Skip to main content

“படித்துக்கொண்டே மேயர் பொறுப்பையும் கவனிப்பேன்!” - ஆர்யா ராஜேந்திரன் சிறப்புப் பேட்டி..!

Published on 26/12/2020 | Edited on 26/12/2020

 

Interview with thiruvananthapuram 21 year old Mayor

 

கேரளாவில் நடந்த உள்ளாட்சித் தேர்தல், ஆளும் பினராய் விஜயனின் எல்.டி.எஃப். அணிக்கு, அக்னிப் பரீட்சைதான். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு, உள்ளாட்சித் தேர்தலைப் பதமாக எண்ணிப் பாய்ச்சலைக் காட்டியது எல்.டி.எஃப். அதே சமயம் எல்.டி.எஃப். அணியை ஒரு வழியாக்கிவிட வேண்டுமென்று காங்கிரசும் வியூகமெடுத்தது. அடுத்த சவாலாக மத்தியில் ஆளும் பா.ஜ.க.வும், எல்.டி.எஃப்பை வீழ்த்த துணைக்கட்சிகளை இணைத்துக்கொண்டும், கேரளத் தங்கக் கடத்தல் விவகாரம் போன்றவைகளை வலுவான ஆயுதமாகவும் பினராய் அரசுக்கு எதிராகப் பயன்படுத்தியது.

 

இதுபோன்று எல்.டி.எஃப். அணிக்கு, திரும்பிய பக்கமெல்லாம் கடும் நெருக்கடி. ஆனாலும் இவை அனைத்தையும் ஒரு பொருட்டாகக் கருதாத பினராய் விஜயனின் எல்.டி.எஃப். அணி, ஆட்சியின் சாதனையை முன் வைத்தே பிரச்சாரத்தைக் கொண்டுசென்றது.

 

இந்தத் தேர்தலில், எல்.டி.எஃப்-ன் உறுப்பு அணிகளான டி.ஒய்.எஃப்.ஐ., எஸ்.எஃப்.ஐ. உள்ளிட்ட அணிகள் தரைச்சக்கரமாய் சுற்றி தேர்தல் பணிகளை மேற்கொண்டிருக்கின்றனர். குறிப்பாக எல்.டி.எஃப். அணியின் வேட்பாளர்களில் 20 சதவீதம் பேர் இளைஞர் பட்டாளம்.

 

விளைவு, உள்ளாட்சித் தேர்தலில் முதன்மை ஸ்தானத்திற்கு வந்த எல்.டி.எஃப். அணி, குறிப்பாக மாநிலத்திலுள்ள 6 மாநகராட்சிகளில், ஐந்து மாநகராட்சியைத் தன் வசப்படுத்தியது. திருவனந்தபுரம் மாநகராட்சியின் மொத்தமுள்ள 100 வார்டுகளில் 55 வார்டுகள் எல்.டி.எஃப். அணியும், பா.ஜ.க. 35, காங்கிரஸ் 10 வார்டுகள் என்ற அளவில் கைப்பற்றியுள்ளன.

 

இதில் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராக யாரைத் தேர்வு செய்வது என்பது பற்றிய நிலைப்பாடு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு கூட்டத்தில் ஆய்வுக்கு வந்திருக்கிறது.

 

விவகாரத்தின்போது கட்சியின் சாதாரணத் தொண்டனாகப் பணியாற்றி சி.பி.எம்.-ன் மேல்மட்டப் பொறுப்புவரை வளர்ந்தவரும், துணிச்சலாக பிரச்சனைகளை அணுகுபவருமான (21 வயது கல்லூரி மாணவி) ஆர்யா ராஜேந்திரனை வரும் 28ஆம் தேதி மேயராக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

 

திருவனந்தபுரத்திலுள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. மற்றும் சட்டம் பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவிதான் ஆர்யா ராஜேந்திரன். இந்தத் தேர்தலின் மூலம், 21 வயதேயான 'இளம்பெண் மேயர்' என இந்தியாவின் பார்வையை இடது சாரிகள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.

 

வாடகை வீட்டில் வாழ்க்கை என்ற அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது மாணவி ஆர்யா ராஜேந்திரனின் குடும்பம். தந்தை ராஜேந்திரன் எலக்ட்ரீசியன் வேலை பார்க்கும் தினக்கூலி லேபர். தாய் ஸ்ரீலதாவோ எல்.ஐ.சி.யின் ஏஜெண்ட் என வேலைபார்த்தால்தான் சோற்றில் கைவைக்க முடியும் என்கிற குடும்பப் பின்னணியைக் கொண்டவர் மாணவி ஆர்யா ராஜேந்திரன்.

 

Interview with thiruvananthapuram 21 year old Mayor

 

நாம் அவரைத் தொடர்பு கொண்டபோது, பிசியான சூழலுக்கு மத்தியில் பேசத் தொடங்கினார். நம்முடன் பேசிய அவர், “வேலை பார்த்தால்தான் பாடு கழியும் குடும்பம் எங்களது. நான் 12 வயதிலேயே கம்யூனிஸ்ட், கொள்கைப் பிரச்சாரத்தில் கொடி பிடித்திருக்கிறேன். அப்போது சி.பி.எம்-ன் அங்கமான பாலசங்கத்தின் (சி.பி.எம்-ன் குழந்தைகள் அமைப்பு) மாநிலத்தலைவர். அப்போதிலிருந்தே கட்சிப் பயணம் தொடங்கியது. பின்பு பார்ட்டியின் உறுப்பினர். மாணவ அணியான எஸ்.எஃப்.ஐ. அடுத்து டி.ஒய்.எஃப்.ஐ. என்று பொறுப்புகளுக்குப் பிறகு தற்போது இந்திய கூட்டமைப்பின் மாவட்டப் பொறுப்பிலிருக்கின்றேன். எனக்கு எல்லாமே பார்ட்டிதான். கட்சியின் வேலைகள், மாணவர்களுக்கான பிரச்சனைகள் என நிறையச் செய்திருக்கேன். என்னுடன் பிறந்த அண்ணன் இஞ்சினியரிங் முடித்து இப்போது துபாயில் பணியில் இருக்கிறார்.

 

cnc


கட்சி என்மீது நம்பிக்கை வைத்து எங்களின் 47வது வார்டான முடவன்முகல் வார்டில் போட்டியிட வைத்தது. எங்கள் வார்டில் சி.பி.எம்., காங்கிரஸ், பி.ஜே.பி. சுயேட்சை என்று நான்கு முனை பலமான போட்டி. எனது மற்றும் எங்கள் பார்ட்டியின் செயல்பாடுகளால் 2,863 வாக்குள் பெற்று 549 வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றிபெற வைத்தார்கள் என் வார்டு ஜனங்கள்.

 

இந்தத் தேர்தல்ல எங்க பார்ட்டி எல்.டி.ஃஎப்.ஐ.யை இல்லாமல் பண்ணனும்னு காங்கிரஸ் ஒரு பக்கமும், மத்திய பி.ஜே.பி.அரசு, சி.பி.ஐ., ஐ.டி என்று விசாரணைத் துறையையும் ஏவியது. பல நெருக்கடிகள் கொடுத்தார்கள். பார்ட்டி இத்தனை நாளும் மேற்கொண்ட மக்கள் நலனுக்கான பணிகளின் ரிசல்ட்தான் இந்த அளவுக்கான வெற்றி. எதிர்க்கட்சிகளின் நெருக்கடிகளையும் தாண்டி மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து, கேரளாவில் இவ்வளவு பெரிய வெற்றியைக் கொடுத்தாங்க. பார்ட்டியின் துணையோடு கல்லூரியில் படித்துக் கொண்டே மேயர் பொறுப்பையும் கவனிப்பேன்” என்றார் நம்பிக்கையான குரலில்.

 

வரும் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான நுழைவுத் தேர்வில் உள்ளாட்சி மூலம் மெகா வெற்றியைப் பெற்றிருக்கிறது எல்.டி.எஃப்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Police register cheating case against producers of Manjummel Boys

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாளப் படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. பரவா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்திருந்தார். இப்படம் கொடைக்கானலில் நடந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தது. 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் கேரள இளைஞர்கள், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி அதிலிருந்து எப்படி மீள்கின்றனர் என்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

ad

சர்வைவல் த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் ரசிகர்கள் பாராட்டி வந்தனர். இப்படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலித்து மலையாள திரையுலகில் ரூ.200 கோடி கிளப்பில் இணைந்த முதல் படம் என்ற சாதனையை படைத்தது. இந்த நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான பரவா பிலிம்ஸ் பங்குதாரர் ஷான் ஆண்டனி, லாபத்தில் பங்கு தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக கேரளா அரூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் என்பவர் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “ மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்காக ரூ.7 கோடியை முதலீடு செய்தேன். பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர் ஷான் ஆண்டனி லாபத்தில் 40 சதவீதம் பங்கு தருவதாக கூறியிருந்தார். ஆனால் இதுவரை எனக்கு ஒரு ரூபாய் கூட பணம் தரவில்லை. லாபம் மட்டும் இல்லாமல் முதலீடு செய்த பணத்தை கூட திருப்பி தரவில்லை” என குற்றம் சாட்டியிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தின் தயாரிப்பாளர்களான சவுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகியோரின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக விளக்கம் கேட்டு தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் வுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகிய மூன்று பேர் மீதும் மரடு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எர்ணாகுளம் நீதிமன்ற உத்தரவின்படி வழக்கானது பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.