Skip to main content

'ரூட்டு தல' முதல் 'பஸ் டே' வரை... தடம் மாறும் தமிழக இளைஞர்கள்!

Published on 24/07/2019 | Edited on 24/07/2019

சென்னையில், பட்ட பகலில் பேருந்துக்குள் மாணவர்கள் கத்தியை வைத்து தாக்கிக்கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மதியம் பிராட்வேயில் இருந்து பூந்தமல்லியை நோக்கி சென்ற பேருந்தில் பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் பயணித்தனர். அப்போது அவர்களுக்குள் 'ரூட்டு தல' தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த ஒரு தரப்பை சேர்ந்த மாணவர்கள், பட்டாக் கத்திகளை கொண்டு எதிர் தரப்பினரை சரமாரியாக தாக்க தொடங்கினர். பேருந்தில் அமர்ந்துகொண்டு சகஜமாக பேசிக்கொண்டு வந்த மாணவர்கள் திடீர் என்று  அரிவாள், பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சாலையில் அங்கும் இங்கும் ஓடியதால் பேருந்தில் பயணித்த பொதுமக்கள் பீதி அடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. தற்போது அதுதொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் வெளியாகி தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த மாதிரியான சம்பவங்கள் நேற்று மட்டும் நடத்த ஒன்று அல்ல.

 

   student attack in chennai



சில மாதங்களுக்கு முன்பு அம்பத்தூர் அருகே பட்டறைவாக்கம் ரயில் நிலையத்தில், கல்லூரி மாணவர்கள் கத்தி மற்றும் இரும்பு ராடுகளை வைத்து ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்ட சம்பவத்தின் வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வாறு, சில கல்லூரி மாணவர்கள் பொதுமக்களின் உயிரை மதிக்காமல் அத்துமீறி தங்களுக்குள் தாக்கி கொள்ளும் சம்பவம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. 'படிக்க' அனுப்பும் மாணவர்கள் 'அடிக்க' கற்றுக்கொள்வதற்கு என்ன காரணம் என்று அறிந்து கொள்வது தற்போதைய சூழ்நிலையில் கட்டாயமாகிறது. மேலும் சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் கல்லூரி மாணவர்கள் நடத்திய 'பஸ் டே' நிகழ்ச்சியின் போது, ஓட்டுநர் திடீர் என்று பிரேக் போட்டதன் காரணமாக, பேருந்தின் மேல் அமர்ந்திருந்த அனைவரும் தலைக்குப்புற கவிழ்ந்தனர். இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள்.

இந்நிலையில், நேற்றைய சம்பவம் தொடர்பாக இதுவரை இரண்டு மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், இதுதொடர்பாக பேட்டியளித்த பச்சையப்பா கல்லூரி முதல்வர், " குடும்ப சூழ்நிலைகள் காரணமாகவே மாணவர்கள் இத்தகைய வன்முறை சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள் என்றும், கல்லூரிக்கு யாரும் கத்தியுடன் வருவதில்லை" என்றும் தெரிவித்துள்ளார். அவர் சொல்வது போல குடும்ப சூழ்நிலையே வன்முறைக்கு காரணம் என்றால், அந்த வன்முறை அவர்களின் வீட்டில் தானே நடக்க வேண்டும். அது ஏன் ரோட்டில் நடக்கிறது என்ற கேள்வி இயல்பாகவே அனைவருக்கும் எழும். மேலும், வன்முறை, கொலை, கொள்ளை செய்து சிறைச்சாலைகளில் இருக்கும் ரவுடிகள் கூட தங்களுக்குள் வன்முறையில் ஈடுபட்டதாக எந்த ஒரு செய்தியும் இதுவரையில் தமிழகத்தில் நடந்ததாக தெரியவில்லை.

வன்முறை எண்ணம் தலைக்கேறி, குற்றம் செய்த ரவுடிகளிடம் கூட இல்லாத ஒரு வன்முறை வெறியாட்டம் படிக்கும் மாணவர்களிடம் வந்ததே ஒரு பெரிய ஆபத்தாக, எதிர்கால தமிழகத்தை அழிக்கும் விஷச்செடியாக மாறியுள்ளது. அந்த செடியை முழுவதும் கிள்ளி எறியாமல், மன்னிப்பு என்ற பெயரில் அவர்களை சஸ்பெண்ட் செய்துவிட்டு மீண்டும் கல்லூரியில் சேர்ப்பதை அறவே தவிர்க்க வேண்டும். 'சஸ்பெண்ட்' செய்வதை தவிர வேறு எதையும் செய்யமாட்டார்கள் என்ற எண்ணம், இந்த மாதிரி குற்றம் செய்யும் மாணவர்கள் மத்தியில் அழுத்தமாக பதிந்துள்ளதே இத்தகைய ஆபத்துக்களுக்கு காரணமாகிறது. எனவே, இத்தகைய குற்றச்செயலில் ஈடுபடும் மாணவர்களை நிரந்தர நீக்கம் செய்து அவர்கள் அதற்கு மேல் படிக்க முடியாது என்ற நிலையை ஏற்படுத்தினால் மட்டுமே, இத்தகைய சம்பவங்களின் எண்ணிக்கை குறையும் என்று பொதுமக்கள் தங்களின் ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்கள். 

 

 

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

கஞ்சா வியாபாரியைப் பிடிக்கச் சென்ற போலீசார் மீது கொலைவெறி தாக்குதல்; வெளியான பரபரப்பு காட்சிகள்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
A attack on the police who went to catch a ganja dealer; Exciting scenes released

சென்னை கண்ணகி நகர் சுனாமி நகர்  குடியிருப்பு 64ஆவது பிளாக்கில் வசித்து வரும் சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளவர் உமாபதி. கஞ்சா விற்பனை செய்த வழக்கில் இதற்கு முன்பு கைது செய்யப்பட்டிருந்தார். விசாரணைக்குப் பிறகு சிறைக்குச் சென்று விட்டு வெளியே வந்த அவர், அந்தப் பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களைக் கத்தியால் வெட்டி இருக்கிறார். இரண்டு தினங்களுக்கு முன்பு இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கஞ்சா விற்பனை தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுத்ததால் இரண்டு பேரை அவர் கத்தியால் வெட்டியுள்ளார். இதுகுறித்து கண்ணகி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்று மாலை கைது செய்ய முயன்றனர். அப்போது அங்கிருந்த கற்களை எடுத்து போலீசாரை கொடூரமாக தாக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியான பொதுமக்கள், போலீசாரைக் காப்பாற்ற முயன்றனர். உடனே கடுப்பான அந்தக் கஞ்சா ஆசாமி, அந்தப் பகுதி மக்களுக்கும் மிரட்டல் விடுத்தபடி அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.