Skip to main content

இன்று பி.டி.ஆர் செய்வதை அன்றே செய்த கலைஞர்! - தமிழக பட்ஜெட் சுவாரசியங்கள்!

Published on 12/08/2021 | Edited on 12/08/2021

 

Tamil Nadu Budget history kalaignar and PTR

 

தமிழக அரசின் பட்ஜெட் தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடர் செப்டம்பர் 21 வரை நடைபெறப் போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த மே 7-ம், தேதி, தமிழத்தின் முதல்வராகப் பொறுப்பேற்ற மு.க. ஸ்டாலின், தனது தலைமையில் தாக்கல் செய்யப்போகும் 'முதல்' தமிழக பட்ஜெட் தயாராகிவிட்டது. இது தமிழகத்தின் 'முதல்' டிஜிட்டல் பட்ஜெட் எனும் பெருமையைப் பெற்றுள்ளது. அதேபோல, தமிழ்நாட்டின் 'முதல்' வேளாண் பட்ஜெட்டும், இதே கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இப்படிப் பல 'முதல்'களை கொண்ட இந்த பட்ஜெட், எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு, தமிழக பொருளாதார நிலை குறித்து 'வெள்ளை அறிக்கை' வெளியிட்ட நிதியமைச்சர், 'வரி இல்லாமல் வருமானம் இல்லை' எனக் கூறியிருந்தார். இதனால், விலைவாசி ஏறப் போகிறது எனச் சிலர் பரபரக்கின்றனர். வேறு சிலரோ, 'நகைக் கடன்', 'கல்விக் கடன்', 'பெண்கள் உரிமைத் தொகை' உள்ளிட்டவை குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என அடித்துச் சொல்கின்றனர்.

 

'பட்ஜெட்', 'நிதிநிலை அறிக்கை' ஆகிய வார்த்தைகளைக் கேட்கும்போதே நம்மில் சிலருக்கு 'கொட்டாவி' வந்துவிடும். பட்ஜெட்டால் நமக்கு என்ன ஆகப் போகிறது எனச் சிலர் விட்டத்தைப் பார்த்துப் விட்டேத்தியாகப் பேசத் தொடங்கிடுவர். 'மேத்ஸ்' அலர்ஜிதான் 'பட்ஜெட்' வரை பாய்வதாகச் சிலர் குமுறுவதையும் பார்க்க முடியும். இன்னும் சிலரோ, பட்ஜெட்டின் ஆதி அந்தத்தை ஆராய்ந்து, காது மடலுக்கு மேலே பேனாவை சொருகிவைத்து, பந்தா காட்டுவர். உண்மை என்னவென்றால், கொட்டாவி விடும் அளவுக்கு பட்ஜெட் போரும் அல்ல. பந்தா காட்டும் அளவுக்கு பிக் பேங் மர்மமும் அல்ல. ஆனால், இதுதான் நமது அன்றாட வாழ்வை தீர்மானிக்கிறது.  இப்படி நமது அன்றாட வாழ்வை தீர்மானித்துக் கொண்டிருக்கும் பட்ஜெட்டைப் பற்றி எளிமையாகப் பார்க்கலாம்.

 

Tamil Nadu Budget history kalaignar and PTR

 

உண்மையில் பட்ஜெட் எனும் சொல், அரசு குறிப்பேட்டில் கிடையாது. 'ஆண்டு நிதிநிலை அறிக்கை' எனும் சொல்லே அரசு பயன்படுத்தும் சொல். வெகுமக்கள் மொழியாக ஊருக்குள் நடமாடி வருகிறது 'பட்ஜெட்'. பட்ஜெட் என்பது பிரெஞ்சு சொல்லான 'பவ்கெட்' என்பதன் திரிபு. பவ்கெட் என்றால், 'தோலால் ஆன பர்ஸ்' எனப் பொருள். ஆரம்பத்தில், தோலால் ஆன பெட்டியில் வைத்தே பட்ஜெட் ஆவணங்கள் கொண்டு செல்லப்பட்டன. இப்போதுதான் இது டிஜிட்டல் பரிணாமம் பெற்றுள்ளது. ஒரு குடும்பம், எப்படி வரவு செலவுகளைப் பார்த்து, தன்னை சரிவிலிருந்து மீட்டுக் கொள்ளுமோ அதைப் போலவே அரசும் செய்கிறது. அதை 'ஆண்டு நிதிநிலை அறிக்கை' அல்லது பட்ஜெட் என்பர்.

 

தமிழகத்தில் பட்ஜெட் தயாராகும் முறையே சுவாரசியமானது. அனைத்துத் துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபடும் முதல்வர், பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்வார். அதனடிப்படையில், ஒவ்வொரு துறை சார்ந்த அமைச்சர்களும் தங்களது துறைக்கான நிதித் தேவைகள் மற்றும் திட்டங்கள் குறித்து நிதி அமைச்சருக்குத் தகவல் தருவர். அதை அடிப்படையாக வைத்து, முதலில் பட்ஜெட் வரைவை நிதித்துறை அமைச்சகம் தயாரிக்கும். இந்த வரைவை, முதலமைச்சர் உள்ளிட்ட அனைத்துத் துறைக்கும் அனுப்பி கருத்து கேட்கப்படும். பட்ஜெட் வரைவு மீதான கருத்துகளை, அனைத்துத் துறை அமைச்சர்களும் நிதி அமைச்சருக்குத் தெரிவிப்பர். அதற்கேற்ப, மாற்றங்கள் செய்து முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்படும். இதுவே இறுதியான பட்ஜெட்.

 

Tamil Nadu Budget history kalaignar and PTR

 

பட்ஜெட் இறுதி வடிவம் பெற்றதும், அதை எழுதும் பணி தொடங்கும். பட்ஜெட்டை பெரும்பாலும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே எழுதுவர். தமிழில் பட்ஜெட் தயாரான பிறகு, அது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்படும். முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் தன் கைப்பட பட்ஜெட்டுகளை எழுதுவதையே பெரிதும் விரும்புவார். அதேபோல், கலைஞரும் ஒரு முறை தான் கைப்பட எழுதிய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சில நாட்களுக்கு முன்பு ட்வீட் செய்த நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன், இது ஐ.ஏ.எஸ் அதிகாரி எழுதிய பட்ஜெட் அல்ல அரசியல்வாதி எழுதும் பட்ஜெட் எனக் குறிப்பிட்டது நினைவிருக்கலாம். மேலும், அவர் "இது பிடிஆரின் பட்ஜெட் அல்ல முதல்வரின் பட்ஜெட்" எனவும் கூறியிருப்பார். எனவே பிடிஆரும், ப.சிதம்பரம் மற்றும் கலைஞரைப் போல, தானே இந்த பட்ஜெட்டை தயாரித்திருக்கிறார்.

 

தமிழக வரலாற்றில் முதல் முறையாக, ஆகஸ்ட் 14-ம் தேதி 'வேளாண் பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட உள்ளது. இது விவசாயிகள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளதோடு, எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  இதன்மூலம், விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்தி விவசாயச் சிக்கல்களுக்கு உரிய தீர்வும் எட்டப்படும் எனக் கூறப்படுகிறது. கர்நாடகா, ஆந்திராவுக்குப் பிறகு விவசாயிகளுக்கான தனி பட்ஜெட்டை அறிமுகப்படுத்தும் மூன்றாவது மாநிலமாக தமிழகம் உள்ளது. அதேபோல, தமிழகத்தில் சோதனை முயற்சியாக 'டிஜிட்டல் பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட உள்ளது. அதற்காக, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கையடக்கக் கணினியும் மேசைக் கணினி வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் பட்ஜெட், கடந்த பிப்ரவரி மாதம், மத்திய அரசால் முதல் முறையாக தாக்கல் செய்யப்பட்டது. அதையடுத்து, உத்திரப்பிரதேச அரசும் காகிதமற்ற டிஜிட்டல் பட்ஜெட்டை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

 

Tamil Nadu Budget history kalaignar and PTR

 

முன்னாள் RBI ஆளுநர் ரகுராம் ராஜன் உள்ளிட்ட ஐந்து அறிஞர்களை ஒன்றிணைத்து, முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவை கடந்த ஜூன் மாதம் அமைத்தது தமிழக அரசு. 'பட்ஜெட்' தயாரிப்பில், இந்தக் குழுவின் ஆலோசனை இருப்பதாகக் கூறப்படும் நிலையில், பட்ஜெட் மீது பலருக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேநேரம், கஜானா காலியாகி, கடன் சுமை கூடியிருக்கும் போது, எப்படித் தேர்தல் நேர வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றப் போகிறது என எதிர்க்கட்சிகள் கண்கொத்தி பாம்பாகக் காத்திருக்கிறது. இந்தச் சட்டமன்றக் கூட்டத் தொடரில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவோ, புயலைக் கிளப்ப முடிவு செய்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது. எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டு, அதையொட்டி, எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடந்த ரெய்டு இவையெல்லாம் மாஜிக்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது திமுகவின் அரசியல் காழ்ப்புணர்ச்சி எனச் சொல்லும் அதிமுக தலைமை, சட்டமன்றத்தில் நல்ல முறையில் பர்ஃபார்ம் செய்தால் மக்களிடம் அனுதாபம் தேடிவிடலாம் என நினைக்கிறது. 

 

வேலைவாய்ப்பின்மை, காவேரி நதிநீர்ப் பிரச்சனை, விலைவாசி உயர்வு, கரோனாவால் நொடிந்து போன பொருளாதாரம் உள்ளிட்ட பல பிரச்னைகளால் வெந்து தணியும் தமிழகத்துக்கு விடியலைத் தருமா இந்த பட்ஜெட்? பொறுத்திருந்து பார்ப்போம்.

 

 


 

Next Story

மக்களிடம் 21 ஆயிரம் கோடி; பாஜகவின் டிஜிட்டல் வழிப்பறி; முதல்வர் ஸ்டாலின் ஆவேசம் நியாயமா? 

Published on 15/04/2024 | Edited on 16/04/2024
Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

வங்கிகளுக்குச் சென்று பணம் எடுப்பது என்பது ஒரு காலத்தில் பாதி நாளை முழுங்கும் செயலாகவே இருந்தது. வங்கிகளுக்குச் செல்லும் படிக்காதவர்களையும், ஏழை மக்களையும் காக்க வைத்து, அவமானப் படுத்தும் செயல்களும் ஒரு சில வங்கிகளில் அரங்கேறும். ஆனால், இதற்கு மாற்றாக ஏடிஎம் எனப்படும் தானியங்கி பணம் பட்டு வாடா செய்யும் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்தன. தேசிய வங்கிகள் எல்லாம் மடம் போல் செயல்பட்டு வந்த நிலையில், தனியார் வங்கிகள் மூலம் இந்த ஏடிஎம் இயந்திர புரட்சி நடைப்பெற்றது.  வங்கிகளுக்கு செல்ல வேண்டும் என்றாலே அலர்ஜியானவர்களுக்கு இந்த ஏடிஎம் இயந்திரங்கள் மிகப் பெரிய ஆறுதலாக அமைந்தது.

எப்படியோ வங்கி பரிவர்த்தனை எளிதாகிப் போன சமயத்தில்தான், திடீரென அனைவரின் தலையிலும் இடிவிழுந்தது போல்  ஒன்றிய பாஜக அரசின் பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டார். இந்தப் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மக்களுக்கு பல்வேறு அவமானங்களையும், மன உளைச்சல்களையும் தந்தது. 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி திடீரென தொலைக் காட்சியில் தோன்றி அறிவித்ததும் நாட்டு மக்கள் அதிர்ந்து போனார்கள்.

குறிப்பாக, நடுத்தர ஏழை எளிய மக்கள் தாங்கள் உழைத்து சம்பாதித்த சிறிய சேமிப்புகளும் போச்சே என்று அரண்டு போனார்கள். செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் பட்ட கஷ்டத்தினை சொல்லி மாளாது. கருப்பு பணத்தை ஒழிக்கத்தான் இந்த நடவடிக்கை என்று கூறப்பட்டாலும், பணக்காரர்களுக்கு என்னவோ இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆட்களை அமர்த்தியும், தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தியும் அவர்கள் தங்களது செல்லா பணத்தை வங்கிகளில் மாற்றிக் கொண்டார்கள்.

Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

ஆனால், நடுத்தர மற்றும் ஏழை மக்கள்தான் வங்கிகளின் வாசலில் தவமாய் கிடந்து சொல்லொண்ணா துன்பத்தை அனுபவித்தனர். மக்களின் இந்தத் துயரத்தை ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டியதும், திடீரென ரூட்டை மாற்றிய ஒன்றிய அரசு, டிஜிட்டல் பணபரிவர்த்தனை எனப் புதுக் கதையைக் கூறத்தொடங்கியது. ஏற்கனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் அல்லலுற்ற மக்கள் முற்றிலும் குழம்பி போனார்கள். கருப்பு பணத்தை ஒழிப்போம் என்று கங்கணம் கட்டி கூறியவர்கள் டிஜிட்டல் இந்தியா, புதிய இந்தியா என்று பிளேட்டை மாற்றி போட்டனர். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைப் பலருக்கு ஆரம்பத்தில் புரியாமல் போனாலும், வேறு வழியின்றி நாளடைவில் அதனைப் பழக ஆரம்பித்தனர். ஆனால், அதிலும் மெதுவாக மக்களுக்கு மறைமுகமாக இன்னல்கள் வர ஆரம்பித்தன. வழக்கமாகவே உண்மைகளை மூடி மறைக்கும் வங்கிகளும், கண்கொத்திப் பாம்பாக காத்திருந்து பொதுமக்களின் பணத்தைச் சுரண்ட ஆரம்பித்தன. சேமிப்பு கணக்கு வைக்க ஒவ்வொரு வங்கியும் தங்கள் இஷ்டம்போல் 500 முதல் 5000 வரை நிர்ணயித்துக்கொண்டன. அவ்வாறு சேமிப்பு கணக்கில் வங்கிகள் குறிப்பிடும் தொகை இருப்பு இல்லாவிட்டால், அதற்கு அபராதம் விதிக்கப்பட்டது. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால், அதற்கு கட்டணம் விதிக்கப்பட்டது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கும் தகவல்களுக்கும் கட்டணம் உண்டு. 

இவை எல்லாம் வங்கிகள் மறைமுகமாக வசூலிக்கும் கட்டணங்கள் என்பது எவ்வளவு பாமர மக்களுக்கு தெரியும் என்பது கூற இயலாது. இதுபோன்று பொதுமக்கள் சேமிக்கும் சிறுதொகைக்கும் அபராதம் என்ற பெயரில் அவர்களது பணத்தை வங்கிகள் நேரடியாக எடுத்துக் கொள்கின்றன. அவ்வாறு மினிமம் பேலன்ஸ் வைக்காத கணக்குகளுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மூலம், நாடு முழுவதும் மொத்தம் 21 ஆயிரம் கோடி ரூபாயும், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்தியதற்காக 8 ஆயிரத்து 289 கோடி ரூபாயும், எஸ்எம்எஸ் குறுஞ்செய்திகள் அனுப்பிய வகையில் 6 ஆயிரத்து 254 கோடி ரூபாயும் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வசூலித்துள்ளன.

இந்த தகவல்கள் மாநிலங்களவையில் நிதித்துறை அமைச்சகம் அளித்துள்ள அறிக்கையின் மூலம்  தெரிய வந்துள்ளது. இந்த மூன்று வகைகளில் மட்டுமே ஒட்டு மொத்தமாக இதுவரை 35 ஆயிரத்து 587 கோடி ரூபாயை வங்கிகள் வசூலித்துள்ளன. இதில் பிரதம மந்திரியின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் அடிப்படையில் திறக்கப்படும் சேமிப்பு கணக்குகளுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த விதிகள் எல்லாம் நடுத்தர மற்றும் சாமானிய  மக்களுக்குத் தான். பெரிய கார்ப்பரேட்  நிறுவனங்களுக்கு கிடையாது. மாறாக அவர்களுக்கு வரிகளில் தள்ளுபடி, கடன் தள்ளுபடி என பல சலுகைகளை ஒன்றிய மோடி அரசு அளித்து வருகிறது. கடந்த ஒன்பது வருடங்களில் 56 லட்சம் கோடி ரூபாய் கடன்களை வாரா கடன்களாக வங்கிகள் அறிவித்துள்ளன. இதில், 7 லட்சத்து 40 ஆயிரத்து 968 கோடி ரூபாயை வாரா கடன்களாக வங்கிகள் தள்ளுபடி செய்து விட்டன.  

இவை அனைத்தும் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய கடன் தொகைகள் ஆகும்.  இது கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்தவையாகும். நிதி அமைச்சகத்தின் இந்த விளக்கம் மூலம், ஒன்றிய மோடி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு நீதியும், சாமானிய மக்களுக்கு ஒரு நீதியையும் கடைப்பிடிப்பது அம்பலமாகியுள்ளது. பொதுமக்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை அபராதம் என்ற பெயரில் அபகரித்துள்ள ஒன்றிய மோடி அரசின் இந்த செயலை, ‘ஒரு டிஜிட்டல் வழிப்பறி’ என்று குற்றம் சாட்டியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

இதுகுறித்து பேசிய அவர், “அப்பாவி மக்களின் பணத்தை அபராதம் என்ற பெயரில் 21 ஆயிரம் கோடி ரூபாய் வரை சுருட்டியது பாஜக. கருப்பு பணத்தை ஒழித்து நாட்டின் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன?” என்று கடுமையாக  கேள்வி எழுப்பியுள்ளார்.  மேலும், “சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்ததோடு மட்டுமல்லாமல், சுருக்கு பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ஏழை மக்களிடம் இருந்து உருவியிருக்கிறார்கள்’’ என்றும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.  

கார்ப்பரேட்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி. கார்ப்பரேட் வரியை 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக குறைத்தது, ஆண்டு தோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகையாக அள்ளித்தந்து விட்டு, அதனை ஈடுகட்ட, மனதில் ஈரமே இல்லாமல், அல்லற்படும் ஏழை மக்களிடம் அரசே இப்படி டிஜிட்டல் வழிப்பறி செய்வதை அனுமதிக்கலாமா? என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி தேசம் முழுவதும் எதிரொலித்திருக்கிறது. ஆனால், ஒன்றிய பாஜக அரசு பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல என்றும் இது ஏழைகளுக்கான அரசு என்றும்  பிரதமர் மோடி கூசாமல் புளுகுகிறார் என்றும், மோடியின் புதிய இந்தியாவில் டிஜிட்டல் வழிபறி நடத்தும் இதுவா மக்கள் நலன் காக்கும் அரசு ? என்றும் குற்றம் சாட்டுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். மொத்தத்தில் எளிமையான பணப்பரிவர்த்தனை என கூறிவிட்டு,  மக்களுக்கே தெரியாமல் அவர்களின் பணத்தை சுரண்டும் இந்த நடைமுறை,  முதலமைச்சரின் கூற்றுப்படி, புதிய இந்தியாவின் டிஜிட்டல் வழிப்பறி தான் என்பதில் அய்யமில்லை !

Next Story

“பா.ஜ.க. வாஷிங் மிஷின் போல் செயல்படுகிறது” - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
BJp Works like a washing machine  Minister Palanivel Thiagarajan
கோப்புப்படம்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில், தனியார் ஆங்கில இதழில் வெளியான கட்டுரை ஒன்றில், “கடந்த 2014 ஆம் ஆண்டு மோடி பிரதமர் ஆனது முதல் ஊழல் வழக்குகளுக்கு ஆளான எதிர்க்கட்சி தலைவர்கள் 25 பேர் பா.ஜ.க.வில் சேர்ந்துள்ளனர். அவ்வாறு பா.ஜ.க.வில் சேர்ந்த 25 பேரில் 3 பேருக்கு எதிரான ஊழல் வழக்குகள் முடித்துவைக்கப்பட்டுள்ளன. 20 பேருக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஏதுமின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு. வெங்கடேசனை ஆதரித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் தனியார் ஆங்கில இதழில் வெளியான கட்டுரையை மேற்கோள் காட்டி பேசுகையில், “அஜித் பவார், முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல் பட்டேல், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அசாம் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஹேமந்த பிஸ்வா சர்மா, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலத்தின் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அசோக் சவுகான் என 25 எதிர்க்கட்சி தலைவர்கள் மீது வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், சி.பி.ஐ போன்ற விசாரணை அமைப்புகள் வழக்குகள் தொடர்ந்தன.

அதன் பின்னர் இவர்கள் தங்களது கட்சிகளை விட்டு பா.ஜ.க.வின் இணைந்து விட்டனர்.  இவர்களின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அனைத்து குற்ற்ச்சாட்டுகளும் ஆவியாகிப் போய்விட்டன. ஏனென்றால் பாஜகவின் வாஷிங் மெஷினில் சேர்ந்து வெள்ளையோடு வெள்ளையாகி விட்டன” எனத் தெரிவித்தார். முன்னதாக நேற்று (02.04.2024) பரப்புரை மேற்கொண்ட போது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், “தமிழகத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் ஜாமீன் இல்லாமல் ஓராண்டாக சிறையில் உள்ளார். அதேபோல் டெல்லி அரசின் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சிறையில் உள்ளனர். இந்த அரசு தொடர்ந்தால் ஜனநாயகம் முற்றிலும் அழிந்துவிடும்” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.