Skip to main content

முதல் முறையாக ஸ்டாலின் சென்றார்...இபிஎஸ், ஓபிஎஸ் ஆப்சென்ட்...ஓட்டு யாருக்கு...உளவுத்துறை ரிப்போர்ட்!   

Published on 17/09/2019 | Edited on 17/09/2019

இந்த வருடம் செப்டம்பர் 11 அன்று தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பரமக்குடியிலுள்ள இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்தியதால் பேருவகை அடைந்துள்ளனர் தேவேந்திரகுல மக்கள். இராமநாதபுரம் மாவட்டத்தில் இமானுவேல்சேகரன் நினைவுதினமும், அக்.30-ல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையும் விமரிசையாக கொண்டாடப்படும் போது, சமூக மோதலாக உருவெடுத்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் மாநில அரசுகள் செயல்படும்.

 

dmk



எனவே 2013-ஆம் ஆண்டிலிருந்து ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்து இன்று வரை அதை நீட்டித்து வந்தது இராமநாதபுர மாவட்ட நிர்வாகம். "வாடகை வாகனங்களில் வரக்கூடாது, சொந்த வாகனங்களில் வந்தாலும் தொடர்ச்சியாக மூன்று வாகனத்திற்குமேல் வரக்கூடாது. 1 கி.மீ-க்குள்தான் தொடர் ஓட்டமாக ஜோதியை எடுத்து வரவேண்டும் என ஏகப்பட்ட கெடுபிடிகள்.'' இதற்காக மாவட்டத்தில் 5000 காவலர்களை நிறுத்தி, சென்னை அண்ணா யுனிவர்சிட்டி மாணவர்கள் உருவாக்கிய ஆளில்லா மினி உளவு விமானத்தின் கண்காணிப்புடன் பரமக்குடியை வட்டமடித்தது காவல்துறை.

 

dmk



இமானுவேல்சேகரனுக்கு முதல் ஆளாக அஞ்சலி செலுத்தும் செல்லூர் கிராம மக்கள், காலை 7.50-க்கே அஞ்சலி செலுத்திவிட்டு வெளியேற, அதனைத் தொடர்ந்து தேவேந்திரர் பண்பாட்டுக் கழகமும் அஞ்சலி செலுத்த, அ.தி.மு.க. சார்பில் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி ஆகியோர் நினைவஞ்சலி செலுத்தினர்.


ஆளுங்கட்சியாக இருந்தால் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர், எதிர்க்கட்சியாக இருந்தால் சுப.தங்க வேலன். இவர்கள் இருவரில் ஒருவர் தி.மு.க. சார்பில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவார்கள்.. ஆனால், இந்த ஆண்டு நிலைமை சற்று மாறியிருக்கிறது. தி.மு.க. எம்.பி. கனிமொழி, முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சுப.தங்கவேலன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் புடைசூழ தி.மு.க. தலைவர் ஸ்டாலினே இமானுவேல் நினைவிடத் திற்கு வந்து அஞ்சலி செலுத்தியிருக்கிறார். தமிழகத்தின் அனைத்து முக்கிய கட்சிப் பிரமுகர்களும் இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

"அண்மையில் கட்சி ஆரம்பித்த தினகரன்கூட கடந்த ஆண்டும் இவ்வாண்டும் இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் அக்.30-ஆம் தேதி முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் கலந்துகொள்ளும் ஸ்டாலின், தங்களது சமுதாயத் தலைவர் நினைவிடத்திற்கு வருவதில்லையே என்ற பெரும் குறை தேவேந்திரகுல மக்களிடம் இருந்தது. இந்த ஆண்டு அந்த குறையை நிவர்த்தி செய்திருக்கிறார்'' என தங்களுடைய நெகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர் நினைவிடத்தினில் இருந்த கீழகன்னிச்சேரி, வீரம்பல், வாத்தியனேந்தல் உள்ளிட்ட கிராம மக்கள்.

தேவேந்திரகுல சமூகத்தை சேர்ந்த சிலரோ, "நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. பெற்ற வெற்றியே இதற்குக் காரணம். குறிப்பாக தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தல், ஒட்டப்பிடாரம் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றிக்கு தேவேந்திரகுல சமூகத்து மக்களின் ஓட்டுக்களே காரணம் என தி.மு.க. கருதுகிறது. அதேநேரத்தில் பரமக்குடி, மானாமதுரை, விளாத்திகுளம், சாத்தூர், நிலக்கோட்டை சட்ட மன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. சொற்ப ஓட்டுக்களில் தோற்றதற்கும் இந்த மக்களே காரணம் என்பதையும் மறுக்கமுடியாது. இந்த 5 தொகுதிகளில் வெற்றி தோல்வியை தீர்மானிப்பவர்கள் தேவேந்திர குல மக்களே. ஒருவேளை இந்த 5 தொகுதிகளைக் கைப்பற்றி இருந்தால், தி.மு.க. ஆட்சிக்கு வந்திருக்கும்'' என்று குறிப்பிட்டனர்.

விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட நாகலாபுரத்தைச் சேர்ந்த தேவேந்திரகுல இளைஞர் கார்த்திக் நம்மிடம் "தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட தேவேந்திரகுல மக்கள் அதிகம் வசிக்கும் ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி, திருச்செந்தூர், தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் பி.ஜே.பி. வேட்பாளர் தமிழிசையை விட கூடுதலாக தலா 60 ஆயிரம் வாக்குகள் கனிமொழி பெற்றார். அதேபோல், ராமநாதபுரம், நெல்லை, விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிக்கும் இந்த சமூகத்தினரின் வாக்குகள் காரணமாக இருப்பதை தி.மு.க. உணர்ந்திருக்கிறது'' என்றார்.

அவரே தொடர்ந்து... அருந்ததி இன மக்களின் தலைவராக விளங்கும் ஒண்டிவீரன் நினைவு தினம் கடந்தமாதம் நெல்லையில் அனுசரிக்கப்பட்டது. சபாநாயகர் தனபாலுக்குப் பதிலாக இந்த முறை ஓ.பி.எஸ். வந்தார். அதனால் முதல்முறையாக மு.க. ஸ்டாலினும் நெல்லை வந்து ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் மரியாதை செலுத்தினார். அப்போதே தேவேந்திர குல மக்களிடம் முணுமுணுப்பு எழுந்தது. அதைச் சரிசெய்யும் வகையிலே இன்றைய தினம் பரமக்குடிக்கு வந்திருக்கிறார். இது வரவேற்கத்தக்கது'' என்கிறார் அவர். பரமக்குடி செல்வதற்காக ஸ்டாலின் மதுரை வந்திருந்தபோது, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன், ஸ்டாலினை சந்தித்து சால்வை அணிவித்து ஆச்சர்யப்படுத்தினார்.
 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்