Skip to main content

பாஜக - அதிமுக கூட்டணி முறிவு; எடப்பாடியின் இறுதி முடிவா? - எஸ்.பி. லட்சுமணன்

Published on 27/09/2023 | Edited on 27/09/2023

 

 SP Laxmanan  | ADMK | BJP | Edappadi | Annamalai

 

தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்த தன்னுடைய பல்வேறு கருத்துக்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன்.

 

அண்ணா பெயரால் கட்சியை நடத்துகையில், அவர் குறித்து தவறான கருத்தை பேசும் ஒருவரை ஏன் எடப்பாடி நேரடியாக கேள்வி எழுப்பவில்லை. முன்னொரு காலத்தில், தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன், புத்தகத்தில் ஒரு தலைவரைப் பற்றி இரண்டு வரி எழுதியதற்கு கொதித்தவர் ஜெயலலிதா. எனவே, தலைவராக இருக்கும் எடப்பாடி இந்த விவகாரம் குறித்துப் பேசியிருக்க வேண்டும். இருந்தும், பின்னர் தலைமைக் கழகத்தின் முடிவால் கூட்டணியை முறித்துக் கொண்டதும் ஏற்றுக்கொள்ளக் கூடியது தான். ஆனால், ஜெயக்குமார் கூட்டணியே இல்லை என சொன்ன பின்பும், ஏன், சி.வி. சண்முகம் தொடங்கி நத்தம் விஸ்வநாதன் உள்பட ஆறு பேர் டெல்லிக்கு சென்றார்கள். அங்கு சென்று அண்ணாமலை குறித்து பேசிவிட்டு பின்னர் ஏன் அதனை மறைக்க வேண்டும். அண்ணாமலையை அடக்க காலக்கெடு கொடுத்துள்ளோம் என வெளிப்படையாக அறிவிக்கலாமே. எனவே, இதுபோன்ற செயல்கள் தான் எடப்பாடியின் தலைமைப் பண்பு குறித்து கேள்வி எழுப்புகிறது.

 

மேலும், இவர்கள் அறிவித்தது உறுதி முடிவு தானே தவிர இறுதி முடிவென்று ஏற்க முடியாது. ஏனென்றால், அண்ணாமலையால் தான் இவர்கள் கூட்டணி முறிந்தது. ஒருவேளை, மூன்று மாதங்கள் கழித்து வேறொருவரை பாஜக தலைவராக நியமித்தால், அதிமுக கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது. கூட்டணி இல்லை என ஜெயக்குமார் அறிவித்த பின்னரும், செல்லூர் ராஜு, ‘பாஜகவுடன் எந்தப் பிரச்சனையும் இல்லை... அண்ணாமலை தான் சிக்கல்’ என்றார். இதனால் இதனை இறுதி முடிவென்று ஏற்கவில்லை. அதேசமயம், இவ்வளவு பெரிய முடிவை எடுத்ததற்கு அ.தி.மு.க.வை பாராட்ட வேண்டும்.

 

வெறும் தொகுதிப் பங்கீடு காரணமாக இந்த கூட்டணி பிரிந்தது என சொல்ல முடியாது. மாறாக, அண்ணாமலை பலமுறை ஜெயலலிதாவை சிறுமைப்படுத்தி பேசி வந்ததும், ஊழல்வாதி எனவும் கூறி வந்தார். தோழமை வைத்திருக்கையில் இதுபோன்று பேசலாமா, காங்கிரஸ் - தி.மு.க. கட்சிகள் உண்மைகளை பேசிக் கொள்வார்களா? தொடர்ந்து இதுபோன்று முதிர்ச்சியற்ற விதமாக, அடிமையாக இருந்தார் என்றும் மதுரை மாநாட்டையும் தோழமை கட்சியாக இருந்துகொண்டு அவர் விமர்சித்து வந்தார். இத்தனைக்கும் பிறகு தலைமை பொறுப்பில் இருக்கும் எடப்பாடி எப்படி பொறுத்துக்கொள்வார். இந்த விவகாரம் நாடகமா இருக்கும் என நான் நினைக்கவில்லை. மேலும், கிருஷ்ணசாமி இன்று கூட்டணியை இணைக்கும் வகையில் பேசியுள்ளது ஒரு வகையில் அவர்களுக்கு சரியென தோன்றலாம். ஆனால், இவ்வளவு நாளாக அண்ணாமலை பேசியதற்கு எந்த கருத்தும் தெரிவிக்கவில்லையே என எடப்பாடி கேட்டால் என்னவாகும். எனவே, கொள்கை முரண்பாட்டால் இந்த கூட்டணி முறியவில்லை. அண்ணாமலையால் தான் இந்தக் கூட்டணி முறிந்தது.

 

இந்த முடிவுகளைத் தொடர்ந்து பாஜகவால் தமிழ்நாட்டில் மூன்றாவது அணி உருவாகவும் வாய்ப்புள்ளது. அதேசமயம், அ.தி.மு.க.வை சிதைக்க பாஜக மத்திய ஏஜென்சிகளை பயன்படுத்தியும், எடப்பாடி அதனை தைரியமாக எதிர்கொண்டு தனது நிலையில் உறுதியாக இருந்தார் என்றால் தொண்டர்கள் மத்தியில் அவரின் செல்வாக்கு அதிகரிக்கலாம். கூட்டணி முறிவால், சிறுபான்மையினர் வாக்குகள் முழுவதும் அ.தி.மு.க.விற்கு மாறும் என சொல்லவில்லை. ஏனென்றால், எப்பொழுது வேண்டுமானாலும் எடப்பாடி தனது நிலையில் இருந்து மாறலாம் என்று சிறுபான்மையினர்களுக்கு தெரியும். உதாரணத்திற்கு, ஏற்கனவே 20% சிறுபான்மையினர் அதிமுகவை ஆதரித்தால், இதன் பின் கூடுதல் பத்து சதவீதம் உயரலாம். 

 

தற்போது எடுத்த முடிவு குறித்து வெளியில் விவாதிக்க வேண்டாம் என்ற அறிக்கை முன்பே கொடுத்ததாகத் தெரிகிறது. ஆனால், இதுபோன்று கூட்டணி பிரிவு நடக்கையில் இரு தரப்பும் தங்கள் கருத்துகளை தெரிவிப்பதும் இயல்பு தான். இது நாள் வரை அண்ணாமலை பலம் என நினைத்து செயல்பட்டுவிட்டு இன்றைக்கு கூட்டணி விவகாரம் குறித்து தேசியத் தலைமை முடிவெடுக்கும் என்கிறார். அ.தி.மு.க. இந்தியளவில் இரண்டாவது மிகப்பெரிய கட்சி என்பதும் உண்மை தான். எனவே, இது பா.ஜ.க.விற்கு ஒரு மிகப்பெரிய இழப்பு. ஆனால், 6 பேரை டெல்லிக்கு அனுப்பி எடப்பாடி தவறு செய்துவிட்டார். மாறாக, தைரியமாக ஆமாம் அண்ணாமலை குறித்து புகாரளிக்க தான் சென்றோம் எனக் கூறியிருந்தால், தொண்டர்கள் மத்தியில் பலம் அதிகரித்திருக்கலாம். மேலும், அண்ணாமலை இனிமேல் விமர்சிப்பதை நிறுத்துவார் என்றும் சொல்ல முடியவில்லை. தேசியத் தலைமையின் நிலைப்பாட்டை பொறுத்துதான் முடிவு செய்ய முடியும். கூட்டணி முறிவு எடப்பாடியின் துணிச்சலான முயற்சி என்று சொன்னாலும், மாநில அரசின் மூலமும் வரும் அழுத்தங்களால் அவருக்கும், முன்னாள் அமைச்சர்களுக்கும் உள்ளூர இதயத் துடிப்பு சற்று அதிகம் இருக்கும். 

 

அதே சமயத்தில், அதிமுகவின் கூட்டணி முறிவு. திமுக - காங்கிரஸ் கூட்டணியிடமும் சில சலசலப்பை ஏற்படுத்தும். ஏன், சில கட்சிகள் அதிமுகவை அணுகலாம் என்று கூட சிந்திக்கலாம். ஏற்கனவே, இ.ந்.தி.யா. கூட்டணி வலிமை பெறுவது பாஜகவை தொய்வடைய வைத்துள்ளது. இந்நிலையில், அதிமுக விலகியது அவர்களுக்கு சரிவு தான். அதனால், அதிமுக பெருமளவு வெற்றி பெறும் என்றும் உறுதியளிக்க முடியாது. ஆனால், இந்த முடிவு எடப்பாடியை உயர்த்தும் எனலாம். அதிலும், இத்தனை தொண்டர்களுக்கு மதிப்பளித்து எடுத்த முடிவாகவே நான் பார்க்கிறேன். எனவே, இந்த முடிவினை நாடகமாக பார்க்கவில்லை.

 

முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்க்கில் காணலாம்...

 


 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

''அமலாக்கத்துறையை வைத்து தேர்தலுக்கு பணம் வசூலிக்கும் பாஜக''-முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி குற்றச்சாட்டு 

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

former MLA Balabharti accused of collecting money for elections using the enforcement department

 

திண்டுக்கல்லை சேர்ந்த மருத்துவரிடம் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் லஞ்சம் பெற்ற புகாரில் கைதுசெய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் திண்டுக்கல்லில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம், முன்னாள் மாவட்டச் செயலாளர் பாண்டி ஆகியோர் உடனிருந்தனர்.

 

செய்தியாளர்களிடம் பேசுகையில், ''வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேவையான பணத்தை வசூலிப்பதற்காக பாஜக அமலாக்கத்துறையை தற்பொழுது பயன்படுத்தி வருகிறது. அமலாக்கத்துறை மத்திய அரசின் அடியாள் துறையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மதுரையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அனுமதி அளிக்காமல் துணை ராணுவத்தை அலுவலகம் முன்பு கொண்டுவந்து நிறுத்தியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. காவல்துறையினர் சோதனை செய்ய அனுமதி அளிக்க முடியாது எனக் கூறுவதற்கு இவர்களுக்கு என்ன உரிமை உள்ளது. விசாரணை செய்ய காவல்துறையினர் வருகை தந்தால் அவர்களை அனுமதிப்பது தான் ஜனநாயக முறையாகும். ஆனால் அனுமதிக்க முடியாது என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

 

இது அராஜக போக்காகும். உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படக்கூடிய  அமலாக்கத்துறை, பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்த உத்தரவின் பேரில் தான் நான் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன் என அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி டாக்டர் சுரேஷ் பாபுவிடம் பேசியுள்ளார். உள்துறை அமைச்சகத்திற்கு சம்பந்தம் இல்லாமல் ஒரு அமலாக்கத்துறை அதிகாரி எப்படி இவ்வாறு பேச முடியும். ஆகவே உள்துறை அமைச்சகத்திற்கும் இந்த சம்பவத்திற்கும் சம்பந்தம் உள்ளது. ஆகவே தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை, தமிழக காவல்துறை இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

இது சாதாரண விஷயம் இதனை அரசியல் ஆக்காதீர்கள் லஞ்சம் வாங்குவது என்பது அனைத்து துறைகளிலும் உள்ளது என பொதுப்படையாகக் கூறி வருகிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. மத்திய அரசையும், அமலாக்கத்துறையும் காப்பாற்றும் விதமாக பேசி வருகிறார். மூன்று கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதை நியாயப்படுத்தும் வகையில் பேசி வருகிறார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தேர்தல் செலவுக்காக அமலாக்கத்துறையை பாஜக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை. மேலும் மாநில அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவிற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது'' என்று கூறினார். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

தேர்தல் முடிவு எதிரொலி- 'இந்தியா' கூட்டணி வெளியிட்ட திடீர் அறிவிப்பு

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

Election result reverberation - sudden announcement made by 'India' alliance

 

தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டமாக தேர்தல்கள் நடந்து முடிந்தது. தொடர்ந்து தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில் மிசோரத்தை தவிர்த்து மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

 

முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் காலை 11 மணி நிலவரப்படி தெலுங்கானாவில் 63 இடங்களில் காங்கிரஸ் முன்னிலையிலும், பிஆர்எஸ் 42 இடங்களிலும், பாஜக  9 இடங்களிலும், மற்றவை 5 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

 

மத்தியப் பிரதேசத்தில் பாஜக 154 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், காங்கிரஸ் 72 இடங்களிலும் மற்றவை 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. ராஜஸ்தானில் பாஜக 106 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், காங்கிரஸ் 76 இடங்களிலும், மற்றவை 12 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சத்தீஸ்கரில் 45 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ள நிலையில் காங்கிரஸ் 43 இடங்களில் முன்னிலையில் உள்ளது. நாளை மிசோரம் மாநில வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

 

5 மாநில தேர்தல் முடிவுகள் அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்குமா அல்லது இல்லையா என்பது தொடர்பான கருத்துக்கள் எழுந்து வருகிறது.  5 மாநில சட்டப்பேரவை தேர்தல் காரணமாக 'இந்தியா' கூட்டணியின் ஆலோசனைக் கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் டிசம்பர் 6 ஆம் தேதி 'இந்தியா' கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பை மல்லிகார்ஜுன கார்கே கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் நடைபெறும் இக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வார் எனவும் கூறப்படுகிறது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்