Skip to main content

தொடங்கியது மொய் விருந்து.. மொய் எழுத கணினி பதிவுகள்

Published on 01/08/2018 | Edited on 27/08/2018
computer moy

  
முதல் முறையாக மொய் பதிவுகள் கணினி மூலம் பதிவு செய்வது தொடங்கியுள்ளது. எழுதுவதை எளிமையாக்க ஆன்லைன் மூலம் மொய் பதிவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, அறந்தாங்கி தொகுதியிலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் பேராவூரணி, பட்டுக்கோட்டை தொகுதியிலும் ஆனி மாதம் தொடங்கி ஆவணி மாதம் முடியும் வரை ஒவ்வொரு நாளும் மொய் விருந்துகளால் கலைகட்டி இருக்கும் கிராமங்கள். தினசரி மனமனக்கும் கறி விருந்து ஒவ்வொரு நாளும் கோடிகளில் புரளும் பணம். இது தான் மொய் விருந்து. 1980 காலக்கட்டத்தில் ரூ. 50, 100 என்று தொடங்கிய மொய் விருந்தில் இன்று லட்ச ரூபாய்கள் வரை மொய் வைக்கப்பட்டு வருகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு அதிகபட்சமாக ஒருவர் ரூ. 2 லட்சம் வாங்குவது பெரிய அளவில் பேசப்படும். ஆனால் தற்போது ஒருவர் மட்டுமே ரூ. 5 கோடிகள் வரை மொய் வாங்கிக் கொண்டு செல்கிறார். அவ்வளவு வேகமாக மொய் விருந்து வளர்ந்து கொண்டிருக்கிறது.
 

 

 

    மொய் வாங்குதற்காக ஆட்டுக்கறி உணவு கொடுக்க வேண்டும். அதற்காக டன் கணக்கில் கறி சமைக்க வேண்டும். ஊரெங்கும் பதாகை விளம்பரங்கள், வண்ணமயமான பத்திக்கைகள் அச்சடித்து கொடுத்து மொய் வாங்க வேண்டும் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை தனி நபராக மொய் விருந்து வைத்தனர். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக 10, முதல் 20 நபர்கள் வரை ஒரே விருந்து வைத்து மொய் வாங்கிச் செல்கின்றனர். அதே போல பேராவூரணி பகுதியில் 30 பேர்கள் வரை ஒரே விருந்து வைத்து மொய் வாங்கிச் செல்கின்றனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆலங்குடி தொகுதியில் வடகாடு, கீழாத்தூர் வரை மட்டுமே மொய் விருந்து நடத்தினார்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஆலங்குடி வரை மொய்விருந்து பரவியுள்ளது. 

 

computer moy


 

    மொய் வசூல் நாளில் உறவினர்களும், நண்பர்களும் செய்யும் மொய் பணத்தை நோட்டுகளில் எழுதிக் கொள்ள அதற்காக உள்ள எழுத்தர்கள் மூலம் மொய் நோட்டுகளில் எழுதிக் கொண்டு பணத்தை வசூல் செய்வது வழக்கம். இப்போதும் அப்படித் தான் நடந்து வருகிறது. மொய் எழுத்தருக்கு ஒரு நாள் சம்பளமாக ரூ. 900 வரை கொடுக்க வேண்டும்.
 

    ஆனால் இந்த ஆண்டு கீரமங்கலம் பகுதியில் முதல் முறையாக கணினியில் மொய் பதிவு செய்யும் தொழில்நுட்பம் நுழைந்துள்ளது. கீரமங்கலம் அருகில் உள்ள பெரியா@ர் இணைப்புச் சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்த மொய் விருந்தில் 3 மடிகணினினளுடன் பெண்களும், இளைஞர்களும் காத்திருந்தனர். ஒரு குறிப்பிட்ட நபருக்கு மொய் செய்ய வந்தவர்கள் மடிகணினியும் காத்திருந்தவர்களிடம் தங்கள் ஊர், பெயர், மொய் தொகை, புதிய மொய் அனைத்தையும் சொல்ல விரைவாக கணினியில் பதிவு செய்து பணத்தை பெற்றுக் கொண்டு யாருக்கு எவ்வளவு மொய் செய்யப்பட்டுள்ளது என்பதற்கான ரசீது உடனடியாக வழங்கப்பட்டது. அதே மண்டபத்தில் வழக்கமான முறையில் மொய் நோட்டுகுளில் எழுதிக் கொண்டிருந்தனர் பலர். இந்த புதிய முறையை மொய் செய்ய வந்த உறவினர்கள் ஆச்சர்யமாக பார்த்தனர். இந்த மாதத்தில் இன்னும் பல மொய் விருந்துகளில் கணினியில் மொய் பதிவு செய்ய முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 

computer moy


    கணினியில் மொய் பதிவு செய்வது குறித்து அந்த நிறுவனத்தின் பிரபு கூறும் போது.. மதுரை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கணினி மூலம் மொய் பதிவு செய்வதை அறிமுகப்படுத்தினோம் முதலில் தயக்கம் காட்டிய விழா குடும்பத்தினர் பிறகு அதன் சிறப்புகளை அறிந்து மொய் பதிவு செய்ய வாய்ப்புகள் கொடுத்தனர். அதன் பிறகு தான் கீரமங்கலம், பேராவூரணி பகுதிகளில் மொய் விருந்துகள் நடப்பதை அறிந்து புளிச்சங்காடு கைகாட்டியில் அலுவலகம் திறந்து முதல் முறையாக பெரியா@ர் இணைப்புச் சாலை மண்டபத்தில் மொய் பதிவு செய்து கொடுத்திருக்கிறோம். இன்னும் பல பேர் கேட்டுள்ளனர்.
 

    நோட்டுகளில் மொய் எழுதுவது போல கணினியில் பதிவு செய்து உடனடியாக ரசீதும் கொடுப்பதுடன் விழா நடத்தும் நபருக்கு எஸ்.எம்.எஸ். செல்லும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. மொய் பதிவுகள் முடிந்த பிறகு உடனடியாக அனைத்து பக்கங்களையும் ஊர் வாரியாக, அகர வரிசைப்படி பிரிண்ட் எடுத்து புத்தகமாக கொடுப்பதுடன் விழா நடத்தும் நபரின் செல்போனில் அதற்கான ஆப் ஏற்றப்பட்டு அனைத்து விபரங்களையும் அதில் அறிந்து கொள்ள வசதிகளும் செய்து கொடுத்திருக்கிறோம். எங்கே இருந்தாலும் மொய் நோட்டை புரட்டிப் பார்க்காமல் செல்போனிலேயே மொய் விபரங்களை உடனடியாக தெரிந்து கொள்ளலாம். எந்த தவறும் நடக்காமல் இது உதவி செய்கிறது. இந்த ஆண்டு மொய் விருந்து நிகழ்ச்சிகளில் ஏராளமானவர்கள் முன் பதிவு செய்துள்ளனர் என்றார்.
 

 

 

    கீரமங்கலம், வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், சேந்தன்குடி, நகரம். செரியலூர், பனங்குளம், குளமங்கலம், பெரியா@ர், பாண்டிக்குடி, நெய்வத்தளி, மேற்பனைக்காடு, அணவயல், புள்ளாண்விடுதி, நெடுவாசல் மற்றும் சுற்றியுள்ள சுமார் 30 கிராமங்களில் மட்டும் ஒரு ஆண்டுக்கு 1500 பேர் மொய் விருந்து நடத்துகின்றனர். அதில் சுமார் ரூ. 600 கோடிகள் வரை வசூலாகிறது. பேரிய அளவு மொய் வாங்கும் நபர்கள் உடனடியாக பணத்தை எண்ணுவதற்கு சிரமப்படுவதை அறிந்த பல வங்கி அதிகாரிகளே கடந்த ஆண்டுகள் வரை சென்று வசூல் செய்து எண்ணி கொடுத்தனர். ஆனால் வடகாடு பகுதியில் இந்த ஆண்டு பணம் எண்ணும் இயந்திரம் வாடகைக்கு விடப்படுவதாக கூறப்படுகிறது. இன்னும் 2 மாதங்கள் கீரமங்கலம் பகுதியில் தினசரி கறிவிருந்துக்கு பஞ்சமில்லை..
            

 

 

 

 

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.

Next Story

வேங்கைவயல் விவகாரம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
The vengaivayal Affair Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20 நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அதன்படி கடந்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி முதல் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் இந்த வழக்கை விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள புதுகோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.