Skip to main content

சூர்யா என்னை தெய்வமச்சான்னுதான் கூப்பிடுவார்... ஏன் தெரியுமா? ரமேஷ்கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள்#5

Published on 22/07/2018 | Edited on 23/07/2020

 

ramesh khanna

 

ப்ரண்ட்ஸ்... வாழ்க்கையில ப்ரண்ட்ஸ் யாரு? எப்படி வர்றாங்க? சில ப்ரண்ட்ஸ் எப்படி போறாங்க? ஒரு சிலருக்கு வாழ்க்கையில ப்ரண்ட்ஸ் முக்கியமா இருக்காங்க, ஒரு சிலருக்கு வாழ்க்கையைக் கொடுத்ததே ப்ரண்ட்ஸாதான் இருக்கும். ப்ரண்ட்ஸ் இல்லாதவங்க கண்டிப்பா வாழ்க்கையில மிகப்பெரிய பங்கை இழக்குறாங்க. அப்படி ப்ரண்ட்ஸ் இல்லாம யாரும் இருந்துவிட முடியுமா என்ன?

 

பாண்டியராஜனும் நானும் ஒன்னா சைக்கிளில் சுத்துனது, பின்னர் என்னைக் கூப்பிடாம அவரு ஷூட்டிங் ஆரம்பிச்சது, விவேக்கும் நானும் ஒன்னா காமெடி க்ளப்ல ஷோ பண்ணது, பிறகு எங்க நட்புனாலேயே நாங்க இயக்க வேண்டிய படம் கெட்டுப் போனது, ரவிக்குமாருக்கு அசிஸ்டன்ட் ஆனது, அவர் மூலமாக வந்த பெரிய வாய்ப்புகளும் எனக்கு வாய்க்காம போனது, அஜித் கூட தொடர்ந்து பல படங்கள் பண்ணுனது, விஜய் கூட ஒரே படத்தோட நின்னது... இப்படி எல்லாம் சுத்தி சுத்தி நட்புகளால் நிகழ்ந்தது, நட்போடு ஏதோ ஒரு வகையில் தொடர்புடையது. இவுங்க எல்லோருமே எனக்கு ப்ரண்ட்ஸ்தான். என் வாழ்க்கையிலயும் ப்ரண்ட்ஸ் என்ற வார்த்தை ரொம்ப முக்கியமானது. 'ப்ரண்ட்ஸ்' படம் எனக்கு மிகப்பெரிய பேரைக் கொடுத்தது. காமெடியன் என்பதைத் தாண்டிய முக்கியமான ரோல் அந்தப் படத்துல எனக்கு. அதுபோக. 'ப்ரண்ட்ஸ்' படம் எனக்கு ஒரு ரொம்ப நல்ல ப்ரண்டையும் கொடுத்தது.

 

சூர்யா... ஒரு புகழ்பெற்ற நடிகரோட பிள்ளையாக சினிமாவுக்குள் வந்தவர். ஆனா, வந்தது மட்டும்தான் அப்படி. அதுக்கப்புறமா அவர் சினிமாவில் இருந்தது புகழ் பெற்ற நடிகரோட பையனா இல்லை. நம்மில் பெரும்பாலானவங்க நினைப்பாங்க, 'ஒரு பெரிய நடிகருக்கோ டைரக்டருக்கோ பிள்ளையாக இருந்தால் ஈஸியா சினிமாவில் ஜெயிச்சிடலாம்னு. ஆனா, அப்படி உள்ளே வந்து இன்னைக்கு சினிமாவுக்கு வெளியே போயிட்டவங்க எத்தனை பேர்? நிறைய... அப்பா சினிமாவில் வெற்றிகரமா இருந்திருந்தா கண்டிப்பா சாதகம்தான். முதல் படம் நடிப்பதற்கும் அந்தப் படம் ஓடலைன்னா அடுத்த படத்துக்கான வாய்ப்பை பசியில்லாமல் தேடுறதுக்கும். சில அப்பாக்கள் பிள்ளைகளை வைத்து படம் எடுக்குறாங்கதான். ஆனால், அப்படி எடுக்குற படங்களும் வெற்றி பெறுவது உறுதியில்லையே.

 

 

ramesh kanna award adhavan

 

வாரிசு நடிகராக இருந்தும் சினிமாவில் பல அவமானங்களை சந்தித்து, கஷ்டப்பட்டு, தன் உழைப்பால் முன்னேறுபவர்கள் இருக்கிறார்கள். அப்படி ஒருவர்தான் சூர்யா. சூர்யா அப்படி என்ன கஷ்டப்பட்டுட்டாருன்னு கேக்குறீங்களா? ஒரு ஃபேமஸ் நடிகரோட பையன், இன்னொரு ஹீரோவுடன் சேர்ந்து நடிக்கிற படத்தின் ஷூட்டிங்குல தனி ரூமெல்லாம் கேக்காம (இல்லாம) எங்களோட தரையில் பெட்ஷீட் விரித்துப் படுத்துருக்கார். தன் தந்தையின் புகழையெல்லாம் தள்ளிவச்சுட்டு இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டிருக்கார். இதிலென்ன கஷ்டம்? அதை அந்த இடத்தில் இருந்து பார்த்தால்தான் தெரியும். சரி, சவால்கள் இல்லாமல் யாருமில்லை, எல்லோருக்கும் சவால்கள் ஒரே மாதிரி இருப்பதில்லை.

 

சூர்யாவையும் என்னையும் ப்ரண்ட்ஸ் ஆக்குனது ப்ரண்ட்ஸ் படம்தான். உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், படையப்பா, அமர்க்களம் இப்படி பல படங்கள் நடிச்சு மெல்ல பிஸியான நேரத்துல வந்ததுதான் 'ப்ரண்ட்ஸ்' வாய்ப்பு. மலையாளத்துல இதே படத்துல என் கேரக்டர்ல சீனிவாசன் சார் நடிச்சிருந்தார். அவரும் என்னைப் போலவே நடிகர், வசனகர்த்தா, கதைகளும் எழுதியிருக்கார். தமிழில் அந்தப் பாத்திரத்தில் நடிக்க என்னை அழைத்தார் இயக்குனர் சித்திக். அவரோட இப்ப வரைக்கும் நல்ல நட்பு இருக்கு. ப்ரண்ட்ஸ் படத்துல விஜய், சூர்யா, நான் மூணு பேரும் கிட்டத்தட்ட முழு படத்துலயும் ட்ராவல் ஆவோம். அதனால் ஷூட்டிங்கிலும் ஒன்னா இருப்போம். விஜய் நல்ல மனிதர், எளிமையானவர்தான். என்னதான் இருந்தாலும் அவர் அப்பவே வளர்ந்த ஹீரோ. எங்களுக்கு அவர்கிட்ட நிறைய பேச தயக்கமா இருந்தது. சூர்யாவும் நானும் ஒன்னாதான் சுத்துவோம், ஒரே ரூம்ல தங்கியிருக்கோம், நிறைய பேசுவோம்.

 

அப்போ நான் ரொம்ப பிஸியா இருந்த நேரம். நிஜமாதாங்க... ஹீரோக்களை விட காமெடியன்ஸ் பிஸியாதான் இருப்பாங்க. ஆனா, எத்தனை வருஷத்துக்கு அதே மாதிரி பிஸியா இருப்பாங்க என்பது ஒரு கேள்விதான். அது, நான் பிஸியா இருந்த நேரம். கீழ பழனி, உடுமலைப்பேட்டை ஏரியால ப்ரண்ட்ஸ் ஷூட்டிங்.... மேல கொடைக்கானல்ல தெனாலி ஷூட்டிங்... ரெண்டுக்கும் நான் போய்ட்டுப் போய்ட்டு வருவேன். ப்ரண்ட்ஸ் ஷூட்டிங்ல இருந்து தெனாலி ஷூட்டிங் கிளம்புனா, 'ஜோவைக் கேட்டதா சொல்லுங்க'னு சூர்யா சொல்லிவிடுவார். தெனாலி முடிஞ்சு இங்க கிளம்புனா, 'சூர்யாவைக் கேட்டதா சொல்லுங்க'னு ஜோதிகா சொல்வாங்க. நானும், 'மச்சான் உன்னை ரொம்ப கேட்டாருமா, பாக்காம கஷ்டப்படுறாரு', 'தங்கச்சி உன்னைக் கேட்டுச்சுப்பா, உன்னைப் பாக்காம அது முகமே சரியில்ல'னு கொஞ்சம் எக்ஸ்டராவா போட்டு சொல்லுவேன். அஜித்-ஷாலினி காதலிலும் நான் இருந்திருக்கேன், சூர்யா-ஜோதிகா காதலிலும் நான் இருந்திருக்கிறேன். ரெண்டு ஜோடிகளும் இப்பவும் மகிழ்ச்சியா இருப்பது எனக்கு மகிழ்ச்சி. இப்படி அவுங்களுக்குத் தூதா, அன்பா நான் இருந்ததால என்னை சூர்யா தெனாலி படத்தில் வருவது போல 'தெய்வமச்சான்'னு கூப்பிடுவார்.

 

 

friends

 

 

சூர்யாவும் நானும் காரில் நிறைய சுத்தியிருக்கோம். திடீர்னு வந்து கூப்பிடுவார், டின்னர் போவோம். ஊரை சுத்திட்டு வருவோம். ஒரு முறை சூர்யாவின் நண்பர் ஒருவர் பன்ருட்டியில் ஒரு கடை திறந்தார். அந்த விழாவுக்கு சூர்யா, என்னையும் கூப்பிட்டார். நான், என் மனைவி, ரெண்டு பசங்க, சூர்யா எல்லோரும் சேர்ந்து என்னுடைய வேகன்-ஆர் (Wagon R) காரில் போனோம். அது அவ்வளவு வசதியா இருக்காது. அதைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்படமாட்டார். எங்களுடன் நேரம் செலவு செய்யவேண்டும். அவருடைய நேரம், அந்த மரியாதை எல்லாம் அவர் என்னுடனான நட்புக்குக் கொடுத்தது. அது இன்றும் தொடருது. ப்ரண்ட்ஸ் படம் வெளிவந்தது, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. எங்களுக்கும் நல்ல பேரைக் கொடுத்தது. ஆனாலும் சூர்யா, தனி கதாநாயகனாக வெற்றி பெற வேண்டியிருந்தது. அதற்கான நல்ல வாய்ப்புக்காக காத்துக்கிட்டிருந்தார்.

 

vadapalani

 

 

விக்ரமன் சார் 'வானத்தைப் போல' மிகப்பெரிய வெற்றிக்குப் பின் ஒரு படம் தொடங்குறார். பிரஷாந்த்தை வச்சு பண்ணலாம்னு திட்டம் போட்டு, தேதிகள் பிரச்சனையால தள்ளிப் போய்க்கிட்டு இருந்தது. பின்னர் பிரஷாந்த் அந்தப் படத்தில் இல்லையென்றானது. நான் படத்தில் இருக்கேன்னு முன்னாடியே தெரியும். நான் சூர்யாகிட்ட சொன்னேன், "சூர்யா, நீ போய் விக்ரமன் சாரைப் பாரு.. இது நல்ல கதை, கண்டிப்பா ஹிட் ஆகும். நீ போய் அவர்கிட்ட பேசு"ன்னு. சூர்யாவுக்கு தயக்கம்... "நானா எப்படி போய் கேக்குறது? சார் தப்பா எடுத்துக்கமாட்டாரா?"ன்னு. "விஜய்க்கு விக்ரமன் சார் எடுத்த 'பூவே உனக்காக' படம்தான் வெற்றியின் தொடக்கமா இருந்தது. அப்படி உனக்கு அமைய வாய்ப்புள்ள ஒரு கதை இது. நீ வா போலாம்"னு நானே சூர்யாவை அழைத்துப் போனேன். விக்ரமன் சாரை சந்தித்து, 'சூர்யா இந்தக் கதைக்கு சரியா இருப்பார், நல்லா நடிப்பார்'னு சொல்லி பேசினோம். விக்ரமன் சாருக்கும் சூர்யாவை பிடித்துப் போய் அவரை வச்சே படத்தைத் தொடங்கினார். அந்தப் படம் வெளியாகி வெற்றியும் பெற்றது. அந்தப் படம்தான் 'உன்னை நினைத்து'.

 

 

tn5 title

 

 

அதுக்குப் பின்னாடி சூர்யா ஒரு பக்கம் வளர்ந்து, டாப் ஹீரோவாகி... நான் ஒரு பக்கம் படங்கள் நடித்துக்கொண்டே இருந்தபோது... ஒரு நாள் கே.எஸ்.ரவிக்குமார் என்னோட பழைய கதை ஒன்னைக் கேட்டார். அந்தக் கதை நான் கேப்டன் விஜயகாந்துக்கு எழுதியது. கதையைக் கேட்ட அவர், "நல்லாருக்கேயா..இதை படமா பண்ணலாம். இப்போ டாப்ல இருக்க சூர்யாவை வச்சே பண்ணலாம்"னு சொன்னார். உடனே சூர்யாவைப் பார்த்தோம், கதை சொன்னோம். உதயநிதி ஸ்டாலினைப் பார்த்தோம், கதை சொன்னோம். எல்லாம் விறுவிறுவென நடந்து 'ஆதவன்' படம் உருவாச்சு. படமும் வெற்றிதான். இப்போ, சூர்யா இருக்கும் உயரம் இன்னும் பெரிது. ஆனாலும் எங்கள் நட்பு அப்படியேதான் இருக்கு. ஜூலை 23 அவரோட பிறந்தநாள், அவர் இன்னும் பல உயரங்களை அடைய வேண்டும். அவர் நினைத்த பாத்திரங்களில் நடிக்கணும். என் இதயத்திலிருந்து வாழ்த்துகிறேன். அஜித்துக்கும் எனக்கும் ஏதோ பூர்வ ஜென்ம பந்தம் இருக்குன்னு சொன்ன மாதிரி, சூர்யாவுக்கும் எனக்கும் ஒரு தெய்வ பந்தம் இருக்கு. கொஞ்சம் அதிகமா சொல்றேனோ? செப்டம்பர் 11, என்னுடைய திருமண நாள். அவருடைய திருமண நாளும் அதேதான். இப்போ சொல்லுங்க... அவர் எனக்கு தெய்வம் தந்த மச்சான், நான் அவருக்கு 'தெய்வமச்சான்'தானே?

 

முந்தைய பகுதி...

எம்.ஜி.ஆர்க்கு அப்புறம் அஜித்துக்குதான் அந்தப் பழக்கமிருந்தது... - ரமேஷ் கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #4

 

அடுத்த பகுதி...

 

விஜயகாந்த், என்னை கட்சியில் சேர்த்துக்கொள்ளமாட்டேன் என்றார்... ரமேஷ்கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #6 

 

 

Next Story

கமல் பிடித்த பிடிவாதத்தின் விளைவு! - ரமேஷ் கண்ணா பகிரும் நினைவு!

Published on 07/11/2020 | Edited on 07/11/2020
avvai shanmugi

 

நடிகர், இயக்குனர் ரமேஷ் கண்ணா, கமல்ஹாசனுடன் தனது அனுபவத்தை பகிர்கிறார்...

"கே.எஸ்.ரவிக்குமார் கூட வேலை செய்தபோது கமல் சார் கூட நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர் கூட அறிமுகமாகும்போதே கொஞ்சம் பிரச்சனையாதான் இருந்தது. கே.எஸ்.ரவிக்குமார் கமல் சாரை வச்சு 'அவ்வை சண்முகி' படம் இயக்குவது உறுதியாகிவிட்டது. ஷூட்டிங் போற தேதியெல்லாம் முடிவாகி தயாராகிட்டோம். அமெரிக்காவிலிருந்து மேக்-அப் மேன் வந்துட்டார். ஆனால், கமலுக்கு மேக்-அப்ல திருப்தியில்லை. வேற ஏற்பாடு பண்ணனும்னு சொல்லிட்டார். எங்க டைரக்டருக்கு ஃபுல் டென்சன். அவர் எப்பவுமே சொன்ன தேதியில், சொன்ன பட்ஜெட்டுக்குள் படமெடுத்துக் கொடுக்கிறவர். தயாரிப்பாளர்களின் இயக்குனர்னு அவரை சொல்லுவாங்க.

 

நாங்க போய் கமல் சாரைப் பாக்குறோம். "இப்போ வேற மேக்-அப் ஏற்பாடு பண்ணனும்னா நீங்க திரும்ப அமெரிக்கா போகணும். மோல்டு எடுக்கணும். இங்கயும் ஷூட்டிங் அதுவரை தள்ளிப்போகும்" என்றெல்லாம் விளக்கி அவரை கன்வின்ஸ் பண்ண முயன்றோம். அவர் கன்வின்ஸ் ஆகல. "அதனால என்ன, படம் நல்லா வரணும்"னு சொல்லி திரும்ப அமெரிக்கா கிளம்பிட்டார். ஒரு மாசம் கழிச்சுத்தான் ஷூட்டிங் ஆரம்பிச்சது. அப்போது எனக்கு ஒரு மாதிரி இருந்தது. இதெல்லாம் கூடுதல் செலவுன்னு தோணுச்சு. ஆனால், படம் தயாரான பின்தான் எனக்குப் புரிஞ்சது, இந்த மேக்-அப் ஏன் தேவையென்று. அவரது பிடிவாதத்தின் விளைவுதான் அந்தப் படத்தின் தரம். அதை பிடிவாதம்னு சொல்லக்கூடாது, உறுதி. அவர் சிரத்தை எடுத்து போகாமல் இருந்திருந்தால், இப்பொழுதும் ஒரு ரெஃபரன்சாக இருக்கும் அளவுக்கு தரமா அது வந்துருக்குமா என்பது சந்தேகம்தான்.. இப்படி, கமல் சார் எப்பொழுதுமே தனக்கு திருப்தி வந்தால்தான் ஒரு செயலை முடிப்பார்.

 

avvai shanmugi getup

 

படம் துவங்குவதுக்கு முன்னாடி இப்படின்னா, ஷூட்டிங் அப்போ இன்னும் கடினமா உழைத்தார். அவருடைய வீடு ஆழ்வார்பேட்டையில் இருக்கு. ஷூட்டிங் நடப்பது மகாபலிபுரம் பக்கத்துல ஒரு பங்களாவுல. அவர் வீட்டுல இருந்து அங்க வர அப்போதெல்லாம் இரண்டரை மணிநேரம் ஆகும். மேக்-அப் போட மூன்றரை மணிநேரம். 5.30 மணிக்கு ஆரம்பிச்சாதான் 9 மணிக்கு ஷூட்டிங் போக முடியும். அப்போ, ஆழ்வார்பேட்டையில் காலைல 2 மணிக்கு எழுந்து தினமும் ஷேவ் பண்ணிட்டு கிளம்பணும். இப்படி, தொடர்ந்து 55 நாட்கள் நடிச்சது எனக்குத் தெரிஞ்சு அவர்தான். வேற யாருகிட்டயும் இந்த அளவு உழைப்பை நான் பார்த்ததில்லை.

 

9 மணிக்கு ஷூட்டிங் ஆரம்பிச்சு முதலில் க்ளோஸ்-அப் காட்சிகளை எடுப்போம். மேக்-அப் உரிவதற்கு முன்னாடி எடுக்கணும்னு அப்படி செய்வோம். அப்போதெல்லாம் கேரவன் கிடையாது. நாலு மர ஷீட்டை அடிச்சு அதுல விண்டோ ஏசி மாட்டி உள்ள உக்காந்திருப்பார். ஷூட்டிங் முடியும் வரை எதுவும் சாப்பிட முடியாது. ஆனா, அவர் அதுக்கெல்லாம் சளைத்தவரில்ல. சினிமாவுக்கெனவே வாழ்பவர். அவ்வை சண்முகி படத்துல நான் ஒரு சின்ன வேடத்தில் நடித்தேன். கமல் டான்ஸ் மாஸ்டர், நான் டைரக்டரா வருவேன்.  இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் என் நடிப்பைப் பார்த்துப் பாராட்டுனதாக கிரேசி மோகன் என்கிட்டே சொன்னார். அது ஒரு மகிழ்ச்சி."  

 

 

Next Story

விஜயகாந்த், என்னை கட்சியில் சேர்த்துக்கொள்ளமாட்டேன் என்றார்... ரமேஷ்கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #6 

Published on 25/08/2020 | Edited on 25/08/2020
ramesh kanna



இன்னைக்கு என் ஃபோனை நோண்டிக்கிட்டு இருக்கும்போது திடீர்னு வாட்ஸப்பில் சில ஃபோட்டோக்கள் வந்தது. கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாளுக்காக நிறைய மெஸேஜ்கள் வந்தன. அந்த கள்ளமில்லா சிரிப்ப சில நாட்கள் இடைவெளிக்குப் பின் பாக்குறது ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது. எனக்கு மட்டுமில்ல, நெறய பேருக்கு அவர் உடல் நலம் பெற்று வருவது மகிழ்ச்சியாதான் இருக்கும். இன்னும் நெறய பேருக்கு அவரை பழையபடி பாக்கணும்னு ஒரு ஏக்கமே இருக்கும். நானும் அவர்களில் ஒருவன்.

என்ன காரணம்...? அவர் ரொம்ப வித்தியாசமானவர், தனித்துவமானவர். சினிமா உலகத்துல அவர் கண்டிப்பா தனித்துவமானவர்தான். ஏன்னா, சினிமாவில் இருந்தபோதும் சரி அரசியலுக்கு வந்தபின்னும் சரி, அவர் மக்களோட நெருக்கமா இருந்தார். அவர் அளவுக்கு ஃபேமஸான வேற எந்த ஹீரோவும் அவர் அளவுக்கு இறங்கி மக்களை சந்திக்கல, இறங்கி வேலைகள் செஞ்சதில்ல. அவரை நம்பலாம், அவரை நம்பி எதுவும் செய்யலாம், நம்புறவங்கள கைவிடமாட்டார். அந்த வகையில் அவர் உண்மையிலேயே  கேப்டன்தான்.

 

dharmachakkaram



1995-96 சமயம்... 'தர்மசக்கரம்' பட ஷூட்டிங் பொள்ளாச்சியில் நடந்துக்கிட்டுருந்தது. நான் அஸோசியேட்டா வேலை செய்தேன். அந்தப் படத்துல ஒரு சின்ன கதாபாத்திரமும் பண்ணியிருக்கேன். அப்போதெல்லாம் விஜயகாந்த் சார்க்கு படம் பண்ணணும்னா முதலில் அவரது நண்பர் இப்ராஹிம் ராவுத்தர்கிட்டதான் கதை சொல்லணும். நான், என் நண்பன் விவேக் கூடப் போய் ராவுத்தர்கிட்ட கதை சொன்னேன். அவர், "சூப்பரா இருக்கேப்பா... நீ போய் பொள்ளாச்சியில விஜிகிட்ட பேசு. நான் ஃபோன்ல சொல்லிடுறேன்"னு சொன்னார். எனக்கும் ரொம்ப சந்தோஷம்.

தர்மசக்கரம் ஷூட்டிங்கும் அமைஞ்சதால அப்போவே விஜயகாந்த் சார்கிட்ட பேசுனேன். "கதை ராவுத்தர் கேட்டாச்சுல்ல, பிடிச்சுருச்சுன்னா ஒன்னும் கவலையில்ல பண்ணிடலாம். நீ கவலப்படாத"னு சொன்னார். சந்தோஷம் அதிகமாச்சு. எல்லாமே ஒத்து வந்தாலும் நம்ம ராசின்னு ஒன்னு இருக்கு. ராசி, அதிர்ஷ்டம் எல்லாம் நம்பாதவர்களைக் கூட சினிமா நம்ப வச்சுடும். அந்த அளவுக்கு நிலையாமை உள்ளது சினிமா. நான் பொள்ளாச்சியில் ஷூட்டிங் முடிச்சுட்டு வருவதற்குள்ள இங்க சென்னையில கேப்டன் படம் இயக்குற வாய்ப்பையும் முடிச்சு வச்சுட்டாங்க. ஆமா, 'நானும் ரமேஷ்கண்ணாவும் சேர்ந்துதான் இந்தப் படத்தை இயக்கப் போறோம்'னு விவேக் சொல்ல, அது குழப்பமாகி அப்புறம் அந்த படம் இயக்கும் வாய்ப்பே போய்விட்டது.

 

 

 

vanathai pola



 

vanathai pola2



கோடி கோடி பேர் இந்த உலகத்தில் இருந்தாலும் நம்ம வாழ்க்கையென்பது ஒரு நூறு பேர் கூடத்தானே? சினிமாவில் இருக்கவங்களுக்கு வேணா அது ஒரு ஐநூறு பேரா இருக்கலாம். ஆனாலும் மனசுக்கு நெருக்கமானவங்க, மனமுவந்து பழகுறவங்கன்னு எடுத்துக்கிட்டா அதுக்குள்ளேதான் வரும். அந்த மாதிரி சுத்தி சுத்தி திரும்பவும் விஜயகாந்த் சார்கிட்ட வந்துட்டேன். ஆமா, விக்ரமன் சார் 'வானத்தைப் போல' படம் ஆரம்பிச்சார். அதுலயும் எனக்கு நல்ல கேரக்டர். அந்தப் படத்துல செந்தில் சார், நாங்க, எல்லாம் வச்சிருந்த கடையையும் அந்த வடையையும் யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்கமாட்டாங்க. அந்த அளவு காமெடியிலும் சரி, சென்டிமென்டிலும் சரி, வானத்தைப் போல, வானத்தைப் போலதான். மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது அந்தப் படம். அடுத்து, 'மரியாதை' படத்திலும் அவருடன் நடித்தேன். ஆனால், கடைசி வரை அவருக்காக நான் ரெடி பண்ணிய கதையை அவரை வைத்து இயக்க முடியவில்லை. அவரை வைத்து எடுக்க முடியலையே தவிர அந்த கதை படமாகி வெற்றியும் பெற்றது. ஆமா, 'ஆதவன்' கதைதான் அது. சூர்யா நடிச்சார், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கினார், நான் இயக்கவில்லை. ராசி... ராசி... ஹி... ஹி...

அரசியல் வருவதற்காக, வந்த பிறகு சிலர் சில புதிய விஷயங்களை செய்வார்கள். அதற்கு முன்ன அப்படி இருந்திருப்பாங்களான்னு தெரியாது. ஆனா, விஜயகாந்த் சார்கிட்ட ஏற்கனவே இருந்த விஷயங்கள், அவர் ஏற்கனவே செய்த செயல்கள், அவரை அரசியலுக்கானவராக உருவாக்குச்சு. படங்களில் தொடர்ந்து நடித்தபொழுதே ஷூட்டிங்கில் அவர் கேரவனிலோ தனியாகவோ போய் உட்கார்ந்து நான் பார்த்ததேயில்லை. நடுநாயகமாக நாற்காலி போட்டு உட்கார்ந்திருப்பார். ஷூட்டிங்குக்கு எதுவும் தேவையென்றால் உடனே ஏற்பாடு செய்வார். எல்லார்கிட்டயும் 'சாப்பிட்டாச்சா, வேற எதும் குறைவா இருக்கா'னு கேட்டு செய்வார். யார் வேணும்னாலும் அவரை அணுகலாம். அப்படித்தான் இருந்தார்.

அப்பொழுது இருந்த அந்த எளிதாக அணுகும் தன்மை, அரசியலுக்கு வந்த பின்னும் இருக்கு. இப்பவும் நான் அவரது வீட்டுக்கு நேரா போனா, உடனே உள்ள வர சொல்லி பார்ப்பார். நான் நெருங்கி பழகுன ரஜினி சார், கமல் சார்கிட்டக் கூட இது முடியாது. ஏன்னா, அவர்களுக்கு பல பிரச்சனைகள், தடைகள் இருக்கு. முன்னாடியே நேரம் கேட்டு, சந்திக்கப் போறது அவர்களுக்கு சரியா இருக்குமான்னு தெரிஞ்சுக்கிட்டுதான் போகணும். அவர்கள் மேல் தவறல்ல, புகழ் பெற்றவர்கள், பல்வேறு வேலைகளில் இருப்பவர்கள் அப்படித்தான் பிஸியா இருப்பாங்க. ஆனால் அந்த நிலையிலும் எளிதாய் அணுக முடிந்தவராக இருப்பது கேப்டனின் குணம்.


 

 

vanaithaipola success meet



தமிழ் சினிமாவில் ஃப்லிம் இன்ஸ்டிடியூட் மாணவர்கள் என்றாலே ஒதுக்கிய காலத்தில், அவர்களை அழைத்து ஆதரித்து படம் செய்து அவர்களுக்கு ஒரு மரியாதையை உண்டாக்கியவர். ஆர்.கே.செல்வமணி சாருக்கெல்லாம் முதன் முதலில் நல்ல சம்பளம் வாங்கித்தந்தார்.  அவரோட தைரியமும் யாருக்கும் வராது. ஜெயலலிதா இருக்கும்போதே அரசியலில் இறங்கி எதிர்க்கட்சித் தலைவராக ஆனார். அதுக்கு முன்னாடி ஜெயலலிதா ஆட்சியிலேயே கலைஞருக்கு மிகப் பெரிய அளவில் பாராட்டு விழா நடத்தினார். கலைஞர் செய்வது தவறென்று நினைத்தால், அதையும் சொல்லுவார். மீடியாவை சரியாகக் கையாளவில்லைனு அவர் மேல் குற்றச்சாட்டு இருக்கு. ஆனா, கேட்கக் கூடாத கேள்விகளைக் கேட்ட நிருபர்களைத்தான் அவர் திட்டினார். மற்றபடி அவருக்கு பத்திரிகையாளர்கள் நெருக்கம்தான்.

நடிகர் சங்க தலைவரா இருந்து அவர் செஞ்சது பெரிய வேலை. கடனை அடைத்தது, பல பிரச்சனைகளை முடித்தது என்று...அவர் இறங்கி வேலை செய்தார். அவரோட பிறந்த நாளன்னைக்கு அவரை சந்திக்கப் போவேன். அவர் பிஸியா இருக்காருன்னு நினைச்சு நாம கிளம்புனா, விடமாட்டார். 'இருங்க ரமேஷ்கண்ணா போலாம், மெதுவா'ன்னு உட்கார வச்சு நிறைய பேசுவார். ஒரு முறை, ரோட்டில் என் கார் பஞ்சராகி நின்றுகொண்டிருந்தேன். அவர் காரில் வந்தார், பிரேமலதாவும் இருந்தாங்க. என்னைப் பாத்துட்டு நிறுத்திட்டார். அவர் கூட மூணு நாலு கார் வந்தது. மக்களும் அவரை கவனிச்சுட்டாங்க. 'என்னாச்சு ரமேஷ் கண்ணா... டேய், இறங்கு என்னன்னு பாரு'னு சொல்றார். எனக்கு ஒரே பதற்றம், கூட்டம் கூடுது. "அண்ணே...நீங்க கிளம்புங்க நான் பார்த்துக்கிறேன், நான் சரி பண்ணிட்டுப் போறேன்"னு சொல்றேன் கேக்கமாட்டேன்கிறார். கஷ்டப்பட்டு அனுப்புனேன். அவர் உயரத்துக்கு, என்னால் அவருக்கு ஆகப்போவது எதுவுமில்லை. ஆனாலும் அப்படி நடந்துகொண்டார், அவர்தான் கேப்டன்.

அவர் உடல்நலம் பெற்று வருவதாகக் கேள்விப்பட்டேன், மகிழ்ச்சி. மீண்டும் அரசியலில் முழுவீச்சில் இறங்கவேண்டும். கண்டிப்பாக பெரிய வெற்றிகள் பெறுவார். 'அவரை இவ்வளவு புகழ்றியே... நீ ஏன் அவர் கட்சியில் சேரல'னு கேக்குறீங்களா? நான் ஒருமுறை அவர்கிட்ட கேட்டேன், "அண்ணே... கட்சியில சேருறேன்'னு. வேற யாரா இருந்தாலும் பிரச்சாரத்துக்காவது பயன்படுவாங்கன்னு சேர்த்திருப்பாங்க. ஆனா அவரு, "சும்மா இரு ரமேஷ்கண்ணா, நீ போய் குடும்பத்தைப் பாரு. உனக்கு இந்த பிரச்னையெல்லாம் வேணாம். இது என் வேலை, நான் பாத்துக்குறேன். உனக்கு எதுவும் தேவைன்னா மட்டும் என்கிட்டே சொல்லு" என்று சொன்னார். அவர்தான் கேப்டன்!
 

 

முந்தைய பகுதி:

சூர்யா என்னை தெய்வமச்சான்னுதான் கூப்பிடுவார்... ஏன் தெரியுமா? ரமேஷ்கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள்#5