Skip to main content

கூட்டணியில் பிளவா? காங்கிரஸ் பதில்! 

Published on 22/06/2018 | Edited on 23/06/2018
mkstalin-thirumavalavan-kamal-rahul


ராகுல்காந்தி - கமல் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை எழுப்பியிருக்கிறது. இந்த சந்திப்பு புதிய கூட்டணியை உருவாக்கும் என்றும், அதில் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட மேலும் சில கட்சிகளை இணைக்கும் முயற்சிகள் நடைபெறுவதாக செய்திகள் வெளியாகின.  

இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி:- 
 

இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு. சாதாரண சந்திப்பு. இதனை பெரிதுப்படுத்த தேவையில்லை. ஒரு அரசியல் கட்சித் தலைவர், இன்னொரு அரசியல் கட்சித் தலைவரை சந்திப்பதில் என்ன இருக்கிறது. இந்த சந்திப்புக்கு அரசியல் சாயம் பூசத் தேவையில்லை. 

 

 

 

இரண்டு அரசியல் கட்சித் தலைவர்கள் சந்திக்கும்போது அரசியல் குறித்துதான் பேசுவார்கள். வேறென்ன பேசுவார்கள். தமிழகத்தில் நடக்கும் பிரச்சனைகள் இந்திய அளவில் பேசப்படுகிறது. ஆகையால் தமிழக பிரச்சனைகள் குறித்து ராகுலும் கமலும் பேசியிருப்பது சாதாரண விஷயம்தான். திருமாவளவன் ராகுல்காந்தியை சந்திப்பது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே திருமாவளவன் ராகுலை சந்தித்திருக்கிறார். தற்போதைய சந்திப்பும் மரியாதை நிமித்தமானதுதான். 
 

இந்த சந்திப்புகள் புதிய கூட்டணியை உருவாக்குமா என்ற அளவுக்கு தற்போதைக்கு யோசிக்க வேண்டியதில்லை. தேர்தல் கால பிரச்சனைகளை தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்வார்கள். இரண்டு அரசியல் கட்சித் தலைவர்கள் சந்திப்பு தேர்தலை நோக்கியே போக வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது.

 

sonia


 

ராம்விலாஸ் பாஸ்வானுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் அவ்வளவு நெருக்கமான தொடர்புகள் இருந்தது. இன்றும் இருக்கிறது. ஆனால் அது தேர்தல் கூட்டணியாக மாறவில்லை. மம்தா பானர்ஜிக்கும் சோனியா காந்திக்கும் நெருக்கமான நட்பு இன்றும் இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் மேற்கு வங்கத்தில் தனித்தனியாகத்தான் தேர்தல் களத்தை சந்தித்தது. 

 

 

தனிப்பட்ட சந்திப்பு, கருத்து பரிமாற்றங்கள் என்பது வேறு. அதையே தேர்தல் களத்திற்கு கொண்டு செல்வது என்பது வேறு. திமுக - காங்கிரஸ் கூட்டணி எப்போதும்போல் சுமூகமாகத்தான் உள்ளது. அதில் எந்தவித பாதிப்பும் இல்லை என்றார் உறுதியாக.

 

Next Story

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் உள்ளிட்ட 14 பேர் போட்டி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
14 contests including Thirumavalavan in Chidambaram Parliamentary Constituency

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை சிதம்பரம் தொகுதியில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆணிமேரி ஸ்வர்னா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக கூட்டணி தலைமையில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம், நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது.  மேலும் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளராக 6 பேரும் 8  சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் இறுதி வேட்பாளர் பட்டியல் 30-ந்தேதி வெளியிடப்படுகிறது. இன்னும் வேட்பாளர்கள் குறையும் என்று கூறப்படுகிறது.

Next Story

“காவிரி நீர் வேணுமா... ஈரோட்டில் கூட காவிரி ஓடுது பாருங்க...” - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதிலால் எழுந்த விமர்சனம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Oh Cauvery water...? Even in Erode, see the Cauvery running'- Criticism caused by EVKS Elangovan's response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், ''ஸ்டாலின் தலைமையில் அமைந்திருக்கின்ற கூட்டணி என்பது சாதி மதங்களைக் கடந்த கூட்டணி. மத வெறித்தனத்திற்கு அப்பாற்பட்ட கூட்டணி. மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரு நல்ல கொள்கைக்காக தான் இந்த கூட்டணி இருக்கிறது.

மற்ற கூட்டணிகளை எடுத்துக் கொண்டால் குறிப்பாக பாஜக கூட்டணியில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி, அதிமுக தலைமையில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி அவர்கள் கொள்கைக்காக ஒன்று சேரவில்லை. சில கோடி ரூபாய் பேரம் பேசி பெறுவதற்காக அந்த கூட்டணியில் இருக்கிறார்கள்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டேன் என்று சொல்கின்ற காங்கிரசுக்கு பத்து சீட்டுகள் கொடுத்தது நியாயமா என சீமான் கேள்வி எழுப்பி உள்ளாரே' எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த இளங்கோவன், ''இல்லை காங்கிரசினுடைய கொள்கையே ஒரு சொட்டு நீர் கூட கொடுக்கக் கூடாது என்பதுதான். மக்கள் குடிப்பதால் கெட்டுப் போயிருக்கிறார்கள். மக்களுடைய சிந்தை மாறி போயிருக்கிறது. அதனால் காங்கிரசை பொறுத்தவரை எங்களுடைய மகாத்மா காந்தியினுடைய கொள்கையே ஒரு சொட்டு மது தண்ணீர் கூட மக்களுக்கு கொடுக்கக் கூடாது என்பதுதான்'' என்றார்.

உடனே செய்தியாளர் 'காவிரி தண்ணீர்' என சொல்ல, ''காவிரி தண்ணீரா... காவிரி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஈரோட்டில் இருக்கின்ற காவிரி ஆற்றை பார்த்தீர்கள் என்றால் கூட, இன்னைக்கு பாருங்கள் இருக்கின்ற பாறை எல்லாம் மறைக்கும் அளவிற்கு தண்ணீர் போய்க் கொண்டிருக்கிறது. வேண்டிய அளவிற்கு தண்ணீர் தர கர்நாடகா தயாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கின்ற காரணத்தால் சில தடங்கல்கள் இருக்கிறது'' என்றார்.

காவிரி நீர் குறித்த கேள்விக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொடுத்த பதிலுக்கு சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.