Skip to main content

ஒரு பீச் டூர் போகலாமா!!!

Published on 20/03/2018 | Edited on 23/06/2018
Marina Beach

 

 

 

மனித வாழ்க்கைல பார்ப்பதற்கு அலுத்துப்போகாத மூன்று விஷயங்கள்  கடல், விமானம், ரயில் அதிலும் முக்கியமானது கடல். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அங்கு பொழுது போக்கலாம். அதனால ரிலாக்ஸ் பண்ணனும்னா கடலுக்கு போனாலே போதும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீர். காலடியில் உவர் மணல், மூக்கை துளைக்கும் உவர்காற்று இதுவே நமக்கு ரிலாக்ஸ் செய்ய போதுமானதாக இருக்கும். மெரினா பீச்சே நமக்கு அவ்வளவு ரிலாக்ஸ கொடுக்கும், மெரினா பீச்சவிட வித்தியாசமான பீச் வேற என்னென்ன இருக்குனு பார்ப்போம்.  வாருங்கள் ஒரு பீச் டூர் (beach tour) போகலாம்.
 

 

ocean


 

 

 

நாம் முதலில் விமானத்தின் மூலம் ஒரு கடற்கரைக்கு செல்வோம். அதெப்படி விமானம் மூலம் கடற்கரைக்கு செல்லமுடியும் என கேட்கிறீர்களா. இந்த கடற்கரையில்தான் விமான நிலையம் உள்ளது. இந்த கடற்கரையை பொறுத்தவரை நாம் விமானத்தில் இருப்பதுதான் நல்லது. ஏனெனில் விமானம் புறப்படும்போதும், தரையிறங்கும் போதும் நம் தலை உயரத்தில்தான் விமானம் பறக்கும். அதுமட்டுமின்றி விமான மோட்டாரில் இருந்துவரும் காற்று மனிதனையே வீசிவிடும். அந்தளவிற்கு அருகிலுள்ளது இந்தக் கடற்கரை. இது பிரான்சின் செயின்ட் மார்ட்டின் என்ற இடத்தில் உள்ளது.

 

ocean



அடுத்தது ஹவாய் தீவில் உள்ளது பாப்பாகோலியா கடற்கரை, இந்த கடற்கரையில் மண் பச்சை நிறத்தில்தான் இருக்கும். அருகில் பார்க்கும்போது சின்னச்சின்ன வைரங்கள் போல இந்த மண் காட்சியளிக்கும். இந்த கடற்கரைக்கு அருகில் ஒரு எரிமலை உள்ளது. அதிலிருந்து வரும் நெருப்பு குழம்பு கடலில் கலக்கும்போது, நெருப்பு குழம்பில் உள்ள பச்சை கனிமங்கள் யாவும் கடற்கரையில் தங்கிவிடுகிறது. இதனால்தான் இந்த மண் பச்சை நிறத்தில், பாசி படிந்தது போல் இருக்கிறது.


 

ocean


 

மாலத்தீவுகளின் கடல்களில் தண்ணீர் கலங்கும்போது ஒரு வித நீல ஒளி ஏற்படும். இந்த ஒளிக்கு "உயிர் பொருள்கள் வெளியேற்றும் ஒளி" (bioluminescence) என்று பெயர்.  "பிளூரெஸ்ஸ்ண்ட் ப்ளங்க்டோன்" என்ற  கடல் உயிரி அதிகளவில் காணப்படுவதுதான் இதற்கு காரணம். கடல் அலைகளாலும், நீரை கலக்குவதாலும் இந்த உயிரிக்கு தொந்தரவு ஏற்படுவதால் இது நீல நிறமாக மாறுகிறது. இது கடலுக்கு ஒரு கவர்ச்சிகர தோற்றத்தை அளிக்கிறது. இரவில் இது நன்றாக தெரியும்.


 

ocean




இரவு, கடலுக்கு சென்றாலே குளிராகதான் இருக்கும் அப்படி உங்களுக்கு குளிர ஆரம்பித்துவிட்டால் நாம் செல்லவேண்டிய அடுத்த கடல் இதுதான். நியூசிலாந்து பெனிசுலாவில் இருக்கும் ஹாட் வாட்டர் பீச் இங்கு இயற்கையாகவே தண்ணீர் சூடாக இருக்கும். இங்குள்ள கடற்கரையில் சிறிது பள்ளம் தோண்டினால் போதும். அதிலிருந்து மிதமான சூட்டுடன் நீரூற்று வெளிவரும். இதில் சந்தோஷமாக இளம் சூட்டுடன் உங்கள் பொழுதை கழிக்கலாம்.

 

 


 

ocean


 

கடற்கரைனாலே ரொம்ப வெட்டவெளியாதான் இருக்கணுமா. வாங்க ஒரு மறைவான இடத்துக்கு போவோம். நாம் அடுத்து செல்ல இருப்பது தி ஹிடன் பீச். நிலத்துக்கடியில் இருக்கும் எரிமலை வெடிப்பால் இது உருவானது என்றும், 1900களில் இருந்த மெக்ஸிகோ அரசு குண்டு வெடிப்பு சோதனை நடத்தியபோது உருவானது என்றும் இரண்டு கருத்துகள் இது உருவாக காரணமாக கூறப்படுகிறது. இது தற்போது மிக பிரபலமான கடற்கரையாக உள்ளது. இங்கு வருபவர்களால் மீன்கள் அழிந்துவருவதால் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


 

ocean




இந்த கடல் கொஞ்சம் வித்தியாசமானது இத்தனை கடலுக்கு போனப்ப உங்களுக்கு மூழ்கிவிடுவோம்னு ஒரு பயம் இருந்திருக்கும்.  ஆனால்  இந்தக்கடல்ல நீங்களே வலுக்கட்டாயமா மூழ்கினாலும் மூழ்க முடியாது. இந்தக் கடலில் உப்பின் அளவு அதிகமாக உள்ளதால்தான் மிதக்க முடிகிறது. இதனால் இங்கு வாழும் உயிரிகளின் எண்ணிக்கையும் குறைவு. 

 

 

 

 

Next Story

'சிறிய அணு உலைகள்'; என்.எல்.சியின் திட்டத்தால் அதிர்ச்சி

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
'small nuclear reactors'; Shocked by NLC's plan

என்எல்சியில் சிறிய அளவிலான அணு உலைகளை அமைக்க திட்டம்தீட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான தகவலை என்.எல்.சி தலைவர் பிரசன்ன குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இந்திய அணுசக்தி கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சிறிய வகை அணு உலைகள் மூலம் 300 மெகாவாட்டுக்கும் குறைவான மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப் பட்டுள்ளதாகவும், 2070 ஆம் ஆண்டுக்குள் ஜீரோ உமிழ்வு இலக்கை  எட்ட சிறிய அளவிலான அணு உலைகள் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் என்எல்சி-ன் தலைவர் பிரசன்ன குமார் தெரிவித்துள்ளார்.

nn

நெய்வேலி கடலூர் பகுதியில் என்எல்சிக்கு நிலம் எடுத்துக் கொடுக்கப்பட்டது  பழுப்பு நிலக்கரி எடுப்பதற்காக தான். ஆனால் அந்த பகுதியில் 300 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கான சிறு அணு உலைகளை அமைப்போம் என்று சொல்வது மக்களுக்கு விரோதமானது. அணு உலையில் இருந்து வரக்கூடிய அணுக்கழிவுகளை கையாளக்கூடிய தொழில்நுட்பம் எந்த நாட்டிலும் கிடையாது. அப்படி சிறிய அணு உலைகள் அமைக்கப்பட்டால் அதன் கழிவுகளை என்ன செய்யப் போகிறார்கள். அதில் இருந்து வரும் கதிர்வீச்சுகள் எப்படி தடுக்கப்படும் என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளது. தமிழக அரசு மக்களின் நிலங்களை கையகப்படுத்தி கொடுத்தது எதற்காகவோ அந்த பயன்பாட்டிற்கு மட்டும் அதனை பயன்படுத்த வேண்டும். நினைத்தபடி எல்லாம் மாற்றிக் கொள்ளும் எந்த உரிமையும் என்எல்சி நிர்வாகத்திற்கு கிடையாது என பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

என்.எல்.சி சிறிய அளவிலான அணு உலைகளை அமைக்க இருப்பதாக வெளியான தகவல் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

'இலக்கு 2000... எட்டியது 0...'-பாமக ராமதாஸ் கண்டனம்

Published on 07/01/2024 | Edited on 07/01/2024

 

'Target 2000... Achieved 0...'-Bamaka Ramadoss condemned


'தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் தலா 50 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின் உற்பத்தி பூங்காக்கள் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இரு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில் இன்று வரை ஒரு மாவட்டத்தில் கூட சூரிய ஒளி பூங்கா அமைக்கப்படவில்லை. தமிழ்நாட்டை சூரிய ஒளி மின் உற்பத்தியில் முதன்மை மாநிலமாக மாற்ற அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது' என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக திகழும் தமிழ்நாட்டை சூரிய ஒளி  மின் உற்பத்தியில் முதன்மை மாநிலமாக மாற்ற வேண்டும் என்று -பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. 2021 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த திமுக, தமிழ்நாட்டில் 6000 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின் திட்டங்கள் அடுத்த இரு ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்; அவற்றில் 2000 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களை தமிழ்நாடு மின்சார வாரியமே நேரடியாக செயல் படுத்தும்; இதற்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது 50 மெகாவாட் திறன்  கொண்ட சூரிய ஒளி மின் உற்பத்தி பூங்கா ஒன்று அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அரசு அறிவித்தது.

ஆனால், அதன்பின் இரு ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையில், தமிழகத்தின் எந்த மாவட்டத்திலும் சூரியஒளி மின் உற்பத்தி பூங்கா அமைக்கப்படவில்லை. திருவாரூர் மாவட்டத்தில் தான் முதலாவது சூரிய ஒளி மின் உற்பத்தி பூங்கா அமைக்கப்படும் என்று அப்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்திருந்தார். ஆனால், அம்மாவட்டத்தில் அதற்கான தொடக்கக்கட்ட பணிகள் கூட நடைபெறவில்லை.

ஒரு மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி பூங்கா அமைக்க குறைந்தது 4 முதல் 5 ஏக்கர் நிலம் தேவை. 50 மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி பூங்கா அமைக்க 200 முதல் 250 ஏக்கர் நிலம் தேவைப்படும். ஆனால், கடந்த இரு ஆண்டுகளில் 100 ஏக்கர் நிலங்களை மட்டுமே திருவாரூர் மாவட்ட நிர்வாகம் அடையாளம் கண்டுள்ளது. மீதமுள்ள நிலங்களையும் அடையாளம் கண்டு அங்கு சூரியஒளி மின் உற்பத்தி  பூங்காவை அமைப்பது சாத்தியமற்ற ஒன்றாகும். திருவாரூர் மாவட்டத்தில் தான் இந்த நிலைமை என்று இல்லை. வடக்கில் திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி, தெற்கில் கன்னியாகுமரி வரை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சூரிய ஒளி மின் உற்பத்தி பூங்கா அமைக்கும் திட்டம் அறிவிப்பாகவே உள்ளது.

சூரியஒளி மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் படுதோல்வி அடைந்து விட்டது என்பது தான் உண்மை. இந்தியாவில் ராஜஸ்தானுக்கு இணையாக தமிழ்நாட்டிலும் அனைத்து மாவட்டங்களிலும் சூரிய ஒளி ஆதாரம் அளவுக்கு அதிகமாக உள்ளது. ஆனால், அந்த ஆதாரத்தை பயன்படுத்தி ராஜஸ்தான் மாநிலம் 18 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு சூரிய ஒளி மின் உற்பத்தி  திட்டங்களை செயல்படுத்தியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் சூரிய ஒளி மின் உற்பத்தித் திறன் அதில் மூன்றில் ஒரு பங்காக, அதாவது 6539 மெகாவாட் என்ற அளவிலேயே உள்ளது. சூரிய ஒளி மின் உற்பத்தியில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக  உருவெடுத்திருக்க வேண்டிய தமிழ்நாடு, இப்போது ராஜஸ்தான், குஜராத், கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் சூரிய ஒளி மின் உற்பத்தி  திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு தொலைநோக்குப் பார்வை இல்லை என்பது தான்.

2030 ஆம் ஆண்டுக்குள் 20,000 மெகாவாட் அளவுக்கு சூரிய ஒளி மின் திட்டங்கள் அமைக்கப்படும்; அதற்காக ரூ.70,000 கோடி செலவிடப்படும் என்றும் 2021 ஆம் ஆண்டில் தமிழக அரசு அறிவித்தது. ஆனால், இந்தத் திட்டமும் அறிவிப்புடன் தான் நிற்கிறது. இத்திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசின் சார்பில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதுவுமே முன்னெடுக்கப்படவில்லை என்பது தான் உண்மையாகும்.

உலகப் போர்களை விட மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் நிகழ்வாக காலநிலை மாற்றம் உருவாகி வருகிறது. அதனால் ஏற்படக்கூடிய பேரழிவுகளுக்கான முன்னோட்டங்கள் உலகம் முழுவதும் நிகழ்ந்து வருகின்றன. காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளை தடுப்பதற்காக உலகம் முழுவதும் பரிந்துரைக்கப்படும் முதன்மைத் தீர்வு நிலக்கரியை எரிபொருளாகக் கொண்ட அனல் மின்நிலையங்களை மூடி விட்டு, தூய்மை மின்சாரத்தை தயாரிக்கும் சூரிய ஒளி மின்திட்டம், காற்றாலை மின்திட்டம் ஆகியவற்றை செயல்படுத்துவது தான். புவி வெப்பமயமாதலின் தீய விளைவுகளைக் கட்டுப்படுத்த 2040 ஆம் ஆண்டிற்குள் கரிமச் சமநிலை (Zero Corban Emission) கொண்ட மாநிலமாக தமிழ்நாடு மாற்றப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அதற்காக சூரிய ஒளி மின்திட்டங்கள், காற்றாலை மின்திட்டங்கள் ஆகியவற்றை அதிகரிக்க வேண்டும்.

எனவே, தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்ட சூரிய ஒளி மின்திட்டங்களின் செயல்பாட்டை அரசு விரைவுபடுத்த வேண்டும். அதற்காக சூரிய ஒளி, காற்றாலை உள்ளிட்ட மரபுசாரா எரிசக்தித் திட்டங்களை செயல்படுத்த  வசதியாக புதிய எரிசக்தித் துறை என்ற பெயரில் தனி அமைச்சகத்தை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.