Skip to main content

எய்ட்ஸ் பரப்பும் அரசு மருத்துவமனைகள்! -சாத்தூரில் கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடுமை!

Published on 26/12/2018 | Edited on 26/12/2018

‘நீங்கள் எப்படிப்பட்டவராக இருந்தாலும், எங்கு வாழ்பவராக இருந்தாலும், எச்.ஐ.வி. தொற்று குறித்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.’ என்று தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் மற்றும் யுனிசெப் கூட்டாக வெளியிட்டுள்ள கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. 80 சதவீத எய்ட்ஸுக்குக் காரணம் பாதுகாப்பற்ற உடல் உறவு என்பதும் எச்.ஐ.வி. உள்ள ரத்தம் மூலமாக எளிதில் பரவும் என்பதும், எச்.ஐ.வி. விழிப்புணர்வு பிரச்சாரத்தின் வாயிலாகப் பலரும் அறிந்திருக்கின்றனர்.  இதில் கொடுமை என்னவென்றால், எய்ட்ஸுக்காக பல்லாயிரம் கோடிகளை மத்திய, மாநில அரசுகள் ஒருபுறம் செலவழிக்கின்ற நிலையில், தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளே சத்தமில்லாமல் எய்ட்ஸ் பரப்பும் பணியைச் செய்துவருவதுதான். இதில் மிகைப்படுத்துதல் எதுவும் இல்லை. இதுபோன்ற  தவறுகளுக்கு  எடுத்துக்காட்டாக,  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி மற்றும் சாத்தூர் அரசு மருத்துவமனைகள் உள்ளன. 

 

 The cruelty of pregnancy in Sathur

 


சிவகாசியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், அடிக்கடி  சிவகாசி அரசு மருத்துவமனை சென்று, ரத்ததானம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வெளிநாடு செல்வதற்காக, இவர் மதுரையில் தன்னை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது,  தனக்கு  எச்.ஐ.வி. பாசிடிவ்  இருப்பதை அறிந்து அதிர்ந்துபோனார். உடனே, சிவகாசி அரசு மருத்துவமனைக்குச் சென்று, தன் ரத்த விபரத்தைக் கூறினார். 


சாத்தூரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி தங்கப்பாண்டியின் மனைவி பரமேஸ்வரி இரண்டாவது முறையாக கர்ப்பம் அடைந்தார். எட்டு மாத கர்ப்பினியான இவரைப் பரிசோதனை செய்த சாத்தூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள், ரத்தக்குறைவு இருப்பதால் உடனே ரத்தம் ஏற்ற வேண்டும் என்றனர்.  உடனே, சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கியிலிருந்து ரத்தம் பெறப்பட்டு, கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி பரமேஸ்வரியின் உடலில் ரத்தம் ஏற்றப்பட்டது. சில நாட்களிலேயே, வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்பட, உடல்நலம் அவருக்குப் பெரிதும் பாதிக்கப்பட்டது. மீண்டும் இவரைப் பரிசோதித்தபோது, எச்.ஐ.வி. தொற்று இருப்பதை சாத்தூர் அரசு மருத்துவனை டாக்டர்கள் அறிந்தனர். உடனே, இதுகுறித்த தகவலை விருதுநகர் மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் மனோகரனிடம் தெரிவித்தனர். பிறகு நடந்த விசாரணையில்தான், பரமேஸ்வரியின் உடலில் ஏற்றப்பட்டது, எச்.ஐ.வி. தொற்றுள்ள ரமேஷ் தானமாகக்கொடுத்த ரத்தம் என்பதைத் தெரிந்துகொண்டனர். 

 

sivakasi



விருதுநகர் அரசு மருத்துவமனையில் பரமேஸ்வரி சிகிச்சை பெற்றுவரும் நிலையில், சிவகாசி அரசு மருத்துவமனை ஆய்வக நுட்பனர்கள் இருவர் மற்றும் நம்பிக்கை மைய ஆலோசகர் ஒருவர் என, மொத்தம் 3 பேரை பணியிடை நீக்கம் செய்த இணை இயக்குநர் மனோகரன், உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும்,   பரமேஸ்வரியின் கணவர் தங்கப்பாண்டி,   அரசு மருத்துவமனையில் ஓட்டுநர் பணிக்கு பரிந்துரை செய்யப்படுவார் என்றும்  தெரிவித்தார். 


பரமேஸ்வரியோ, “நான் கேள்விப்பட்டதைச் சொல்கிறேன். நடந்த எல்லாத் தவறுகளும் அரசு மருத்துவ அலுவலர் உட்பட பலருக்கும் தெரிந்தே நடந்திருக்கிறது. அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உயிருக்கு எந்த மதிப்பும் இல்லை. ரத்த வங்கியிலேயே, எச்.ஐ.வி. பாசிடிவ் ரத்தத்தைச் சேமித்து வைக்கிறார்கள் என்றால், ரத்ததானம் செய்பவர்களின் ரத்தத்தைப் எந்தவிதத்தில் பரிசோதித்திருப்பார்கள்? அரசு மருத்துவமனையின் பொறுப்பற்ற செயலால், என் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிட்டது.” என்று தலையில் அடித்துக்கொண்டார். 

 

sivakasi

 


பரமேஸ்வரியின் கணவர் தங்கப்பாண்டி “எனக்கு எந்த அரசு வேலையும் வேண்டாம். மூட்டை தூக்கி என் மனைவியைக் காப்பாற்றுவேன். சொந்த ஊரிலேயே என் மனைவி உயர் சிகிச்சை பெறுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார் வேதனையோடு. 

 

கண்காணிப்பற்ற  ரத்த வங்கிகளின் அலட்சியப்போக்கு! 

எய்ட்ஸ் மருத்துவப்பிரிவில் பணியாற்றிய ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் ஒருவர்,   “எச்.ஐ.வி. என்ற கொடிய நோய் மனித உடலில் பரவியவுடன்,  முதலில் கண்டறியப்பட வேண்டியது பாலிமரேஸ் தொடர்வினை பரிசோதனை (Polymerase Chain Reaction – PCR) எனப்படும் உடற்காப்பு ஊக்கி (antigen) பரிசோதனை ஆகும். இந்தப் பரிசோதனை ஆரம்பக்கட்டத்திலேயே, ஒருவருக்கு எச்.ஐ.வி. உள்ளதா? இல்லையா? என்பதைக் கண்டறிவதற்கான பிரத்யேக பரிசோதனை ஆகும். அதன்பின்னர், எச்.ஐ.வி. கிருமியானது உடல் முழுவதும் பரவிய பிறகு, இதனால் எதிர்ப்பு ரசாயணம் உண்டாகும். இந்த எதிர்ப்பு ரசாயணம்,   antibody என்று சொல்லப்படும் நோய் எதிர்ப்பொருள் ஆகும். இந்த antibody பரிசோதனை மூன்று வகைப்படும். அவை,  Rapid Test,  Elisa மற்றும் Western Blot போன்ற பரிசோதனைகள் ஆகும். இந்த மூன்று வகைகளில், விரைவுப் பரிசோதனை (Rapid Test) என்பது ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும், அரசு தலைமை மருத்துவமனைகளிலும் சாதாரணமாக மேற்கொள்ளக்கூடிய பரிசோதனை ஆகும்.
 

 AIDS spreading government hospitals!

 

ரத்ததானம் செய்பவர்களுடைய ரத்தமானது,  உடனடியாக Elisa பரிசோதனை எனப்படும், அதிக எண்ணிக்கையிலான நபர்களுக்கு இயந்திரத்தில் வைத்துச் செய்யப்படும் பரிசோதனை ஆகும்.  உதாரணத்துக்கு,  50 அல்லது 60 பேர் ரத்ததானம் செய்தால்,  அவர்களின் ரத்தத்தை Elisa பரிசோதனைக்கு உட்படுத்துவார்கள். சாதாரணமாக,  ஒவ்வொருவருக்கும் Rapid பரிசோதனை மேற்கொள்கிறார்கள்.  இந்த மூன்று வகை பரிசோதனைகளும், எச்.ஐ.வி. கிருமி ஒரு மனிதனின் உடலில் பாய்ந்து,  எதிர்ப்பு ரசாயணம், அதாவது வேதியியல் மாற்றங்கள் அடைந்தபிறகு,  கண்டறிந்து காட்டக்கூடியது. இந்தவிதத்தில் எச்.ஐ.வி. பரிசோதனை செய்வதில் ஒரு பலனும் இல்லை. ஆனால், இவருக்கு எச்.ஐ.வி. இருக்கிறது, நோய்வாய்ப்பட்டுள்ளார் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். பி.சி.ஆர். பரிசோதனை என்பது பிரத்யேக பரிசோதனை ஆகும். இந்தப் பரிசோதனையை எந்த ஒரு அரசு மருத்துவமனையும் மேற்கொள்வதில்லை. இந்தப் பரிசோதனை முறையைக் கடைப்பிடித்தால், ரத்ததானம் பெறுபவர்களை, எச்.ஐ.வி. தொற்று பரவாமல் காத்திட முடியும்.


ரத்ததானம் என்ற பெயரில், ரத்தத்தைச் சேகரிக்கும் ரத்தச் சேமிப்பு வங்கிகளில் உள்ள ரத்தமானது, பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமலேயே, ரத்தம் தேவைப்படுவோருக்கு செலுத்தப்படுகிறது. இதன்மூலம், அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை மக்களும் எச்.ஐ.வி. நோயாளிகள் ஆகிவிடுகிறார்கள்.  ரத்தச் சேமிப்பு வங்கி என்பது, தமிழ்நாடு எய்ட்ஸ் கன்ட்ரோல் சொசைட்டி என்ற அரசு சார்ந்த ஒரு சங்கம் ஆகும். இதை நடத்துவதற்கு, மாவட்ட மருந்துக்கட்டுப்பாட்டு தலைமை அலுவலகத்திலிருந்து  பிரத்யேக உரிமம் பெறவேண்டும். இந்த உரிமம் பெற்றபிறகுதான்,  ரத்தச் சேமிப்பு வங்கி நடத்த முடியும். இந்த ரத்தச் சேமிப்பு வங்கிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை மருத்துவத்துறையில் யாரும் கண்காணிப்பதில்லை. ரத்தச் சேமிப்பு வங்கிகளை முறையாகக் கண்காணித்தால் போதும். சாத்தூரில் ஒரு கர்ப்பிணிக்கு நடந்ததுபோல், ரத்தம் தேவைப்படும் எந்த ஒரு மனிதருக்கும் எய்ட்ஸ் பரவாமல் இனி தடுக்க முடியும்.” என்று அரசு மருத்துவமனைகளின் நிலைப்பாட்டை வேதனையுடன் பகிர்ந்தார்.   


‘கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா..  அங்கே  ரெண்டு கொடுமை திங்குதிங்குன்னு ஆடுச்சாம்..’  ன்ற கிராமத்துச் சொலவடையை  பிரதிபலிப்பதாக அல்லவா இருக்கின்றன அரசு மருத்துவமனைகளின் அலட்சிய செயல்பாடுகள்? 

 

 

 

 

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.