Skip to main content

பிழையில்லா தமிழ்! மூன்றரை வயதில் அசத்தும் பிரணவி!

Published on 29/02/2020 | Edited on 29/02/2020

மனிதன் பேசத் தொடங்கிய காலத்திலேயே, தமிழ் என்ற மொழி உருவாகி இருந்தது என்கிறார்கள் தமிழறிஞர்கள். கல்வி மறுக்கப்படுகிற கொடுமையைப் பற்றிப் பேசும் இதே காலத்தில்தான், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எளிய தமிழ் மக்களும் எழுத்தறிவைப் பெற்றிருந்தார்கள் என்ற உண்மையை உலகுக்கு உரைக்கின்றன கீழடி ஆதாரங்கள்.

 

Tamil! At the age of three and a half Pranavi!


இத்தனை ஆண்டுகள் ஆனபின்னும் தனக்கான இடத்தை விட்டுக் கொடுக்காமல் இருக்கிறதென்றால், தலைமுறை வித்தியாசமின்றி இங்கு தமிழ்மொழி மூச்சாகக் கலந்திருப்பதுதான் அதற்குக் காரணம். அந்தவகையில், சென்னையைச் சேர்ந்த மூன்றரை வயது குழந்தை பிரணவி, பேசத் தொடங்கியது முதலே தமிழ் மொழி மீதான தனது பற்றினை வெளிப்படுத்தி வருகிறார்.

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த தங்கதுரை – ராஜஅபிராமி தம்பதிக்குப் பிறந்தவர்தான் பிரணவி. குடும்பத்தில் அனைவருமே இலக்கியத்தில் அதிக ஆர்வம் கொண்டிருந்ததாலோ ஏனோ, பிரணவிக்கும் இயல்பிலேயே தமிழ் ஆர்வம் தொற்றிக் கொண்டது. பல சமயங்களில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் இவருக்கு தாலாட்டு. கொஞ்சம் பல் முளைத்து நடக்கத் தொடங்கியதுமே, பாரதியார் புத்தகங்களை எடுத்துப் புரட்டத் தொடங்கினார். அவரது ஆர்வம் போலவே, பெற்றோரும், தாத்தா பாட்டியும் தமிழ் இலக்கியக் கூட்டங்களுக்கும் அழைத்துச் செல்கின்றனர்.

 

Tamil! At the age of three and a half Pranavi!


தற்போது தமிழ்த்தாய் வாழ்த்து, தேசியகீதம், திருக்குறளில் சில அதிகாரங்களும், அதன் விளக்கங்களும், ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், பாரதியார் கவிதைகளில் சில என வெறும் மூன்றரை வயதில் எல்லாவற்றையும் பாடி அசத்துகிறார். அனைத்தையும் பிழையின்றியும், வார்த்தை பிறழாமலும் பாடுவதுதான் பிரணவியின் சிறப்பு. பலரும் திணறும் ‘ழ’கர உச்சரிப்பில் இப்போதே கறாராக இருக்கிறார் பிரணவி.

பிரணவியின் இந்தத் திறமைக்குக் கிடைத்த முதல் மேடையே மிக பிரம்மாண்டமானது. சென்ற ஆண்டு டிசம்பரில் அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற நூல்கள் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி அனைவரையும் கவனத்தையும் ஈர்த்தார். அதேபோல், கடந்த பிப்ரவரி 15ந்தேதி வெற்றித் தமிழர் பேரவையின் மகளிர் அணி நடத்திய திருக்குறள் திருவிழா நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி விழாவைத் தொடங்கி வைத்ததே பிரணவிதான்.

 

Tamil! At the age of three and a half Pranavi!

 

இத்தனை சிறிய வயதில் தமிழ் மொழியைப் பிழையில்லாமல் பாடுவதில் கவனத்துடன் இருந்த பிரணவியின் திறமையை, விழாவுக்குத் தலைமையேற்ற கவிப்பேரரசு வைரமுத்து வியந்து பாராட்டினார். அந்த விழாவின் அடையாளமாக இருந்த பிரணவியின் திறமையைப் பலரும் பாராட்டிச் சென்றனர்.

இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்றார் பாவேந்தர் பாரதிதாசன். அப்படி சின்னஞ்சிறு வயதிலும் தமிழை உயிராகக் கொண்டிருக்கும் பிரணவியின் திறமையை நாமும் பாராட்டலாமே!

 

 

Next Story

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
6-year-old boy lost their live in private college bus crash

நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேருந்து மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள  தோட்ட வாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய 6 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்திற்குப் பின்புறம் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்தார். தந்தை சதீஷ்குமாரின் கை முறிந்து துண்டானது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்த, உடனடியாக அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதிகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் மிகுந்த வேகத்துடன் செல்வதால் சாலைத் தடுப்பு, வேகத்தடை ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தைக்கு நேர்ந்த சோகம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Tragedy of the child who fell into the borehole

மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா என்ற மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் திறந்தவெளி ஆழ்துளைக் கிணறு ஒன்று அமைக்கட்டுள்ளது. இதில் 6 வயது குழந்தை ஒன்று கடந்த 12 ஆம் தேதி (12.04.2024) தவறி விழுந்தது. இந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. அப்போது ரேவா மாவட்ட ஆட்சியர் பிரதிபா பால் கூறுகையில், ‘ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். ஆழ்துளைக் கிணற்றின் ஆழம் 70 அடி ஆகும். 50 அடி ஆழம் தோண்டிய பின் கேமரா மூலம் கிடைத்த தகவலின் படி குழந்தை 45 முதல் 50 அடி ஆழத்தில் சிக்கியிருக்கலாம் என தெரிய வருகிறது. தேசிய பேரிடர் மீட்புப்படையினர் குழந்தையை மீட்க கிடைமட்டமாக சுரங்கம் தோண்டி வருகின்றனர்’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். சுமார் 70 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் 40 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுவனை மீட்கும் பணியில் இரண்டு நாட்களாக தீயணைப்பு துறை, பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர். இருப்பினும் உயிரிழந்த நிலையில் சிறுவனின் உடல் சடலமாக நேற்று (14.04.2024) மீட்கப்பட்டது.

இது குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விவேக் லால் சிங் கூறுகையில், “தேசிய பேரிடர் மீட்புப்படையினர், போலீஸ், உள்ளூர் மக்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் ஆகியோர் சிறுவனை மீட்க சுமார் 45 மணிநேரம் கடுமையாக உழைத்தோம். ஆனால் எங்களால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.