Skip to main content

அப்போ ஒகி, இப்போ சாமி பேருக்குத்தான் அர்ச்சனை! - இந்த விளம்பரம் தேவையா?

Published on 26/04/2018 | Edited on 26/04/2018

 

eps

திரைப்பட சங்க ஊழியர்களின் வேலை நிறுத்தம் முடிந்து முதல் படமாக "மெர்க்குரி" வெளிவந்தது. படத்திற்கு நீண்டநாள் கழித்து சென்றவர்களுக்கு அதிர்ச்சி... என்னவென்று பார்த்தால் அரசின் விளம்பரம் ஓடிக்கொண்டிருந்தது. இதில் என்ன ஆச்சர்யம், நாம்தான் "தமிழர்களே, தமிழர்களே நீங்கள் கடலில்... முதல் மாண்புமிகு இதயதெய்வம்... (அது ஒரு பெரிய லிஸ்ட் விடுங்க) வரை அனைத்தும் பார்த்தவர்களாயிற்றே என்றாலும்கூட "நம்ம முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெயருக்குதான்" என நாம் கேட்டபோது அதில் கிடைத்த அனுபவம் நேரில் போய் பார்த்தால்தான் தெரியும். இதை விடுங்கள் இதாவது பரவாயில்லை. இதற்குமுன் ஒகி புயல் வந்து ஊரையே கலங்கடித்துக்கொண்டிருந்தபோது இவர்கள் ஒரு அரசு விளம்பரம் வெளியிட்டார்கள்....

கடந்த டிசம்பர் மாதம்...

இன்று விடுமுறை நாளாயிற்றே படத்திற்கு போகலாம் என நினைத்து படத்திற்கு சென்றேன். படமும் நன்றாக போய்க்கொண்டிருந்தது. திடீரென இடைவெளி வந்தது. என்ன செய்வது டிக்கெட் வாங்குவதற்கே சிக்கனமாக செலவு செய்து மிச்சப்படுத்தவேண்டி உள்ளது. இதில் எங்கிருந்து ஸ்நாக்ஸ் வாங்க செல்வது என்று அங்கேயே அமர்ந்துவிட்டேன். என்னைப்போல் ஒருவன் என ஆங்காங்கே சிலர் அமர்ந்திருந்தனர். எப்போதும் இடைவெளியில் விளம்பரம் வருவது சகஜம்தான் ஆனால் இந்த விளம்பரம் சகிக்க முடியாததாக இருந்தது. (அப்படியென்ன விளம்பரமாய் இருக்கும் என கண்டதை நினைக்காதீர்கள் நானே சொல்கிறேன்.) தமிழ்நாடு அரசு தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறையின் விளம்பரம்தான் அது. ஏற்கனவே ஜெயலலிதா இருக்கும்வரை சாதனைகள் எனவும், ஜெயலலிதா இறந்தபின்பு அம்மா, அம்மா எனவும், அதன்பின் ஒருவருட கூத்தான எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா விளம்பரமும் போட்டவர்கள்தான் அவர்கள் இந்தமுறை வேறெதுவும் கிடைக்காததால் ஒகி புயலை உள்ளே இழுத்துவிட்டுள்ளனர். 
 

அந்த காணொளியில்  முதல்வர் பாதிக்கப்பட்ட அனைவரையும் சென்று பார்த்து அனைவருக்கும் தலா 25 இலட்சம் அளித்தார். முதல்வர் வேறு வந்து நாங்கள் ஒகி புயலின்போது முன்னெச்சரிக்கையாக செயல்பட்டோம். தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டது. இதைப்பார்க்கும்போதே எழுந்து போய் விடலாமா என்றிருந்தது என்ன செய்வது கொடுத்த தொகை கண்முன் வர அப்படியே மனம் குமுறிக்கொண்டே அமைதியானது. அடுத்து நடந்த சம்பவம்தான் உச்சம். மீனவர்களின் குமுறல்களை தொழில்நுட்பத்தால் (இதற்கு மட்டும் உபயோகப்படும் அறிவு விஷவாயு தாக்கி துப்புரவு தொழிலாளி இறக்கும்போதும், கடலில் கச்சா எண்ணெய் கலந்தபோதும் எங்கே சென்றது என தெரியவில்லை). டப்பிங் மாற்றி "அரசுதான் எங்களைக் காப்பாற்றியது, அரசுக்கு நன்றி" என பேச வைத்தது. இதெல்லாம் பார்க்கும்போது வந்த மனக்குமுறல் உண்மையில் நடந்தது என்ன என்பதை நினைவுக்கு கொண்டுவந்தது.

 

ockhi



காணாமல்போன மீனவர்கள் குறித்த தப்பான கணக்கு அளித்தது, புயல் வடிந்து காய்ந்த பின்பு வந்து முதலமைச்சர் இடங்களை பார்வையிட்டது மற்றும் மத்தியகுழு ஆய்வு செய்தது. என அனைத்துமே காலதாமதமாகதான் நடந்தது. அப்படியிருக்கையில் அவர்கள் இப்படி முன்னெச்சரிக்கையாக நடந்துகொண்டோம் என கூறியது அரசின் நாடகத்தை காட்டியது. கடைகோடியில் இருப்பதால் யார் கண்ணுக்கும் தெரியாதவர்கள் கிறித்துமஸ், ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல் என எதையும் கொண்டாடாமல் கடலை கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான நிதி அவர்களைச்சென்று அடைந்ததா என்ற கேள்விக்கு உள்ளூர் முதல் உலகநாடுகளை சுற்றிக்கொண்டிருக்கும்  அரசு பொறுப்பிலிருக்கும் யாரிடமும் பதில் இல்லை. அப்படி இருக்கையில் ஒருவரின் குமுறலை டப்பிங் செய்து ஒளிபரப்புவது. இதை என்னவென்று சொல்வது.
 

ockhi


 

இப்படி ஒரு அரசு நமக்கு தேவைதானா என்ற எண்ணம் ஏற்கனவே வந்துவிட்ட நிலையில், இது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போன்று இருந்தது. மத்தியில் ஒருவர் தரும் விளம்பரங்களைவிட இது மிகப்பெரிய விளம்பரமாக உள்ளது. உண்மை நிலவரம் எப்படியோ இருக்கட்டும், விளம்பரங்களை வைத்தும் ஊடகங்களை வைத்தும் சரிகட்டிக் கொள்ளலாம் என்று அரசுகள் நினைப்பது ஒரு காரணம். இன்னொன்று, ஆள்பவர்களை இப்படி சாமியாக்கி, எந்த எல்லைக்கும் சென்று குளிர்வித்துவிட்டு, தாங்கள் நினைத்தபடி செல்வம் சேர்க்கும் அதிகாரிகள் பெருகியிருப்பது இன்னொரு காரணம்.

 

Next Story

“கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள்” - விஷால் பகிரங்க குற்றச்சாட்டு 

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
vishal allegation about theatre owners for not allocating theatres for rathnam movie

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ரத்னம் படத்தின் போஸ்டர் மற்றும் பெரிய திரை (எல்இடி) உடன் கூடிய வேன் கடந்த 4ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உலா வரும் என அறிமுகப்படுத்தப்பட்டது. 

பின்பு விஷால் மற்றும் ஹரி இருவரும் சென்னை, திருச்சி உள்ளிட்ட ஊர்களில் கல்லூரியில் புரொமோஷன் நிகழ்ச்சி நடத்தி படத்தை விளம்பரப்படுத்தி வந்தனர். மேலும் புதுச்சேரியில் ஹரி, கடை வீதிகளில் ஒவ்வொரு கடையாக சென்று படத்தை பார்க்கும்படி கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் திருச்சி, தஞ்சாவூர் பகுதி திரையரங்குகளில் ரத்னம் படம் வெளியிடுவதற்கு தடை விதித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக விஷால் குற்றச்சாட்டு குறித்து பேசிய ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில், “சங்கத்தின் தலைவர் மீனாட்சி மற்றும் செயலாளர் சிதம்பரம் என்னுடைய ஃபோனை எடுக்க மறுக்கிறார்கள். என் நண்பர் சீனு சார், ரத்னம் படத்தை வடக்கு மற்றும் தெற்கு பதிகளில் வாங்கியிருக்கிறார். ஒரு திரைப்படம் வெளியாவதே பெரிய விஷயம். இந்த காலகட்டத்தில் இப்படி நீங்க பண்ணும் போது இதற்கு பெயர் கட்டப்பஞ்சாயத்து.   

இதில் முதலமைச்சர் திருச்சி கலெக்டர், எஸ்.பி, காவல் துறையினர் என அனைவருக்கும் நான் சொல்ல விருப்பப்படுவது, அவர்கள் செய்வது கட்டப்பஞ்சாயத்தை தவிர்த்து வேற எதுவும் கிடையாது. விஷாலுக்கே இந்த கதி என்றால் நாளைக்கு ஒரு புதுமுக நடிகருக்கு என்ன நடக்கும். நீங்க ஃபோன் எடுக்காமல் இருப்பது, தியேட்டர் ஒதுக்கப்படாமல் இருப்பது, அது உங்களுடைய அலட்சியம். ஆனால் அந்த அலட்சியத்தைப் பார்த்து நான் சும்மா இருக்க மாட்டேன்” என கூறுகிறார். 

Next Story

மத்திய பாஜக அரசு மீது இ.பி.எஸ். பரபரப்பு குற்றச்சாட்டு!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
EPS on Central BJP Govt Allegation sensational

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளின் மக்களவைத் தேர்தல் பரப்புரை இன்றுடன் (17.04.2024) நிறைவு பெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “அதிமுகவை அழிக்க இதுவரை யாரும் பிறக்கவில்லை. பொன்விழா கண்ட கட்சி அதிமுக. கடந்த 30 ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கிறோம். எனவே இப்படிப்பட்ட கட்சியை அழிப்பது என்பது வெறும் கனவாகத் தான் முடியும். வெற்று வார்த்தையாகத் தான் முடியும். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக, அளித்த வாக்குறுதிகளை இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை. அதாவது சுமார் 10 சதவீதத்திற்கும் குறைவான வாக்குறுதிகள் மட்டும் தான் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் வாக்குறுதிகளில் 98% நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பச்சை பொய் பேசுகிறார்.

திமுக ஆட்சியில் நிர்வாகத் திறமையின்மை காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. அதே போன்று கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை. 2014க்கு முன்பு கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. பெட்ரோல், டீசல் மீது அதிகமான வரியை போட்டு மக்கள் மீது சுமையை ஏற்றியுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

EPS on Central BJP Govt Allegation sensational

மத்திய அமைச்சர்கள் பிரச்சாரத்துக்கு மட்டுமே தமிழ்நாட்டிற்கு வருகின்றனர். மாநில பிரச்சனைகள் குறித்து யாரும் பேசுவதில்லை. மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முழுமையாக வழங்குவதில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தும் திட்டங்களை 10 ஆண்டுகளாக தமிழகத்திற்கு தரவில்லை. இயற்கைச் சீற்றங்களின்போது கேட்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முறையாக வழங்குவதில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. தேர்தல் முடிவுகளில் இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு என்பதை அந்த நேரத்தில் தெரிவிப்போம். உச்சநீதிமன்ற உத்தரவையே மதிக்காத தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து என்ன பயன்” எனக் கேள்வி எழுப்பினார்.