Skip to main content

ஆதித் தமிழ்க் கலைக்கு ஆவி கொடுக்கும் பேராசிரியர்!

Published on 14/08/2020 | Edited on 14/08/2020

 

professor - thoothukudi -  tamil arts

 

20 பேர் கொண்ட சிலா வரிசை இரு கூறாக எதிரும் புதிரும் நின்றுகொண்டு சீரான உடையோடு காலில் சலங்கையைக் கட்டிக் கொண்டு உடல் நளினங்களோடு தாளம் தப்பாமல் பறையடித்து வளைந்து நெளிந்து ஆடுவதும், 30 பேர்களைக் கொண்ட கலர் ஆடைகளோடு காலில் சலங்கை மணி தெறிக்க, இரண்டு கைகளிலுள்ள பச்சை மற்றும் மஞ்சள் வண்ணம் கொண்ட துணிகளை வீசிக் கொண்டு தாளத்திற்கேற்ப ஒய்யாரமாகச் சுற்றியாடும் லாவகங்களைக் (ஒயிலாட்டம், கட்டைக்கால் ஆட்டங்கள் போன்றவைகளை) கண்ணுறும் போதும் மனம் ஆறுதலடைவததோடு ஒரு வகை இதமான ஆனந்தமும் உடலில் ஊடுருவும்.

 

ஆதித்தமிழனின் பண்பாட்டுக் கலைகளான இவைகள் மேடையேறும் போது அந்த மேடையே ஜொலிக்கும். மேடையின் மதிப்பும் கௌரவமும் பன்மடங்கு உயரும். அதுதான் யதார்த்தம். இவைகளை மேடை ஏற்றும் போதுதான் நம் பண்டைத் தமிழரின் இந்தக் கலாச்சாரக் கலைகள் உயிர்தெழும், மரணிக்காமல் ஜீவிக்கும் .இந்தக் கலைகளைப் பலருக்குப் பயிற்றுவிக்கிறார் தூத்துக்குடியில் உள்ள பேராசிரியர் சங்கர்.

 

அண்மைக்காலமாக இந்த ஆயகலைகளும் அதனையே சுவாசமாகக் கொண்டவர்களின் வாழ்க்கையும் மங்கிக் கொண்டிருப்பதாகச் சொல்லுகிற பேராசிரியர் சங்கர், தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியின் வரலாற்றுப் பிரிவு பேராசிரியர். கூடவே ஒயிலாட்டம், பறையாட்டம் கட்டைக்காலாட்டம் போன்ற நம் முன்னோர்களின் கலைகளை முடிந்த வரை வளர்க்கிறார், வேர் பரப்பச் செய்கிறார்.

 

Professor

 

ஒரு குழந்தை, தாயின் வயிற்றில் கருவாகி உருவாகி வளர்வதைப் போன்றுதான், இந்தக் கலையின் கருவே நம் முன்னோர்களின் உயிர் நாடியான விவசாயத்திலிருந்து பிறக்கிறது. விவசாயத்தின் ஒவ்வொரு பணியிலும் ஒரு இசை மறைந்துள்ளது. ஏர் பிடிக்கும் போது, விதை விதைக்கும் போது, நாற்று நட்டி தண்ணீர் பாய்ச்சி, களை எடுத்தல், அறுவடை போன்ற ஒவ்வொரு விவசாயப் பணிகளிலும், வேலையின் சுமை தெரியாமலிருப்பதற்காக நளினமாக உடலசைத்து வாய்க்கு வந்த வார்த்தைகளைப் பாட்டாக்கிப் பாடுவார்கள். அதுதான் இயல்பு, வாடிக்கை. அதுவே நாளாவட்டத்தில் பண்படுத்தப்பட்டு மெருகேறி களத்து மேட்டில் கும்மியாட்டமாகி பின் சலங்கை பறையாட்டமாக வளர்ச்சி பெற்றிருக்கிறது. எனவே விவசாயம்தான் இந்தக் கலைகளைப் பெற்றெடுத்த தாய் என்கிறார் பேராசிரியர்.

 

அதே  போன்று இதன் அங்கமான தெருக்கூத்து, தெரு நாடகம் போன்றவைகளில் பிரச்சாரமும் நடந்ததையடுத்து பறையாட்டம், ஒயிலாட்டங்கள் மக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்தியிருக்கின்றன. அது போன்று இந்தக் கலைகளின் மூலமாக மக்களிடம் ஏற்பட்ட மாற்றத்திற்கான புரட்சிகளும் அந்தக் கால சர்வாதிகார சமஸ்தானத்தைக் கூட அறுத்தெறிந்திருக்கின்றன. வலுவான பிரச்சாரப் பீரங்கியும் கூட. அது போன்ற தெருக்கூத்துக்களால் ஈர்க்கப்பட்ட பேராசிரியர் சங்கர், தனது பறையாட்டம் ஒயிலாட்டக் கற்பித்தல் மூலம் பத்தாயிரம் கலைஞர்களை தென் மாவட்டத்தில் உருவாக்கியிருக்கிறார்.

 

ஆடைக்குறைப்போடு வரும் வெளிநாட்டினர் கூட 12 முழச் சுங்கிடிச் சேலையைக் கட்டிக் கொண்டு மாராப்புப் போட்டும், 4 முழவேட்டிச் சட்டையுடன் கூட்டமாகத் தமிழரின் அடையாளமான தை பொங்கலிட்டுக் கொண்டாடி, பறையடித்து மகிழுமளவுக்கு நம் முன்னோர்களின் கலைகள் மதிப்பு வாய்ந்திருக்கிறது. ஆனால் உள்ளூர் விழாக்கள், பொதுக்கூட்டம் திரட்டும் அரசியல்வாதிகள் கூட இதன் மகிமையை அறியாமல் கேரளாவிலிருந்து பெரும் பொருட்செலவில் கெண்டை மேளத்தை வரவழைக்கிறார்கள். இறக்குமதிதான் கௌரவம் என்று நினைக்கிறார்கள்.

 

அதற்குச் சற்றும் சளைத்ததல்ல தமிழனின் கலைகள் என்று வெளிநாட்டினரே சர்டிபிகேட் தரும்போது, இங்கே மட்டும் ஏன் அந்தப் புறக்கணிப்பு. ஒன்றைப் பார்க்கப் பார்க்கத்தான் ஈர்ப்பு கூடும், ஏக்கமும் எதிர்பார்ப்பும் அதிகமாகும் என்பது அடிப்பைடைத் தத்துவம். ஒவ்வொரு விழாக்களிலும், அரசியல் கூட்டங்களிலும் நம் பாரம்பரிய விவசாயம் ஈன்றெடுத்த இந்தக் கலைகளை மேடையேற்றிப் பாருங்கள், அதன் மதிப்பும் கௌரவமும் தெரியும். மட்டுமல்ல அதனையே நம்பியிருக்கும் கலைஞர்களின் வயிறும் பசியாறும்.

 

Ad

 

இன்னமும் இந்த ஆட்டக் கலைகள் தமிழகத்தின் ஒவ்வொரு கிராமங்களிலும் இருக்கத்தான் செய்கின்றன. அவைகளைத் தூண்டினால் மட்டுமே ஃபீனிக்ஸ் பறவை போன்று உயிர்த்தெழும். அதை விடுத்து, நம் முன்னோர்களின் வாழ்விடம் தேடி, பெரும் பொருட்செலவில் அகழாய்வு நடத்துகிற அளவுக்கு நம் ஆதித் தமிழர்களின் இந்த ஆட்டக்கலைகள் மண்ணோடு புதைந்து விடக்கூடாது, என்ற குமுறலும் இதனை நம்பிய கலைஞர்களிடமிருந்து கிளம்புகிறது.

 

 

Next Story

பாஜகவில் சேர்ந்த தமிழிசை; தேர்தலில் மீண்டும் வாய்ப்பா?

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
Tamilisai joined BJP; A SEAT again?

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி இருக்கும் நிலையில் இன்று திமுகவும் அதிமுகவும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. பாஜக தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை மீண்டும் பாஜகவில் சேர்ந்துள்ளார்.

தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியிடம் தோல்வி அடைந்தார். அதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்றார். மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் புதுச்சேரி யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராகவும் பதவி வகித்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் மீண்டும் அவர் பாஜக அடிப்படை உறுப்பினர் பதவியை பெற்று பாஜகவில் இணைந்துள்ளார். இதனால் தமிழிசைக்கு பாஜகவில் மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அப்படி வாய்ப்பளித்தால் மீண்டும் தூத்துக்குடியில் தமிழிசை நிற்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏற்கெனவே திமுகவில் கனிமொழி தூத்துக்குடி நாடாளுமன்ற வேட்பாளராக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

விபரீத இன்ஸ்டா ரீல் இளைஞர்கள் கைது; போலீசார் எச்சரிக்கை

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
nn

அண்மைக்காலமாகவே 'மாஸ்' என்ற பெயரில் ஆயுதங்களுடன் இளைஞர்கள், மாணவர்கள் நடந்து வருவது, தாக்குவது, ஆபத்தான முறையில் வாகனங்களில் பயணம் செய்வது போன்ற ரீல்ஸ் வீடியோக்கள் வெளியாகி நடவடிக்கைகளுக்கு உள்ளாகி வருகிறது.

இந்நிலையில் இளைஞர் ஒருவர் நீர் நிலையில் மிகவும் ஆபத்தான முறையில் இன்ஸ்டா வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த இளைஞரையும் அதற்கு உதவியவர்களையும் கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. வைகை ஆற்றில் தண்ணீரில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து அந்த நெருப்புக்குள் குதித்து வீடியோ எடுத்து அதனை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் இளைஞர் ரீல்ஸாக வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரீல்ஸ் மோகத்தால் இது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வரும் நிலையில், இது ரீல்ஸ் எடுப்பவர்களின் உயிருக்கு கேடு விளைவிப்பதோடு மட்டுமல்லாது, நீர்நிலைகளில் பெட்ரோல் போன்ற பொருட்களை ஊற்றுவதால் நீர்நிலைகளும் மாசு அடையும். எனவே இதுபோன்ற நபர்கள் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இந்த வீடியோ போலீசாரின் கவனத்திற்கு சென்ற நிலையில் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர்கள் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வைரவம் தருவைகுளத்தில் விபரீதமாக மண்ணுக்குள் குழிதோண்டி அதனுள் இளைஞரை தலைகீழாக புதைத்து சாகசம் செய்து அதை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாவில் பதிவிட்டது தெரியவந்தது. இது தொடர்பாக தீவிர நடவடிக்கை எடுத்த போலீசார் ரஞ்சித் பாலா அவரது நண்பர்கள் சிவக்குமார், இசக்கி, ராஜா ஆகியோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தற்போது கைது செய்துள்ளனர். மேலும் இதுபோன்ற விபரீத செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.