Skip to main content

முதல்வர் சொல்வது உண்மையா... அரசியலில் தோற்றாரா சிவாஜி..?

Published on 18/11/2019 | Edited on 19/11/2019


கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கமல், ரஜினிகாந்த் தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கும்போது " அரசியலில் அவர்கள் இருவருக்கும் சிவாஜி கணேசனுக்கு ஏற்பட்ட நிலைமை தான் ஏற்படும்" என்று கூறினார்.  முதல்வரின் அந்த பதில் வெளியான சில மணிநேரங்களில் இருந்தே முதல்வரின் பேச்சுக்கு சிவாஜி பேரவையின் சார்பிலும், அவரின் ரசிகர்களின் தரப்பில் இருந்து கடும் கண்டனங்களை இணையதளங்கள் வாயிலாகவும், தொலைக்காட்சிகள் வழியாகவும் சிவாஜியின் ரசிகர்கள் தெரிவித்தார்கள். முதல்வர் கூறிய 'சிவாஜி நிலைமை' என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேடுவதே இந்த கட்டுரையின் நோக்கம். அதற்கு முதலில் சிவாஜியின் அரசியல் வாழ்க்கை ஆரம்பித்த 50களின் மத்திய பகுதிக்கு செல்ல வேண்டும்.

 

nb



50களின் ஆரம்பத்தில் பேரறிஞர் அண்ணா தன்னுடைய தமிழால் தமிழகத்தை ஆளத்துவங்கிய சமயம் அது. பெரியாரின் கருத்தையும், அண்ணாவின் பேச்சையும் தமிழக மக்கள் காதுகொடுத்து கேட்க ஆரம்பித்தா்கள். அவர்கள் மீதும், திமுகவின் மீது அதிகாரப்பூர்வமான பாசம் உருவான அந்த நேரத்தில், தனக்கான நல்ல திரைவாய்ப்பை தேடிக்கொண்டிருந்தார் நடிகர் திலகம் சிவாஜி. கலைஞரின் வசனத்தில் 52ம் ஆண்டு வெளிவந்த பராசக்தி திரைப்படம் சிவாஜியை தமிழக மக்களின் வீடுகளுக்கு கொண்டு சென்றது. கிட்டதட்ட 52ம் முதல் 55ம் ஆண்டு வரை அவர் திமுக ஆதரவாளராக செயல்பட்ட அவர், ஒரு மாற்றத்தை விரும்பி திருப்பதி சென்றார். திருப்பதி திருப்பத்தை ஏற்படுத்தும் என்பது யாருக்கு உண்மையோ இல்லையோ சிவாஜிக்கு 100 சதவீதம் நடந்தது. திமுகவில் நாத்திகம் உச்சத்தில் இருந்த அந்த நேரத்தில் சிவாஜியின் திருமலை தரிசனம் விஜய்யின் திருமலை படத்தை போல திமுகவில் அதிரடிகளை ஏற்படுத்தியது. " திருப்பதி கணேசா திரும்பிப்போ கணேசா" என்று திமுகவினரிடம் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் கோபம் அடைந்த அவர், " நான் ஒரு நடிகன், கள்வனாக நடிப்பேன், கடவுளாகவும் நடிப்பேன் அது என் விருப்பம், என்னால் வேஷம் போட முடியாது" என்று கூறி திமுகவில் இருந்து வெளியேறினார்.

1961ம் ஆண்டு, தான் மானசீகமாக காதலித்துவந்த காமராசர் தலைமையிலான காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார். அடுத்த ஆண்டே தேர்தல். காங்கிரஸ் பெருவாரியான தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கிறது. காமராசர் முதல்வராக பொறுப்பேற்கிறார். மற்றொருபுரம் திமுக முன்பை விட அதிகப்படியான தொகுதிகளில் வெற்றிபெற்று எதிர்க்கட்சியாக சட்டப்பேரவையில் அமர்கிறது. மற்றொருபுரம் பரங்கிமலை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக எம்ஜிஆர் வெற்றிபெறுகிறார். ஆனால், தேர்தலில் சிவாஜி போட்டியிடவில்லை. திமுகவில் தொடர்ந்து செயல்பட்டுவரும் எம்.ஜி.ஆர் தன்னை நாத்திகவாதியாக எப்போதாவது காட்டிக் கொண்டுள்ளாரா? என்ற சந்தேகம் யாருக்காவது வருமானால் அதற்கான பதிலை எம்.ஜி.ஆரை தவிர யாரும் கூறிவிட முடியாது.  " முதல்வர் ஆனதும் எம்.ஜி.ஆர் உத்ராட்சை மாலை அணிந்துகொண்டும், அம்மன் கோயிலுக்கு தானமாக வேள் ஒன்றை கொடுத்ததே அதற்கு சாட்சி" இன்று எடப்பாடி கேட்கும் சிவாஜி நிலைமை என்ன என்பது இதன் மூலம் இப்போது ஓரளவு புரியவந்திருக்கும். எப்போதும் எதையும் மறைக்கும் பழக்கம் இல்லாதவர் சிவாஜி. இல்லையென்றால் அவரால் 150 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் திருப்பதிக்கு யாருக்கும் தெரியாமல் செல்லமுடியாதா?

 

 

gh



62ம் ஆண்டு தேர்தலில் வெற்றியை பார்த்த அவருக்கு 67ம் ஆண்டு தேர்தல் பெருந்த ஏமாற்றத்தை தந்தது. இருந்தும் காமராசர் மீதும், காங்கிரஸ் மீதும் இருந்த அன்பின் காரணமாக அக்கட்சியிலேயே தொடர்ந்தார். இதனை தொடர்ந்து நடைபெற்ற 71ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் மண்ணை கவ்விய நேரத்திலும், எந்த கூவத்தூர் அரசியலுக்கும் இடம் கொடுக்காமல் காமராசர் கூடவே இருந்து அரசியல் செய்தார் சிவாஜி. 75ம் ஆண்டு காமராசர் மறைவுக்கு பிறகு தமிழக பொறுப்பு அவருக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் அதற்கு வாய்ப்பில்லாமல் போனது. இதில் மற்றொரு வியப்பான சம்பவம் என்னவென்றால், 77ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுகவும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. அரசியல் எதுவும் நிரந்திரம் இல்லை என்ற பாலபாடத்தின் அடிப்படையில் எம்ஜிஆருக்காக வாக்கு கேட்டார் சிவாஜி! அந்த தேர்தலில் தன் நண்பர் கலைஞர் தலைமையிலான  திமுகவை வீழ்த்தி, அதிமுக ஆட்சியை பிடிக்க உதவி செய்தார். ஆனால் இவர் அந்த தேர்தலில் போட்டியிடவில்லை. இதற்கு பரிசாக அன்றைய காங்கிரஸ் கட்சி 1982ம் ஆண்டு அவரை ராஜ்யசபா உறுப்பினராக்கியது. இது அடுத்த வந்த தேர்தல்களிலும் தொடர்ந்த நிலையில் எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு அதாவது 87க்கு பிறகு, அதிமுக ஜெயலலிதா வசம் சென்ற நிலையில், எம்ஜிஆரின் மனைவி ஜானகியை அரசியல் ரீதியாக ஆதரித்தார் சிவாஜி. ஜெயலலிதாவுடன் கூட்டணி என்ற காங்கிரஸ் மேலிடத்தின் உத்தரவை ஏற்க முடியாமல், 'தமிழக முன்னேற்ற முன்னணி' என்ற புதுகட்சியை உருவாக்கி ஜானகி அணியுடன் கூட்டணி வைத்துக்கொண்டார். 50 தொகுதிகளில் களம் இறங்கிய அவரது கட்சி ஒரு இடத்தில் டெபாசிட் வாங்கியது. வாங்கியவர் சிவாஜி, அவர் நின்ற தொகுதி தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவையாறு.

இதனால் கடும் மன அழுத்தத்துக்கு ஆனான அவர், கட்சி தொடங்கிய அதே ஆண்டில் அந்த கட்சியை கலைத்தார். வி.பி சிங்கின் ஜனதாவுடன் தன்னை இணைத்துக்கொண்டார். அந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஜனதா காணமல் போகவே, அரசியலில் இருந்து தன்னை விலக்கிக்கொண்டார் சிவாஜி. இவ்வாறு பல தேர்தல்களை சந்தித்து வெற்றியும் தோல்வியும் ஒருசேர பெற்ற அவரை எந்த அடிப்படையில் "சிவாஜி நிலைமை" என்று முதல்வர் கூறுகிறார் என எதிர் கேள்வி எழுப்புகிறார்கள் அவரின் ஆதரவாளர்கள். ஒருவேளை தன்னை போல முதல்வர் ஆகவில்லை என்று அவர் நினைக்கின்றாரா என்றால், அவருக்கு (சிவாஜிக்கு) கந்தன் கருணை படத்தில் வருவது போன்று நிமிர்ந்து நடக்க தெரியுமே தவிர, பதவிக்காக நாற்காலிக்கு கீழே தவழ்ந்து செல்ல தெரியாது என்று கண் சிமிட்டுகிறார்கள் பழைய சிவாஜி ரசிகர்கள். ஆனால், காங்கிரஸ் படுதோல்வி அடைந்த காலகட்டத்திலும் கூட முதல்வர் பதவி உள்ளிட்ட எந்த பதவிக்காகவும் காமராசர் உள்ளிட்ட எவரையும் எதற்காகவும் காட்டிக்கொடுக்கவில்லை என்பதே சிவாஜி அரசியலில் சாதித்ததற்கு போதுமான ஒன்று!

 

Next Story

மவுசு குறையாத நடிகர் திலகம்; ரீ-ரிலீஸான படத்தைக் கொண்டாடித் தீர்த்த ரசிகர்கள்

Published on 28/11/2022 | Edited on 28/11/2022

 

the unrepentant actor sivaji; Fans celebrated the rerelease of the film

 

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் பட்டிக்காடா பட்டணமா. இயக்குநர் ஆர்.மாதவன் இயக்கி 1972ம் ஆண்டு இப்படம் வெளியானது. வெள்ளி விழா கண்ட இப்படத்தின் 50 ஆவது ஆண்டு பொன்விழா கொண்டாட்டம் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

 

the unrepentant actor sivaji; Fans celebrated the rerelease of the film

 

பெரிய நடிகர்களின் புதிய படங்களுக்கு இருக்கும் அதே வரவேற்பு மீண்டும் திரையிடப்பட்ட இப்படத்திற்கும் இருந்தது. ஏராளமான மக்கள் தங்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் வந்து படத்தைப் பார்த்துச் சென்றனர். சிவாஜி கணேசன் ரசிகர்கள் படத்தில் இடம் பெற்ற ஒவ்வொரு பாடலையும் நடனமாடிக் கொண்டாடினர். 

 

நிகழ்ச்சியில் சிவாஜி கணேசன் மகன் ராம்குமார் மற்றும் மதுரை மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

Next Story

நடிகர் சிவாஜி கணேசன் பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் நாளை மரியாதை!

Published on 30/09/2021 | Edited on 30/09/2021

 

y

 


நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94-வது பிறந்த நாள் நாளை உலகம் முழுவதும் கொண்டாட இருக்கிறது. இதனை முன்னிட்டு சென்னை அடையாறில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்குத் தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை மரியாதை செலுத்துகிறார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, "  நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அடையாறில் அமைந்துள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் உள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு நாளை (1.10.2021) காலை 10.00 மணியளவில், தமிழ்நாடு அரசின் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்த உள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றுச் சிறப்பிக்க உள்ளனர்.

 

நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசன் 1927 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 1 ஆம் நாள் பிறந்தார். "நடிப்பு தனது மூச்சு என்றும் நடிப்பு ஒன்றுதான் தனக்குத் தெரிந்த தொழில், நடிப்புதான் எனக்குத் தெய்வம்" என்று மிகத் தெளிவாக தன்சுயசரிதையில் குறிப்பிட்டு அதற்கேற்ப வாழ்ந்தும், நடிப்பிலே உச்சம் தொட்டும், உலகப் புகழ் பெற்றவராவர். குழந்தைப் பருவம் முதற்கொண்டு நடிப்பதில் பேரார்வம் கொண்டு, பல்வேறு நாடகக் குழுக்களில் பங்கேற்று நடித்து வந்தார். அண்ணாவால் எழுதப்பட்ட "சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்" என்கிற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த அவரின் நடிப்புத் திறமையினைக் கண்ட பெரியார் வியந்து பாராட்டியதோடு, விழுப்புரம் சின்னையாப் பிள்ளை கணேசன் என்ற அவரது இயற்பெயரை "சிவாஜி கணேசன்" என்று பெயர் சூட்டினார். உலகப் புகழ்பெற்ற நடிகர் திலகத்திற்கு இந்த பெயரே இறுதிவரை நிலைத்து நின்றது.

 

காமராஜர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் என்றும், அவரைப் பெற்றதால் இந்த நாடே பெருமை அடைகிறது என்று குறிப்பிட்டார். கருணாநிதி 'பொங்கு தமிழர் கண்டெடுத்த புதையல், புத்தர் வழிவந்த காந்தி மகான் பக்தர்' நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று பெருமையோடு குறிப்பிட்டதோடு, அவர் எழுதிய பராசக்தி, மனோகரா உள்ளிட்ட பல படங்களில் நடித்ததன் மூலம் நடிகர் திலகம் திரைவானிலே புதிய உச்சம் தொட்டார். கருணாநிதி, நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்குப் பெருமைச் சேர்க்கும் வகையில் அவருடைய நினைவு நாளில் 21.07.2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை கடற்கரை காமராசர் சாலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திருவுருவச் சிலையினை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய கருணாநிதி ''நான் எழுதிய கவிதை வரிகளுக்கும், வசனங்களுக்கும் உயிர்கொடுத்தவர்; தமிழாக வாழக்கூடியவர்; தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டியவர்; எனதருமை  தோழர், எனதாருயிர் நண்பர் என்றும், என்னுள்ளே உறைந்திருப்பவர் சிவாஜி கணேசன்'' என்றும் குறிப்பிட்டதோடு, ''எனது நண்பரின் சிலை மட்டும் இங்கே அமையாது போயிருக்குமேயானால், நானே இங்குச் சிலையாகியிருப்பேன்'' என்று நெகிழ்ந்து குறிப்பிட்டார். 

 

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தொடக்கக் காலத்தில் எண்ணற்ற நாடகங்கள், 300க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்கள், 2 இந்தி திரைப்படங்கள், 9 தெலுங்கு திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்து தமிழ்த் திரையுலக வரலாற்றில் புதிய சகாப்தம் படைத்தார். "நடிகர்திலகம்", "நடிப்புச் சக்கரவர்த்தி" என்று மக்களாலும், திரை உலகத்தினராலும் போற்றி அழைக்கப்பட்டார். இவர் நடித்த கப்பலோட்டியத் தமிழன், இராஜராஜ சோழன், வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் தலைமுறைகள் பல கடந்தும் காண்போரின் மனதில் நின்று நிலைப்பதே சரித்திரச் சான்றாகும். நடிகர் திலகத்தின் திறமைக்குச் சான்றாகப் பத்ம ஸ்ரீ விருது, பத்ம பூஷன் விருது, செவாலியே விருது மற்றும் நம் தாய்நாட்டின் உயரிய விருதான தாதா சாகிப் பால்கே விருது உள்ளிட்ட விருதுகளோடு அயல்நாட்டின் உயரிய விருதுகளையும் பெற்ற பெருமைக்குரியவர். 

 

நடிப்பின் இமயமாகத் திகழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 2001 ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் நாள் இயற்கை எய்தினார். அன்னாருடைய அருமை பெருமைகளை போற்றுகின்ற வகையில் அவரின் பிறந்த நாளானது அரசு விழாவாக அறிவிக்கப்பட்டுக் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட அற்புத கலைஞன்தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். எது நடிப்பு, எது இயல்பு எனக் காண்போர் அறிந்திடா வண்ணம், ஒட்டுமொத்த உணர்ச்சிக் குவியல்களை வெள்ளித் திரையில் கொட்டி வெற்றி வீரராகவே வலம் வந்தவர். இந்த பூமிப் பந்தில், மனிதக் குலத்தின் கடைசி ரசிகன் உயிர்வாழும் வரை, சிவாஜி கணேசன் என்கிற சகாப்தத்துக்கு மரணமுமில்லை..காலமுமில்லை...!" இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.