Skip to main content

சிக்ஸரா? விக்கெட்டா? கதிகலங்கும் கடம்பூர் ராஜூ! 

Published on 18/11/2020 | Edited on 18/11/2020
ddd

 

கடந்த 2011 தேர்தலின்போது கோவில்பட்டித் தொகுதியில் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வானவர் கடம்பூர் ராஜூ. ’’ஜெ.வின் அமைச்சரவையில் இடம் பிடிப்பதற்காகப் பிரம்மப்பிரயத்தன முயற்சிகளை மேற்கொண்டாலும், அது கனவாகவே போனது. 2011-ஆம் ஆண்டின் அமைச்சர் கனவு 2016-ல்தான் நிஜமானது.

 

அமைச்சர், தொகுதிக்கு நல்ல திட்டங்களைக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் மக்கள்நலப் பணிகளை மேற்கொள்ளாவிட்டாலும் தொகுதியின் பிரதானப் பணிகளைக்கூடச் செய்யவில்லை. தொழிலாளர்கள், சிறு குறு தொழில்களைக் கொண்ட மாவட்டத்தின் குறிப்பிடும்படியான கோவில்பட்டி நகரின் அடிமட்டத் தேவையான குடிதண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்குகிற வகையில் 2016-17 நடப்பாண்டுகளிலேயே கொண்டுவரப்பட்ட இரண்டாவது பைப் லைன் திட்டம் இன்றுவரை செயல்பாட்டிற்கு வரவில்லை. நகரின் உட்புறச் சாலைகள் சீரமைக்கப்படவில்லை என்பது மக்களின் ஆதங்கம்.

 

ddd

 

""கோவில்பட்டியின் மேற்கு எல்லைப் பகுதியிலிருக்கும் கதிரேசன் மலையில் பொழியும் மழையால் வெள்ளமாகப் பாய்ந்துவரும் தண்ணீர், நீர்வரத்து ஓடையின் வழியாக ஏ.கே.எஸ். தியேட்டர் வழியாக வந்து மெயின்ரோட்டைக் கடந்து கிழக்கேயுள்ள மூப்பன்பட்டிக் கண்மாயை நிரப்பும். பின் மறுகால் பாய்ந்து அருகிலுள்ள செவல்குளத்தை நிரப்பிவிட்டு இறுதியாக வைப்பாறில் கலக்கும்.

 

மெயின் ரோடு வழியாகச் செல்லும் நீர்வரத்து ஓடை மறிக்கப்பட்டும் ஆக்கிரமிப்புகளால் பல கடைகள் அமைக்கப்பட்டுவிட... கதிரேசன்மலை வெள்ளநீர் போக வழியின்றி அடைப்பட்டு... கழிவுநீர் சாக்கடையாகியிருக்கிறது.

 

இந்த விவகாரம் நீதிமன்றம்வரை போனதில், "நீர்வரத்து ஓடையின் ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றவேண்டும்' என்று நீதிமன்றம் உத்தரவிட்டுப் பத்து வருடங்கள் முடிந்துவிட்டது. மக்கள் சார்பில் அமைக்கப்பட்ட நீர்வரத்து ஓடைப் போராட்டக்குழுவின் தொடர் போராட்டங்களால் மாவட்டக் கலெக்டரால்கூட ஒருசில கடைகளைத்தான் அகற்ற முடிந்திருக்கிறது. நடப்புகள் தெரிந்தும் அமைச்சர் இந்த விஷயத்தைக் கண்டுகொள்ளவில்லை'' என்கிறார்கள் மக்கள்.

 

""தற்போது 2021 தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் தொகுதி மற்றும் தன்னுடைய வெற்றிக்கான நிலைப்பாட்டில் கவனம்கொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜூக்கு தொகுதி மக்களின் அதிருப்தியாலும் அடுத்து, தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக தேவர் சமூக வாக்குகள் மெஜாரிட்டியாகி முதன்மையிடத்திற்கு வந்தது போன்றவைகளால் தேர்தலில் மீள்வது அத்தனை சுலபமில்லை என்பது தெரியவந்திருக்கிறது. மட்டுமல்ல. தேவர் சமூகத்தின் அறியப்பட்ட புள்ளியான கடம்பூர் மாணிக்கராஜா, ஜெ. மறைவுக்குப் பின் அ.ம.மு.க.விற்கு மாறியதால் அவர் சார்ந்த வாக்குகளில் பெரும்பான்மையை அவர் கொண்டு சென்றுவிடுவார்.

 

கடந்த உள்ளாட்சித் தேர்தலில் அமைச்சரின் கடம்பூர் அடங்கிய 16 வார்டுகளைக் கொண்ட கயத்தாறு யூனியன் சேர்மன், வைஸ் சேர்மன் பதவி உள்ளிட்ட கணிசமான வார்டுகளை அ.ம.மு.க.வின் மாணிக்கராஜா தரப்பு அள்ளிக்கொண்டு போக, ஒரே ஒரு வார்டில் மட்டும் அ.தி.மு.க.வினால் கரையேற முடிந்தது. தவிர 2021 பொதுத்தேர்தல் என்று வரும்போது மாணிக்கராஜாவும் கோவில்பட்டி தொகுதியில் போட்டிக்கு வரலாம். இதனால் அமைச்சரின் பார்வை, விளாத்திகுளம் தொகுதிமேல் விழுந்திருக்கிறது'' என்கிறார்கள் அமைச்சரின் தரப்பினர்.

 

விளாத்திகுளம் தொகுதியில் அமைச்சரின் சமூகமான நாயக்கர் சமூகத்தவர்கள், ரெட்டியார் சமூகம் என சரிசமமான மெஜாரிட்டியான வாக்குகள் இருக்கின்றன. தவிர அ.தி.மு.க. எக்ஸ், எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கடந்த இடைத்தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டுக் கணிசமான வாக்குகளைப் பெற்றார். இம்முறை அந்தத் தொகுதியில் தனது சமூக வாக்குகள் சிதறினாலும், ரெட்டியார் பிரிவு மற்றும் பிறபிரிவு மக்களின் வாக்குகள் மொத்தமாகத் தனக்குக் கைகொடுக்கும். கோவில்பட்டி தொகுதியைவிட விளாத்திகுளம் சுலபமானது என்று கணக்கிட்டிருக்கிறார் அமைச்சர்.

 

அமைச்சரின் பார்வை மாறுவதை அறியாதவரல்ல எம்.எல்.ஏ. சின்னப்பன். விளாத்திகுளத்தில் அமைச்சர் போட்டியிட்டால், அவரை எதிர்த்து சுயேட்சையாகப் போட்டியிட்டு தனது ஆதரவு வாக்குகளைப் பிரித்தால் அமைச்சருக்குக் கடுமையான நெருக்கடிதானே என்ற எண்ணத்தில் எதையும் வெளிக்காட்டாமல் அமைதியாக இருக்கிறார்'' என்கிறார்கள் எம்.எல்.ஏ. தரப்பினர்.

 

இந்தச் சூழலில் தான் எதிர்பாராத ட்விஸ்ட்டாக மார்க்கண்டேயன், கடந்த மாதம் தி.மு.க.வில் இணைந்தார். சுயேட்சையாக இருந்தால் அவரது ஆதரவைப் பெற்று அமுக்கிவிடலாம் என நினைத்திருந்த அமைச்சருக்கு, இப்போது தனது வெற்றி அத்தனை சுலபமில்லை. வீணாக ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்ற திட்டத்தில் யூ டர்ன் அடித்த வர், தற்போது கோவில்பட்டி தொகுதியிலேயே வளைய வர ஆரம்பித்திருக்கிறார். கிராம மக்களின் வாக்குகளை வளைப்பதற்காக கிராமங்களின் கோவில்களைச் செப்பனிடவும் விழாக்களுக்கும் வலியச்சென்று நிதி உதவி செய்துவருவதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

 

தொகுதி வாக்கு வங்கியில் முதன்மையிலிருக்கும் தேவர் சமூக வாக்குகளைப் பெற, தேவர் ஜெயந்தி குருபூஜை விழாவில் தனது படத்துடன் பிரம்மாண்ட ப்ளக்ஸ் போர்டுகள் வைத்து அசத்தியதுடன், அமைச்சரின் ப்ளக்ஸ்போர்டு தவிர, பிற அமைப்புகளின் போர்டுகளுக்கு போலீஸ் அனுமதி கிடைக்காமல் செய்திருக் கிறாராம்.

 

ஆனால் பந்து இப்போது ஜனநாயகத்தின் அரசியல் எஜமானர்களாகிய மக்களின் கைகளில். கடம்பூர்ராஜூ சிக்ஸர் அடிக்கப்போகிறாரா...… மக்கள் விக்கெட் வீழ்த்தப்போகிறார்களா...… பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

-பரமசிவன்
படங்கள்: ப.இராம்குமார்

 

 

 

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.