Skip to main content

ஓபிஎஸ்ஸிற்கு ஆதரவாக வைக்கப்பட்ட பேனர்...கண்டுகொள்ளாத எடப்பாடி...அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 24/09/2019 | Edited on 24/09/2019

செப்டம்பர் 12-ஆம் தேதி துரைப்பாக்கம் மென்பொருள் நிறுவனத்தில் வேலையை முடித்து விட்டு குரோம்பேட்டை பவானி நகரிலுள்ள தனது வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த சுபஸ்ரீ, விதி ஒரு முற்றுப்புள்ளியை கையில் சுமந்துகொண்டு தன்னைத் தொடர்ந்து கொண் டிருப்பதை அறியவில்லை. கோவிலம்பாக்கம் ஜெ.டி. திருமண மண்டபத்தில் அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. காஞ்சி கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ஜெயகோபாலின் மகன் திருமணம் நடைபெறவிருந்தது. திருமணத்துக்கு வருகை தரவிருந்த துணைமுதல்வர் ஓ.பி.எஸ்.ஸுக்காக பல்லாவரம்- துரைப்பாக்கம் ரேடியல் சாலையின் நடுவே அவசர அவசரமாக பேனர்கள் கட்டப்பட்டிருந்தன. அவற்றிலொன்று எதிர்பாராமல் சரிய, அதிலிருந்து தப்பிக்க முயற்சிசெய்த சுபஸ்ரீமீது தண்ணீர் லாரி மோதி அதே இடத்தில் உயிரிழந்தார்.

 

subasri



கன்றுக்காக மகனை தேர்க்காலில் ஏற்றிய மனுநீதிச்சோழன் காலம்போய் ஆட்சிக்காக யார் காலடியிலும் தவழும் அரசியல் தலைவர்கள் கோலோச்சும் காலமென்பதால், பேனர் விவகாரத்தை பெரிதாக கண்டு கொள்ளாமல் இருந்தது காவல்துறை. ஆனால் விபத்தை நேரில் கண்டவர்கள் நடந்த கொடூரத்தை ஊடகங்களுக்கு தெரிவித்தது மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் தங்களின் கண்டனங்களை பதிவுசெய்தனர். இந்த சம்பவத்துக்கு காரணமான அ.தி.மு.க. பிரமுகர் ஜெயகோபால்  மறுநாள் திருமணம் முடியும் வரை மண்டபத்திலே இருந்தார். சுபஸ்ரீயின் ரத்தம் சாலையில் உலர்வதற்குமுன் துணை முதல்வர் ஓ.பி.எஸ். திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திச் சென்றார்.

 

admk



இந்நிலையில், பேனர் கலாச்சாரத்திற்கு எதிராக தொடர்ந்து போராடிவரும் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த அநீதிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். நீதிமன்றத்தின் கண்டனத்தையடுத்து, பேனரால் உயிர்ப்பலி ஆகவில்லையென வழக்குப் பதிவுசெய்த ஆய்வாளர் ரவிக்குமார் தனது செயலுக்கு மன்னிப்பு கோரினார். சென்னை மாநகராட்சி பாதிக்கப்பட்ட சுபஸ்ரீ குடும்பத்திற்கு ஐந்துலட்சம் ரூபாய் தர வேண்டுமென்றும் அந்த பணத்தை தவறுசெய்த அதிகாரிகளின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய வேண்டுமென்றும் உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம்.

  incident



நீதிமன்றத்தின் கண்டனத்தை அடுத்து, பீகாரைச் சேர்ந்த லாரி டிரைவர் மனோஜ் என்பவரைக் கைதுசெய்தது காவல்துறை. பேனரை அச்சிட்டுத் தந்த கோவிலம்பாக்கம் அச்சகத்துக்கு சீல்வைக்கப்பட்டது. தற்போதுவரை சம்பந்தப்பட்ட அ.தி.மு.க. பிரமுகர் ஜெயகோபால் கைது செய்யப் படாத நிலையில்... அவர்மீது இ.பி.கோ. 279, 304 (ஏ), 336 பிரிவுகளின் கீழும் கடைசியாக,308 பிரிவின் கீழும் பரங்கிமலை காவல்நிலையம் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்தியக் குற்றவியல் சட்டப்பிரிவு 308, மரணம் விளைவிக்கும் குற்றத்தை செய்ய முற்படுபவரின்மேல் பதியும் சட்டப்பிரிவாகும். ஜெயகோபாலின் மைத்துனர் மேகநாதன்மீதும் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக பேசிய மாநில மனித உரிமை ஆணைய நீதிமன்ற வழக்கறிஞர் நைனா முகமது, 2009-ல் இதேபோல ஒரு சம்பவம் ஆந்திராவில் நடந்தது. அப்போது  உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை ஏற்றது. தீர்ப்பில் இந்த உயிர்ப்பலி ஏற்பட காரணமாக இருந்த கட்சியே பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீடு தரவேண்டுமென தீர்ப்பளித்தது. இந்த வழக்கிலும் அதுபோல எதுவும் நடந்துவிடக்கூடாதென தாமாகவே முன்வந்து பேனர் வைப்பதை தவிர்க்கிறோம் என பிரபல கட்சிகள் அனைத்தும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது வரவேற்கத்தக்கது. இந்த வழக்கு நிச்சயம் அ.தி.மு.க.வுக்கு தலைவலியை ஏற்படுத்தும்'' என்றார்.


மேலும் பேனர் கலாச்சாரத்திற்கு எதிராக போராடி பொய்வழக்கில் கைது செய்யப்பட்ட அறப்போர் இயக்க நிர்வாகி அக்தர் அகமது இந்த வழக்கில் அலட்சியமாக செயல்படும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கவேண்டும். இன்னொரு சுபஸ்ரீக்கு இந்த இக்கட்டு நேரக்கூடாது'' என்றார். குடும்பத்தின் ஒரே வாரிசான சுபஸ்ரீ, கனடா செல்லும் கனவிலிருந்தவர், ஜிம்களில் சொல்லித் தரப்படும் ஜூபா டான்ஸுக்கான இன்டர்நேஷனல் ட்ரைனர். பிரகாசமாகத் தெரிந்த மகளின் எதிர்காலம் ஒரு பேனரால் சரிந்ததை தாங்க முடியாமல் தவிக்கின்றனர் பெற்றோரான ரவியும் கீதாவும்.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்காசன் சுபஸ்ரீயின் பெற்றோரைப் பார்த்து ஆறுதல்கூறி நிவாரணத் தொகையையும் வழங்கினர். இது ஒருபுறமிருக்க, சுபஸ்ரீயின் மரணத்துக்கு அ.தி.மு.க. தரப்பிலிருந்து முன்னாள் எம்.எல்.ஏ. தன்சிங் தவிர, யாரும் ஆறுதல் தெரிவிக்க வில்லையென்ற சர்ச்சை எழுந்துள்ளது. துணைமுதல்வரை வரவேற்க வைக்கப்பட்ட பேனர்கள் என்பதால், அதை அவரே கவனித்துக்கொள்ளட்டுமென இ.பி.எஸ். தரப்பு விட்டுவிட்டதாக சில முணுமுணுப்புகள் அ.தி.மு.க. தரப்பிலிருந்தே எழுந்துள்ளது.

பல்லாவரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வசந்தகுமார், சுபஸ்ரீ பரிதாப பலிக்கு பின் பேனர்களை ஒன்றுவிடாமல் அப்புறப்படுத்தும் மாநகராட்சி ஊழியர்கள் பேனர்களை அகற்றுவதாக கூறிக்கொண்டு சில கடைகளின்  பெயர்ப்பலகைகளைக்கூட கிழித்து அத்து மீறுவதால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்'' என்று முறையிட்டார். நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய குற்றவாளிக்கு ஆளுந்தரப்பு பாதுகாப்பளிக்க, வழக்கம்போல அப்பாவிகளிடம் விதிமுறைகளைக் காட்டி வசூலில் கவனம் செலுத்துகிறது காவல்துறை.
 

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.