Skip to main content

சர்தார்ஜிகள் சூழ் டெல்லி! என்ன நடக்கிறது தலைநகரில்..?

Published on 30/11/2020 | Edited on 30/11/2020

 

delhi chalo

 

'டெல்லி சலோ' என்கிற விவசாயிகளின் போராட்டமானது இன்றுடன் ஐந்தாவது நாளை எட்டியுள்ளது. பஞ்சாபிலிருந்து சிறு சிறு விவசாயச் சங்கங்களைச் சேர்ந்த விவாசாயிகளுடன் டெல்லியை நோக்கிய தங்களின் டிராக்டர், பைக், லாரிகளில் பேரணியைத் தொடங்கியவர்களை ஹரியானா எல்லைப் பகுதியில் நிறுத்திய போலீஸார், அவர்களை தடுத்து நிறுத்த தடியடி போன்ற வன்முறைகளைக் கையாண்டனர். பொதுவாகவே பலசாலிகள், எதற்கும் துணிந்தவர்கள் என்று சொல்லப்படும் சர்தார்ஜிகளோ, தடைகளையும், இரும்பு வேலிகளையும் உடைத்தெறிந்து டெல்லி எல்லையில் கால்பதித்தனர். விவசாயிகள் அதிகமானோர் டெல்லியில் கூடுவார்கள் என்று அஞ்சிய மத்திய அரசாங்கமோ டெல்லிக்கு வர இருந்த ரயில்களை அப்படியே பாதிவழியில் நிறுத்தியது. சில ரயில்களை ரத்து செய்தும் விட்டது. இருந்தபோதிலும் டெல்லிக்குள் நுழைய இருக்கும் சாலை எல்லையைப் பயன்படுத்தி விவசாயிகள் படையெடுத்து வந்து குவிகின்றனர்.

 

ஹரியானா, ராஜஸ்தான், உ.பி-யிலிருந்து விவசாயிகள் அணிதிரண்டு வந்திருந்தாலும் பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகள்தான் அதிகமாக இதில் கலந்துகொண்டுள்ளனர். இரண்டாம் நாள், ஹரியானா வழியாக டெல்லியை அடைந்த விவசாயிகளை தண்ணீர் பீய்ச்சியும், கண்ணீர்ப் புகைக் குண்டு வீசியும், லத்தி ஆகிய ஆயுதங்களுடனும் போலீஸ், இராணுவ வீரர்கள் வரவேற்றனர். எங்கு பார்த்தாலும் தடைக்கற்கள், இரும்பு முள் வேலிகளை வைத்து எல்லைப் பகுதிகளை அடைத்திருந்தனர். ஆனால், கூட்டம் கூட்டமாக வந்த விவசாயிகளோ, போலீஸிடம் மல்லுக்கட்டி, தடைக்குப் பயன்படுத்திய வேலிகளை மீறி உள்ளே சென்றுகொண்டே இருந்தனர். இதனால், டெல்லி முழுவதும் பதற்றச் சூழலாகவே இதுவரை இருக்கிறது. 

 

டெல்லியைச் சுற்றி, நெடுஞ்சாலைகளில் தேனி கூட்டத்தைப் போல விவசாயிகள் கொத்துக் கொத்தாக நிற்கின்றனர். ஒரு பக்கம் சிவப்புக் கொடிகள் பிடித்துக் கூட்டம் இருக்கிறது. மற்றொரு பக்கம் பச்சை, வேறொரு பக்கம் மஞ்சள் என்று கலர்கலராகக் கொடிகள் அசைந்த வண்ணம் காட்சியளிக்கிறது இந்தியத் தலைநகரின் எல்லை. அதேபோல பெரும்பாலும் சர்தார்ஜிகள் இந்த விவசாயப் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பல நிறங்களில் டர்பன்கள் உலாவுவதைப் பார்க்கும்போது புரிகிறது. சீக்கியர்கள் அதிகம் கலந்துகொண்டிருப்பதால், சில வலதுசாரி அமைப்புகள் தங்கள் பங்குக்கு "டெல்லியைச் சுற்றி காளிஸ்தான் ஆதரவு பெற்றவர்கள் இப்போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர், இதனால் ஆபத்து அதிகம்" என்று சமூக வலைதளங்களில் பதிவுகளைப் பறக்கவிடத் தொடங்கிவிட்டனர்.  

 

ஏற்கனவே டெல்லி மக்கள் நச்சுப் புகை, டிராஃபிக், கரோனா என்று புலம்பிக்கொண்டிருக்கும் நிலையில், விவசாயிகளின் இந்த வலுவான போராட்டத்தால் டெல்லிவாழ் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி மக்கள் அவர்கள் பக்கம் உள்ள நியாத்தைச் சொல்லி புலம்பி வருகின்றனர். இந்தப் பக்கம் விவசாயிகள் தங்களின் பக்கம் நியாயத்தைக் கூறி பேரணியாகத் திரண்டு வருகின்றனர். அதனால் இதற்கு விரைவில் டெல்லியில் இருக்கும் பிரதமர் அலுவலகம்தான் எட்டிப் பார்த்து நியாயம் தரவேண்டும். வழக்கமான விவசாயிகளின் போராட்டம் போல இருந்துவிடும், எதாவது ஒரு அதிகாரியை அனுப்பி பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை முடித்துவிடலாம் என்று கணக்குப் போட்டவர்களை ஏமாற்றும் வகையில், விவசாயிகள் கூட்டம் கூட்டமாக வருவது மட்டுமல்லாமல் டெல்லியில் முகாமிட்டுப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுக் கிளம்பியுள்ளனர். அவர்களுக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான சமையல் பொருட்கள், கோதுமை மாவு, விறகு, போர்வை, உடை என்று முழு திட்டத்துடன் வந்து இறங்கியுள்ளனர். போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள விவசாயிகளில் பெரும்பாலானோர் 'புராரி' மைதானத்தில் முகாமிட்டுள்ளனர். அங்குதான் சமைத்து உண்டு, உறங்கி, தங்களின் கோஷங்களைக் கர்ஜித்து வருகின்றனர். 

 

cnc

 

‘தர்தி மாதா கி ஜெய்’ போன்ற கோஷங்களை எழுப்பி வருகின்றனர். ‘ஹம் ஹோங்கே காம்யாப்’ போன்ற தேசப்பற்று பாடல்களையும் ஒலிக்கவிடுகின்றனர். சில முதிய விவசாயிகள் இளைஞர்களுக்காக சப்பாத்தி மாவைப் பிசைந்து உருட்டி, தீயில் வாட்டி, காய்கறிகளை நருக்கி சமைத்துக் கொடுக்க, அருகிலேயே தார்ப்பாயை விரித்து, இரண்டு வரிசைகளாக அமர்ந்து உணவைச் சாப்பிட, அங்கு ஒரு லங்காரையே அமைத்துவிட்டனர் சர்தார்ஜிக்கள். மத்திய அரசு எவ்வளவு காலம் வேண்டுமானாலும் காத்திருக்க வைக்கலாம் என்கிற எண்ணம் இருந்ததாலோ என்னவோ, இப்படி எல்லாத்திற்கும் ரெடியாக வந்திருக்கிறார்கள் விவசாயிகள். 

 

இதற்குப் பின்னால் விவசாயிகள் இல்லை, பின்னணியில் அரசியல்வாதிகள்தான் இருக்கிறார்கள் என்றும் ஒருபக்கம் இந்தப் போராட்டத்தை விமர்சிக்கிறார்கள். எனினும், கொத்தாக இருக்கும் விவசாயிகள் கூட்டத்தில் ஒரு பகுதி, ‘சாஹே குச் பி கர்லோ ஹும் பதே ஜாயேங்கே’ என்று ஒருசேர ஒருமனதாகக் குரலெழுப்புகின்றனர். அதாவது 'என்ன தடை வந்தாலும், நாங்கள் வளர்வோம்' என்பது பொருளாகும். மற்றொரு பக்கம் வழக்கமான தைரியத்துடன் ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ எனக் குரலெழுப்பும் சர்தார்ஜிகள். இப்படி லட்சக்கணக்கான விவசாயிகளின் கோஷங்களுக்கு மத்தியில் டெல்லி ஆம் ஆத்மீ அரசின் விருந்தோம்பலும், கரோனா விழிப்புணர்வும் போராட்டக் களத்தினூடே சுற்றிவர, சர்தார்கள் சூழ் நிலமாக மாறியுள்ளது டெல்லி.  

 

 

 

Next Story

மும்முரமாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு; பிரதமர் வைத்த வேண்டுக்கோள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
PM Modi asks everyone to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  

இந்த நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது!  21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை  பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

‘சுகர் வருவதற்காகவே ஸ்வீட் சாப்பிடுகிறார்” - கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Kejriwal accused by the enforcement department to eats sweets just to get sugar

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி(21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அன்றைய தினமே (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை ‘சட்டவிரோத கைது’ என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கடந்த 9 ஆம் தேதி (09.04.2024) உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தன்னைக் கைது செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 10 ஆம் தேதி (10.04.2024) மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 15ஆம் தேதி விசாரனைக்கு வந்தது. அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வாதாடுகையில், “தன்னை தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து தடுப்பதற்காகவே இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “இந்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது. வரும் 24 ஆம் தேதிக்குள் அமலாக்கத்துறை இது குறித்து பதிலளிக்க வேண்டும். இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வாதங்களை முன் வைக்கலாம்” என நீதிபதிகள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 19 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதனிடையே, அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமீன் மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த முறை அவர் அளித்த ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த போது, ‘தான் சர்க்கரை நோயால் அவதிப்படுகிறேன் என்றும், தனது ரத்த அளவுகளை மருத்துவரைக் கொண்டு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும்’ கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு இன்று (18-04-24) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோகப் ஹொசெயின், “சர்க்கரை நோய் அதிகம் உள்ளதாகக் கூறும் அரவிந்த் கெஜ்ரிவால், சிறையில் மாம்பழம் சாப்பிடுவது, இனிப்புகள் சாப்பிடுவது, சர்க்கரையுடன் டீ சாப்பிடுவது உள்ளிட்டவைகளை வேண்டுமென்றே சாப்பிட்டு தனது சர்க்கரை அளவை அதிகரிக்கிறார். இரத்த சர்க்கரை அளவு ஏற்ற இறக்கங்களைக் காரணம் காட்டி மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் பெறுவதற்கான ஒரு களமாக இதைப் பயன்படுத்த கெஜ்ரிவால் விரும்புகிறார்” என்று வாதாடினார்.

இதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் விவேக் ஜெயின், ‘அமலாக்கத்துறை வைக்கும் இந்தக் குற்றச்சாட்டுகள் ஊடகங்களில் இது போன்றத் தகவல் பரவ வேண்டும் என்பதற்காகவே இதைச் சுமத்துகிறது. மருத்துவர்கள் பரிந்துரையின் பேரிலேயே அவர் உணவுகளை எடுத்து வருகிறார்’ என்று கூறினார்.