Skip to main content

அமைச்சர் பதவி நீக்கம்; அடுத்தடுத்து நடந்த முக்கிய திருப்பங்கள்; முதல்வர் மற்றும் ஆளுநரின் அதிகார வரம்புகள் என்ன? -  விரிவான பார்வை

Published on 30/06/2023 | Edited on 30/06/2023

 

tamil nadu chief minister and governor - Senthil Balaji Issue

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவருக்கு நெஞ்சு வலி வந்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நடந்த மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு இதயத்தில் நான்கு இடங்களில் அடைப்பு இருப்பதாகவும் அதற்காக உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவமனை தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டது. இதனால் அமைச்சர் செந்தில் பாலாஜி வகித்து வந்த துறைகளை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அமைச்சர் முத்துசாமி ஆகியோருக்கு பகிர்ந்தளித்தார் முதல்வர் ஸ்டாலின். இதனால் தமிழக அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி. 

 

ஆனால், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதை அனுமதிக்க முடியாது என்று சொல்லி அதற்கு ஒப்புதல் அளிக்க மறுத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்ததை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்று அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்குகள் நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கிவிட்டதாக ஒரு அறிவிப்பை ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று இரவு திடீரென வெளியிட்டார். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. 

 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசு இருக்கும்போது, அதன் முதலமைச்சருக்கான அதிகாரத்தில் குறுக்கிட்டு ஆளுநர் அமைச்சர்கள் விவகாரத்தில் தலையிடுவதா? என பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. ஆளுநரின் அறிவிப்பு வெளியானதும், அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. இதை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம் என்று உடனடியாக அறிவித்தார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின். மேலும், பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும் நீதித்துறையை சேர்ந்தவர்களும் ஆளுநரின் இந்த தன்னிச்சையான நடவடிக்கைக்கு தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். 

 

ஆளுநரின் அறிவிப்பிற்கு நாடு முழுவதும் எழுந்த கண்டனங்களைத் தொடர்ந்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் ஆலோசனை செய்ததாகவும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்கத்தை ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞருடன் கலந்தாலோசித்து விட்டு பிறகு முடிவெடுத்துக் கொள்ளாலாம் என்று அறிவுறுத்தியதாகவும், அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்க அறிவிப்பை திரும்பப் பெற்றுக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழ்நாடு அரசிற்கும் தொடர்ந்து வரும்  மோதல் போக்கு மேலும் அதிகரித்துள்ள நிலையில், உண்மையில் முதல்வர் மற்றும் ஆளுநரின் அதிகார வரம்புகள் என்ன? மாநில அரசின் அல்லது முதல்வரின் அதிகார வரம்பிற்குள் ஆளுநர் தலையிட முடியுமா போன்ற விவாதங்கள் எழும்பத் தொடங்கி இருக்கிறது. முதல்வர் மற்றும் ஆளுநருக்கு அரசியல் சாசனம் வழங்கி இருக்கும் அதிகாரங்கள் என்னென்ன என்பதை தெரிந்துகொண்டால் தான் மேற்கண்ட விவாதங்களுக்கு நமக்கு விடை கிடைக்கும்.

 

மாநிலத்தில் நிர்வாக அதிகாரங்களைச் செயல்படுத்துவது முதலமைச்சர் மற்றும் அவரது தலைமையிலான அமைச்சரவையாகும். ஆளுநரின் கண்காணிப்பில் நிர்வாகத்தை முதலமைச்சர் மேற்கொள்கிறார். எனவே, ஆளுநர் பெயரளவிலான தலைவராக மட்டுமே செயல்படுவார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 'பிரிவு 164' மாநில அமைச்சர்களின் நியமனம் குறித்துக் குறிப்பிடுகிறது. அதன்படி, சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற்றுள்ள கட்சியின் தலைவரை முதலமைச்சராக ஆளுநர் நியமிப்பார். மற்ற அமைச்சர்களை முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் நியமிப்பார்.

 

அரசு அலுவல் விதியின் கீழ், முதலமைச்சருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி அமைச்சர்களின் இலாகாக்களை முதலமைச்சரே மாற்ற முடியும். அதேபோல, குறிப்பிட்ட நபரை துறை இல்லாத அமைச்சராகத் தொடர வைக்கவும் முதலமைச்சருக்கு அதிகாரம் இருக்கிறது. இலாகா ஒதுக்குவதில் முதலமைச்சரின் பரிந்துரையை ஆளுநர் ஏற்கத் தான் முடியும், நிராகரிக்க முடியாது. முதலமைச்சரின் பரிந்துரையை ஆளுநர் 2-ஆவது முறையாக நிராகரித்தால் மாநில அரசே அரசாணை வெளியிட்டு இலாகாக்களை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். முதலமைச்சர் ஒரு அமைச்சரை ராஜினாமா செய்யச் சொல்லலாம். சட்டப்பேரவையை கலைக்க முதலமைச்சர் எந்த நேரத்திலும் ஆளுநருக்கு பரிந்துரைக்க முடியும்.

 

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் அனைத்து மசோதாக்களும் ஆளுநரின் ஒப்புதலுக்குப் பிறகே சட்டமாகும். ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட மசோதா சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டால் அதற்கு அவர் ஒப்புதல் அளித்தாக வேண்டும். சட்டமன்றக் கூட்டத்தொடர் இல்லாத நேரத்தில், அரசின் பரிந்துரையின் பேரில் அவசரச் சட்டங்கள் இயற்றவும் ஆளுநருக்கு அதிகாரம் உண்டு.

 

முதலமைச்சர் மீது எழும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க மாநில ஆளுநரிடம் விசாரணை அமைப்புகள் அனுமதி பெறுவது அவசியம். ஆனால், சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகள் எதையும் ஆளுநர் மீது அவர் பதவியில் இருக்கும் காலத்தில் யாரும் தொடர முடியாது என்பதுதான் முதல்வர் மற்றும் ஆளுநருக்கான அதிகார வரம்பாக அரசியல் சாசனம் சொல்லி இருக்கிறது. எனவே, மேற்கண்ட விதிகளின்படி பார்த்தால் அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்கம் சட்டப்படி தவறானது என்பதாலேயே ஆளுநர் ஒன்றிய அரசின் அறிவுறுத்தலின்படி தனது அறிவிப்பை திரும்பப் பெற்றுக்கொண்டிருக்கிறார்.

 

ஆளுநர் தனது அறிவிப்பை திரும்பப் பெற்றுக்கொண்டாலும் தமிழ்நாடு அரசில் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டும் என்கிற ஆளுநரின் திட்டம் இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. எனவே, ஆளுநரின் இந்த மோதல் போக்கை திமுக அரசு எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது இனிமேல்தான் தெரியும்.

 

- எஸ்.செந்தில்குமார்

 

 

Next Story

“தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்” - தமிழக முதல்வர் உத்தரவு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Tamil Nadu Chief Minister's ordered Drinking water should be distributed without interruption

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக மதுரை, ஈரோடு போன்ற பகுதிகளில் வெப்ப அலை வீசி, மக்களைப் பாதிப்படைய செய்கிறது.

வெப்ப நிலை அதிகமாக இருக்கும் இந்த நிலையில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், அதிகரிக்கும் வெப்பத்தை எதிர்கொள்ள சிறப்பு நடவடிக்ககளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, நீர்வளத்துறை அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (27-04-24) ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் பேசியதாவது, “கோடைகாலம் அதிக வெப்பம், அதிக குடிநீர் தேவை என்ற இரு நெருக்கடிகளை ஏற்படுத்தும். மேற்கு மாவட்டங்களில் மழை குறைவால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை அதிகாரிகள் விளக்கினர். அணைகளின் நீரை சிக்கனமாக பயன்படுத்தி 2 மாதங்களுக்கு குடிநீர் தேவையை நிறைவு செய்ய வேண்டியுள்ளது. அணைகளில் தற்போது இருப்பில் உள்ள நீரை சிக்கனமாக பயன்படுத்தி சமாளிக்க வேண்டிய சூழல் உள்ளது. கோடை காலத்தில் தண்ணீரின் தேவை அதிகம் தேவை என்பதால் அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட்டு மக்கள் பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

குடிநீர் பற்றாக்குறை உள்ள 22 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் நிதியில் இருந்து ஏற்கெனவே ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதியை மாவட்டங்கள் பகிர்ந்து குடிநீர் வழங்கல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கூட்டு குடிநீர் திட்டங்கள், நீரேற்று நிலையங்கள் செயல்பட தடையற்ற மின்சாரம் அவசியம் வழங்க வேண்டும். திட்டப்பணிகளுக்கு தடையற்ற மின்சாரம் கிடைப்பதை மின்வாரியத் தலைவர் உறுதி செய்ய வேண்டும். தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில் குடிநீர் விநியோகம் போன்ற முக்கிய பணிகளில் சுணக்கமின்றி கண்காணிக்க வேண்டும். கிராமப்புறங்களில் வறண்ட ஆழ்துளை கிணறுகளுக்கு பதிலாக வேறு குடிநீர் ஆதாரங்களில் இருந்து தண்ணீர் வழங்க வேண்டும். ” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“சர்.பிட்டி தியாகராயர் காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி” - தமிழக முதல்வர் புகழாரம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Chief Minister of Tamil Nadu felicitated for Pioneer of Sir Pitti Thiagarayar Breakfast Scheme

திராவிடக் கட்சியின் தாய் அமைப்பான நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் சர்.பிட்டி தியாகராயர். இந்திய சுதந்திரத்துக்கு பிறகு, முன்னாள் முதல்வர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை தொடங்குவதற்கு முன்பே, அந்த திட்டத்தை சென்னை மாநகராட்சி பள்ளிகளில், சர்.பிட்டி தியாகராயர் தொடங்கி வைத்து முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார். இவரது நினைவாக தான் சென்னை தியாகராயர் நகர் (தி.நகர்) பகுதிக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்று (27-04-24) சர்.பிட்டி தியாகராயரின் 173ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 

சர்.பிட்டி தியாகராயரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்! அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர்!

காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி!. தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர், நம் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.