Skip to main content

பா.ஜ.க. அமைச்சர்களின் அறிவியல் லெவல்!

Published on 17/03/2018 | Edited on 17/03/2018

மத்திய அறிவியல் துறை அமைச்சரே பயங்கர பொய்யராக இருந்தால் நாட்டின் அறிவியல் வளர்ச்சி எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.

 

மத்திய அறிவியல் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மணிப்பூர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 105ஆவது அறிவியல் மாநாட்டில் பேசும்போது கொஞ்சம்கூட ஆதாரமற்ற பொய்யை தெரிவித்திருக்கிறார்.

 

இத்தனைக்கும் இந்த மாநாட்டை பிரதமர் மோடிதான் தொடங்கி வைத்தார். அவர் தொடங்கி வைத்து பேசி அமர்ந்தபிறகு, ஹர்ஷ்வர்தன் பேசினார்.

 

Harsh

 

அப்போது, நோபல் பரிசுபெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் இ=எம்சி2 (E=mc2) என்ற புகழ்பெற்ற கோட்பாட்டைக் காட்டிலும், வேதங்கள் உயர்ந்தவை என்று, மறைந்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் கூறியிருப்பதாக சொன்னார்.

 

ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் இறைமறுப்பாளராக வாழ்ந்தவர். அவர் எப்படி வேதங்களை உயர்ந்தவை என்று சொல்லியிருக்க முடியும் என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்தது. ஆனால், பேசுவது அமைச்சராயிற்றே. யார் அதை மறுத்துப் பேச முடியும். பிரதமர் மோடியை விடுங்க. அவர் ஏற்கெனவே, உலகின் முதல் பிளாஸ்டிக் சர்ஜரி இந்தியாவில் பிள்ளையாருக்குத்தான் செய்யப்பட்டது என்று கூறி அதிரவைத்தவர். அவருடைய அறிவியல் அறிவு பற்றி எல்லோருக்கும் தெரியும். அறிவியல் மாநாட்டுக்கு வந்திருந்த விஞ்ஞானிகளும் மவுன சாட்சிகளாக இருந்திருக்கிறார்கள் என்பதுதான் வேதனை.

 

E=mc2 என்பது ஆற்றல்=நிறைX(299,792,458 மீ/வி)2 என்று 1905 ஆம் ஆண்டு இயற்பியல் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கூறினார். அவருடைய சார்பியல் கோட்பாட்டின் சிறப்பம்சமாக இது கருதப்படுகிறது.

 

அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஒரு மருத்துவர். அவர் தனது பேச்சில், எந்த வேதம் ஐன்ஸ்டீன் கோட்பாட்டைவிட சிறந்தது என்று குறிப்பிட்டு சொல்லவில்லை. அல்லது, ஹாக்கிங்ஸ் எந்த இடத்தில் இப்படி கூறியிருக்கிறார் என்றும் சொல்லவில்லை.

 

Harsh

 

இதைப்பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, ‘மீடியா ஆட்களே இதைக் கண்டுபிடித்துப் போடுங்கள். அதை உங்கள் வேலையாகக்கூட வைத்துக் கொள்ளுங்கள்’ என்றார். அப்படி உங்களால் கண்டுபிடிக்க முடியாவிட்டால் என்னிடம் உள்ள தகவலைத் தருகிறேன் என்றும் கூறினார்.

 

அமைச்சரின் இந்த பேச்சு உண்மை என்பதற்கு ஆதாரமாக, ஹாக்கிங் எந்த இடத்திலும் இப்படி பேசியதாக ஆவணங்கள் இல்லை. ஆனால், ஹாக்கிங் ஜோதிடத்தை ஏற்கமுடியாது என்று கூறியதற்கு ஆதாரம் இருக்கிறது என்று தி ஹிண்டு ஆங்கில நாளிதழ் கூறியிருக்கிறது.

 

2001 ஆம் ஆண்டு, டெல்லியில் நடந்த ஐன்ஸ்டீன் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஹாக்கிங் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, அவர், ஜோதிடத்தை விஞ்ஞானிகள் நம்பாததற்கு காரணம், விஞ்ஞானிகளின் கோட்பாடுகளைப் போல அது சோதனைகளால் நிரூபிக்கப்படவில்லை என்று ஹாக்கிங் கூறினார். இதற்கான ஆதாரம் ஹிண்டு பத்திரிகையிடம் இருக்கிறது என்று அந்த பத்திரிகையே கூறியிருக்கிறது.

 

அறிவியல் மாநாடுகளில் இப்படிப்பட்ட கேலிக்குரிய கருத்துகள் பேசப்படுவது இது முதன்முறை அல்ல. 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற அறிவியல் மாநாட்டில், வேதங்களிலேயே ஆகாய விமானங்கள் பற்றி கூறப்பட்டிருப்பதாக பேசியிருக்கிறார்கள். நவீன வானவியலை வேதகால கற்பனைகளுடன் ஒப்பிடுவதை கிண்டல் செய்தாலும், அது தொடரத்தான் செய்கிறது.

 

ஹர்ஷ்வர்தனின் இந்தக் கருத்து முட்டாள்தனமானது என்று டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிவியலாளர் மயன்க் வாஹியா கூறியிருக்கிறார்.

 

ஹர்ஷ்வர்தன் எதன் அடிப்படையில் பேசியிருக்கிறார் என்றும் தி ஹிண்டு நாளிதழ் தேடிக்கண்டுபிடித்து செய்தியாக்கி இருக்கிறது.

 

அதாவது, ஹர்ஷ்வர்தன் பொறுப்பாக இருக்கும் அமைச்சரவைக்கு சொந்தமான முகநூல் பக்கத்தில், டாக்டர் சிவராம்பாபு என்பவர் எழுதிய புத்தகத்தில் ஐன்ஸ்டீன் கோட்பாட்டைக் காட்டிலும் வேதங்கள் உயர்ந்தவை என்று கூறியிருப்பதாக ஒரு பதிவு இருக்கிறது. அதை வைத்தே மத்திய அமைச்சராக இருப்பவர் பேசியிருக்கிறார். இதுதான் பாஜக அமைச்சர்களின் அறிவியல் லெவல். 

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.