Skip to main content

சிவகங்கை அ.தி.மு.க. கலட்டா! அதகளமான பூத் கமிட்டி கூட்டம்! 

Published on 22/11/2023 | Edited on 22/11/2023

 

Sivagangai admk booth committee meeting

 

"......தா.....டா' என்கின்ற தடித்த வார்த்தைகளும், "என்னையப் பத்தி பேசுறியா? கழுத்தை அறுத்துப் போட்டுவிடுவேன்' என்கின்ற வார்த்தைகளும் சர்வசாதாரணமாக கிடைக்கின்றது சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க.வினர் நடத்திவரும் பூத் கமிட்டி அமைப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில்.

 

அடிப்படையிலிருந்து வந்தால்தான் கட்சியைப் பலப்படுத்த முடியும் என்பதில் தீவிரம் காட்டி வருகின்றார் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி. இதன் ஒருகட்டமாக பூத் கமிட்டியில் என்னென்ன செய்ய வேண்டுமென ஆறு நிபந்தனைகளை விதித்து, அதற்காக மாவட்டந்தோறும் பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தினை நடத்தி வருகின்றது அ.தி.மு.க. அதனையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் பூத் கமிட்டியினை தேர்வுசெய்யும் பணி நடைபெற்று வருகின்றது. இதற்காக பூத் கமிட்டி பொறுப்பாளருக்கான மேலிட பார்வையாளராக கழக அமைப்புச் செயலாளரான ராதாபுரம் சீனிவாசனை நியமித்தது மாநிலத் தலைமை.

 

சம்பவம் 1:


சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 334 பூத் கமிட்டிகளுக்கான பொறுப்பாளர்களை நியமிப்பதற்காக, அதே சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 84 மாவட்ட பொறுப்பாளர்களை கொண்டு அச்சுக்கட்டுப் பகுதியிலுள்ள தனியார் ஹாலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மேலிடப் பார்வையாளராக நியமிக்கப்பட்ட ராதாபுரம் சீனிவாசன், மா.செயலாளரும் சிவகங்கை எம்.எல்.ஏ.வுமான செந்தில்நாதன், மாவட்ட அவைத்தலைவர் ஏவி. நாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. உமாதேவன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் பிரபு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்ட நிலையில், ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. 

 

Sivagangai admk booth committee meeting

 

இதில், "அ.தி.மு.க. தொண்டனின் பணி, புனிதப்பணி.. இந்த பணியை நாம் செய்து மீண்டும் எடப்பாடியாரை ஆட்சியில் அமர்த்த வேண்டும்'' என நிர்வாகிகளிடம் வேண்டுகோள் வைத்தார் மா.செ. செந்தில்நாதன். அடுத்து மைக் பற்றிய ராதாபுரம் சீனிவாசனோ, "இந்த பூத் கமிட்டியை நிர்வாகிகளாகிய நீங்கள் வலுவாகவும், அர்ப்பணிப்போடும் அமைத்துக் கொடுத்தால் அ.தி.மு.க.வை யாராலும் வெல்ல முடியாது, இரட்டை இலைக்கு யார் விசுவாசமாக இல்லையோ அவர்களை எந்த பூத் கமிட்டியிலும் சேர்த்துக்கொள்ள வேண்டாம் என புரட்சி தமிழர் எடப்பாடியார் கட்டளையிட்டுள்ளார்'' என்றார்.

 

இந்நிலையில் மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளராக கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கட்சியில் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. உமாதேவனோ, "இந்த பூத் கமிட்டி விஷயத்தை முன்னரே செய்திருந்தால் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியை நாம் இழந்திருக்க வாய்ப்பில்லை. இங்கு ஆளும் கட்சியினரோடு நம்ம அ.தி.மு.க. கட்சிக்காரங்க லிங்க் வைத்திருப்பதால் தோல்வி கிடைக்குது. இப்பகூட பாருங்க, சிங்கம்புணரி சேர்மன் விளம்பரத்துல அமைச்சரோட படத்தைப் போட்டு விளம்பரப்படுத்துறாங்க. அது தேவையில்லாத ஒன்று'' என காட்டமாக உரையாற்றிவிட்டு உட்கார்ந்தார்.

 

இதற்கு விளக்கம் கொடுப்பதற்காக எழுந்த மா.செ. செந்தில்நாதனோ, "இப்படி அத்தனை பேரு முன்னால் பேசியதை தவிர்த்திருக்கலாமே? இங்கு யாரும் யாரோடும் லிங்கில் இல்ல'' என்றதுதான் தாமதம், சட்டென எழுந்த உமாதேவனோ, "நேரிடையாக சொல்றேன். உன்னையத்தான் சொல்றேன். உன்னுடைய உள்ளடி வேலைகளால் அசோகனும், மருது அழகுராஜூம் தோற்றது தெரியாதா என்ன?'' என பதிலுக்கு எகிற, அந்த இடமே அதகளமானது. "வெளியே போடா! வெளியே போடா!' என உமாதேவனுக்கு எதிராக குரல் அதிகரித்த நிலையில், தடித்த வார்த்தைகள் இரு தரப்பிலும் அதிகரித்தன. இதில் சிங்கம்புணரி சேர்மன் தரப்பினை சேர்ந்தவர்கள் உமாதேவனின் காரை எட்டி மிதித்ததாக கூறப்படுகிறது.

 

இதுகுறித்து கருத்தறிய முன்னாள் எம்.எல்.ஏ உமாதேவனை தொடர்புகொண்டோம். பதிலில்லை. மா.செ. சார்பில் பேசியவர்களோ, "நல்லபடியாக சென்று கொண்டிருந்த கட்சியில் குழப்படி உருவாக்கவே வந்திருக்கின்றார் உமாதேவன். ஒவ்வொரு நாளைக்கும் ஒரு கட்சி என்ற நிலையில் இப்பொழுது திருப்பத்தூர் சட்டமன்றத்தினை குறிவைத்து வந்திருக்கின்றார். அதற்காகத்தான் இந்தப் பேச்சு. திருப்பத்தூர் சட்டமன்றத்தில் தி.மு.க.வோடு லிங்க் இருந்தால் சிங்கம்புணரி சேர்மன் பதவியை நாங்கள் எப்படி கைப்பற்ற முடியும்..?'' என்கின்றனர் அவர்கள்.

 

சம்பவம் 2:


முந்தைய நாள் திருப்பத்தூரில் பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், மறுநாள் காரைக்குடி நகரத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட மா.செ. செந்தில்நாதன், மேலிட பார்வையாளர் ராதாபுரம் சீனிவாசன் உள்ளிட்டோர் பொறுப்பாளர் கமிட்டிக்கான ஆலோசனைகளை வழங்கி புறப்பட்டுச் சென்றனர். இந்நிலையில், "டேய்... நீதான் ஐயப்பனா..? ................என்கிட்ட பேசமாட்டியா..? மேலிடப் பார்வையாளரிடம்தான் பேசுவியா..?'' என தடித்த வார்த்தைகளால் காரைக்குடி நகர 2வது வார்டினைச் சேர்ந்த மாவட்ட இளைஞரணி இணைச்செயலாளரான ஐயப்பனை அனைவரது முன்னிலையில் எகிறியிருக்கின்றார் காரைக்குடி ந.செயலாளரான மெய்யப்பன். "நீங்க கட்சியை நடத்துற லட்சணம் தெரியும். அதுதான் நேரடியாக மேலிடப் பார்வையாளரிடம் பேசினேன்'' என்றிருக்கின்றார் ஐயப்பன்.

 

Sivagangai admk booth committee meeting

 

மா.செ. செந்தில்நாதனும், மேலிடப் பார்வையாளரும் தேமே என்று பார்க்க மீண்டும், "எவனிடம் சொல்லியும் என்னை ......முடியாதுடா... இங்கேயே கழுத்தை அறுத்துப் போட்டுருவேன்'' என எகிறிய நகர செயலாளர் மெய்யப்பனை அமைதிப்படுத்தியிருக்கின்றனர் அருகிலிருந்தவர்கள்.

 

பத்து வருடங்களாக மா.செ. பதவி வகித்துவரும் செந்தில்நாதனை இச்சம்பவங்கள் அசைத்துப் பார்த்திருக்கின்றன என்பதுதான் நிஜம்.

 

-நா.ஆதித்யா


படங்கள்: விவேக்

 

 

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.