Skip to main content

தமிழுக்கு வந்த சோதனை... மீண்டும் மொழிப்போர்?

Published on 22/02/2019 | Edited on 22/02/2019

 


உலகின் தொன்மையான மொழிகளில் மூத்த மொழி எதுவென்றால் அது தமிழ் மொழிதான். செம்மொழி என அங்கீகாரம் பெற்ற தமிழ் மொழி இன்றைய டிஜிட்டல் உலகிலும் நிலைத்து நிற்கிறது. இருந்தாலும், அண்மைய காலமாக தமிழுக்கு ஏனோ பல்வேறு விதமான சோதனைகள் வந்து கொண்டே இருக்கிறது.

 

அந்த சோதனை 1937களில் நடைபெற்ற ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்போல தமிழுக்காக மீண்டும் ஒரு மொழிப் போரை தமிழர்கள் தொடுத்தாக வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுவிடுமோ என்ற சந்தேகமும் எழ காரணமாக இருக்கிறது.

 

sardar vallabhbhai patel

  

'பேரண்டத்திலேயே மிக உயரமான சிலை' என நர்மதை நதி கரையோரத்தில் ஒற்றுமைக்காக நிறுவப்பட்டு, பிரேண்டிங் செய்யப்பட்டு வரும் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையில் 'ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி' என தமிழ் மொழியில் எழுத்து பிழையோடு பொறிக்கப்பட்டிருந்தது. அதற்கு அப்போதே தமிழ் நெட்டிசன்கள் இணைய களத்தில் கேள்வி எழுப்பியிருந்த சூழலில் அந்த விவகாரம் அப்படியே மூடி மறைக்கப்பட்டது.

 

தற்போது, அதே மாதிரியான எழுத்து பிழை ஒன்று நாட்டு மக்களின் ஆரோக்கிய நலன் சார்ந்த அரசின் விழிப்புணர்வு விளம்பரம் ஒன்றில் வருகிறது. திரையரங்குகளில் திரைப்படம்  ஆரம்பமாவதற்கு முன்னரும், இடைவெளியின்போதும் புகை பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஒளிபரப்பப்படும் இரண்டு நிமிட விளம்பர வீடியோதான் அது.
 

tamil


நாம் எல்லோரும் அடிக்கடி பார்த்து பரிட்சயமான அந்த விளம்பரத்தில் எழுத்து பிழை என்றால் நம்ப முடிகிறதா? அந்த விளம்பரத்தின் முடிவில் புகை பழக்கத்தை 'கை விடுங்கள்' என்ற வாக்கியம் இடம் பெறுகிறது. ஆனால் அது 'காய் விடுங்கள்' என எழுத்து பிழையோடு வருகிறது. அதை முதல்முறையாக படித்தபோது 'தமிழுக்கு ஏன் இந்த அவல நிலை?' என்ற அதிர்ச்சிகரமான கேள்வி எழ... அது சம்மந்தமாக தமிழ் ஆர்வலர்களிடம் பேசினோம்.
 

tamil


"மொழி என்பது திட்டமிடப்பட்டது கிடையாது. எந்த ஒரு வாக்கியமாக இருந்தாலும் ஒன்றுக்கு இரண்டு முறை படித்து எழுத்துப்பிழைகளை சரி செய்தாக வேண்டும். இது, என்ன ஒரு சின்ன விளம்பரம் தானே? இதற்கு ஏன் படித்து எழுத்துப்பிழைகளை சரிசெய்ய வேண்டுமென்று நினைப்பதுதான் பெரிய பெரிய எழுத்துப் பிழைகள் ஏற்படவும் மிகமுக்கிய காரணம். சாதாரண விழிப்புணர்வு விளம்பரம் என அரசு ஊழியர்களும், அரசாங்கமும் அலட்சியமாக செயல்பட்டு வருவதாக நான் நினைக்கிறேன்.

 

மாநில மொழி ஒன்றில் விளம்பரம் வெளியிட அரசாங்கம் விரும்பினால் அந்த மொழியில் முறையாக படித்து புலமை பெற்ற அறிஞர்களின் பங்கையும் கொண்டிருக்க வேண்டும். அதை தவிர்த்துவிட்டு பொத்தாம்பொதுவாக அனைத்திற்கும் தொழில்நுட்பத்தை நாடியதன் விளைவுதான் இது.

 

உதாரணமாக, உரிய ஆவணங்களை கொடுத்து வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வங்கிக்கணக்கு, சொத்துப்பத்திரம், ஆதார் அட்டை என எதை விண்ணப்பித்தாலும் அதில் ஏதாவது பிழையிருந்தால் அதை திருத்தம் செய்ய மீண்டும் நாம்தான் போராட வேண்டியுள்ளது. இதுபோல, கண்ணுக்கு தெரியாமல் எத்தனையோ எழுத்துப் பிழைகளை செய்வதென்னவோ அரசுதான். ஆனால், மக்கள் குற்றவாளிகளாக்கப்படுகிறார்கள்.

 

அரசாங்கமே இதில் தலையிட்டு முறையான மொழி வல்லுநர்களையும் பிழைதிருத்துனர்களையும் பணியமர்த்துவதுதான் இதற்கான தீர்வு. இது, தனியொருவரின் தவறு கிடையாது. ஒட்டுமொத்த அரசாங்கத்தின் தவறு.

மறுபக்கம் பார்த்தால் தமிழ் பிழைத்திருத்துனர்களுக்கும் பற்றாக்குறை இருப்பதால்தான் இதுமாதிரியான எழுத்துப் பிழைகள் ஏற்படுகின்றன என்பதை நாம் எல்லோருமே பகிரங்கமாக ஒப்புக்கொள்ள வேண்டும்.

ஏட்டுக் கல்வியிலிருந்தே இலக்கணத்தை முறையாக கற்றிருந்தால் இதுமாதிரியான, பிழைகள் ஏற்படாது. அண்டை மாநிலங்களை போல தமிழ் மொழியை பள்ளிகளில் கட்டாய மொழி பாடமாக்க வேண்டும்” என்கிறார் தனியார் மின்னணு வெளியீட்டு நிறுவனத்தில் மொழி வல்லுனராக பணியாற்றி வரும் தீனதயாளன்.

tamil 33




புதுச்சேரியில் இயங்கி வரும் தாகூர் அரசு கலைக்கல்லூரியின் தமிழ் துறை தலைவர் இளங்கோ நம்மிடம்,“இணையத்தில் அண்மை காலமாக தமிழ் மொழியின் பயன்பாடு என்பது பன்மடங்கு அதிகரித்துள்ளது. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள்கூட ஒரு படத்தில் உள்ள தமிழ் மொழியை அப்ளிகேஷன் துணையோடு ஒலிக்க செய்து தெரிந்து கொள்ளும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.

 

கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் துணையோடு நாம் பேசுவதை தட்டச்சு செய்யும் வசதிகள்கூட வந்துவிட்டன. இருந்தாலும் இணைய உதவியோடு மொழியாக்கம் செய்யும்போது அதில் இன்னும் சீர்மை வரவில்லை என எண்ணுகிறேன். ஆங்கிலத்திற்கும், தமிழுக்கும் இடையே இருக்கும் இலக்கண அமைப்பின் வேறுபாடுகூட காரணமாக இருக்கலாம். வெகு சீக்கரமே இந்த சிக்கல் சரியாக்கப்பட்டுவிடும். தொழில்நுட்பத்தை முறையாக கையாளாமல் அறியாமையோடு கையாண்டதுதான் இதற்கு பிரச்சனை. பெரும்பாலான தமிழ் விளம்பரங்கள் இப்போதெல்லாம் நேரடியாக ஆங்கிலத்திலிருந்து அப்படியே மொழியாக்கம் செய்யப்படுத்தவதுதான் இதற்கு காரணம்.

 

தொழில்நுட்பம் தமிழுக்கு கை கொடுத்தாலும் தமிழ்மொழி சார்ந்த புலமை இல்லாதவர்கள் இந்த பணியை செய்ததால் எழுத்துப் பிழை ஏற்பட்டிருக்கலாம். தமிழ் மட்டுமல்லாது பெரும்பாலான மாநில மொழிகளில் எழுத்து பிழை சிக்கல் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இதற்கெல்லாம், காரணம் ஹிந்தி மொழியை வளர்க்க வேண்டுமென்ற மொழி அரசியல் ஆர்வம்தான். அதைவிடுத்து, மத்திய அரசாங்கம் தேசிய மொழிகள் அனைத்தையும் ஒரேவிதமான முக்கியத்துவம் கொடுத்து சமமான மொழி வளர்ச்சியை முன்னெடுக்க வேண்டும்” என்றார்.

 

இவர்களைப் போலவே நாம் பேசிய பெரும்பாலான தமிழ் மொழி ஆர்வலர்கள் ‘தாய் தமிழ் மொழியை பள்ளிகளை கட்டாயம் மொழி பாடமாக மாற்ற வேண்டும்’ என்ற கோரிக்கையை ஒருமித்த குரலில் அரசாங்கத்தின் காதுகளில் விழும்படி உரக்க சொல்லியிருந்தனர்.

எது எப்படியிருந்தாலும் எழுத்து பிழையோடு ஒளிபரப்பாகும் அந்த விழிப்புணர்வு விளம்பரத்தில் உடனடியாக மத்திய அரசாங்கம் மாற்றியாக வேண்டும்.

சிவரஞ்சனி

 

Next Story

“அன்னைத் தமிழ் அரியணை ஏறுமா?” - ராமதாஸ்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Ramadoss questioned Will Tamil ascend the throne?

தமிழ்நாடு அரசின் சார்பில் 2வது உலகத் தமிழ் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் நடத்தப்படும் எனத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், செம்மொழி மாநாட்டிற்கு முன்பாக கல்வி, வணிகம், நீதிமன்றங்களில் அன்னைத் தமிழ் அரியணை ஏறுமா? என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக, ராமதாஸ் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தமிழ்நாடு அரசின் சார்பில் இரண்டாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் சென்னையில் நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். நல்லது. அதற்குள்ளாகத் தமிழ்க் கட்டாயப் பாடம், தமிழ் பயிற்று மொழி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழ்ப் பெயர்ப்பலகைகள் ஆகியவற்றை சாத்தியமாக்கி  அன்னைத் தமிழை அரியணையில் ஏற்றுமா தமிழக அரசு?” என்று தெரிவித்துள்ளார்.

Next Story

எழுத்துப் பிழையுடன் அரசு பெயர்ப் பலகைகள்; கவனிக்குமா தமிழ் வளர்ச்சித்துறை?

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Spelling mistake on government office name boards

தமிழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அதுவரை நடைமுறையில் இருந்து வந்த வீட்டுவசதித் துறையை, 'வீட்டுவசதி  மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை' என்று பெயர் மாற்றியது. அதேபோல, குடிசை மாற்று வாரியத் துறையை, 'தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்' என்று பெயர்களை மாற்றி அமைத்தது. ஆனால் இந்த இரு துறைகளின் பெயர்களிலும் இடம்பெற்றுள்ள, 'நகர்ப்புறம்' என்ற சொல்லை, 'நகர்ப்புரம்' என்று குறிப்பிட்டுள்ளனர். அரசின் இணையதளத்திலும் அவ்வாறே பிழையுடன் 'நகர்ப்புரம்' என்றே பதிவு செய்துள்ளனர். அதாவது, வல்லின 'றகரம்' வர வேண்டிய இடத்தில்,  இடையின 'ரகர' எழுத்தைக் குறிப்பிட்டு, 'நகர்ப்புரம்' என்று பிழையுடன் குறிப்பிடப்பட்டு இருந்தது.

முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 11.12.2021 ஆம் தேதி சேலத்தில் கலந்து கொண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும்கூட, 'நகர்ப்புரம்'  என்று குறிப்பிட்டே பதாகைகள் வைக்கப்பட்டு இருந்தன. செய்தி மக்கள் தொடர்புத் துறை அச்சிட்டு இருந்த அழைப்பிதழிலும் 'நகர்ப்புரம்'  என்று பிழையுடனே குறிப்பிட்டு இருந்தனர். இதுகுறித்து நக்கீரன் இணைய ஊடகத்தில் 20.12.2021ஆம் தேதி செய்தி வெளியிட்ட பிறகு, அரசு இணையதளத்தில் இருந்து பிழையான சொல்  திருத்தம் செய்யப்பட்டு 'நகர்ப்புறம்' என்று மாற்றப்பட்டது.

இது இப்படி இருக்க, சேலம் குமாரசாமிப்பட்டியில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டட முகப்பின் இடப்பக்கத்தில், 'நகர்புர' சமுதாய சுகாதார மையம் என்றும், வலப்பக்கத்தில் 'நகர்ப்புர' ஆரம்ப சுகாதார நிலையம் என்றும், நுழைவு வாயில் முன்பு உள்ள முகப்பு  சுவரில் உள்ள கருப்பு நிற பளிங்கு கல்வெட்டில், 'நகர்புற' சமுதாய சுகாதார மையம் என்றும் எழுத்துப் பிழைகளுடன் பெயர்ப் பலகை வைத்துள்ளனர். வல்லின றகர எழுத்துடன் குறிப்பிடப்படும் புறம் என்ற சொல்லுக்கு திசை, பக்கம், வெளியே, காலம், வீரம், புறநானூறு என பல பொருள்கள்  உள்ளன. இங்கே நகர்ப்புறம் என்பது அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் பெற்ற நிலப்பரப்பைக் குறிக்கும். அதாவது, இடவாகுபெயராக  வருவது, புறம் ஆகும். நகர் + புறம் = நகர்ப்புறம் எனலாம். ஆகையால், நகர்ப்புறம் என்றே பெயர்ப் பலகையில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

அதேபோல, இடையின 'ரகற' எழுத்துடன் குறிப்பிடப்படும் புரம் என்ற சொல்லுக்கு நகரம், ஊர் என்று பொருள்கள் உள்ளன. இது ஒரு  பெயர்ச்சொல்லாகும். வணிகர்கள் வாழும் பகுதியை நகர் என்கிறார்கள் மொழியியல் ஆய்வாளர்கள். காஞ்சிபுரம் என்றால் காஞ்சி நகர் என்றும், விழுப்புரம் என்றால் விழுமிய நகர், பல்லவபுரம் என்றால் பல்லவ நகர் என்றும் பொருள்படும்.  எனில், நகர்ப்புரம் என்று குறிப்பிட்டால் அதன் பொருள் 'நகர்நகர்' என்றாகி விடும். ஆக, நகர்ப்புரம் என்று குறிப்பிடுவது முற்றிலும் பிழையானது.

Spelling mistake on government office name boards

இது ஒருபுறம் இருக்க, சேலம் குமாரசாமிப்பட்டியில் நகர்ப்புற சுகாதார மையத்தில் பெயர்ப்பலகை எழுதுகையில், அதிகாரிகள் நகர்ப்புறம்  அல்லது நகர்ப்புரம் என்பதில் கடைசி வரை பெரும் குழப்பத்துடன் இருந்திருக்கக்கூடும். ஓரிடத்தில் 'நகர்புரம்' என்றும், மற்றொரு இடத்தில் 'நகர்ப்புரம்' என்றும், நுழைவு வாயில் பகுதியில் 'நகர்புறம்' என்றும் விதவிதமாக  எழுதியுள்ளனர். நகர் + புறம் என்றாலும் சரி; நகர்+புரம் என்றாலும் சரி; சேர்த்து எழுதும்போது இரண்டு சொல்லுக்கும் இடையில் 'ப்' என்ற  ஒற்றெழுத்து மிகும். இலக்கண விதிப்படி சொல்வதெனில், வருமொழியில் ககரம், சகரம், தகரம், பகரம் ஆகிய எழுத்துகளில் தொடங்கும் சொற்கள் இருந்தால், அவ்விரண்டு சொற்களுக்கும் இடையில் க், ச், த், ப் ஆகியவற்றுக்கு இனமான ஏதேனும் ஓர் ஒற்றெழுத்துத் தோன்றும்.

இது மட்டுமின்றி, சேலம் பெரமனூர் நாராயணசாமி தெருவில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாகப் பொறியாளர்  அலுவலக பெயர் பலகையிலும் நகர்ப்புறம் என்பதை 'நகர்ப்புரம்' என்று எழுத்துப் பிழையுடன் வைத்துள்ளனர். இப்படி பிழையான பெயர்ப் பலகைகளை அன்றாடம் காண்போருக்கு, ஒரு கட்டத்தில் அந்தச் சொல்தான் சரியாக இருக்குமோ என்ற முடிவுக்கும் வந்து விடும் அபாயம் இருக்கிறது. இது தொடர்பாக நாம் சேலம் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் ஜோதியிடம் கேட்டபோது, ''இடையின ரகர எழுத்துடன்  'நகர்ப்புரம்' என்று எழுதுவது பிழையானதுதான். சேலம் குமாரசாமிப்பட்டி சுகாதார நிலைய பெயர்ப்பலகையில் நகர்ப்புறம் என்றுதான் எழுத  வேண்டும். இது தொடர்பாக நீங்கள் ஒரு கடிதம் எழுதினால் எங்கெங்கு பிழைகள் இருக்கிறதோ அங்கெல்லாம் திருத்தி எழுதி விடுகிறோம்,'' என்றார்.     

Spelling mistake on government office name boards

அவரை தொடர்பு கொண்டபோது, 'ஐயா' என்றே அழைத்தவர், முழு உரையாடலையும் மொழி கலப்பின்றி பேசினார். பதவிக்குத் தகுந்த அணுகுமுறை சரிதான் என்றாலும் கூட, இதற்கெல்லாம் அரசுக்குக் கடிதம் எழுதினால்தான் பிழைகள் திருத்தப்படும் என்பது சற்று முரணாக இருந்தது. ஒரு தவற்றைச் சுட்டிக்காட்டிய பிறகு அரசு அலுவலர்கள் அதை சரிசெய்வதே சிறந்தது. நகர்ப்புறமா? அல்லது நகர்ப்புரமா? என்ற குழப்பம் இன்னும் தமிழக அரசுக்கே தீர்ந்தபாடில்லை போலிருக்கிறது. நடப்பு ஆண்டுக்கான நிதிநிலை  அறிக்கையிலும் நகர்ப்புறம் என்று வர வேண்டிய எல்லா இடங்களிலும் நகர்ப்புரம் என்றே பிழையுடன் குறிப்பிட்டு இருந்தனர்.

செவ்வியல் செறிவுடன் கூடிய தமிழ் மொழி, ஏற்கெனவே வேகமாகச் சிதைந்து வருகிறது. அதை அழிந்து விடாமல் காப்பதே நம் கடமை.  நாடாளுமன்றத் தேர்தலைக் காரணம் காட்டி, காலம் தாழ்த்தாமல் மேற்படி பிழைகளைத் தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் சேலம் மாநகராட்சி  அலுவலர்கள் விரைந்து சரிசெய்திட வேண்டும்.