Skip to main content

“எடப்பாடி படு விவரம்ங்க..” -சிறப்பு நிதி பெறவிருக்கும் ஏழைமக்கள் எதிர்வினை! 

Published on 27/02/2019 | Edited on 27/02/2019

 

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, வட்டாரம், ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் வாழும் ஏழைத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு  சிறப்பு நிதியாக ரூ.2000 வழங்கும் என தமிழக அரசு அறிவித்திருக்கும் நிலையில், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள சுமார் 60 லட்சம் பேர் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படவிருக்கிறது. 
 

தமிழக அரசின் இந்தச்செயல் மிகவும் அபாயமரமானது என்று எச்சரிக்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். தேர்தலில் பணம் கொடுத்து வாக்குகளைப் பெறுவதில் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது தமிழகம். வரவிருக்கும் நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தல்களை மனதில் வைத்தே, வாக்காளர்களைக் கவர்வதற்காக பொங்கல் நிதி என்ற பெயரில் ரூ.1000 வழங்கிய எடப்பாடி அரசு, இப்போது ரூ.2000 தரப்போகிறது என்று குற்றம் சாட்டுகின்றன எதிர்க்கட்சிகள். 

 

People's opinion


 

கடும் நிதி நெருக்கடியில் உள்ள தமிழக அரசு,  ஏற்கனவே வாங்கிய கடனுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் மக்களின் வரிப்பணத்திலிருந்து வட்டியாகக் கட்டிவரும் நிலையில், ஆளும் கட்சியினர்,   அரசாங்க கஜானாவிலிருந்து மக்களுக்கு  வாரியிறைக்கின்றனர். 
 

தேர்தலின்போது மக்கள்தான் இறுதி எஜமானர்கள் என்பதால், அரசு காட்டுகின்ற தாராளத்துக்கு எதிர்வினை என்னவென்றறிய மக்களைச் சந்தித்தோம். 

பட்டி தொட்டிகளிலும், நகரங்களிலும் வயல்வெளிகள், தெருக்கள்,  தாலுகா அலுவலகங்கள் என எங்கு பார்த்தாலும் கையில் படிவங்களுடன் மக்கள் கூடி நிற்பதைப் பார்க்க முடிந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா – கூனம்பட்டியில், நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணிபுரியும் கிராமத்துப் பெண்களிடம்,  ஊரக வேலை பணித்தள பொறுப்பாளர் காளீஸ்வரி படிவத்தைக் காட்டி ஏதோ விளக்கினார். அம்மக்கள் அவரிடம் “என்ன தாயீ.. நெசமாவா.. ரெண்டாயிரம் பணம் அப்படியே கிடைச்சிருமா?” என்று ஏக்கத்துடன் கேட்டார்கள். 

 

People's opinion


 

காளீஸ்வரியிடம் முத்தம்மாள் என்ற பாட்டி “கவர்மென்ட்ல வேலை பார்க்கிறவனும் பாரம் கொடுத்திருக்கான்னு  பேசிக்கிட்டாங்க. மச்சி வீடு வச்சிருக்கவங்களும்  எங்களுக்கும் வேணும்னு நம்மகூட சேர்ந்து வாங்கப் பார்க்கிறாங்க. வசதியா இருக்கிறவங்க பண்ணுற கூத்துல நம்மள மாதிரி இல்லாதவங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைக்காம போயிருமோன்னு பயமா இருக்கு.” என்றார். 
 

சிவகாசி தாலுகா அலுவலக மரத்தடியில் படிவத்தை நிரப்புவதில் ஆர்வமாக இருந்தார்கள் மக்கள். சத்யா என்பவர் “எம்.ஜி.ஆரு.. ஜெயலலிதா அம்மா.. இவங்களைவிட ரொம்ப நல்லவரா இருக்காரு வாழப்பாடி..” என்று சொல்ல, “அய்ய.. அவரு வாழப்பாடி இல்ல.. எடப்பாடி.”என்று இடைமறித்த சந்தோஷக்கனி. “நாங்கள்லாம் எப்பவும் ரெட்ட இலைக்குத்தான் ஓட்டு போடுவோம். இந்தவாட்டி யாருக்குப் போடறதுன்னு தெரியாம இருந்தோம். இப்ப தெளிவாயிட்டோம்.” என்றார். 

 

People's opinion




இஸ்திரி போடுபவரான குமார் “அய்யா.. நானும் பாரம் கொடுத்திருக்கேன். மொதல்ல பணம் கணக்குல ஏறட்டும். யாரு கொடுத்தாலும் அது நம்ம பணம்தான். மக்களோட பணம் மக்கள்ட்ட வந்து சேருது. யாருக்கு ஓட்டுங்கிறது அந்த நேரத்துல மனசுல என்ன தோணுதோ அத வச்சித்தான். இல்லாதவனைக் காட்டிலும் இருக்கிறவன்தான் போட்டி போட்டு வாங்கப் பார்க்கிறான். இந்தமாதிரி நேரத்துலதான், எவ்வளவு பணம் இருந்தாலும், பிச்சைக்காரனைவிட கேவலமான நிலையில யார்யாரு இருக்கான்ங்கிறத தெரிஞ்சிக்க முடியுது.” என்றார். 

 

People's opinion


 

“எடப்பாடி படு விவரம்ங்க..” என்று சிரித்த விழுப்பனூர் லட்சுமி “பின்ன என்னங்க.. நம்ம மக்களைப் பத்தித்தான் தெரியும்ல. டிவில இருந்து மிக்ஸி கிரைண்டர் ஃபேன் வரைக்கும் எந்த ஆட்சில யாரு கொடுத்தாலும் வாங்கிக்கிருவாங்க. இப்ப எடப்பாடிக்கு காலம். அவரு காட்டுல மழை கொட்டுது. பார்க்கத்தானே போறோம்.  எடப்பாடி கொடுத்த ஆயிரம், ரெண்டாயிரமெல்லாம் ஓட்டாகுமா இல்லியாங்கிறத.” என்றார் அவரும் விவரமாக. 
 

உலகமென்னும் நாடக மேடையில், அரசியல்வாதிகள் தொடங்கி அடித்தட்டு மக்கள் வரையிலும்,  குறிப்பாக தேர்தல் நேரத்தில்,  வெகு சிறப்பாகவே நடிக்கின்றனர். 

 

 


 

Next Story

“பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Edappadi Palaniswami said Safe travel of passengers should be ensured

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்தப் பேருந்தின் நடத்துநரின் இருக்கை கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்தப் பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நேற்று திருச்சி நகரப் பேருந்து சென்று கொண்டிருக்கையில் ஒரு வளைவில் நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வெளியே விழுந்த சம்பவம் தமிழக மக்களிடம், குறிப்பாக அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, ஒரு சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான நிகழ்வின்போதே இனியாவது அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிப்பு செய்து, அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த நான் இந்த தி.மு.க அரசை வலியுறுத்தியிருந்தேன். ஆனால், மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடம் அரசு பேருந்து பற்றிய நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளன.

எனவே, இனியாவது இந்தத் திமுக அரசு விழித்துக் கொண்டு, அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை முன்பிருந்தது போல் குறைத்து புதிய பேருந்துகள் வாங்கவும், இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுமாறும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.