Skip to main content

சோபியா திடீர் ஆவேசத்தில் கத்திய பெண்ணல்ல; அவர் அன்றே அப்படி... 

Published on 05/09/2018 | Edited on 05/09/2018

 

 

இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் சோஃபியா என்ற ஆராய்ச்சிப் படிப்பு மாணவி பா.ஜ.க.வின் தமிழக தலைவர் தமிழிசை முன்பு “பாசிச பாஜக ஆட்சி ஒழிக” என முழக்கமிட்டார். கீழே இறங்கி வந்து விமான நிலையத்திலும் இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது.விமானத்தில் கோஷமிட்டதற்காக அவர் கைது செய்யப்பட்டார். இதற்கு தமிழ்நாடு முழுவதிலுமிருந்து எதிர்ப்புகள் கிளம்பின. ஆளும் கட்சியைத்தவிர அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் இருக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறைக்கு செல்லும்முன் நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில் அவர் உடல்நலமின்றி இருக்கிறார் என தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின் நிபந்தனையற்ற ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட நாளன்று “பாசிச பாஜக ஆட்சி ஒழிக” என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இருந்தது என்பதும், அவர்மீது  இ.அ.ச. 285/18 மற்றூம் 290, 75(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 


28 வயதான சோபியாவின் முழுபெயர் லூயிஸ் சோபியா. அவரது அப்பா ஏ.ஏ. சாமி அரசு மருத்துவமனை மருத்துவராகவும், அம்மா மனோகரி தலைமை செவிலியராகவும் இருந்து ஓய்வு பெற்றவர்கள். கனடாவிலுள்ள மான்ட்ரீல் பல்கலைகழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் இவர் இயற்பியல் மற்றும் கணிதத்தில் எம்.எஸ்.சி பட்டம் பெற்றுள்ளார். இவருக்கு ஒரு சகோதரர் உள்ளார்.
 

இவர், தமிழிசையைப் பார்த்து திடீரென ஆவேசமாக கத்திவிட்டார் என பலரும் கூறுகின்றனர். ஆனால் இவர் அப்படி செய்யவில்லை. முழக்கமிடும் முன்னரே தனது ட்விட்டர் பக்கத்தில் “நான் இப்போது தமிழிசையுடன் விமானத்தில் இருக்கிறேன். எனக்கு இப்போது எனக்கு “பாசிச பா.ஜ.க. ஆட்சி ஒழிக” என கத்த வேண்டும் போல் உள்ளது, இதற்காக என்னை விமானத்திலிருந்து இறக்கிவிட்டுவிடுவார்களோ” என ட்விட் செய்துள்ளார். அதன்பின்பே முழக்கமிட்டுள்ளார். இதற்குமுன் ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது, ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த விரிவான அவரது கட்டுரைகள் ‘தி வயர்’ என்ற ஆங்கில பத்திரிகையில் வெளியானது.
 

 

 

பெரியார் சிலைகளை உடைப்போம் எனக்கூறிய ஹெச்.ராஜாவையும், பெண்களை இழிவாக பேசிய எஸ்.வி.சேகரையும் கைது செய்யாமல், இவரை அதுவும் இவ்வளவு வேகத்தில் கைது செய்திருப்பதைப் பார்த்தால் அவர் கூறியது உண்மைதான் என தோன்றுகிறது. விமானத்தினுள் இன்னொரு பயணிக்கு தொல்லை கொடுத்ததால் அவர் கைது செய்யப்பட்டது சரி என பாஜக ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியின் மாநில தலைவர் அவர், அவர் முன் மத்திய அரசின் மீதான அதிருப்தியையே அவர் வெளிப்படுத்தியுள்ளார் என்று பெரும்பாலான தலைவர்கள் ஆதரவு அளிக்கின்றனர். மேலும் தூத்துக்குடியை சேர்ந்த அவர், அங்கு ஸ்டெர்லைட் பிரச்சனையில் அரசு நிகழ்த்திய கொலைகளை எப்படி மறக்க முடியும்? இந்த குறிப்பிட்ட சம்பவம் எப்படி இருந்தாலும், பொதுவாக இந்த அரசுகளின் பாரபட்ச கைது நடவடிக்கைகளைப் பார்க்கும்போது சோபியா முழக்கமிட்ட வார்த்தைகள் உண்மை என்றே படுகிறது. அது மாநில அரசுக்கும் பொருந்துமென்றே தோன்றுகிறது. 

 

 

 

 

 

Next Story

'தொகுதிக்கு எதுவும் செய்யலன்னா கல்லால் கூட என்னை அடிங்க' - தமிழிசை பிரச்சாரம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
'Hit me even with a stone if you don't do anything for the constituency'-Tamil campaign

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஏற்கெனவே கோடைக்கால வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், தேர்தல் பரப்புரைகள் இன்னும் அனலைக் கூட்டியுள்ளது. பல இடங்களில் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக சார்பில் தென் சென்னையில் போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜன் தொடர்ந்து பல்வேறு இடங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், சோழிங்கநல்லூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தமிழிசை சௌந்தரராஜன் அங்கிருந்த பெண்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ''நான் வந்து சும்மா ஓட்டு கேட்டு விட்டுப் போகின்ற ஆளில்லை. உங்கள் சமுதாயத்தையும் உயர்த்த வேண்டும் என நினைக்கிற ஆள். அதனால் எனக்கு வாய்ப்பு கொடுங்கள். ஒருவேளை நான் சரியா செய்யவில்லை என்றால் என்னிடம் கேள்வி கேளுங்கள். என்னை அடிக்கக் கூட செய்யுங்கள். கல்லை எடுத்துக்கூட தூக்கி என்னை அடியுங்கள்'' எனப் பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

Next Story

'இதற்கு முதல்வரும் வைகோவும் பதில் சொல்லியே ஆக வேண்டும்' - தமிழிசை செளந்தரராஜன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
'The Chief Minister and Vaiko should answer this'-Tamilisai interview

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், பாஜக சார்பில் தென் சென்னையில் போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'ஈரோட்டில் மதிமுக எம்.பி இறந்தது எனக்கு மிகவும் வருத்தத்தை தருகிறது. வாரிசு அரசியல் ஜனநாயகத்தை படுகொலை செய்து விடும் என்று பிரதமர் சொல்லி இருந்தார். நன்றாக பணியாற்றிக் கொண்டிருந்த மதிமுக நாடாளுமன்ற உறுப்பினரை படுகொலை செய்திருக்கிறது இவர்களின் குடும்ப ஆசை, வாரிசு ஆசை. இதற்கு நான் வைகோவையும் குற்றம் சாட்டுவேன். ஸ்டாலினையும் குற்றம் சாட்டுவேன்.

ஒரு அனுபவம் மிக்கவருக்கு சீட்டு கொடுக்காமல் இப்படி நடந்துவிட்டது. வைகோ எதற்காக திமுகவை விட்டு வெளியே வந்தார். கலைஞர் ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று வெளியே வந்தார். ஆனால் இன்று அவருடைய மகனுக்கு சீட்டை கொடுத்துவிட்டு ஒரு அனுபவம் வாய்ந்த பாராளுமன்ற உறுப்பினரை படுகொலை செய்திருக்கிறார்கள். இது மன்னிக்க முடியாத குற்றம். நீட்டில் ஒரு தவறு நடந்த உடனே அதை உலக அளவில் வைத்து பிரபலப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தற்கொலை செய்வது தமிழகத்தில் தான் இன்று நடக்கிறது. மிகுந்த மன வேதனையாக இருக்கிறது. இதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலினும் பதில் சொல்ல வேண்டும். வைகோவும் பதில் சொல்ல வேண்டும். இது வாரிசு அரசியலின் அபாயகரம் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இதே திமுகவில் உதயநிதிக்கு கிடைக்கின்ற அங்கீகாரம் சாதாரண தொண்டருக்கு கிடைக்கிறதா?'' எனக் கேள்வி எழுப்பினார்.