Skip to main content

ஸ்டாலின் vs மோடி! கேள்விகளா ? புகார்களா ? - தேர்தல் களத்தில் எடுபடுவது எது?

Published on 15/04/2024 | Edited on 16/04/2024
Stalin VS Modi is a hot parliament election field

தேர்தல் சுற்றுப்பயணத்தை முதன் முதலாகத் தொடங்கிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘’தமிழ்நாடே வெள்ளத்தில் தத்தளித்தபோது வராத பிரதமர் மோடி, தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய்கூட வெள்ள நிவாரணம் தராத மோடி இப்போது தேர்தல் நேரத்தில் மட்டும் வருவதற்கு தமிழ்நாடு என்ன பறவைகள் சரணாலயமா?’’ என்கிற தாக்குதலை அவர் தொடங்கிய போதே தமிழகத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது.

அந்த டெம்போவை அப்படியே கெட்டியாகப் பிடித்துக் கொண்ட உதயநிதி ஸ்டாலின், "தமிழ்நாடு வரியாக ஒரு ரூபாய் கொடுத்தால், ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு 29 பைசாதான் நிதியாகத் திருப்பித் தருகிறது’’ என்று குற்றம் சாட்டி பாஜகவை அதிர்ச்சியடைய வைத்தார். இவைகளுக்கு நேரடியாக எந்த பதிலையும் சொல்ல பிரதமர் மோடியால் முடியவில்லை. மாறாக, கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டுக்கு பல லட்சம் கோடி ரூபாய் திருப்பித் தந்ததாக தனது கோவைப் பிரசாரக் கூட்டத்தில் பொத்தாம் பொதுவாக ஒரு தகவலை கூறினார். எந்த திட்டத்துக்கு, எப்போது, எவ்வளவு நிதி தரப்பட்டது என்பதற்கு விளக்கமாக ஏதும் கூறவில்லை அவர்.

அதேபோல, வெள்ள நிவாரணம் வரவில்லை என்ற திமுக அரசின் குறிப்பான குற்றச்சாட்டுக்கோ, ஒரு ரூபாய் தந்தால் 29 பைசா தான் தமிழ் நாட்டுக்குத் திரும்பி வருகிறது என்கிற குறிப்பான குற்றச்சாட்டுக்கோ, மோடியிடம் இருந்து பாயிண்டாக ஒரு பதிலும் இல்லை.  ஆனால், முதல்வர் ஸ்டாலின், ’புல்வாமா தாக்குதலை அரசியல் ஆதாயத்துக்கு எப்படிப் பயன்படுத்தினார்கள் என்றும், மோடிக்கு ஊழலை ஒழிக்கும் எண்ணம் இல்லை, அவருடன் இருப்பவர்களே ஊழல்வாதிகளாக இருக்கிறார்கள் என்றும் விளக்கமாக ஒரு பேட்டி கொடுத்தார் அந்த மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக். உடனே அவர் வீட்டில் சி.பி.ஐ. ரெய்டு. எவ்வளவு மலிவான அரசியல்’ என்று தனது பரப்புரையில் விளக்கமாகப் பேசினார் முதல்வர்.

“பெண் சக்தி, பெண்கள் பாதுகாப்பு பற்றி, இப்போது தொடர்ந்து பேசும் பிரதமர், பா.ஜ.க. எம்.பி. பிரிஜ் பூஷனால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மல்யுத்த வீராங்கனைகள் கண்ணீர் விட்டபோது, வாய் திறக்கவில்லையே ஏன்?

குஜராத்தில் பில்கிஸ் பானு வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டபோது, பெண் சக்தி மேல் பிரதமர் மோடிக்கு அக்கறை வந்ததா? மணிப்பூர் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரத்தை, மவுனமாக ஏன் வேடிக்கை பார்த்தார்? ஒரு தடவையாவது மணிப்பூருக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினாரா? அதுமட்டுமல்ல, ஜம்மு காஷ்மீரில் 8 வயது குழந்தையைக் கோயிலில் வைத்து வன்புணர்வு செய்தார்களே? அந்தக் குற்றவாளிக்கு ஆதரவாக, இரண்டு பா.ஜ.க. அமைச்சர்கள் ஊர்வலம் சென்றார்களே? இதற்குக் கண்டனம் எழுந்த உடனே, அவர்கள் என்ன கூறினார்கள்? கட்சித் தலைமைதான் எங்களை அனுப்பி வைத்தது என்று கூறிய அவர்களை, மோடி தட்டிக் கேட்டாரா?

உத்தரப் பிரதேசத்தில் உன்னாவ் ஞாபகம் இருக்கிறதா? வேலை கேட்டுச் சென்ற இளம்பெண்ணை, பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் வன்கொடுமை செய்தார். இதைப் புகாராக அந்தப் பெண் சொல்லக் கூடாது என்று, பாஜக எம்.எல்.ஏ. குல்தீப்பின் சகோதரரும், நண்பர்களும் சேர்ந்து அவரைக் கடத்தி மயக்க மருந்து கொடுத்து நாள் கணக்கில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தார்கள்.

காப்பாற்றச் சென்ற தந்தையை போலி வழக்கு போட்டு சிறையிலேயே வைத்து அநியாயமாகக் கொன்றார்களே? நியாயம் கிடைக்காத விரக்தியில், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி வீட்டுக்கு முன்பு, அந்த பெண் தீக்குளிக்க முயற்சி செய்தார்! அதற்குப் பிறகும் கூட அந்தப் பெண்ணை வண்டி ஏற்றிக் கொல்ல முயற்சி நடந்தது. அதில் அவர்கள் அத்தை இறந்தார்கள்! இதையெல்லாம் வேடிக்கை பார்த்தது யார்? பிரதமராக இருக்கக் கூடிய மோடி தான்!

ஹாத்ரஸ் மறந்து போனதா? அப்பாவி பட்டியலின பெண் ஒருவர், வன்கொடுமை செய்யப்பட்டு இறந்தாரே! அவரின் உடலை பெற்றோர் சம்மதம் இல்லாமல், பெட்ரோல் ஊற்றிப் போலீசே எரித்ததே? பாதிக்கப்பட்ட குடும்பத்தைப் பார்த்து ஆறுதல் சொல்லக்கூட சகோதரர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு அனுமதி மறுத்தார்களே?  இப்படிப்பட்ட காட்டாட்சிதான், பா.ஜ.க. ஆட்சி! பெண்களுக்குச் சுதந்திரம் கொடுக்கக் கூடாது என்று பா.ஜ.க.வை சேர்ந்த முதலமைச்சர் யோகி பேசினார். இதையெல்லாம் மோடி தடுத்தாரா?” என்று துல்லியமான தகவல்களைக் கொண்டு பாஜக மீது தாக்குதல் தொடுத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Stalin VS Modi is a hot parliament election field

இதில் ஒன்றுகூட கற்பனைக் குற்றச்சாட்டு இல்லை. பதிவான வழக்குகள், வெளியான ஊடகச் செய்திகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் எழுப்பிய கேள்விகள். ஆனால், இவைகளுக்குப் பதில் சொல்லாத பிரதமர் மோடி, திமுக மீது வைத்த குற்றச்சாட்டுகள் என்ன?

“ஊழலுக்கு காப்புரிமையை திமுக-தான் வைத்திருக்கிறது. தமிழ்ப் பண்பாட்டுக்கு விரோதமாக இருக்கிறது. தமிழ்நாட்டை ஒரு குடும்பமே கொள்ளையடிக்கிறது. திமுகவின் குடும்ப அரசியல் காரணமாக தமிழ்நாட்டு இளைஞர்களால் முன்னேற முடியவில்லை” என்று பொத்தாம் பொதுவாகப் பேசினார் மோடி.  தமிழ்நாட்டு ஆண்களும் பெண்களும் பட்டப்படிப்பு படிக்க உதவியாக மாதம் ரூ.1,000 தருகிறோம், இளைஞர்கள் முன்னேற்றத்துக்காக நான் முதல்வன் திட்டத்தை செயல்படுத்துகிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பாகச் சொல்கிறார். மத்திய அரசு கொண்டுவந்த திட்டங்களை தமிழ்நாடு அரசு தடுக்கிறது என்கிறார் மோடி. எந்த திட்டத்தை நீங்கள் கொண்டு வந்தீர்கள்? எப்போது தடுத்தோம்? என்று பட்டியல் போடுங்கள் என்று கேட்கிறார் ஸ்டாலின். ஆனால், தமிழகத்துக்கு அடிக்கடி படையெடுத்த பிரதமர், தனது அடுத்த கூட்டத்திலும் பதில் சொல்லவில்லை.

திமுக ஊழல் கட்சி என்று பேசும் பாஜக-வால் ஒரே ஒரு ஊழல் குற்றச் சாட்டைக்கூட பெயர் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. நாம் 5-ஜி கொண்டு வந்தோம். ஆனால், திமுக 2-ஜியில் ஊழல் செய்துவிட்டார்கள் என்று பேசுகிறார் பிரதமர் மோடி. தீர விசாரணை நடத்தி அது தவறான குற்றச்சாட்டு என்று நீதிமன்றமே நிராகரித்த குற்றச்சாட்டு அது.

இந்த நிலையில், பிரதமரின் இத்தகைய குற்றச்சாட்டை எதிர்கொண்ட மு.க.ஸ்டாலின், ஊழலுக்குப் பல்கலைக்கழகம் அமைத்தால் அதற்கு வேந்தராக இருக்கத் தகுதி படைத்தவர் நரேந்திர மோடி என்று பதில் தாக்குதல் தொடுத்தார்.  அதேசமயம் இந்த குற்றச்சாட்டுகளை போகிற போக்கில் வெறுமனே சொல் விளையாட்டில் சொல்லாமல், அடுக்கடுக்காக துல்லியமான குற்றச்சாட்டுகளை முன் வைத்து பேசினார்.

“காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் ரபேல் விமானம் வாங்க ஒப்பந்தம் போட்டபோது ஒரு விமானம் 526 கோடி கோடி ரூபாய் விலைக்கு வாங்க ஒப்பந்தம் போட்டார்கள். ஆனால், பாஜக ஆட்சியில் ஒரு விமானம் ரூ.1,670 கோடி கொடுத்து வாங்கினார்கள். 7.5 லட்சம் கோடி ஊழல் நடந்திருப்பதாக பாஜக ஆட்சி குறித்து சி.ஏ.ஜி. குற்றம் சாட்டியது. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ. போன்ற அமைப்புகள் மூலம் ரெய்டு நடத்தி, மிரட்டி தேர்தல் பத்திரங்கள் வாங்க வைத்து ஊழல் செய்தது பாஜகதான்” என்று துல்லியமான விவரங்களுடன் குற்றச்சாட்டுகளை அடுக்கினார் முதல்வர் ஸ்டாலின். ஆனால், இவைகளுக்கு மோடியிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.  பொத்தாம் பொதுவாக தான் வைத்த குற்றச்சாட்டுகளே போதும் என்று மோடி நினைக்கிறாரா? என்பது இன்னும் ஓரிரு நாளில் தெரிந்து விடும்!

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Petition against Prime Minister Modi dismissed

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26 ஆம் தேத் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை வழக்கறிஞர் ஆனந்த் ஜோன்டேல் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, மதம், கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார். மேலும் பிரதமரின் இத்தகைய பேச்சு மக்கள் பிரதிநித்துவ சட்டத்திற்கு எதிரானது. எனவே பிரதமர்  மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் வேண்டும். இது குறித்த உத்தரவை தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Petition against Prime Minister Modi dismissed

இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 26 ஆம் தேதி (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. ஆனால் அன்றைய தினம் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.04.2024) விசாரணைக்கு வந்தது அப்போது, நீதிபதிகள், “இந்த மனு முற்றிலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மனுவாக தான் கருதுகிறோம்” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.