Skip to main content

‘ஜெய் பீம்’ சர்ச்சை: “சீமான் இப்படி செய்யாவிட்டால்தான் ஆச்சரியம்.” - சுந்தரவள்ளி தாக்கு!

Published on 19/11/2021 | Edited on 19/11/2021

 

jh


சூர்யா நடித்த ‘ஜெய் பீம்’ திரைப்படத்தைக் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெகுவாகப் பாராட்டிய நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், தற்போது அளித்துள்ள பேட்டியில் காலண்டர் விவகாரத்தைக் குறிப்பிட்டு, “அதைத் தவிர்த்திருக்கலாம், சூர்யாவுக்கு தெரிந்து இது நிகழ்ந்திருக்க வாய்பில்லை" என்று கூறினார். இதுதொடர்பாக சமூகவலைதளங்களில் சீமானுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பலரும் கருத்து தெரிவித்துவரும் நிலையில், சமூக செயற்பாட்டாளர் சுந்தரவள்ளியிடம் இதுதொடர்பாக நாம் கேள்வி எழுப்பினோம்.

 

நம்முடைய கேள்விக்கு அவர், "நாம் தமிழர் சீமான் நேற்று கூறியதை இன்று மாற்றிப் பேசாவிட்டால்தான் ஆச்சரியம். பல விஷயங்களில் முன்பு கூறியதை அடுத்த நாள் மாற்றிக் கூறுவது அவருக்கு ஒன்றும் புதிது கிடையாது, வாடிக்கையான ஒன்றுதான். அவருக்கு எந்தக் கொள்கையும் இல்லை. ஆர்எஸ்எஸ், பாஜகவின் அஜெண்டாவைப் பொதுவெளியில் பேசக்கூடியவர்தான் அவர். சீமானின் பேச்சு, அரசியல் எல்லாவற்றையும் கடந்து போக வேண்டும், அதில் எந்த ஒரு கருத்தும் இருக்கப் போவதில்லை. தமிழர்களை சாதியாக ஒருங்கிணைக்க வேண்டும் என்று கூறுபவர்களிடம் இந்த மாதிரியான பேச்சுக்களைத்தான் நாம் எதிர்பார்க்க முடியும். எனவே இவரை எல்லாம் பெரிதுபடுத்தத் தேவையில்லை.

 

தற்போது கோவிந்தன் வன்னியர்தான். அவரை பற்றிக் காட்டியிருக்கலாம் இல்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார். வன்னியர் சங்கம் எதைச் சொல்கிறதோ, அதைத்தான் இவரும் சொல்கிறார். கோவிந்தன் என்றைக்காவது நான் வன்னியர் என்று கூறியிருக்கிறாரா? சிவப்பு துண்டு போட்ட பச்சை கம்யூனிஸ்ட் அவர். உங்களைப் போல் சாதிப் பெருமையை அவர் எப்போதும் பேசுவதில்லை. அவர் அமைதியாக இருக்கும்போதே அவரை எங்கள் ஆள், உங்கள் ஆள் என்று போட்டிபோட்டுக்கொண்டு சாதி வளையத்திற்குள் சிக்கவைக்கப்பார்க்கிறார்கள். தற்போது வன்னிய சங்க இளைஞர்கள் என்ன பேசுகிறார்களோ, அதையேதான் சீமான் இன்ச் மாறாமல் பேசுகிறார் என்றால், அவர் யாருக்கான ஆள் என்பதை தமிழக மக்கள் எளிதில் புரிந்துகொள்வார்கள். சீமானுக்கு இருக்கிற அரசியல் என்பது அரைவேக்காட்டுத்தனமான அரசியல். கம்யூனிஸ்ட்டாக ஒரு தோழர் இயங்குகிறார், அவரை சாதியற்றவர் என்று சொல்லக்கூட திராணி இல்லாத முதுகெலும்பு இல்லாதவர்தான் சீமான். சாதியை விரும்பாமல் பொதுவாழ்க்கைக்கு வந்த ஒருவரை சாதி வளையத்திற்குள் சிக்கவைக்கப் பார்க்கும் இவர்களைப் போல் உள்ள நபர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு என்ன ஆகும் என்று நினைத்துப் பாருங்கள். 

 

காலையில் பேசியதை மாலையில் மாற்றி பேசுபவர்தான் அவர். தற்போது இரண்டு நாள் கழித்துதான் மாற்றிப் பேசியுள்ளாார். மக்கள், கருத்துகளை மாற்றிப் பேசினால் அரைவேக்காடு என்று நினைப்பார்கள் என்ற சிறிய புரிதல் கூட இல்லாமல் பேசக்கூடியவர் அவர். உள்ளாட்சித் தேர்தலில் சங்கிலேயே மிதித்துவிட்டார்கள். எனவே இவர்களை விட்டால் நமக்கு வேறு வழியில்லை என்ற காரணத்தால் இவர்கள் சாதியைப் பிடித்துக்கொண்டு தொங்குகிறார்கள். இந்த இடைச்சாதிப் பெருமையைப் பேசிக்கொண்டே நாம் கட்சியை வளர்த்துவிடலாம் என்ற எண்ணம் அவருக்கு இருக்கிறது. தமிழகத்தில் எப்போதும் அது முடியாது. அவர்களை வேரோடும், வேரடி மண்ணோடும் தமிழக மக்கள் தூக்கி எறிவார்கள் என்பது மட்டும் நிஜம். அதில் யாருக்கும் எப்போதும் சந்தேகம் வர வேண்டிய தேவையில்லை" என்றார்.

 

 

Next Story

காவிகளுக்கு அஞ்சும் விளையாட்டு வீரர்கள்; பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக மாறி வருகிறது - சுந்தரவள்ளி

Published on 03/06/2023 | Edited on 03/06/2023

 

Sundaravalli  Interview

 

சமூக செயற்பாட்டாளர் சுந்தரவள்ளி அவர்களை சந்தித்து மல்யுத்த வீரர்கள் நடத்திய போராட்டங்களைப் பற்றி பல கேள்விகளை முன்வைத்தோம். அதற்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு...

 

பாலியல் வன்கொடுமை அடிப்படையில் பாஜக எம்பியான பிரிஜ்பூஷன் சரண்சிங்கை கைது செய்யக் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி, தான் வென்ற பதக்கங்களை கங்கையில் வீசுவோம் என்று கூறிய பின்பும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகிறார்களே?

இந்தியாவிற்காக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற வீராங்கனைகள் வீதியில் இறங்கி பிரிஜ்பூஷண் சரண்சிங்கை கைது செய்யக் கோரி பல நாட்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் பிரிஜ்பூஷண் புதிய பாராளுமன்ற திறப்பு விழாவுக்கு சென்று போஸ் கொடுத்து வருகிறார். இது போன்ற செயல் மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மேலும், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது என்று உலக நாடுகள் பட்டியலிட்டு வருகிறது. இந்தியாவிற்கு செல்லும் படித்த பெண்கள் அல்லது சுற்றுலா செல்லும் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அமெரிக்கா அறிக்கை வெளியிட்டுள்ளது. உலக நாடுகள் பயப்படும் வகையில் தற்பொழுது இந்தியா காவிகளுடைய ஆட்சியில் மிக மோசமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆகவே, இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற சூழ்நிலையில் தான் இங்குள்ள பெண்கள் வாழ வேண்டிய நிலை உள்ளது.

 

புகார் கொடுத்தவர்கள் உரிய ஆதாரங்களை சமர்ப்பித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். புகார் கொடுத்தவுடன் கைது செய்ய முடியாது என்று அண்ணாமலை கூறி வருகிறாரே அது பற்றி உங்கள் கருத்து என்ன?

காவல்துறை முதல் நீதிமன்றம் வரை அனைத்து இடத்திற்கும் சென்று புகார் அளித்து உரிய ஆதாரங்களை சமர்ப்பித்து அதற்கு நீதி கிடைக்காததனால் தான் மல்யுத்த வீராங்கனைகள் இத்தனை நாள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மேலும் பாஜகவில் இருக்கின்ற கே.டி.ராகவன் தொடங்கி எடியூரப்பா வரை அனைவரது பெயரிலும் பாலியல் வழக்கு உள்ளது. ஆனால் இந்த பாஜக இவர்களின் மீது என்ன நடவடிக்கை எடுத்தது? பாஜகவில் நெடுநாட்களாக இருந்த காயத்ரி ரகுராம் அளித்த புகாருக்கு நடவடிக்கை எடுக்காமல் அவரை கட்சியில் இருந்து நீக்கியது மட்டுமல்லாமல் அவரை தரக்குறைவாகப் பேசியவர் தான் இந்த அண்ணாமலை. புகார் அளித்தவர்களில் ஒருவர் 18 வயதுக்கு கீழ் உள்ள ஒரு வீராங்கனை ஆவார். அவர் அளித்த புகாரின் பேரில் உடனடியாக போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்வது தானே சட்டம். ஆகவே, இவர்கள் சட்டத்திற்கு புறம்பாக பல யுக்திகளைக் கையாண்டு வருகின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்க விசயமாகப் பார்க்கப்படுகிறது.

 

உலக மல்யுத்த அமைப்பு இதற்கு கண்டனம் தெரிவித்து குறிப்பிட்ட நாளில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளதே?

உலக மல்யுத்த அமைப்பு இந்த பாலியல் வன்கொடுமைக்கு எதிராக ஆதரவு தந்திருப்பதை நாம் மிகவும் நல்ல விஷயமாகத் தான் பார்க்க வேண்டும். மேலும், விவசாயத் திட்டத்திற்கு எதிராக ஒரு வருடத்திற்கும் மேலாக பஞ்சாபில் போராடிய விவசாயிகள் இந்த மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், மல்யுத்த வீராங்கனைகள் பதக்கங்களை கங்கையில் வீச முயன்றபோது அவர்களை தடுத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த பிரிஜ்பூஷண் மீது நடவடிக்கை எடுக்க மோடிக்கு 5 நாள் கெடு கொடுப்போம் என்று கூறி சமாதானம் செய்துள்ளனர். ஆதலால், மோடி அரசின் மீது மக்களுக்கு எப்போதோ நம்பிக்கை போய்விட்டது. இதுபோன்ற செயல்கள் மீண்டும் அதிகரிக்குமானால் அடுத்து 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மக்களால் மோடி தூக்கி எறியப்படுவார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

 

மற்ற விளையாட்டுகளைப் போல தான் இந்த மல்யுத்த விளையாட்டும். ஆனால், மற்ற விளையாட்டு வீரர்கள் எங்களுக்கு குரல் ஏதும் கொடுக்கவில்லையே என்ற ஏக்கம் மல்யுத்த வீரர்களுக்கு இருக்கிறதே?

துப்பாக்கிச் சூட்டில் தங்கம் வென்றவர், வில்வித்தையில் தங்கம் வென்றவர், பிரபல கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே உட்பட சிலர் இந்த மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால், அதே சமயத்தில் மக்களால் கொண்டாடப்படும் மற்ற வீரர்கள் இதற்கு ஆதரவு தெரிவிக்காதது, நமக்கு அரசியல் வேண்டாம் எனவும், மீறி இதுபோன்ற செயலுக்கு ஆதரவு தெரிவித்தோமேயானால் தமக்கு வாய்ப்பு தர மறுக்கப்படுமோ என்ற அச்சத்தில் தான் இருப்பார்கள். மேலும், கடந்த 10 ஆண்டுகளில் தான் பெண்கள் இதுபோன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டு பதக்கங்களை வென்று வருகின்றனர். மல்யுத்தம் என்ற விளையாட்டு மட்டுமல்ல. மற்ற விளையாட்டுகளில் கூட பெண்கள் கவனிக்கப்படுவதில்லை. மீறி சில பெண்கள் அவ்வப்போதும் இந்த மாதிரி விளையாட்டுகளில் கலந்துகொள்ள நினைத்தாலும் அவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தங்கள் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் என நினைத்து மற்ற வீரர்களும் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

 

 

Next Story

“அண்ணாமலை சொல்வதெல்லாம் பொய்” - முனைவர் சுந்தரவள்ளி விமர்சனம்

Published on 23/03/2023 | Edited on 23/03/2023

 

Sundaravalli Interview

 

தற்போதைய தமிழ்நாட்டு அரசியல் நிகழ்வுகள் பலவற்றையும் குறித்த தன்னுடைய கருத்துகளை நம்மோடு சமூக செயற்பாட்டாளர் சுந்தரவள்ளி பகிர்ந்து கொள்கிறார்.

 

தமிழ்நாடு பட்ஜெட்டில் பெரும்பாலும் நிறைகள் தான் இருக்கின்றன. சாமானியர்களுக்கான சமூகநீதி பட்ஜெட் இது. விவாதங்கள் நடக்கும்போது இந்த பட்ஜெட் இன்னும் செழுமையடையும் என்று நம்புகிறேன். பெண்களுக்கான இலவச பஸ் திட்டத்தை எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்தன. ஆனால், அது இன்று பெண்களை பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைய வைத்திருக்கிறது. அரசுப் பள்ளியில் படிக்கும் பெண்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை, பெண்கள் உயர்கல்வி பெறும் சதவீதத்தை உயர்த்தியுள்ளது. 

 

மத்திய அரசு விவசாயிகளுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. மகாராஷ்டிராவில் விவசாயிகள் போராடி வருகின்றனர். பாஜக ஆட்சியில் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பற்ற நாடாக இந்தியா மாறி வருகிறது. இந்த நிலைமையில் அண்ணாமலை தமிழ்நாடு அரசை விமர்சித்து வருகிறார். தேர்தலில் பாஜக தனியாக நிற்க வேண்டும் என்று தான் நானும் விரும்புகிறேன். அப்போதுதான் அவர்கள் நோட்டாவுக்குக் கீழ் என்பதை மீண்டும் உணர்வார்கள். அதிமுகவோடு கூட்டணி வைத்ததால் தான் பாஜகவுக்கு 4 சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்தனர். 

 

நேற்று அரசியலுக்கு வந்து இன்று தமிழ்நாட்டில் தாக்குப்பிடிக்க முடியாமல் ஓடுகிறார் அண்ணாமலை. தான் ஒரு கடன்காரனாக இருக்கிறேன் என்று அண்ணாமலை சொல்வதெல்லாம் பொய். இவருக்கு அமர்பிரசாத் ரெட்டி என்பவர் கோடி கோடியாக சம்பாதித்துக் கொண்டுவந்து கொடுக்கிறார். எனவே எங்களிடம் இவர் யோக்கியன் போல் நடிப்பது எடுபடாது. பணம் கொடுத்து தேர்தலை சந்திக்கக் கூடாது என்கிறார் அண்ணாமலை. ஆனால், வரவிருக்கும் கர்நாடக தேர்தலுக்காக பல கோடிகள் செலவு செய்ய பாஜக தயாராகி வருகிறது. காசு கொடுத்து சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் கட்சி தான் பாஜக.

 

ஒரு கட்சித் தலைவர் எப்படி இருக்கக்கூடாதோ அப்படி இருப்பவர் அண்ணாமலை. கோவையில் கடையடைப்பு நடத்த வேண்டும் என்று பாஜக மாவட்டத் தலைவர்கள் முடிவெடுத்தபோது அதற்கு எதிராக கோர்ட்டில் பேசியவர் அண்ணாமலை. ஆனால், சிலிண்டர் வெடிப்பு நடந்த இடத்தில் உள்ள கோவிலுக்குச் சென்று பஜனை பாடினார். கோபத்தால் அந்த நிகழ்ச்சியில் வானதி சீனிவாசன் கலந்துகொள்ளவில்லை. பாஜகவில் இருக்கும் ஒரு சிலரையும் வெளியேற்றிவிட வேண்டும் என்று துடிக்கிறார் அண்ணாமலை. அரசியலில் ஒரு அமாவாசை தான் அண்ணாமலை.

 

சமீபத்தில் அண்ணாமலையை அதிமுக நன்றாக வைத்து செய்துவிட்டது. அவருக்கு இப்போது உட்கட்சி உட்பட எங்குமே மரியாதை இல்லை. அதனால் அரசியலில் தற்போது என்ன செய்வதென்று தெரியாமல் அவர் முழித்துக் கொண்டிருக்கிறார்.