Skip to main content

சுபஸ்ரீ மரணம்; நக்கீரனுக்கு கிடைத்த பிரத்யேக ஆவணம்! 

Published on 23/05/2023 | Edited on 23/05/2023

 

Subhasree case; Nakeeran received a special document!

 

தொடர் முயற்சிக்குப் பிறகு சுபஸ்ரீயின் பிரேதப் பரிசோதனை அறிக்கை ‘நக்கீரனுக்கு’ பிரத்யேகமாகக் கிடைத்திருக்கின்றது. பிரேதப் பரிசோதனை அறிக்கைக்கு செல்லுமுன், ‘ஈஷாவின் சைலன்ஸ் ஹவர்’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ள 11-12-2022 அன்று சென்ற சுபஸ்ரீ, 18-12-2022 அன்று ஈஷாவை விட்டு வெளியேறி பின்னங்கால் பிடறித்தெறிக்க ஓடினார். இதனை சி.சி.டி.வி. காட்சிகளும் உறுதிப்படுத்தின. ஆனால், அன்று மாயமான சுபஸ்ரீ சரியாக இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான 01-01-2023 அன்று மாயமான அதே செம்மேட்டுப் பகுதி காந்தி காலனியில் மூன்று நபர்களுக்குச் சொந்தமான தென்னந்தோப்பின் கிணற்றில் குப்புறக் கிடந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.

 

01-01-2023 ஆலாந்துறை காவல் நிலையத்தாரால் பதிவு செய்யப்பட்ட வழக்கின்படி சுபஸ்ரீயின் உடலை அன்றே பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தியது கோவை அரசு மருத்துவமனை. அவசர அவசரமாகப் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் என்ன? யாருக்காக இதனைச் செய்கிறீர்கள்? என மாதர் சங்கமும், உறவினர்களும் கேள்வியெழுப்பிய நிலையில் அதனை பொருட்படுத்தாது பிரேதப் பரிசோதனை செய்து உறவினர்களிடம் வலுக்கட்டாயமாக ஒப்படைத்தது ஆலாந்துறை காவல்துறை. ஆனால் பிரேதப் பரிசோதனை அறிக்கையை சுபஸ்ரீயின் கணவருக்குக் கூட இறுதிவரை வழங்காத ஆலாந்துறை காவல்துறை, யாருக்காகவோ தன்னுடைய கட்டுப்பாட்டில் மறைத்து வைத்து அழகு பார்த்தது. இத்தகைய நிலையில், சுபஸ்ரீயின் பிரேதப் பரிசோதனை அறிக்கை ‘நக்கீரனுக்கு’ பிரத்யேகமாக கிடைத்த நிலையில் அதனை அப்படியே பதிவு செய்கின்றோம்.

 

Subhasree case; Nakeeran received a special document!

 

தடயவியல் மருத்துவத்துறை, கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி & மருத்துவமனையால் வழங்கப்பட்ட பி.எம். எண் 12/2023, தேதி 01.01.2023 கொண்ட பிரேதப் பரிசோதனை ஆய்வறிக்கையோ, க்ரைம் எண் 191/2022-ன் படி ஆலாந்துறை காவல் நிலையத்தாரால் 01.01.2023 அன்று பிற்பகல் 03.55 மணிக்கு பெறப்பட்ட கடிதத்தின் மூலம் சிந்து என்கின்ற பெண் எஸ்.எஸ்.ஐ. உடனிருக்க, 34 வயதுடைய சுபஸ்ரீ என்ற பெண்ணின் உடல் பகுப்பாய்வு செய்யப்பட்டது. மருத்துவர்கள் ஜெயசிங், பால வெங்கட பெருமாள் ஆகியோரால் 04.35 மணிக்கு தொடங்கப்பட்ட பிரேதப் பரிசோதனையில் முதற்கட்டமாக பிரேதத்தின் அங்க அடையாளங்களாக, “சுமார் 34 வயதுடைய ஒரு பெண்ணின் உடல் அது! அதனுடைய விரல் மற்றும் கால் நகங்கள் புஷ் நிறத்தில் இருந்தன. உடம்பில் அணிந்திருந்த ஆடைகளில் சேறு படிந்திருந்த நிறத்தில் கால் சட்டை மற்றும் மேல்சட்டை, வெள்ளை மற்றும் வயலட் நிற உள்ளாடைகள் அணியப்பட்டிருந்தன. இடது மணிக்கட்டில் ஈஷாவின் அடையாளமான எண் 111-420-76 கொண்ட பேண்டும், இடது மோதிர விரலில் ஒரு மெட்டா மோதிரமும், வலது மோதிர விரலில் தங்க மோதிரமும் இருந்தது. இரண்டு காதுகளும் சிதைந்து துளைக்கப்பட்ட நிலையில் காதில் வளையங்கள் இல்லை. பற்களுக்கு இடையில் நாக்கின் நுனி கடிக்கப்பட்ட நிலையில் மேல் உதட்டின் மேல் மீன் கடித்த அடையாளமும் இருந்தது. இடது கீழ் முன் பகுதியில் புருவம் இல்லாமலும், வலது மற்றும் இடது ஆள்காட்டி விரலின் நுனிப் பகுதி சிதைந்த நிலையிலுள்ள எலும்பை வெளிப்படுத்துகிறது. எனினும் இறுதி அறிக்கைக்காக உள்ளுறுப்புகள் ஒதுக்கப்பட்டு ரசாயன ஆய்வுக்கு அனுப்பப்பட்டது’ என்கின்றது முதற்கட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கை.

 

Subhasree case; Nakeeran received a special document!

 

ரசாயன ஆய்வு அறிக்கை எண் CBE/Tox.h/07/2023 தேதி 18.01.2023 மற்றும் எண் RT.8002/2023,CBE/BIOL/02/2023ன் இறுதி அறிக்கையோ, “உள்ளுறுப்புகளில் எந்த விஷமும் இல்லை. மார்பெலும்பு மற்றும் நீர் மாதிரியில் டயட்டம் கண்டறியப்படவில்லை. யோனி ஸ்வாப் மற்றும் ஸ்மியர்களில் விந்தணுக்கள் கண்டறியப்படவில்லை. நீரில் மூழ்கியதாலேயே மரணம்” என்றது.

 

“கடந்த சில நாட்களுக்கு முன்பு சுபஸ்ரீயின் வழக்கினை விரைந்து முடிக்க ஆலாந்துறை காவல் நிலையத்திற்கு உத்தரவு வந்தது. இதன் ஒருகட்டமாக இந்த பிரேதப் பரிசோதனை அறிக்கையை முன்வைத்து சுபஸ்ரீயின் கணவர் பழனிக்குமாரை குற்றவாளியாக்க முனைந்துள்ளது காவல்துறை. குறிப்பாக, சுபஸ்ரீ இந்த சம்பவத்திற்கு முன்பு இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றதாகவும், இதனை சரிசெய்ய வேறு வழியில்லாமல் ஈஷாவில் விட்டுச் சென்றுள்ளதாகவும், மீண்டும் கணவரிடம் சென்றால் இம்சை என்ற அளவில் கணவருக்குத் தெரியாமல் ஓடி வந்து கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்திருக்கலாம். ஆகையால் குற்றவாளி சுபஸ்ரீயின் கணவர் பழனிக்குமாரே என கதை புனைந்து வருகின்றது ஆலாந்துறை காவல்துறை. யாரையோ காப்பாற்ற பழனிக்குமார் குற்றவாளி ஆகிறார்” என்கிறார் அங்கு பணியாற்றும் நேர்மையான போலீஸார் ஒருவர்.

 

பழனிக்குமாரின் உறவினர் ஒருவரோ, “அது எப்படி..? பழனிக்குமார் குற்றவாளி ஆக முடியும்..? செம்மேடு சி.சி.டி.வி. காட்சிகள் தவிர ஈஷாவிலிருந்து வெளியேறிய எவ்வித சி.சி.டி.வி. காட்சிகளையும் ஈஷா வெளியிடவில்லை. அப்படி எனில் சந்தேகம் ஈஷா மீதுதான்! அதுபோக, பழனிக்குமாரின் புகார் படி, சுபஸ்ரீ கலந்துகொண்ட சைலன்ஸ் வகுப்பு காலை 11 மணிக்கு முடிவடையும் என்பதால் அவரை அழைத்துச் செல்ல காத்திருந்தேன். பிற்பகல் 3 மணி வரையும் அவர் வராததால் ஈஷா மையத்தினரிடம் விசாரிக்கையில் சுபஸ்ரீ சர்ப்ப வாசல் வழியாக காலை 9.30 மணிக்கு வெளியே சென்றதாகத் தெரியவந்தது. பின் 90******38 என்கின்ற எண்ணிலிருந்து வந்த மிஸ்டுகாலை கொண்டு விசாரிக்கையில் என்னுடைய கணவரிடம் பேச வேண்டுமென ஒரு பெண் மொபைலை வாங்கிப் பேசியதாகத் தெரியவந்தது. அதன்பின் தொடர்ச்சியாக விசாரிக்கையில், ‘சுபஸ்ரீ கால்டாக்சியில் ஏறி செம்மேடு முட்டத்துவயலில் இறங்கியதாகக் கூறப்படுகின்றது’ என்கின்றது. கணவரை விட்டு ஓட நினைப்பவர் எதற்காக கணவரிடம் பேச முயற்சிக்க வேண்டும்? இப்பொழுதும் கூறுகிறேன். விசாரிக்க வேண்டியது ஜக்கியைத்தான். தன்னையும், தன்னுடைய ஈஷாவையும் காப்பாற்ற ஜக்கி போடும் தகிடுதத்தம்தான் இது” என்கிறார் அவர்.

 

இது இப்படியிருக்க, பிரேதப் பரிசோதனை அறிக்கையில், “வலது மற்றும் இடது ஆள் காட்டி விரலின் நுனிப்பகுதி சிதைந்த நிலையில் உள்ள எலும்பை வெளிப்படுத்துகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. யாரையோ சுட்டிக்காட்டி அழுத்தமாகப் பேசிய நிலையில் சுபஸ்ரீயின் விரல் சிதைக்கப்பட்டிருக்கலாம். இதை ஏன் விசாரிக்கவில்லை? சுபஸ்ரீ இறுதியாக பழனிக்குமாரிடம் பேச முயற்சித்த கால் டாக்சி ஓட்டுநரை தீர விசாரிக்காதது ஏன்? உள்ளூர் போலீஸை தவிர்த்து சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரித்தால் மட்டுமே சுபஸ்ரீயின் மர்ம மரணத்திற்கு விடை கிடைக்கும்” என்கின்ற ஆதங்கக் குரல்கள் காவல்துறை தலைமையை நோக்கி எழுகின்றன.

 

 

Next Story

கணேசமூர்த்தி எம்.பி. உடல்நிலை குறித்து வைகோ விளக்கம்!

Published on 24/03/2024 | Edited on 25/03/2024
Ganesh Murthy M.P. Vaiko explanation about health

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யான கணேசமூர்த்தி ம.தி.மு.க.வின் பொருளாளராக பணியாற்றி வருகிறார். சென்ற நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் ம.தி.மு.க.வுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தொடர்ந்து மக்களுக்கு பணியாற்றி வருகிறார்.

இத்தகைய சூழலில் இன்று (24.03.2024) காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்றார். என்ன காரணம் என தெரியாத சூழலில் இதுகுறித்து விசாரித்தபோது இன்று காலை தனது வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் கணேசமூர்த்தி. சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை விழுங்கிய அவர் 10.30 மணிக்கு தெரியவந்தது. ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இந்நிலையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “கணேச மூர்த்தி நாடாளுமன்றத்திற்கு 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கும் தன்னுடைய கடமைகளை சிறப்பாகவே செய்தார். இம்முறை கட்சியிலே எல்லோரும் சேர்ந்து துரை வைகோவை வேட்பாளராக்கி நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். கணேச மூர்த்திக்கு அடுத்த சான்ஸ் பார்ப்போம் என்றனர். ஆனால் அதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை. ஓட்டெடுப்பு எல்லாம் நடந்தது. 99% பேர் துரை வைகோவை நிறுத்த வேண்டும் என்றனர்.

Ganesh Murthy M.P. Vaiko explanation about health

இது கணேசமூர்த்தி வேண்டாம் என்பதற்காக அல்ல. 2 சீட்டுகளை வாங்கி ஒன்றை துரைக்கும் மற்றொன்றை கணேசமூர்த்திக்கும் கொடுக்கலாம் என்றனர். அது மாதிரியே செய்யலாம் என சொன்னேன். அதன் பிறகு நான் என்ன நினைத்தேன் என்றால் அப்படியே வாய்ப்பு இல்லாமல் போனாலும், சட்டசபை தேர்தல் ஒரு வருடத்தில் வருகிறது. ஒரு நல்ல தொகுதியில் அவரை எம்.எல்.ஏ. ஆக்கி விட்டு, அதன் பிறகு அதைவிட பெரிய பதவி ஏதாவது ஸ்டாலினிடம் சொல்லி வாங்கிக் கொடுக்கலாம் என்று இருந்தேன். சட்டமன்ற தேர்தல் வருவதற்குள் காயம் எல்லாம் ஆறிவிடும் என இருந்தேன். 

அதன் பிறகும் அவர் நன்றாக பிரியமாகவே பேசினார். வீட்டில் மகன், மகளிடமும் நன்றாகத் தான் பேசியிருக்கிறார். கொஞ்சம் கூட எதையும் காட்டிக்கொள்ளாமல் நேற்று நான்கு முறை மருத்துவரிடம் பேசியுள்ளார். ஆனால், அப்பொழுதெல்லாம் அவரது பேச்சில் எந்தவித பதற்றமும், சோகத்தில் இருப்பதாக அறிகுறியோ தெரிந்து கொள்ள முடியவில்லை என்று கூறினர். அதன் பின்னர் தான் அவர் தென்னை மரத்துக்கு போடும் நஞ்சை கலக்கி குடித்திருக்கிறார். அங்கு வந்த கபிலனிடம் ‘இதை குடித்து விட்டேன், நான் போய் வருகிறேன்’ எனக் கூறியுள்ளார். அதன் பின்னர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உரிய முதலுதவி சிசிக்சைகள் அனைத்தும் செய்து விட்டனர்.

அதன்பிறகு, ‘முதலுதவி சரியாக செய்ததால் தான் சிகிச்சை அளிக்க முடிகிறது. 50க்கு 50 சதவிதம் வாய்ப்புள்ளது. இது மாதிரியான நிலையில் ஏற்கனவே பலரை பிழைக்க வைத்திருக்கிறோம். அதற்குரிய உபகரணங்கள் மருத்துவமனையில் உள்ளது. அவற்றை பயன்படுத்தி சிகிச்சை எடுக்கும் போதும் கொஞ்சம் ரத்த அழுத்தம் குறைவதால் அவரை செடேசன் என்ற மயக்க மருந்தில் வைத்திருக்கிறோம்’ என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆதனால் நம்பிக்கையோடு இருப்போம். 2 நாள் சென்ற பின் தான் எதையும் கூற முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விஷ முறிவுக்கான சிகிச்சையும் எக்மோ சிகிச்சையும் கொடுக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார். 

Next Story

சூடுபிடிக்கும் தேர்தல் களம்; தீடீரென வேட்பாளராக மாறிய முன்னாள் ராணுவ வீரர்!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
 ex-serviceman who has filed his nomination to contest the parliamentary elections

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பகுதியைச் சேர்ந்தவர் மதுரை விநாயகம். இவர் கடந்த 20 வருடங்களாக இந்திய ராணுவத்தில் ஜாயின் கமிஷன் அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். அதன் பின்னர், கடந்த 2016 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார். எல்லையில் பாதுகாப்பு பணியில் முழு நேரமும் ஈடுபட்டு வந்த இவர், சொந்த ஊருக்கு வந்ததும் குடும்பத்தினரோடு அமைதியாக வசித்து வந்துள்ளார். மேலும், நடப்பு அரசியலை கூர்மையாக கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி துவங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதனையொட்டி, வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தல் ஆணையத்திடம் இருந்து இந்த அறிவிப்பு வெளியானதும், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்திற்கு தேர்தல் அதிகாரியாக அந்த மாவட்டத்தின் ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, கோவை மாவட்டத்தில் தேர்தலில் களம் காண்பவர்கள் அவரிடம் வந்து வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், திடீரென எந்தவித திட்டமிடலும் இல்லாமல் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான மதுரை விநாயகம், ராணுவ சீருடையை அணிந்துகொண்டு, தனது குடும்பத்தாரோடு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு சென்றவர், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட போவதாகக் கூறியுள்ளார். இதற்கான வேட்பு மனுவை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொள்ளாச்சி நாடாளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலரான சர்மிளாவிடம் கொடுத்துள்ளார்.

முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் சீருடையோடு வேட்பு மனு கொடுக்க வந்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மதுரை விநாயகம் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது, தான் கடந்த 20 ஆண்டுகளாக இந்திய நாட்டு எல்லையை பாதுகாத்து வந்ததாகவும், தற்போது ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற நிலையில் மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகவும் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், நான் சம்பாதிப்பதற்காக இந்தத் தேர்தலில் பேட்டியிடவில்லை. முழுக்க முழுக்க மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே தேர்தலில் போட்டியிடுகிறேன் எனவும், இதற்காகவே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன் எனவும் கூறியிருக்கிறார்.

அப்போது, அங்கிருந்த செய்தியாளர்கள், இங்கு ஏற்கெனவே நிறைய அரசியல்வாதிகள் இருக்கும் போது நீங்கள் வந்து என்ன செய்ய போகின்றீர்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த மதுரை விநாயகம், இங்கு உள்ளவர்களை மூன்று முறை எம்பி ஆக்கினாலும் அல்லது சட்டமன்ற உறுப்பினர்கள் ஆக்கினாலும் சம்பளத்தையும் மூன்று ஓய்வூதியத்தையும் வாங்கிக்கொள்கிறார்கள் எனவும், இதனால் மக்களின் வரிப்பணம் முழுவதும் அவர்களிடம் சென்று விடுவதாகவும் கூறியிருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய மதுரை விநாயகம், நான் வெற்றி பெற்றால் எனது தொகுதி மக்களுக்கு வீட்டு வரி, குடிநீர் வரி, சொத்து வரி, உள்ளிட்டவற்றை வசூலிக்க மாட்டேன் எனத் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், பொள்ளாச்சி தொகுதியில் தென்னை விவசாயிகளின் வளர்ச்சிக்கான பணிகளை செய்வேன் எனவும், நீர்நிலைத் திட்டங்களை சரி செய்வேன் எனவும் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு, பொள்ளாச்சியில் போட்டியிட போவதாக கூறி சவப்பெட்டியோடு ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மறுபடியும் அதே பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட போவதாக முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் சீருடையோடு வந்து வேட்புமனு தாக்கல் செய்ததால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.