஆளுநர் பதவியோ என்று நினைக்கும் வகையில், வாழ்வின் இறுதிக்கட்டத்தில் உள்ள பலர் இங்கே குடியேறி உள்ளனர். தமிழகத்தின் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டு சர்ச்சைகளுக்கு ஆளான சிலரைப்பற்றி இந்தச் சமயத்தில் அறிந்துகொள்ளலாம்...

 

இந்தியா விடுதலை பெற்ற பிறகு அப்போது சென்னை மாகாணமாக இருந்த தமிழகத்தின் முதல் இந்திய ஆளுநராக நியமிக்கப்பட்டவர் கிருஷ்ண குமாரசிங் பவசிங். இவர் 1952ல் இந்தியாவின் புதிய அரசியல் சட்டத்தின்படி நடைபெற்ற தேர்தல்வரை ஆளுநராக பொறுப்பு வகித்தார். பாவ்நகர் ராஜ்ஜியத்தின் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த இவர் மன்னர் பதவி பறிக்கப்பட்டபிறகு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

 

1952 ஆம் ஆண்டு நடந்து முடிந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவான சமயத்தில் சர்ச்சைக்குரிய முதல் ஆளுநர் பொறுப்பு வகித்தார். அவர் பெயர் ஸ்ரீபிரகாசா. அந்தத் தேர்தலில் கம்யூனிஸ்ட்டுகள் 62 இடங்களுக்கு மேல் பெற்றிருந்தனர். பிரகாசம் தலைமையில் சிறிய கட்சிகளைக் கொண்ட கூட்டணி அரசு அமைக்க முடிவெடுக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் பிரகாசா, கம்யூனிஸ்ட் பங்களிப்புடன் ஒரு அரசு அமைவதை ஏற்கவில்லை. அதைத் தடுக்கும் வகையில் ஆட்சி அமைக்க யாரையும் அழைக்காமல் மூன்று மாதங்கள் வரை இழுத்தடித்தார்.

 


விடுதலை பெற்ற இந்தியாவில் குதிரை பேரத்தை ஊக்குவித்த ஸ்ரீ பிரகாசா

 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்குள் நீடித்த குழப்பம் முடிவுக்கு வந்து ராஜாஜியை முதல்வராக மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து, சட்டமன்றத்திலோ, மேலவையிலோ உறுப்பினராக இல்லாத ராஜாஜியை முதல்வராக பதவிப்பிரமாணம் செய்துவைத்தார் பிரகாசா. முதல்வரான பிறகு ராஜாஜி எதிர்க்கட்சிகளுடன் பேரம் நடத்தி தனக்கு போதுமான பெரும்பான்மை உறுப்பினர்களை சேர்த்துக் கொண்டார் என்பது வரலாறு.

 

1956 ஆம் ஆண்டு தமிழக ஆளுநராக திருவிதாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த ஏ.ஜே.ஜான் நியமிக்கப்பட்டார். 1958 செப்டம்பர் மாதம் இவர் மரணம் அடைந்தார். தமிழக ஆளுநர் பொறுப்பில் இருந்தபோது மரணம் அடைந்த ஆளுநர் இவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஜான் இறந்தவுடன் தற்காலிக ஆளுநராக பகாலா வெங்கட்ட ராஜமன்னார் என்பவர் நியமிக்கப்பட்டார். நான்கு மாதங்கள் மட்டுமே பொறுப்பு வகித்த இவர்தான், தமிழகத்தின் முதல் தற்காலிக ஆளுநர்.

 

1958 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி தமிழகத்தின் ஆளுநராக அசாமின் முன்னாள் முதல்வர் விஷ்ணுராம் மேதி நியமிக்கப்பட்டார். 1964 வரை இவர் பொறுப்பு வகித்து ஓய்வுபெற்றார். சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஒருவர் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டது இதுவே முதல்முறை.

 

மைசூர் சமஸ்தானத்தின் கடைசி அரசராக பொறுப்பு வகித்த ஜெயச்சாமராஜ உடையார் பகதூர் தமிழ்நாட்டின் ஆளுநராக 1964 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் தேதி நியமிக்கப்பட்டார். அந்த ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் தேதி வரை பொறுப்பு வகித்தார். என்ன காரணத்துக்காக இவர் பதவி விலகினார் என்று தெரியவில்லை. இவருக்கு அடுத்து ஒரு ஆண்டு வரை பி.சந்திரரெட்டி என்பவர் தற்காலிக ஆளுநராக பொறுப்பு வகித்திருக்கிறார். பின்னர் மீண்டும் 1965 டிசம்பர் 5 ஆம் தேதி முதல் 1966 ஜூன் மாதம் 28 ஆம் தேதி வரை ஜெயச்சாமராஜ உடையார் பகதூர் ஆளுநராக பொறுப்பு வகித்திருக்கிறார்.

 


1967ல் அண்ணாவுக்கு முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் உஜ்ஜல் சிங்

 

இவரைத் தொடர்ந்து, சர்தார் உஜ்ஜல்சிங் 1966 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 ஆம் தேதி முதல் 1971 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் தேதி வரை பொறுப்பு வகித்தார். இவருடைய காலகட்டத்தில்தான் அண்ணா தலைமையிலான திமுக அரசு முதன்முதல் பதவியேற்றது. இவர் அண்ணாவுக்கும், அண்ணா மறைவுக்கு பின் கலைஞருக்கும் முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தவர். இவருடைய பதவிக்காலத்தில்தான் சென்னை மாகாணம் என்ற பெயர் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.