Skip to main content

ஸ்டெர்லைட் : சரியும் பங்குகள், சரி செய்யும் சர்ச்சை தமிழர்?

Published on 25/05/2018 | Edited on 28/05/2018

வேதாந்தா நிறுவனம் இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தின் உரிமையாளர் இந்தியாவின் குஜராத் மாநிலத்தை சேர்ந்த பானியா வம்சத்தை சேர்ந்த அனில்அகர்வால். மலைகளில் இருந்து தாதுக்களை வெட்டியெடுத்து தங்கம், ஈயம், இரும்பு, தாமிரம், செம்பு போன்றவையும், பூமிக்கு கீழிருந்து கச்சா எண்ணெய் எடுத்து பெட்ரோல், டீசல், ஒயிட் பெட்ரோல், மண்ணெண்ணய் தயாரிப்பது, மின்சார உற்பத்தி என பல தொழில்கள் செய்கின்றன இந்நிறுவனம். இதற்காக உலகின் பல நாடுகளில் தொழிற்சாலை வைத்துள்ளது. மேற்கண்ட தொழில்களை சார்ந்த உபதொழில்களுக்காக துணை நிறுவனங்களையும் தொடங்கி நடத்துகிறது. அதில் ஒன்றுதான் தூத்துக்குடியில் இயங்கும் ஸ்டெர்லைட் ஆலை. 

 

sterlite


 

 

 

உலகம் முழுவதும் நேரடியாக இந்த நிறுவனத்தில் சுமார் 35 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இந்த நிறுவனத்தின் ஆண்டு வருவாய் சுமார் 12 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் என்கிறது அந்நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை. (12 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரை இன்றைய இந்தியா ரூபாய் மதிப்பில் பெருக்கிக்கொள்ளுங்கள்) 2003ல் லண்டன் பங்கு சந்தையில் இந்த நிறுவனம் பட்டியலிடப்பட்டுள்ளது.

1988ல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தொடங்க இந்தியாவில் பதிவு செய்த இந்நிறுவனத்துக்கான அனுமதியை மத்தியில் காங்கிரஸ் அரசு வழங்கியது. இந்தியாவில் பலயிடங்களில் விரட்டியடிக்கப்பட்ட ஸ்டெர்லைட் நிறுவனத்தை தமிழகத்தில் தொடங்க 1993ல் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணியில் இருந்த தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா அனுமதி வழங்கினார். அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டிடங்கள் கட்டப்பட்டு 1996ல் உற்பத்தியை தொடங்கியது அந்நிறுவனம். இந்நிறுவனத்தின் பங்குகள் மும்பை பங்கு சந்தையிலும், அமெரிக்காவின் பங்கு சந்தையிலும் பட்டியலிடப்பட்டுள்ளன. 


 

sterlite


 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் தொடக்கம் முதல் ஏற்பட்ட விபத்துகளால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டன, மறைமுகமாக பலவிதமான நோய்கள் தாக்கின. இதனால் இந்நிறுவனத்தை மூட வேண்டும் ஆரம்பம் முதலே மக்கள் போராட்டங்கள்                    நடத்திவருகின்றனர். தற்போது அப்போராட்டங்கள் உச்சகட்டத்தில் வந்து போராட்டத்தை கலைக்கிறேன் என காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியதன் விளைவாக 13 பொதுமக்கள் உயிர்கள் அரச பயங்கரவாதத்துக்கு பலியாகியுள்ளன.

இப்படி அரசும், அரசியல்கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு வேதாந்தா நிறுவனத்துக்கு சேவை செய்வதன் நோக்கம்மென்ன என ஆராய்ந்தபோது, தேசிய அளவிலும், மாநில அளவிலும் அரசியல் கட்சிகளுக்கு அதிக நன்கொடை தரும் கட்சியாக வேதாந்தா நிறுவனம் உள்ளது. இந்த தொகைக்காக ஆட்சியில் உள்ள, எதிர்கட்சி வரிசையில் உள்ள, சட்டமன்ற, நாடாளன்றத்தல் ஒருநாளாவுது உறுப்பினராக உட்கார்ந்துவிட மாட்டோமா என ஏங்கும் கட்சிகள், லட்டர் பேடு அமைப்புகள் வரை அனைத்துக்கும் தகுதிக்கு ஏற்றாற்போல் நக்கொடை வழங்குகிறது இந்நிறுவனம். இதுதான் இந்நிறுவனத்துக்கு எதிராக அரசியல் கட்சிகளை பதுங்க வைக்கிறது.

13 உயிர்களை பலிக்கொண்ட பின்பாவுது மக்கள் பக்கம் நிற்கலாம்மே இந்த கட்சிகள் என நினைத்தால் அங்குதான் எதிர்காலம் கண் முன் வந்து நிற்கிறது இந்த கட்சிகளுக்கு. இது பொன்முட்டையிடும் வாத்து ஒரேயடியாக அறுத்துவிட வேண்டாம் என்கிற ஆசையில் பாலுக்கும் காவல், பூனைக்கும் நண்பன் என்கிற கதையாக நடிக்கிறார்கள். 

இவ்வளவு நக்கொடை மற்றும் செலவு செய்து நிறுவனத்தை நடத்த வேண்டும்மா வேதாந்தா குரூப் என்றால் நடத்தியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. உலக பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியிலிருந்து மெல்ல எழ துடிக்கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களும் வீழ்ச்சியில் இருந்து எழ முயல்கின்றன. அப்படி எழ துடிக்கும் நிறுவனங்களில் ஒன்று வேதாந்தா குழுமம். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதை நிரந்தரமாக மூடிவிட்டால் இரண்டு பெரிய சுரங்கங்களை அது மூட வேண்டியிருக்கும். இதனால் நிறுவனம் படுபாதாளத்துக்கு போய்விடும் என்கிறார்கள் பங்குசந்தை நிபுணர்கள். 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடியிருப்பதால் நிறுவனங்களின் தரநிர்ணயம் மற்றும் முதலீட்டு கடன் நிறுவனமான அமெரிக்காவில் இயங்கும் கோல்டுமென் சாக்ஸ் என்கிற முதலீட்டு வங்கி, வேதாந்தா நிறுவனத்தின் பங்குகளை தகுதி குறைப்பு செய்துள்ளது. இதனால் அந்நிறுவனத்தின் பங்குகள் பெரிய அளவில் அமெரிக்காவிலும், லண்டனிலும் குறையவங்கியுள்ளன. இந்தியாவில் மும்பை பங்கு சந்தையில் அந்நிறுவனத்தின் பங்குகள் இன்று (25.5.18 ) 243 ரூபாயாக உள்ளது. இதுவே கடந்த மே 3ந்தேதி 294 ரூபாயாக இருந்தது. இப்படி பங்குவிலை குறைவினால் அதிர்ச்சியான வேதாந்தா நிறுவனம், தூத்துக்குடியில் ஒரு குழு பொய்யாக போராடுகிறது, போராட்டம் முடிவுக்கு வந்து ஆலையை திறப்போம் என கடந்த மாதம்மே அறிக்கை விட்டது.

போராட்டத்துக்கு, சட்டத்துக்கு பயந்து தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடினால் நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மை சரிந்துவிடும். இதனால் முதலீட்டாளர்கள் நிறுவனத்தின் மீதான பயத்தால் தங்களிடம்முள்ள பங்குகளை விற்க துவங்குவார்கள் இதனால் அதன் பங்குகள் இன்னும் விலை குறையும். நிறுவனத்தின் வீழ்ச்சி அதிகரிக்கும் இதனால் வேதாந்தாவுக்கு கடன் வழங்கும் சர்வதேச நிதி அமைப்புகள் கடன் வழங்காமல் நிறுத்தும், இதனால் நிறுவனம் பலப்பல பொருளாதார நெருக்கடிகளை சந்திக்கும். இதனாலயே இந்திய மேல்மட்ட அரசியல் அதிகார அமைப்பின் துணையோடு தமிழகத்தில் தனது நிறுவனத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களை நசுக்கி நீதிமன்றம் மூலம் தொழிற்சாலையை திறந்து நடத்த முடிவு செய்துயிருக்கும் என்கிறார்கள் இந்நிறுவனத்தை பற்றி அறிந்தவர்கள்.

 

sterlite


 

அதோடு நிறுவனத்துக்கு எதிரான போராட்டங்களை எப்படிப்பட்ட வழியிலும் ஒடுக்கவும், மேல்மட்ட அரசியல் அதிகார அமைப்போடு பேச நிறுவனத்தின் சி.இ.ஓவாக தமிழர் ஒருவரை கடந்த ஏப்ரல் மாதம் கொண்டு வந்துள்ளார் என்கிறார்கள் வேதாந்தா நிறுவன பங்குதாரர்கள். வெங்கட் என்கிற சீனுவாச வெங்கடகிருஷ்ணன் என்பவர் தான் அவர். சென்னையில் படித்து ஆடிட்டரானவர். இந்தியா, ஆப்பரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. உலகின் மிகப்பெரிய மூன்றாவது தங்க உற்பத்தி நிறுவனமான ஆப்ரிக்காவின் ஆங்கிலோ கோல்டு அசந்தி நிறுவனத்தில் முதன்மை தலைமை அதிகாரியாக பணியாற்றியவர் இவர் என்கிறது இவரது பணி பின்னணி. இவர் அந்த நிறுவனத்தில் பணியாற்றியபோது, நிறுவனத்திற்க்கு எதிராக நடந்த தொழிலாளர் போராட்டத்தை நசுக்க அரசாங்கத்தின் உதவியை நாடியபோது, 32 உயிர்களை பலிவாங்கியது அந்நாட்டு அரசப்படை என்கிறது. இவர்தான் தற்போது வேதாந்தா நிறுவனத்தின் சிஇஓவாக நியமிக்கப்பட்டுள்ளார். பதவியேற்கும் முன்பே நிறுவனத்துக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் 13 உயிர் பலியை வாங்கியுள்ளது.

இந்த கருத்துக்களை மெய்ப்பிப்பது போல, அந்நிறுவனத்தின் உரிமையாளர் அனில்அகர்வால் வெளியிட்டுள்ள டுவிட்டர் கருத்து அதைத்தான் மறைமுகமாக கூறுகிறது.

காற்றுள்ள பந்து ஒவ்வொரு முறை நீருக்குள் எவ்வளவு வேகமாக அழுத்துகிறோம்மோ, அதைவிட பன்மடங்கு வேகத்தில் மேலே வரும் என்பது அறிவியல் விதி. போராட்டத்தை நசுக்க ஒவ்வொரு முறை எத்தனை போராளிகளை பலி வாங்குகிறார்களோ அதை விட பன்மடங்கு போராளிகள் உருவாகுவார்கள் என்பது மக்கள் மன்ற விதி. நடவடிக்கை எடுக்கும் முன் அரசாங்கம் அதை மறக்காமல் இருந்தால் சரி.

 


 

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Next Story

“உச்சநீதிமன்றத்தில் உரிய நீதி கிடைத்திருக்கிறது” - வைகோ நெகிழ்ச்சி!

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
"Justice has been received in the Supreme Court" - Vaiko

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால் அந்தப் பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகப் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, கடந்த 2018ம் ஆண்டு மே 22ம் நாள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என 13 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் பலத்த காயங்களை அடைந்தனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து, ஸ்டெர்லைட் மீதான தடை உத்தரவை நீக்கி மீண்டும் திறக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று (29.02.2024) நடைபெற்றது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “ஸ்டெர்லைட் ஆலை 20 ஆண்டுகளாக உரிய அனுமதி மற்றும் உரிமங்களை புதுப்பிக்காமல் செயல்பட்டது. விதிகளை மீறி செயல்படுவதை வாடிக்கையாக வைத்திருந்தது. 9 ஆண்டுகளாக உரிய அனுமதியின்றி கழிவுகளை கொட்டி வைத்திருந்தது” எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சார்பில் வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன் ஆஜராகி வாதிடுகையில், “மக்கள் பயன்படுத்தும் நீரிலும் ஸ்டெர்லைட் கழிவுகள் கலந்துள்ளது உறுதியாகி உள்ளது. கொட்டப்பட்ட காப்பர் ஸ்லாக்குகளில் அதிக அளவிலான ஆர்சனிக் அளவு உள்ளதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. 20 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலை மாசு ஏற்படுத்தியதால் 100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. ஆலை கழிவுகளால் தூத்துக்குடியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜிப்சம் சாம்பல் கழிவு, கருப்பு வண்ணத்திலான ஸ்லாக்குகள் நீதிபதிகளின் பார்வைக்கும் சமர்ப்பிக்கப்பட்டன.

இதனைப் பதிவு செய்து கொண்ட தலைமை நீதிபதி, “ஸ்டெர்லைட் ஆலையில் விதிமீறல்கள் பல இருப்பதால் தான் தமிழக அரசும்,  சென்னை உயர்நீதிமன்றமும் உரிய முடிவு எடுத்துள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பது மாநில அரசின் முக்கியமான வேலைகளில் ஒன்று. ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பாக கையாண்டுள்ளது. ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்ததில் வரம்பு மீறல் இருந்ததாக கருதவில்லை” எனத் தெரிவித்தார். இதனையடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அந்த வகையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை 1994 ஆம் ஆண்டு ஜனவரி 1இல் தொடங்கப்பட்டது. சுற்றுச்சூழலை நாசப்படுத்தியும், தூத்துக்குடி மக்களின் உடல் ஆரோக்கியத்தையும் கெடுத்ததோடு, வேளாண் நிலங்களையும் பாழ்படுத்திய ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூட வேண்டும் என்று 1996 ஆம் ஆண்டில் இருந்து மதிமுக மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் தொடர்ந்து போராடி வந்தது. இறுதியாக உச்சநீதிமன்றத்தில் நீதி அரசர்கள் ரோகிங்டன் நாரிமன், நவீன் சின்கா அமர்வில் ஸ்டெர்லைட் வழக்கு இறுதி விசாரணை நடைபெற்றது. அப்போது 2019 பிப்ரவரி 07 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று 40 நிமிடங்கள் எனது வாதத்தை ஆணித்தரமாக எடுத்து வைத்தேன். 2019 பிப்ரவரி 18 அன்று உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு தீர்ப்பு அளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் மனுத் தாக்கல் செய்தபோது சென்னை உயர்நீதிமன்றம் செல்லுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் 2020 ஆகஸ்ட் 18 ஆம் தேதி நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அமர்வு நாசக்கார ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூடுமாறு தீர்ப்பளித்தது.

"Justice has been received in the Supreme Court" - Vaiko

இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடிவுற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று (29.02.2024) ஸ்டெர்லைட் நச்சு ஆலையைத் திறக்க அனுமதி கோரிய வேதாந்தா குழுமத்தின் மனுவைத் தள்ளுபடி செய்தது வரவேற்கத்தக்கது. மேலும், ஸ்டெர்லைட் ஆலை வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பாகக் கையாண்டதாகப் பாராட்டு தெரிவித்து இருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் ஸ்டெர்லைட் நச்சு ஆலை நிரந்தரமாக மூடப்படுவது உறுதியாகிவிட்டது. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு போராடிய மக்களின் போராட்டம் வெற்றி பெற்று உள்ளது. இது மதிமுக ஸ்டெர்லைட் ஆலையை மூட மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் 28 ஆண்டுகளாகப் போராடியதற்குக் கிடைத்த வெற்றி ஆகும். ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராகத் தூத்துக்குடி மக்கள் போராடியபோது காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டு 13 அப்பாவி உயிர்கள் பறிபோனதற்கு உச்சநீதிமன்றத்தில் உரிய நீதி கிடைத்திருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.