Skip to main content

தமிழனுக்கு மதம் இருக்கிறதா...அரசியல் சூழ்ச்சி...கீழடி தரும் அதிர்ச்சி தகவல்!

Published on 26/09/2019 | Edited on 26/09/2019

இந்திய வரலாற்றை வடக்கின் பார்வையிலிருந்தே எழுதிவந்த ஆய்வாளர்கள் தெற்கு நோக்கித் திரும்பவேண்டும் என்பதைப் பன்னெடுங்காலமாக வலியுறுத்தி வரப்பட்ட நிலையில், ஹரப்பா, ராகிகடி புதைபொருள் ஆய்வுகள் வரிசையில் அதனை உறுதியாக மெய்ப்பித்திருக்கிறது கீழடி. சிவகங்கை மாவட்டம் கீழடியில் உள்ளது பள்ளிச்சந்தைப் புதூர். இங்குள்ள உழவுநிலமான மண்மேட்டில் தொல்லியல் எச்சங்கள் பலமுறை கண்டெடுக்கப்பட்ட நிலையில், 2015-ஆம் ஆண்டு அகழ்வாராய்ச்சிப் பணிகளை தொடங்கியது மத்திய தொல்லியல் துறை. அது நடத்திய மூன்றுகட்ட ஆய்வுகளில் கீழடியில் வாழ்ந்த தமிழர்களின் நாகரிகம் கி.மு.3-ம் நூற்றாண்டு என கணிக்கப்பட்டது. ஆனால், மத்திய தொல்லியல் துறையின் செயல்பாடுகளில் அதிருப்தியடைந்த தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, நான்காம் கட்ட ஆய்வை 2018-ல் கையிலெடுத்தது மாநில தொல்லியல் துறை.

 

keeladi



தமிழகத்தில் நிலவிய சங்ககால பண்பாட்டு வரலாற்று ஆய்வில் மாபெரும் திருப்புமுனையாக இந்த ஆய்வு அமையுமென்று அதுவரை யாரும் எதிர்பார்க்கவில்லை. கீழே தோண்டத்தோண்ட தமிழரின் பெருமையை மென்மேலும் உயர்த்தி இருக்கிறது கீழடி. வைகை நதிக்கரை நாகரிகமாக கீழடியில் வசித்துவந்த தமிழரின் நாகரிகம் கி.மு. 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும், அதாவது 2,600 ஆண்டுகள் பழமையான சிறப்பம்சங்களைக் கொண்டிருந்ததையும் இந்த ஆய்வு உறுதிப் படுத்துகிறது.

 

research



சிந்துச் சமவெளி நாகரிகம் தொல்தமிழர் நாகரிகம் என்பதை சர்வதேச ஆய்வாளர்கள் ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆய்வுகள் வழியாக உறுதிப்படுத்தினர். அதை ஆரிய நாகரிகமாக சித்தரிக்க எடுக்கப்படும் ஒவ்வொரு முயற்சியையும், வரலாற்று தொன்ம ஆதாரங்கள் முறியடித்து வருகின்றன. குறிப்பாக ஹரியானா மாநிலம் ராகிகடியில் எடுக்கப்பட்ட 4,500 ஆண்டுகள் பழமையான மனித எலும்புக்கூடுகளின் மரபணு ஆய்வு முடிவு, ஸ்டெப்பி புல்வெளிப் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்துவந்த ஆரியர்களின் மரபணுக்களோடு ஒத்துப் போகவில்லை என்பதை உறுதிசெய்தது. மேலும், இந்தியா முழுமைக்கும் பரந்துவிரிந்த நிலப்பரப்பில் வாழ்ந்த, ஆரியர்களுக்கு முற்பட்ட மனிதர்களின் மரபணுவாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகளும் விவாதிக்கப்பட்டன.

 

keeladi



இந்நிலையில், உலக அரங்கில் தமிழர்களுக்குக் கிடைத்திருக்கும் புதிய பலமாக கீழடி அகழாய்வு முடிவுகள் பார்க்கப்படுகின்றன. சங்ககாலத் தமிழரின் வைகை ஆற்று நாகரிகத்தில் வேளாண் சமூகமாக, நகர நாகரிகமாக, வளமும் செழுமையுமாய் நம் மூதாதையர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கீழடியில் கிடைத்துள்ளன. அகழாய்வு நடந்த பகுதி தொழில்நகரமாக இருந்திருக்கிறது. நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், சுட்ட செங்கற்களும், சுண்ணாம்பும், கூரை ஓடுகளும் கொண்டு எழுப்பப் பட்டவை. பூச்சுக்காக பயன்படுத்தப்பட்ட சுண்ணாம்புச் சாந்தில் 97 சதவீதம் சுண்ணாம்பு இருந்ததுதான் இத்தனை ஆண்டுகாலம் அவை நிலைத்திருந்ததற்கான காரணம்.

இந்தியாவிலேயே மிகவும் பழமையான சிந்துச் சமவெளி பண்பாட்டின் வரிவடிவங்களின் நீட்சியாகவும், தமிழ் பிராமி எழுத்துகளின் முன்னோடியாகவும் கீறல்கள் எனப்படும் வரிவடிவங்கள் பார்க்கப்படுகின்றன. கீழடியில் கண்டெடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பானை ஓடுகளில் இந்தக் கீறல்கள் இடம்பெற்றிருப்பதும், அவை சிந்து சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட எழுத்துகளோடு ஒத்துப்போவதும் இந்தியா முழுமைக்கும் தொல்தமிழர் நாகரிகம் பரவிக் கிடந்ததற்கான சான்றுகளுக்கும், பார்வைக்கும் வித்திடுகின்றன. அதுபோக, சங்ககாலத்தில் புலவர்கள் மட்டுமின்றி, எளிய மக்களும் எழுத்தறிவு பெற்றிருந்ததற்கான ஆதாரங்களாக அவை விரிகின்றன.


வைகை நதிக்கரை நாகரிகத்தில் வேளாண் சமூகமாகவும், கால்நடைத் தொழிலை முதன்மையாகக் கொண்டும் செழுமையாக வாழ்ந்திருக்கிறார்கள் தமிழர்கள். அங்கு கிடைத்த உயிரினங்களின் எலும்புகளில் வெட்டுத் தழும்புகள் இருப்பதன்மூலம், உணவுக்காக அவற்றைப் பயன்படுத்தியதும் தெரியவருகிறது. திமிலுள்ள காளை, பசு, காட்டுப்பன்றி, வெள்ளாடு, எருமை, மயில் போன்ற உயிரினங்களாகவே அவை இருப்பதாலும், ஆரியம் தன் புராணங்களில் முன்வைக்கும் குதிரை இல்லாதபடியாலும், இது ஆரியம் நுழைவதற்கு முந்தைய நாகரிகம்தான் என்பதை நிறுவ இயலும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

கீழடி அகழாய்வில் சுடு மண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், 650-க் கும் மேற்பட்ட விளையாட்டுப் பொருட்கள், 35 காதணிகள், அணிகலன்கள், தங்கம், செம்பு, இரும்பு போன்ற உலோக தொல்பொருட்கள் கிடைத்துள்ள போதிலும், மத வழிபாட்டுக்கான எந்தவித ஆதாரமும் கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆரியர்களின் வேத நாகரிகத்துக்கு மாறான, தனித்துவமிக்க இயற்கை சார்ந்த சமூகமாக தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதையே கீழடியும் உண்மையாக்குகிறது. இதன்மூலம், எந்தவொரு மத அடையாளத்தையும் தமிழர்கள் கொண்டிருக்கவில்லை என்பது உறுதியாகிறது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வரிகள் எழுதப்படுவதற்கு முன்பே அந்த வாழ்க்கை முறையைத் தமிழர்கள் கடைப்பிடித்திருப்பதும் தெரிய வருகிறது.

தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்யும் இந்தப் பணியை சிறப்புடன் மேற்கொண்டு ஆய்வு முடிவுகளை வெளியிடுவதில் முனைப்பு காட்டிய தமிழக தொல்லியல் துறை முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்., தீராத எழுத்துப்பணியின் மூலம் முறையான அகழாய்வு மேற்கொள்ள வலியுறுத்திவந்த சு.வெங்க டேசன் எம்.பி., அகழாய்வுக்கான நிலத்தை வழங்கியவர்கள் என எல்லோருடைய மதிப்பையும் இன்னும் பல படிகள் கூட்டியிருக்கிறது கீழடி. தமிழகத்தின் மீதான மத்திய அரசின் போக்குகளைக் கண்டுகொள்ளாமல் விட்டாலும், கீழடி விவகாரத்தில் உறுதியாக நின்ற தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் பாராட்டப்படுகிறார்.

பெருமையும் தொன்மையும் மிக்க ஆய்வுக்காக தன் விளைநிலத்தை வழங்கிய பேராசிரியர் கரு.முருகேசன், மத்திய தொல்லியல் துறை ஆய்வில் பல அரிய தகவல்களை வெளிக் கொண்டு வந்த டாக்டர் அமர்நாத், அவரை அந்தப் பணியிலிருந்து மாற்றி, அகழாய்வு பணிகளை முடக்க முயன்ற மத்திய அரசின் சதித்திட்டத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்து வென்ற வழக்கறிஞர் கனிமொழிமதி என இந்த ஆய்வுக்கு வலுச்சேர்த்தவர்கள் ஏராளம்.

கீழடியில் ஐந்தாம் கட்ட ஆய்வு தொடங்கவுள்ள நிலையில், அருகிலுள்ள பகுதிகளிலும் ஆய்வுப் பணி நீட்டிக்கப்பட இருக்கிறது. வைகை நதிக்கரை மட்டுமின்றி ஏற்கனவே ஆய்வுக்குட்பட்ட அரிக்கமேடு, ஆதிச்சநல்லூர் ஆகிய பகுதிகளிலும், கடலுக்குள் மூழ்கிய பூம்புகார் பகுதியையும் ஆய்வு செய்யும்போது, தொல்தமிழர் பண்பாட்டு அடையாளம் இன்னும் பல மடங்கு வெளிப்படுவதுடன், இந்தியா முழுவதும் திராவிட அடையாளங்கள் நிறைந்திருந்த காலமும் உறுதியாகும்.

இதுவரை கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்களை அங்கேயே அருங்காட்சியம் அமைத்து பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இரண்டாயிரம் ஆண்டுகளாக தென்னை மரங்களால் பாதுகாக்கப்பட்ட பண்பாட்டு மேட்டைக் கிளறி, மேலே கொண்டுவரப்பட்ட தமிழரின் பெருமையை அதிகார பலத்தின் கரங்களுக்கு இரையாகக் கொடுத்து விடக் கூடாது என அனைத்து தரப்பும் வலியுறுத்துகின்றன.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.