Skip to main content

“இளைய ஜீவா; கதை சொல்லும் கல்; கல்லூரியின் கதாநாயகன்!” - தா. பாண்டியன் நினைவுகளைப் பகிரும் ஸ்டாலின் குணசேகரன்!

Published on 26/02/2021 | Edited on 01/03/2021

 

Stalin Gunasekaran shared memory about D.Pandian

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் இன்று காலை சிகிச்சை பலனிற்றி காலமானார். அவருக்குப் பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினரும், ஈரோடு மக்கள் சிந்தனை பேரவை தலைவருமான ஸ்டாலின் குணசேகரன், தா.பாண்டியனுடனான தனது 50 வருட நினைவுகளை நக்கீரன் இணையத்துடன் பகிர்ந்துகொண்டார்.  

 

ஸ்டாலின் குணசேகரன் கூறியதாவது; “நான் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த காலத்தில், ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரம் எனும் ஊரிலிருந்த பள்ளி மைதானத்தில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் தா.பாண்டியன் பேசினார். அப்போது அதனைக் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஈரோடு மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கிய 10 நபர்களில் என் தந்தையும் ஒருவர். 1952ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தவர், 17 வயதில் தீவிரமாகப் பணியாற்றினார். பள்ளிக்கூடத்தில் படிக்கும் பாடத் திட்டங்களோடு சேர்ந்து மற்றவையும் படிக்க வேண்டும் என என்னிடத்தில் முதன்முதலில் சொன்னவர் என் தந்தை. அவர் ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே படித்தவர். ஆனால், அவர் இருந்த இயக்கத்தில், பெரிய சான்றோர்கள், அரசியல் மேதைகள் பலர் இருந்தனர். அவர்கள் பேச்சை எல்லாம் அடுத்த தலைமுறையினரும் கேட்க வேண்டும் எனும் விருப்பம் என் தந்தைக்கு இருந்தது. அதன் அடிப்படையில், அவர் சென்ற கூட்டத்திற்கு என்னையும் அழைத்துச் சென்றார். நானும் விளையாட்டாக அந்த உரையைக் கேட்கத் துவங்கினேன். தா.பாண்டியன், ஒன்றரை மணி நேரம் அந்த உரையை நிகழ்த்தியிருப்பார். என்னையும் மறந்து அந்த உரையை ரசித்துக் கேட்டிருக்கிறேன் என்பது இப்போது என்னால் உணரமுடிகிறது. 


அதன் பிறகு எனது 10வது வயதிலேயே அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் எனும் ஒரு அமைப்பில் இணைந்தேன். அதன் பிறகு மாணவர் மன்ற மாநாடுகளில் இவரது உரையைக் கேட்க முடிந்தது. சிக்க நாயக்கர் கல்லூரியில் நான் பி.யு.சி. படித்துகொண்டிருந்த காலத்தில், முதன் முதலாக அவரை எங்கள் கல்லூரிக்கு அழைத்தோம். அதற்கு எங்கள் கல்லூரி முதல்வர் ஒப்புக்கொள்ளவில்லை. அவரிடம் தயவுபண்ணி கேட்டு அவரை அழைத்துவந்தோம். அதன் பிறகு தொடர்ந்து நான்கு ஆண்டுகாலம் நாங்கள் அங்கு படிக்கும்வரை அவரை அங்கு அழைத்தோம். அதன்பிறகு நான் வெளியேவந்த பிறகு ஆறு ஆண்டுகள் என மொத்தம் 10 ஆண்டுகள் தொடர்ந்து சிறப்பு விருந்தினராக தா.பாண்டியன் கலந்துகொண்டது எங்கள் கல்லூரியில் மட்டும்தான் என நான் கருதுகிறேன்.

 

Stalin Gunasekaran shared memory about D.Pandian

 

கடைசி ஆண்டு அந்த கல்லூரியின் முதல்வர் அனந்த பத்மநாப நாடார், “நான் இந்த ஆண்டு பணி நிறைவு பெறுகிறேன். ஆனால், தா.பாண்டியன் இந்த கல்லூரிக்கு வந்து உரை நிகழ்த்துவதில் ஓய்வென்பது இருக்கக்கூடாது. அடுத்தடுத்து ஆண்டுகளிலேயே இவர்வந்து பங்கேற்க வேண்டும். இவர் நமது கல்லூரியின் சிறப்பு விருந்தினர் மட்டுமல்ல, கல்லூரிக்கு வருகைதரும் பேராசிரியரும் கூட” என அவர் குறிப்பிட்டது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அந்த ஆறு ஆண்டுகாலம் அவர் சிறப்புரை, நான் வாழ்த்துரை எனப் பேசுவோம். ஈரோடு புத்தகத் திருவிழாவுக்குக்கூட இரண்டு முறை அவரை அழைத்தோம் கிட்டத்தட்ட 10,000 நபர்களுக்கு முன்னால், ‘கல்லும் கதை சொல்லும்’ என்ற தலைப்பில் சிற்பக் கலை பற்றி ஒன்னேகால் மணி நேரம் அவர் ஆற்றிய உரையை, நியூ சென்ச்சுரி’ நிறுவனம் ஒரு புத்தகமாகக் கூட வெளியிட்டிருக்கிறார்கள். 



அதேபோல் எழுத்து என்றால், அவருக்கு நிகர் அவர்தான் என நான் எண்ணிப்பார்க்கிறேன். அவர் எழுத்தை அவர் பிழைதிருத்தி நான் பார்த்ததில்லை. அடித்து எழுதி நான் பார்த்ததில்லை. அவரை பார்த்து 50 ஆண்டுகாலம் ஆகியிருந்தாலும், அவருடன் நெருக்கமாக 40 ஆண்டுகாலம் தொடர்ந்து இருந்திருக்கிறேன். அவர் பல கட்டுரைகளை எழுதும்போது அவரின் அருகிலிருந்திருக்கிறேன். அவர், படபடவென அடுத்தடுத்த பக்கங்களில் எழுதிவிட்டு இறுதிப் பக்கத்தில் ஒரு கோட்டைப் போட்டுவிட்டு பக்கத்தில் இருப்பவர்களிடம் கொடுத்துவிடுவார். அதன்பிறகு அதனை 'ஜனசக்தி'யில்தான் பார்க்க முடியும். கவித்துவத்துடன் அந்த கட்டுரை அமைந்திருக்கும். 'நா', 'பேனா' இரண்டும் விளையாடும் என்பார்களே அதுபோல பேச்சாளராக, மிகப் பெரிய எழுத்தாளராக, மிகப் பெரிய சிந்தனையாளராக, மிகப் பெரிய கட்டுரையாளராக, ஏராளமான தொழிற்சங்களின் தலைவராக இவர் திகழ்ந்ததைப் பக்கத்திலிருந்து பார்க்கும் வாய்ப்பு கடந்த 40 ஆண்டுகாலமாக எனக்குக் கிடைத்தது. 

 

இலங்கை தமிழர்களுக்காக அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் என்ற முறையிலே அவர் அறிவித்த உண்ணாவிரதப் போராட்டம் தமிழகத்திலே மாபெரும் மாறுதலை ஏற்படுத்தியது. ஏனென்றால் அந்தப் போராட்டத்திற்கு 500 பேர்தான் வருவார்கள் என எண்ணி பந்தல் போட்டிருந்தோம். ஆனால், கிட்டத்தட்ட 7,000 பேர் பங்கேற்றனர். காலை முதல் மாலை வரை பந்தல் விரிவு படுத்தும் வேலையே நடந்தது. அந்த அளவிற்கு மக்களின் நாடிப்பிடித்து மக்களுக்காக என்ன செய்ய வேண்டும் என்று கருதி இடைவிடாமல் பாடுபட்ட அந்த இதயம் இப்போது ஓய்வு பெற்றிருக்கிறது. 

 

நான் அருகிலிருந்து பார்த்த காரணத்தினால் சொல்லுகிறேன், சித்தாந்தத் தெளிவும் ஆங்கிலத்தில் பெரும் புலமையும் பெற்றவர். அவரின் தந்தை அந்த காலத்தில் தலைமை ஆசிரியர். தாய் துணை ஆசிரியர். இவரது மூத்த சகோதரர் தா.செல்லப்பா, தமிழகத்தின் தலை சிறந்த பொருளாதார பேராசிரியர்களில் ஒருவர். இவரது இளைய சகோதரர் தா.பொன்னிவளவன் இந்நேரம் உயிரோடு இருந்திருந்தால், தா.பாண்டியனுக்கு நிகராக தமிழகத்தில் பேசப்பட்டிருப்பார். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது மாணவர் பேரவை தலைவராகப் பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றவர்.

 

Stalin Gunasekaran shared memory about D.Pandian

 

ஒரு கதாநாயகனைப் போல் கல்லூரியிலிருந்தவர் தா.பாண்டியன். பிறகு அதே கல்லூரியிலே துணைப் பேராசிரியராக நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டவர். அதன்பிறகு கல்லூரி பேராசிரியர் வேலை வேண்டாம் என்று ஒதுக்கிவைத்துவிட்டு கட்சியின் முழுநேர ஊழியராகப் பல்லாண்டுகாலம் செயல்பட்டவர். அநேகமாக, அவர் தமிழகத்தில் செல்லாத கிராமம் இல்லை. தமிழகத்தில் ஜீவாவுக்குப் பிறகு மக்களால் மதிக்கப்பட்ட பொதுவுடைமை இயக்கத்தின் பெரும் தலைவர் தா.பாண்டியன். அதனால்தான் அவரை அப்போதே 'இளைய ஜீவா' என அழைத்தார்கள். 1960 தொடக்கத்தில், ‘தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்’ எனும் அமைப்பை, ஜீவா பிரகடனப்படுத்தியபோது, அதன் பொதுச் செயலாளராக தா.பாண்டியனைத்தான் தேர்வுசெய்தார். ஜீவாவால் தேர்வு செய்யப்பட்ட 'இளைய ஜீவா' தா.பாண்டியன் என்பதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை” என்று தெரிவித்தார்.

 

 
 

சார்ந்த செய்திகள்

Next Story

“மோடியின் நாய்க்குட்டிபோல் அமலாக்கத்துறை செயல்படுகிறது” - முத்தரசன்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Mutharasan criticism of BJP

புவனகிரி பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன் சிதம்பரம் நாடளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தொல்.திருமாவளவனுக்கு ஆதரவு திரட்டி பானைச் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். 

அப்போது பேசிய அவர், “அமலாக்கத்துறை மோடியின் நாய்க்குட்டி போல செயல்படுகிறது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு அபராதம் விதித்துள்ளனர். சம்பந்தபட்ட துறை அதிகாரிகளை மோடி, அமித்ஷா ஆட்டி படைக்கிறார்கள். மோடி, தேர்தலுக்குப் பிறகு திராவிட முன்னேற்ற கழகம் இருக்காது என கூறுகிறார். உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை அழித்து விடுங்கள் என கூறுகிறார். இதற்கு அர்த்தம் என்னவென்றால் ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வந்து பாரதிய ஜனதா கட்சியை மட்டும் வைத்துக்கொண்டு சர்வாதிகாரி போல் செயல்படுவதற்காக அனைத்து கட்சிகளையும் ஒழிக்க திட்டமிட்டுள்ளார்.

மோடியின் தேர்தல் அறிக்கையில் சொன்னதை எதையுமே செய்யவில்லை. விவசாயிகளுக்கு ஆதார விலை, சாமிநாதன் கமிஷன் பரிந்துரை அமல்படுத்தவில்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. தற்போது கச்சத்தீவைப் பற்றி பேசுகிறார். கச்சத்தீவை கடந்த 10 ஆண்டுகளில் மீட்பதற்கான மோடி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவரை அவர் யாருக்கு பேன் பார்த்துக் கொண்டு இருந்தார்.

மாநில உரிமைகள் பறிக்கப்படுகிறது. ஆளுநர் போட்டி அரசாங்கம் நடத்துகிறார். இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. இதனை திமுக, கம்யூனிஸ்ட் பிரச்சினையாக பார்க்காமல் பொது பிரச்சினையாக பார்க்க வேண்டும்.  மோடியிடம் சமூக நீதியை எதிர்பார்க்க முடியாது. அப்படி சமூக நீதி அவர்களுக்கு இருந்தால், இட ஒதுக்கீட்டை அமல்படுத்துகிறேன் என கூறியதால் வி.பி.சிங் ஆட்சியை கவிழ்த்திருக்கமாட்டார்கள்.

பாஜக பத்தாண்டுகளில் செய்த தவறு கொஞ்ச நஞ்சமல்ல. சிறுபான்மை மக்களுக்கு எதிராக, சிறு குறு தொழில் நடத்துபவர்களுக்கு எதிராக, விவசாயிகளுக்கு எதிராக 3 சட்டங்கள் நிறைவேற்றினார்கள். தொழிலாளர்களுக்கு எதிராக சட்டங்களை கொண்டு வந்தார்கள்.

இதற்கு அதிமுக ஆதரவளித்தது. தற்போது ஜனநாயகத்தை காப்போம் என  ஏமாற்று வேலை செய்கிறது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்கு பானைச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். இவருடன் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் மணிவாசகம்,  மாவட்டச் செயலாளர் துரை, மாவட்ட துணைச் செயலாளர் சேகர், வட்டச் செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

Next Story

“இந்திய அளவில் சமூக நீதி காப்பாற்றப்பட வேண்டும்” - பாஜகவை விளாசிய து.ராஜா

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cpi National Secretary D. Raja has severely criticized the BJP

தமிழகத்திற்கு பிரதமர் மோடி அடிக்கடி வருவதற்கு வெட்கப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் து.ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்தியா கூட்டணி சார்பில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவனுக்கு வாக்கு சேகரித்தார். அப்போது  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த து.ராஜா, “அகில இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இது மாறி இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் பாஜக நாசகார செயலில் ஈடுபட்டு வருவதால் இந்தியா ஒரு ஜனநாயக குடியரசாக நீடிக்குமா என்ற கேள்வி எழுகிறது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசாக, மக்கள் நலன் காத்திட, மாநில உரிமைகளை மதித்து செயல்படுகிற ஒன்றிய அரசாக இந்தியா தொடர்ந்து நீடிக்குமா? என்ற கேள்வியும் ஏற்பட்டு இருக்கிறது. அதனால் தான் இந்தத் தேர்தலை எல்லோருமே முக்கியமான தேர்தலாக கருதுகிறோம்.

பாஜகவை அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும். மதவெறி பாசிசத்தை இந்தியாவில் நிலை நிறுத்த வேண்டும் எனவும், மதச்சார்பற்ற நாடு என்ற நிலையை மாற்றி மதவாத நாடாக்க முயன்று வருகிறது.  சட்ட நெறிகளை எல்லாம் அழித்து ஒழித்து விட்டு ஏற்றத்தாழ்வுகளை அப்படியே கட்டி காப்பாற்ற வேண்டும். ஆர்எஸ்எஸ் அஜண்டாவை நிறைவேற்றுகிற ஒரு கட்சியாக தான் பாஜக செயல்படுகிறது. இதற்கு பிரதமராக மோடி செயல்படுகிறார்

மோடி தமிழ்நாட்டுக்கு தற்போது அடிக்கடி வருகிறார். அவர் பிரதமர் என்ற முறையில் தேர்தல் காலத்தில் மக்களின் வாக்குகளைப் பெற வருவதற்கு வெட்கப்பட வேண்டும்.  தமிழ்நாடு பல பேரிடர்களை சந்தித்தபோதெல்லாம் மோடி வரவில்லை. தமிழ்நாட்டின் மீது அக்கறை இல்லை, நிவாரண நிதி கூட கொடுக்கவில்லை.

இந்தியாவில் முன்பிருந்ததை  விட அந்நிய கடன் அதிகரித்துள்ளது. இது பற்றி மோடி பொது வெளியில் விவாதிக்க தயாரா?  மோடி ஆட்சியில் அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் வளர்ச்சி பெற்று இருக்கிறார்கள். மக்களுக்கு  வளர்ச்சி இல்லை.  மோடியின் அரசு மக்கள் விரோத அரசாக நாட்டு நலனில் அக்கறை இல்லாத ஒரு அரசாக, பெரு முதலாளிகளின் எடுபிடி அரசாக மாறிவிட்டது.  மதச்சார்பின்மையை நிலை நாட்ட வேண்டும் என்பதற்காக இந்தியா கூட்டணியில் இருக்கிற கட்சிகள் தொடர்ந்து போராடுகிறோம். இந்தத் தேர்தல் களத்தில் மக்களிடம் வாக்கு கேட்கின்றோம்.

பாட்டாளி மக்கள் கட்சி பாஜகவோடு  அணி சேர்ந்து இருப்பது பெரிய துரோகம். பாட்டாளிகள் என்று சொல்லிக்கொண்டு பாஜகவோடு சேர்வது எவ்வளவு பெரிய கொள்கை மோசடி, துரோகம் என்பதை இன்றைக்கு மக்கள் கேட்கிறார்கள்.  அதேபோல் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இருக்கிற அதிமுக தமிழர்களின் உரிமைகளை மீட்போம் என்கிறார்கள். தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட போது இவர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்? மோடியை ஆட்சியில் இருந்து அகற்றவேண்டும் என்று எடப்பாடி பேசுவாரா?

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்தியாவை காத்திட, பாசிசத்தை வீழ்த்திட  ஸ்டாலின் அழைக்கிறேன் என்று குரல் கொடுத்து இருக்கிறார். அது அவருடைய குரல் மட்டுமல்ல,  தமிழ்நாடும் இந்தியாவும் ஒன்று பட்டு முன்னேற வேண்டும் என்று விரும்புகிற எல்லோரும் எழுப்புகிற குரல்.  இந்தியாவைக் காத்திட பாசிசத்தை வீழ்த்திட நாம் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும்.  ஒன்றுபட்டு போராட வேண்டும். இந்தப் பின்னணியில் தான் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.

இந்திய அளவில் சமூக நீதி காப்பாற்றப்பட வேண்டும், ஜாதியை உடைத்து தகர்த்தெறிய வேண்டும், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று  போராடுகிற முன் களப்போராளியாக தொல்.திருமாவளவன் இருக்கிறார். எனவே அவருக்கு சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியில் பானை சின்னத்தில் வாக்களிக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்” என்றார்.

இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, சிபிஐ மாநில கட்டுப்பாட்டுக் குழு மணிவாசகம், மாநில நிர்வாகக் குழு மருத்துவர் ரவீந்திரநாத், மாநிலக்குழு மருத்துவர் சாந்தி, மாவட்ட செயலாளர் துரை, மாவட்ட துணைச் செயலாளர் வி.எம் சேகர், வட்டச் செயலாளர் தமீம் முன் அன்சாரி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.