Skip to main content

யார் சொன்னது ஸ்டெர்லைட்டிற்கும், நிபா வைரஸிற்கும் தொடர்பில்லை என்று???

Published on 25/05/2018 | Edited on 25/05/2018

ஸ்டெர்லைட் ஆலைக்கும், நிபா வைரஸிற்கும் தொடர்பு இருக்கிறது என்பது மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுகிற வேலை என்று பலர் நினைக்கலாம். மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் நேரடியாக முடிச்சு போடமுடியாது. ஆனால் இந்த இரண்டும் இணைந்திருப்பது ஒரு உடலில்தான் என்பதை மனதில் வைத்துக்கொள்ளலாம். அதுபோலத்தான் ஸ்டெர்லைட்டும், நிபா வைரஸும், சுற்றுச்சூழல் என்ற அடிப்படையில் இரண்டும் ஒன்றிணைகிறது.

 

sterlite nipha


 

 

 

ஸ்டெர்லைட் போன்ற ஆலைகள் மரங்கள் வெட்டப்பட்டு, காடுகள் அழிக்கப்பட்டு, உருவாக்கப்படுகின்றன. இந்த ஆலைகள் நிலம், நீர்நிலைகள், காற்று ஆகியவற்றை மாசுபடுத்துகின்றன. இதனால், இதுபோன்ற ஆலைகள் முற்றிலும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானதுதான். அப்படி சுற்றுச்சூழல் கெட்டுக்கிடக்கிற சூழலில்தான் நிபா வைரஸ் அதிகம் பரவுகிறது. நாம் இன்று நகரமயமாக்கத்தை நோக்கி நகர்ந்துகொண்டு இயற்கையை அழித்துக்கொண்டிருக்கிறோம், நிலம், நீர், காற்று என்று எதையும் கருத்தில்கொள்ளாமல். பழந்திண்ணி வௌவால்களிலிருந்துதான் நிபா வைரஸ் பரவுகிறது என்பதற்காக நாம் முழுவதுமாக வௌவால்களின் மீது மட்டும் பழி சுமத்திவிட முடியாது. பழந்திண்ணி வௌவால்களின் முக்கிய உணவு பழங்கள். பழ மரங்கள் உள்ளிட்ட அனைத்து மரங்களும் அழிக்கப்படுவதால் வௌவால்கள் உணவின்றி நோய்எதிர்ப்பு சக்தியற்றவையாக  மாறிவிடுகின்றன. இதனால் வௌவால்களுக்குள் இயற்கையாகவே  இருக்கும் நிபா வைரஸ் பெருக ஆரம்பிக்கிறது. அவைகளின் வாய், எச்சில், கழிவு என அனைத்திலும் இந்த வைரஸ் நிறைந்திருப்பதால் வௌவால்கள் செல்லும் அனைத்து இடங்களிலும் இந்த வைரஸ் பரவும். இதில் என்ன கொடுமை என்றால் மே மாதத்தில்தான் வௌவால்கள் அதிகமாக பறக்கின்றன. இதனால்தான் நிபா வைரஸும் அதிகம் பரவுகின்றன. நிபா வைரஸ் பரவிய இடங்களே அதற்கு சாட்சி. அதுமட்டுமல்ல இந்தமாதிரியான ஆலைகளால் புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள்கூட அனைவருக்கும் வந்துவிடுகிறது இதற்கு தூத்துக்குடியிலேயே பல சாட்சியங்கள் உண்டு.

 

 

சுற்றுச்சூழலை பொறுத்தவரையில் மனிதன் முதன்முதலாக சக்கரம் கண்டுபிடித்ததில் இருந்தே அதற்கு அழிவு தொடங்கிவிட்டது. இன்று நாம் அதை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச்சென்றுகொண்டிருக்கிறோம். நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம் நாடுகள், மாநில எல்லைகள் போன்று சுற்றுச்சூழல் மாசும், நோய்களும் எல்லைக்குள் அடங்கிவிடும் என்று... ஆனால் இவையனைத்திற்கும் பூமி என்ற ஒரு எல்லைதான் உண்டு என்பதை யாரும் மறக்க வேண்டாம்.

 

 

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Next Story

இரவில் சீறிப்பாய்ந்த சொகுசு கார்; போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
police confiscated liquor  who were smuggled in luxury car in Thoothukudi

இந்தியாவில் லோக்சபா தேர்தல் வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், தமிழ்நாடு முழுக்க ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் அனைத்து கட்சிகளுமே ஒரு வழியாக அதனதன் கூட்டணிகளை உறுதி செய்து, வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன.

இது ஒரு புறமிருக்க, தேர்தல் தொடங்கிய காரணத்தால், தேர்தல் தொடர்பான நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். இந்த நடத்தை விதிகள் தேர்தல் ரிசல்ட் வெளியாகும் வரை அமலில் இருக்கும். முறைகேடுகள் நடைபெறுவதை தடுத்து அமைதியான முறையில் தேர்தல் நடத்துவதற்காகவே இந்த நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஆலங்கிணறு விலக்கு பகுதியில் வாகன சோதனை நடைபெற்றுள்ளது. சாத்தான்குளம் உதவி காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் இந்த வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரவு சுமார் 8.30 மணியளவில் வெள்ளை நிற சொகுசு கார் ஒன்று அதிவேகமாக வந்துள்ளது. அந்தக் காரை கவனித்த போலீசார், உடனே காரை நிறுத்தும்படி சைகை காண்பித்துள்ளனர். ஆனாலும் தொடர்ந்து அந்தக் கார் வேகமாக வந்துள்ளது. இதனால் கடுப்பான போலீசார், உடனே அந்தக் காரை வழிமறித்து நிறுத்தியுள்ளனர். அதன் பின்னர் அந்தக் கார் நிறுத்தப்பட்டுள்ளது. அப்போது, அந்தக் காரில் தேர்தல் செலவிற்காக பணம் எடுத்துச் செல்லப்படுகிறதா?... என்ற கோணத்தில் காரை சோதனை செய்துள்ளனர்.

அப்போது அந்த சொகுசு காருக்குள் விலை உயர்ந்த 12 பீர் பாட்டில்கள் இருந்துள்ளது. ஆனால், அந்த வகை மதுபாட்டில் அரசு மதுபான கடைகளில் கிடைக்காது என சொல்லப்படுகிறது. இதனால், இது குறித்து ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை செய்துள்ளனர். ஆனால், ஓட்டுநர் எந்த பதிலும் கூறவில்லை என சொல்லப்படுகிறது. அதன் பின்னர், அதே காருக்குள் பெரிய பை ஒன்று இருந்துள்ளது. அந்தப் பையில் என்ன இருக்கிறது என சோதனையிட்ட போலீசாருக்கு மேலும் பெரும் அதிர்ச்சியாகியுள்ளது.

காரணம் அந்தப் பையில் மேலும் சில மதுபாட்டில்கள் இருந்துள்ளது. இவ்வாறு ஒரே நேரத்தில் அதிக விலைக்கு விற்கப்படும் மதுபான பாட்டில்களை வைத்திருந்தது குறித்து ஓட்டுநரிடம் விசாரணை செய்துள்ளனர். விசாரணையில் கார் ஓட்டுனர், நாகர்கோவிலைச் சேர்ந்த வினோத்குமாரின் மகன் குமார் என்பது தெரியவந்துள்ளது. ஆனால், அந்த விலை உயர்வான மதுபாட்டில்கள் எந்த இடத்தில் வாங்கப்பட்டது என வாய்த்திறக்கவில்லை.

அதே சமயத்தில் இந்த மது பாட்டில்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும், அரசியல் கட்சி நிர்வாகிகளுக்காக வாங்கி வரப்பட்டதா?... என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து, அந்த ஓட்டுநரை உடனடியாக போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்தக் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு காரையும் பறிமுதல் செய்துள்ளனர். சாத்தான்குளம் பகுதியில், மது பாட்டிலோடு வந்த சொகுசு கார் ஒன்று, போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.