Skip to main content

 எடப்பாடிக்கு ரொம்ப இடையூறு செய்கிறாரா ஸ்டாலின்?

Published on 02/05/2019 | Edited on 02/05/2019

"முதல்மரியாதை' திரைப்படத்தில் நடித்தவரும், எம்.ஜி.ஆரின் உறவினருமான தீபன் அவ்வப்போது அரசியல் தளத்திற்கு வந்து செல்கிறார்.  அ.தி.மு.க.வில் தற்போதும் உறுப்பினராக நீடிக்கும் அவரை, நக்கீரனுக்காக சந்தித்தோம். அப்போது அவர்,…""பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்திருப்பது எம்.ஜி.ஆர். பார்முலா என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது சரிதான். முன்பு காங்கிரஸ் ஆட்சி என்றாலும், ஜனதா ஆட்சி என்றாலும் மத்தியில் எந்த அரசு அமைந்தாலும், மாநில மக்களின் நலனுக்காக அந்த அரசுகளுடன் இணக்கமான உறவை வைத்திருப்பது எம்.ஜி.ஆரின் பார்முலா. தேர்தல் வரும்போதும் கூட்டணியில் அதை கடைப்பிடிப்பார். 

 

eps stalin



அதே எம்.ஜி.ஆர். பாணியைத்தான் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்திருப்பதிலும் அ.தி.மு.க. கடைப்பிடிக்கிறது. எம்.ஜி.ஆர். முதல்வரானபோது, கலைஞர் முதல் ஆறு மாதங்களை அவகாசமாக கொடுத்தார். ஆனால், எடப்பாடி முதல்வராக பொறுப்பேற்றதுமுதல் ஸ்டாலின் அவரை ஆட்சி நடத்தவே விடாமல் இடையூறு செய்கிறார். எடப்பாடி பதவியேற்றவுடன் ஸ்டாலின் ஒத்துழைப்பு கொடுத்திருந்தால் அவரும் எம்.ஜி.ஆர். ஆட்சியைக் கொடுத்திருப்பார். ஸ்டாலின் தொடர்ந்து அரசுக்கு சிக்கல் ஏற்படுத்தியதால்தான் எடப்பாடி அரசு மத்திய பா.ஜ.க. அரசுடன் கைகோர்க்க வேண்டியதாயிற்று'' என்றவர், தேர்தல் களம் பற்றிய பார்வையை வெளிப்படுத்தினார். 

 

eps



"தற்போது நடைபெற்றுள்ள 22 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகளால் தொங்கு சட்டமன்றம் அமைந்தால் குதிரைபேரத்துக்கே வழிவகுக்கும். மக்கள் நலன் சார்ந்த முடிவுகள் எடுக்கப்பட்டால் நன்றாக இருக்கும். உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால் மக்கள் அடிப்படைத் தேவைகளுக்காக தவிக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், தேர்தலை நடத்தவிடாமல் நீதிமன்றம் சென்றது தி.மு.க.தான். அவர்கள் தேவைகளுக்கு தடைகேட்டு வழக்குப் போடுவதும், அவர்கள் தேவைக்கு உடனே தேர்தல் நடத்தவேண்டும் என்று கேட்பதும் நியாயமல்ல. அதேசமயம் எப்போது உள்ளாட்சித் தேர்தல் வந்தாலும் மக்கள் நல்ல பதிலை தருவார்கள். 

 

mgr



அ.தி.மு.க.வில் குடும்ப அரசியல் நடப்பதாக கூறுவது தவறு. அதற்கு சாட்சியாகத்தான் சாமானியரான எடப்பாடி முதல்வராகியிருக்கிறார். ஜெயக்குமாரின் மகனுக்கு ஜெயலலிதாவே பதவிகொடுத்தார். ஓ.பி.எஸ். மகனுக்கு வாய்ப்புக் கொடுத்ததும் அதன் அடிப்படையில்தான். அவரும் அ.தி.மு.க.வில்தானே இருக்கிறார். மோடிதான் அ.தி.மு.கவின் பொதுச்செயலாளர் என்று டி.டி.வி.தினகரன் கூறுவது தவறு. அ.தி.மு.க.வில் இருந்து ஓரங்கட்டப்பட்டவர்கள் அ.தி.மு.க.வை விமர்சிக்க தகுதியே இல்லாதவர்கள். இந்தத் தேர்தலில் டோக்கன் வித்தை பலிக்காது என பொறிந்தார். 

மேலும், "எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்குப் பிறகு அ.தி.மு.க. மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக கூறுவது தவறு. எம்.ஜி.ஆர். மரணத்துக்கு பிறகு கலைஞர்கூட கிண்டலடித்தார். பிறகு அ.தி.மு.க. இணைந்து வெற்றிபெறவில்லையா? அதுபோல ஸ்டாலினுக்கும் அ.தி.மு.க. பதிலடி கொடுக்கும். அ.தி.மு.க. தலைமை அலுவலகம் ஜானகி அம்மையார் பெயரில் இருந்தது. கட்சி தொடங்கியபோது அந்த கட்டிடத்தை கட்சிக்காக எழுதி வாங்கினார். அதை ஜெயலலிதா பாதுகாத்திருக்க வேண்டும். அ.தி.மு.க. அலுவலகத்தை புதுப்பிக்க வேண்டும் என்றபோது என்னிடமிருந்த பத்திரத்தை தலைமை நிலையச் செயலாளரிடம் கொடுத்துவிட்டேன். ஆனால், அதை சசிகலா என்ன செய்தார் என்பது எனக்கு தெரியாது. இந்தக் கட்டிடம் தற்போது யார் பெயரில் இருக்கிறது என்று தற்போது பொறுப்பில் இருப்பவர்கள் அறியவேண்டும். 

ஜானகி அம்மையார் உயிரோடு இருந்தபோது நான் டீன்ஏஜ் பையன். அப்போது எனக்கு அரசியல் ஆசை வரவில்லை. ஆனால், இப்போதும் நான் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராகத்தான் இருக்கிறேன். கட்சித் தலைமை அழைத்தால் பிரச்சாரத்துக்குச் செல்வேன். எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட இயக்கம் அழிந்துவிடாமல் பாதுகாக்க நிச்சயமாக பணியாற்றுவேன்''’என்றார்.
 

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.