Skip to main content

தொகுதிக்கு இவ்வளவு கோடியா ? எடப்பாடி கணக்கு

Published on 20/02/2019 | Edited on 04/03/2019

பாகிஸ்தானுடன் போர் நடத்தி எளிதாக ஜெயித்து அதன்மூலம் மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துவிடலாம். ஆனால் அ.தி.மு.க.வுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை என்பது அதைவிட கடுமையான யுத்தமாக இருக்கிறது'' என்கிறார்கள் பா.ஜ.க.வினர்.

epsஇத்தனைக்கும் கூட்டணிப் பேச்சுவார்த்தையை பிரதமர் மோடிதான் தொடங்கினார். அதன்பிறகு அமித்ஷா வசம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அதன்பிறகு நிர்மலா சீதாராமன் கைக்குப் போய் கடைசியில் பியூஷ்கோயல் பேச்சுவார்த்தை களத்திற்கு வந்தார். பியூஷ்கோயலும் எடப்பாடியும் மிகவும் நெருக்கமானவர்கள். எடப்பாடியிடமிருந்து எதைப் பெறவேண்டுமென்றாலும் மோடியும் அமித்ஷாவும் பியூஷ்கோயலிடம்தான் சொல்வார்கள். அதை முடித்துவிட்டு, பிரதிஉபகாரங்களையும் செய்து தருவார். ஆனாலும் கூட்டணி விவகாரத்தில் இறுதி முடிவுக்கு உடனடியாக வரமுடியவில்லை. மோடி டென்ஷனடைந்தார். கன்னியாகுமரியில் நடைபெறவிருந்த பொதுக்கூட்டத்தை மார்ச் மாதம் 1-ஆம் தேதி மாற்றியமைத்தார். அதற்குள்ளாவது கூட்டணிப் பேச்சுவார்த்தையை முடியுங்கள் என மோடி திட்டியதன் விளைவாக பியூஷ்கோயல் சென்னைக்கு பறந்துவந்தார் என விளக்குகிறார்கள் பா.ஜ.க.வினர்.

பியூஷ்கோயல் வருகையை அறிந்ததும் தனது ஆபத்பாந்தவர்களான ஜக்கிவாசுதேவையும் கேரள கவர்னர் சதாசிவத்தையும் தொடர்புகொண்டார் எடப்பாடி. ஜக்கி, மோடியிடம் பேசினார். சதாசிவம், அமித்ஷாவிடம் பேசினார். அதன் தொடர்ச்சி யான ஏற்பாட்டில் கொங்கு மண்டல தொழிலதிபரான பொள்ளாச்சி மகாலிங்கத்தின் விருந்தினர் மாளிகையில் பியூஷ்கோயல், அ.தி.மு.க.வினரை சந்திக்க தயாரானார். அதற்குமுன், தமிழக பா.ஜ.க.வினருடன் ஒரு குட்டி ரவுண்டு பேச்சுவார்த்தையை நடத்தினார் பியூஷ். அதில் பா.ஜ.க. கொங்குமண்டலத் தில் அதிக இடங்களில் போட்டியிட்டால் தான் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியைப் பயன்படுத்தி வெற்றிபெற முடியும். அத்துடன் மோடியின் பொதுக்கூட்ட ஸ்பாட்களான மதுரை, திருப்பூர், கன்னியாகுமரி கட்டாயம் வேண்டும். பா.ஜ.க.வை பாராளுமன்றத்தில் இழிவாகப் பேசிய அன்வர் ராஜாவுக்கு ராமநாதபுரத்தில் சீட் கொடுக்கக்கூடாது. பா.ஜ.க. தொண்டர்கள், தேர்தல் வேலையை ஆரம்பித்து விட்டார்கள். தென்சென்னையில் பா.ஜ.க.வின் கணக்கை தொடங்கவேண்டும். கோவை நாம் வலுவாக உள்ள இடம். கோவை இல்லையென்றால் பொள்ளாச்சி, திருச்சி அல்லது தஞ்சாவூர் மற்றும் கிருஷ்ணகிரி, எச்.ராஜாவுக்காக சிவகங்கை என பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட தொகுதிகளை பியூஷ்கோயலிடம் பட்டியலிட்டனர் பா.ஜ.க.வினர்.

"இதைப்பற்றிப் பேச அ.தி.மு.க.விலிருந்து யார் வருகிறார்கள்' என பியூஷ்கோயல் கேட்டபோது, பியூஷின் நல்ல நண்பரான எடப்பாடி, முன்னாள் நண்பரான ஓ.பி.எஸ்., ஏற்கனவே பியூஷிடம் பேச்சுவார்த்தை நடத்திய தங்கமணி, வேலுமணி... இவர்களுடன் பா.ம.க.விடம் பேசிவரும் கே.பி.முனுசாமி ஆகியோர் பொள்ளாச்சி மகா லிங்கத்தின் விருந்தினர் மாளிகைக்கு வந்தனர். முதல் பிரச்சினையாக பாண்டிச்சேரி எடுத்துக்கொள்ளப்பட்டது. பா.ம.க.விடம் கூட்டணி பேசிய கே.பி.முனுசாமி பாண்டியை பா.ம.க.விற்கு தருவதாக வாக்குறுதியளித்தார். ஆனால் என்.ஆர்.காங்கிரஸ் ரங்கசாமி நேரடியாக எடப்பாடியை சந்தித்தார்.

""பா.ம.க.விற்கு புதுச்சேரி வேண்டாம். அது ரங்கசாமி கட்சிக்குத்தான். பா.ம.க.விற்கு பாண்டி வேண்டுமென்று அடம் பிடித்தால் அவர்கள் கேட்ட ராஜ்யசபா சீட்டை ரங்கசாமிக்கு கொடுப்போம்'' என கறாராகச் சொல்லிவிட்டார் எடப்பாடி. இதற்கு ஓ.பி.எஸ். ஒன்றும் சொல்லவில்லை.
eps
""பா.ம.க., தி.மு.க.விடம் 5 எம்.பி. சீட், ஒரு ராஜ்யசபா கேட்கிறது. எங்களிடம் 6 சீட் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் கேட்கிறது'' என பா.ம.க.வுடன் நடந்த பேச்சுகளை பியூஷ்கோயலிடம் அ.தி.மு.க. விளக்க... அங்கிருந்தபடியே பியூஷ்கோயல், பா.ம.க. தரப்பிடம் பேசியதால் பேச்சுவார்த்தை நீண்டது. இறுதியில் பா.ம.க.விற்கு 4 சீட், ஒரு ராஜ்யசபா என உறுதியளிக்கப் பட்டது. அதன்பின் பியூஷ், எடப்பாடியிடம் தேர்தல் செலவுகள் பற்றிய திட்டத்தைக் கேட்டார்.

"நாங்கள் ஒவ்வொரு பாராளுமன்றத் தொகுதிக்கும் 30 கோடி ரூபாய் செலவு செய்ய திட்டமிட்டிருக்கிறோம். இதில் எங்கள் கட்சி சார்பில் போட்டியிடுபவர்கள் கூடுத லாக 6 கோடி ரூபாய் செலவு செய்வார்கள்'' என கூட்ட ணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் உட்பட மொத் தம் 1350 கோடி ரூபாய் அ.தி.மு.க.வின் தேர்தல் பட்ஜெட். இடைத்தேர்தலை சந்திக்கும் 20 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றிபெற்ற தொகுதிகள். "அந்தத் தொகுதிகளுக்கு ஏப்ரல் மாதம் கட்டா யம் தேர்தல் நடத்துவோம்' என மதுரை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் கமிஷன் உத்தரவாதம் அளித்துள்ளது. ஆட்சி யைக் காப்பாற்ற வேண்டுமானால் அதற் கும் செலவு செய்ய வேண்டும் என எடப்பாடி விளக்கினார். பா.ம.க. தரப்பில் தொகுதிக்கு 50 சி பேசப்பட்டது.

""சட்டமன்ற இடைத்தேர்தலில் எங்கள் கட்சிக்கு சீட் இல்லை. அதில் எங்கள் வாக்குவங்கியை அ.தி.மு.க. பயன்படுத்தி வெற்றி பெறுகிறது. எனவே கூடுதல் தொகை வேண்டும்'' என பா.ம.க. தரப் பில் கேட்கப்பட்டது. பா.ம.க.வைப் போலவே தே.மு.தி.க.விடம் பேசப்பட்டது. அவர்கள் மதுரை, மத்திய சென்னை, கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளைச் சொன்னார்கள். அவர்களுக்கு மூன்று சீட் + தேர்தல் செலவு என முடிவு செய்யப்பட்டது. அ.தி.மு.க. தரப்பில் கிருஷ்ணகிரியில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரான கே.பி.முனுசாமி போட்டியிடுகிறார். கரூரில் பாராளுமன்ற துணை சபாநாய கரான தம்பிதுரை போட்டியிடுகிறார். திருவள்ளூரில் அ.தி.மு.க. மக்களவைத் தலைவர் வேணுகோபால், தென் சென்னையில் மைத்ரேயன் அல்லது அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன் களமிறங்குவார்கள். ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் தேனி தொகுதியில் போட்டியிடுகிறார்.

திருப்பூரிலும் கோவையிலும் அ.தி.மு.க. போட்டியிட ஆர்வமாக உள்ளது. பொள்ளாச்சியை வேண்டுமானால் பா.ஜ.க. எடுத்துக்கொள்ளட்டும். அதேபோல் திருச்சியை யும் தரமுடியாது என லிஸ்ட் படிக்கப்பட்டது. எனினும் பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் முடிவு செய்யாததால் பியூஸ் கோயல் புறப்பட்டுச் சென்றார். கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிவடைந்தால் வேலூர் சிறையில் உள்ள ராஜீவ் கொலையாளிகள் விவகாரம் உட்பட தமிழகத்தின் பல உணர்வுப்பூர்வ விவகாரங்களில் புதிய அறிவிப்புகளை மார்ச் 1-ஆம் தேதி கன்னியாகுமரிக்கு வரும் மோடி அறிவிக்கவுள்ளார் என்கிறது பா.ஜ.க. வட்டாரம்.

இன்றைய அ.தி.மு.க., எடப்பாடி தலைமையிலான கொங்கு வேளாளர் அ.தி.மு.க., தினகரன் தலைமையி லான முக்குலத்தோர் அ.ம.மு.க. என பிரிந்து கிடக்கிறது. அ.தி.மு.க. போட்டியிடாத பா.ஜ.க. உட்பட கூட்டணிக் கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளில் அ.தி.மு.க. வாக்கு கள் அ.ம.மு.க.வுக்குப் போகலாம் என கவலைப்படுகிறார் கள் அ.தி.மு.க.வினர். அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைக்காக அமித்ஷாவின் தமிழக வருகையால் பரபரப்பாகியுள்ளது அ.தி.மு.க.-பா.ஜ.க. முகாம்.



 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.