Skip to main content

பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை என்று சொல்லவிட்டு வீடு போய் சேர முடியுமா?; குஜராத் மக்களுக்கு ஆழந்த அனுதாபங்கள்.." - காந்தராஜ் பேட்டி

Published on 08/12/2022 | Edited on 08/12/2022

 

பரக

 

குஜராத், இமாச்சல் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றிருந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் குஜராத்தில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ள பாஜக, இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியிடம் தோல்வி அடைந்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் இரண்டு மாநிலங்களிலும் பாஜகவே வெற்றிபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாகக் காங்கிரஸ் இமாச்சல் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்நிலையில் இந்த தேர்தல் முடிவுகள் குறித்து அரசியல் விமர்சகர் மருத்துவர் காந்தராஜ் அவர்களிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

 

மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இரண்டு மாநில தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இதில் குஜராத் மாநிலத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் வரலாற்று வெற்றியை பாஜக பெற்றுள்ளது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

 

தேர்தலுக்கு முன்னாடியே ரிசல்ட் குஜராத்தில் இப்படித்தான் வரும் என்று எதிர்பார்த்தது தானே, இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. பாஜகவுக்கு எதிராக வாக்கு அளிக்க நினைத்தால் கூட முடியாது, அதான் தேர்தலுக்குப் பிறகு பாஜக கண்டிப்பாக வெற்றிபெறும் என்று சொன்னார்களே, அதுமாதிரி தான் நடந்திருக்கு. குஜராத்தில் பாஜகவுக்கு எதிராக யாராவது நினைத்தாலும் வாக்களிக்க முடியுமா? நான் பாஜகவுக்கு எதிராக வாக்களித்துள்ளேன் என்று வெளியே வந்து கூறினால் அவரால் வீட்டிற்குச் செல்ல முடியுமா? தங்களுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்று தெரிந்த எவரையும் ஓட்டுப்போடவே விடமாட்டார்கள். இதுதான் அங்கு நடந்திருக்கும். ஆனால் பத்திரிகைகளில் அதெல்லாம் வந்திருக்காது. அவங்க கையில்தான் எல்லாமே இருக்கிறதே.

 

இதற்குச் சின்ன உதாரணம் சொல்கிறேன், பெஸ்ட் பேக்கரி சம்பவத்தில் பலரை உயிரோடு கொளுத்தினார்கள். அப்போது அந்த சம்பவத்தில் உயிர் பிழைத்த பெண் நடந்த சம்பவத்தை முதலில் நீதிமன்றத்தில் கூறினார், ஆனால் அதன் பிறகு அவரே நீதிமன்றத்தில் அந்த மாதிரியான ஒரு சம்பவத்தை நான் பார்க்கவே இல்லை என்று மாற்றிக் கூறினார். அந்த மாதிரி அனைத்தையும் மாற்றும் வல்லமை அவர்களுக்கு உண்டு. குஜராத் என்பது ஆர்எஸ்எஸ் தாயகம். எனவே அவர்கள் என்ன நினைத்தாலும் செய்வார்கள்.அதை யாராலும் மாற்ற முடியாது. அவர்கள் நினைத்ததை எல்லாம் செயல்படுத்துவார்கள். 

 

மாநில தேர்தல் ஆணையமும் அவர்களுடையது; இந்தியத் தேர்தல் ஆணையமும் அவர்களுடையது என்ற நிலையில் முடிவு அவர்களுக்குச் சார்பாகத்தான் வரும். வாக்கு வித்தியாசத்தை பாருங்க, எப்படி ஜோதி பாசு அவர்களை எதுவுமே செய்ய முடியால் இருந்ததை போல் இவர்கள் இருக்கிறார்கள். எப்படி அங்கு மம்தா பானர்ஜி என்ற ஒருவர் வந்து அவர்களைக் காலி செய்தாரோ அதைப்போல இங்கும் ஒருவர் வருவார்; அதுவரை பொறுத்திருங்கள். அதுவரை குஜராத் மக்கள் காத்திருக்க வேண்டியதுதான். அந்த நாள் வரும் வரை குஜராத் மக்களுக்கு நம்முடைய அனுதாபங்கள். தொடர்ந்து யாருமே கஷ்டத்தில் இருக்கமாட்டார்கள்; எனவே அவர்களுக்கும் கூடிய சீக்கிரம் விடிவு காலம் வரும். 

 

நான் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே கூறியிருந்தேன். தேர்தல் முடிவுகள் என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதானே, எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்த 25, 30 இடங்களில் வந்திருப்பார்களா? இதுவே பெரிய ஆச்சரியம். இந்த அளவுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு எப்படி விட்டுக்கொடுத்தது என்றால், நாங்களும் தேர்தலை ஒழுங்கா நடத்தினோம் என்ற பேருக்காக இத்தனை இடங்களை எதிர்க்கட்சிகளுக்கு வழங்கியிருக்கிறார்கள் போல, தெளிவாக ஒன்றைச் சொல்கிறேன் மக்கள் வாக்களிப்பது வேறு, தேர்தல் ஆணையம் முடிவை அறிவிக்கிறது வேறு. இந்த தேர்தலில் முன் எப்போதும் இல்லாத வகையில் பிரதமர் மோடி நடைப்பயணம் எல்லாம் போய் இருக்கிறார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நான் எப்படி எல்லாம் கஷ்டப்பட்டேன் என்பதைக் காட்டிக்கொள்ளும் பொருட்டு இதைச் செய்துள்ளார்.

 

இந்த முடிவு பெரும்பாலும் அரசியல் அறிந்த யாருக்கும் பெரிய அதிர்ச்சியைக் கொடுக்காது. இந்த தேர்தல் முடிவில் எனக்குச் சிறிய அதிர்ச்சி என்றால் வழக்கமாக குஜராத் தேர்தல் முடிவுகள் என்பது ஆரம்பத்தில் எதிர்க்கட்சிகள் அதிகமாக வெற்றிபெறுவதைப் போல் காட்டி மதியம் இருவரும் சமம் என்பதைக் கொண்டு வந்து முடிவில் பாஜக வெற்றிபெற்றது என்று சொல்லுவார்கள். ஆனால் தற்போது எடுத்த எடுப்பிலேயே பாஜக வெற்றி பெற்றுள்ளது என்று கூறிவிட்டார்கள். இதுதான் இந்த முறை நடைபெற்ற புதிய ஆச்சரியமான விஷயம். மற்றபடி இந்த வெற்றி என்பது அனைவரும் எதிர்பார்த்த ஒன்றுதான். குஜராத் மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். 

 

 

Next Story

“2019ல் நம்பிக்கையோடு வந்தேன், 2024ல்...” - பிரதமர் மோடி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 PM Modi campaign and says he came with confidence in 2019 at assam

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளான தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

அந்த வகையில், மொத்தம் 14 தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன்படி, முதற்கட்ட தேர்தலானது வரும் ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தலானது ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டத் தேர்தலானது மே 7ஆம் தேதியும் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் உள்ள சில தொகுதிகளில் நடைபெறும் முதற்கட்ட தேர்தல் நாளை மறுநாள் (19-04-24) நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்திலும், வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அசாம் மாநிலத்தின் நல்பாரி மாவட்டத்தில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று(17-04-24) நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அதில் அவர், “இன்று நாடு முழுவதும் மோடியின் உத்தரவாதம் நடந்து கொண்டிருக்கிறது. மோடியின் உத்தரவாதத்திற்கு வடகிழக்கு பகுதியே சாட்சி.

70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை வசதிகள் வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தேன். அவர்களின் சிகிச்சையை எந்தவித பாரபட்சமும் இல்லாமல் பார்த்துக்கொள்வேன். பி.எம். கிஷான் யோஜனா திட்டத்தின் கீழ் இங்குள்ள விவசாயிகள் ரூ.1000க்கு மேல் பெற்றுள்ளனர். இப்போது, ​​பாஜக இந்தத் திட்டத்தைத் தொடர்வதாக அறிவித்துள்ளது, இதன் மூலம் அசாமின் விவசாயிகளுக்கு எந்தவித பாகுபாடும் இல்லாமல் உதவி மற்றும் அதிகாரம் அளிக்கிறது.

2014ஆம் ஆண்டில் எதிர்பார்ப்புடன் மக்களைச் சந்திக்க வந்தேன். 2019ஆம் ஆண்டில் நம்பிக்கையோடு வந்தேன். தற்போது 2024ல் உத்தரவாதத்தோடு வந்திருக்கிறோம். நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் அணுகி அவர்களுக்குத் தகுதியான வசதிகளை வழங்கத் தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவு செய்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்கு மேலும் 3 கோடி புதிய வீடுகள் கட்டித் தரப்படும். பாகுபாடின்றி அனைவருக்கும் அவை கிடைக்கும்” என்று கூறினார்.

Next Story

“பிரதமர் மோடி முதலில் கண்ணாடியில் தன்னை பார்க்க வேண்டும்” - மம்தா கடும் தாக்கு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Mamata says PM Modi should look at himself in the mirror

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளான தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

அந்த வகையில், 42 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில், ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், பகவான்கோலா மற்றும் பாராநகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மே 7 மற்றும் ஜூன் 1 அன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்கிடையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. இது காங்கிரஸ் தரப்பினரிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், தொகுதி பங்கீடு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸுடன் தொடர்ந்து  பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறிய காங்கிரஸ் கட்சிக்கும் மேலும் அதிருப்தி ஏற்படுத்தும் வகையில், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 42 வேட்பாளர்களை மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்தார்.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் தேதிகளைத் தேர்தல் ஆணையம் அறிவித்ததால், நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் - இடதுசாரிகள் கூட்டணி, பா.ஜ.க மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம், ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள மொயினகுரி பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி பேசுகையில், “ஊழல் புகார்களை விசாரிக்க பா.ஜ.க அரசு, 300 மத்தியக் குழுக்களை மேற்கு வங்காளத்துக்கு அனுப்பியது. ஆனால் அவர்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை. இப்போது, ​​பிரதமர் மோடி வங்காள மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டும். ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் மேற்கு வங்காளத்துக்கு வரவேண்டிய நிதி என்ன ஆனது? ஏழை மக்கள் இத்திட்டத்தின் கீழ் பணிபுரிந்தனர். ஆனால் ஊதியம் வழங்கப்படவில்லை. மேற்கு வங்காளத்தில் நடத்தப்பட்ட விசாரணைகள் குறித்த ஒரு வெள்ளை அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்.

திரிணாமுல் காங்கிரஸ் ஊழல் கட்சி என்று பிரதமர் கூறுகிறார். அவர் முதலில் கண்ணாடி முன்பு நின்று தன்னைப் பார்க்க வேண்டும். அவரது கட்சி கொள்ளையர்களால் நிரம்பியுள்ளது. பா.ஜ.க, மேற்கு வங்காளத்துக்கு எதிரான கட்சி. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மேற்கு வங்கத்தில் அனுமதிக்க மாட்டோம். திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமே வங்காளத்தில் பா.ஜ.கவை எதிர்த்துப் போராடுகிறது. மற்ற இரண்டு எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், பா.ஜ.கவுடன் இணைந்து செயல்படுகின்றன. நாங்கள் தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் இருக்கிறோம். ஆனால் வங்காளத்தில் மாநில நலனுக்காகத் தனித்து நிற்கிறோம். நாட்டைக் காப்பாற்ற திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும்” என்று கூறினார்.