Skip to main content

'கிண்டி வரை எங்களுக்கே சொந்தம்'..! முரண்டு பிடித்த ஆந்திராவும் வெற்றிபெற்ற தமிழ்நாடும்!

Published on 01/11/2019 | Edited on 01/11/2019

சுதந்திர இந்தியா இப்போது இருப்பது போல ஒரு விசாலமான நிர்வாகத்தின் கீழ் 1950களில் இயங்கவில்லை. தற்போது இருப்பது போல மொழி சார்ந்து மாநிலங்கள் பிரிக்கப்பட்டு அந்த இன மக்களால் ஆட்சியாளர்கள் தேர்வு செய்யப்படவில்லை. அப்போது, இந்தியாவில் இருந்த 14 மாநிலங்களிலும் நிலைமை இப்படியாகவே இருந்தது. இந்த 14 மாநிலங்களும் கூட மொழிவாரியாகவோ அல்லது இனக்குழுக்களாகவோ கூட அமைக்கப்படவில்லை. இன்றைய தமிழ்நாடு கூட அப்போது மதராஸ் ஸ்டேட் என்றே அழைக்கப்பட்டது.

இதில் தமிழக பகுதிகளோடு, கேரளாவின் பீ்ர்மேடு உள்ளிட்ட சில பகுதிகளும், ஆந்திராவில் உள்ள திருப்பதி உள்ளிட சில பகுதிகளும் அன்றைய மெட்ராஸ் ஸ்டேட்டுடன் இணைந்தே இருந்தது. இதன்காரணமாக அன்றைய ஆட்சியாளர்களுக்கு நிர்வாக ரீதியாக மக்களை ஒருங்கிணைப்பதில் ஆரம்பித்த சிக்கல், பலவகைகளிலும் தொடர்ந்தது. இது அன்றைய தமிழ்நாட்டின் நிலை என்றாலும், அருகருகே உள்ள மாநிலங்களிலும் இதே பிரச்னை இருந்துவந்தது. அதில் ஒருபடி மேலாக ஆந்திராவில் இந்த குழப்பம் உச்சத்தில் இருந்தது. சிறிது சிறிதாக புகைந்துகொண்டிருந்த மொழிவாரி மாநிலக் கோரிக்கை 1953 ஆம் ஆண்டு ஆந்திராவில் உச்சத்தை அடைந்தது. பெரும் வன்முறை வெறியாட்டங்கள் நிகழ்த்தி ஆந்திராவை சிதைத்துக் கொண்டிருந்தார்கள் போராட்டக்காரர்கள். மாநில அரசு தன்னுடைய முழு பலத்தை இறக்கியும், போராட்டத்தை கட்டுக்குள் வைக்க முடியவில்லை. 

 

xc



நிலைமை சிக்கலாவதை உணர்ந்த நேரு தலைமையிலான மத்திய அரசு மொழிவாரி மாநிலங்களை பிரிப்பதற்கு குழுக்களை அமைத்தது. ஆந்திராவில் ஆரம்பித்த போராட்டம் தமிழகத்திலும் அனலை கக்கியது. தொடர் உண்ணாவிரதங்களும், போராட்டங்களும் நடைபெற்றது. மாநில உணர்வு மேலெழுவதால் மத்திய அரசு பெரும் அச்சப்பட்டது என்றால் அது மிகையல்லை. கையறு நிலையில் இருந்த மத்திய அரசு, விரைவாக மாநிலங்கள் பிரிக்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி மத்திய அரசு அமைத்த குழுக்கள் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சென்று, அங்குள்ள குழ்நிலைகளை ஆராய்ந்தது. அந்த குழுக்கள் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் ஆய்வு மேற்கொண்டது.

எப்படி மாநிலங்களை வகைப்படுத்தலாம் என்று ஒவ்வொரு மாநில அரசுகளிடம் அந்த குழுவினர் ஆலோசனை மேற்கொண்ட போது, சில மாநில அரசுகள் சொன்ன செய்தி அவர்களை அச்சத்தில் ஆழ்த்தியது. குறிப்பாக ஆந்திர அரசு தமிழகத்தின் திருத்தணி உள்ளிட்ட சென்னையின் பெரும் பகுதிகளை (இன்றைய ஜாபர்கான் பேட்டை வரை) தங்கள் மாநிலத்துடன் சேர்க்க வேண்டும் என்று கூறியதோடு அல்லாமல் அதனை வலியுறுத்தி போராட்டங்களிலும் ஈடுபட்டனர். ஆந்திராவின் கோரிக்கையால் அதிர்ச்சி அடைந்த தமிழகம், திருப்பதி உள்ளிட்ட பகுதிகளை தங்களுடன் இணைக்க வேண்டும் என்று கூறி அவர்களுக்கு கிடுக்கிப்பிடி போட்டது. மேலும் ஆந்திராவின் கோரிக்கைக்கு எதிராக தமிழகத்தில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றது. இதில் பல்வேறு உயிரிழப்புக்களும் ஏற்பட்டது.

பின்னர் பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு மத்திய அரசு 1956ஆம் ஆண்டு நவம்பர் முதல் தேதி மொழிவாரி மாநிலங்களாக ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகத்தை பிரித்தது. அதன்படி, அதுவரை தமிழகத்தில் இருந்துவந்த சில பகுதிகளை மீண்டும் கேரளாவிற்கும், கேரளாவில் இருந்த கன்னியாகுமரியின் சில பகுதிகள் மீண்டும் தமிழகத்துக்கும் பிரிக்கப்பட்டது. ஆந்திராவின் சில பகுதிகளும் அவ்வாறே பிரிக்கப்பட்டது. தமிழகத்தில் ஏற்பட்ட போராட்டங்களால் ஆந்திரா கேட்ட பெரும் பகுதிகளை மத்திய அரசு நிராகரித்து.

அந்த பகுதிகள் தமிழகத்திலேயே தொடரவும் மத்திய அரசு அனுமதி அளித்தது. இவ்வாறு மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்ட பிறகு, மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரிலேயே அடுத்த 12 ஆண்டுகள் தமிழகம் அழைக்கப்பட்டது. பிறகு திமுக ஆட்சி அமைந்த பிறகு 1968ம் ஆண்டு அந்த பெயர் மாற்றப்பட்டு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது. இவ்வாறு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட இந்த தினத்தை 'தமிழ்நாடு நாள்' என்று நாம் தற்போது கொண்டாடி வருகிறோம்.

 

 

Next Story

‘கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கம்’ - போக்குவரத்துத் துறை தகவல்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Transport Department Information for Additional Special Bus Operation

முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மக்கள் தொடர்பு இணை இயக்குநர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “இன்று வெள்ளிக்கிழமை முகூர்த்த நாள் (26/04/2024) என்பதாலும், நாளை சனிக்கிழமை (27/04/2024) மற்றும் நாளை மறுநாள் ஞாயிறு (28/04/2024) என வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (26/04/2024) 280 பேருந்துகளும், நாளை (27/04/2024) 355 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. அதே போன்று சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று (26/04/2024) மற்றும் நாளை (27/04/2024) 55 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இன்று அன்று 280 பேருந்துகளும் மற்றும் நாளை 355 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து 55 பேருந்துகளும் மேற்கண்ட இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதி நாளான இன்று 9 ஆயிரத்து 276 பயணிகளும், நாளை 5 ஆயிரத்து 796 பயணிகளும் மற்றும் நாளை மறுநாள்  8 ஆயிரத்து 894 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் செயலிமூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் இந்த வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது. 

Next Story

திரவ நைட்ரஜன் உணவுப் பொருள்; உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
liquid nitrogen foodstuff; Food Safety Department action order

திரவ நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்க கூடாது என உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் துடிதுடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நைட்ரஜன் பிஸ்கட்டுக்கு எதிராக பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்தான். இது தொடர்பான தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் திரவ நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுப் பொருள் விற்கக் கூடாது என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. திரவ நைட்ரஜன் உணவுப்பொருள் விற்கப்படுகிறதா என ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் குழந்தைகளுக்கு நைட்ரஜன் ஐஸ் கலந்த எந்தவொரு உணவு பொருள்களையும் கொடுக்கக் கூடாது எனவும், உணவு விடுதிகளில் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுப் பொருள்களை விற்பனை செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.