Skip to main content

ஒற்றைத் தலைமைதான்... அதுவும் சசிகலாதான்... அதிமுக எம்எல்ஏ பரபரப்பு பேட்டி

Published on 12/06/2019 | Edited on 12/06/2019

 

அதிமுகவுக்கு ஒரே தலைமை வேண்டும். இரட்டைத்தலைமை அ.தி.மு.க-வில் கூடாது என்று அதிமுக எம்எல்ஏக்கள் ராஜன் செல்லப்பா, குன்னம் ராஜேந்திரனும் கூறியிருந்தனர். இதையடுத்து ஜீன் 12ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்களின் ஆலோசனைக்கூட்டம் நடக்க உள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டனர்.

 

அதன்படி இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு ஆகியோர் மீது அதிமுக கொறடா ராஜேந்திரன் புகார் அளித்தது தொடர்பாக சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இந்த 3 எம்எல்ஏக்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. 
 

இந்த நிலையில் நக்கீரன் இணையதளத்திடம் கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.


 

 

sasikala


 

ஆலோசனை கூட்டத்திற்கு ஏன் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று நினைக்கிறீர்கள்? 
 

நியாயத்தை பேசுவோம் என்பதால் அந்தக் கூட்டத்திற்கு அழைப்பு அனுப்பவில்லை. நேற்று வரை இரண்டு எம்எல்ஏக்கள் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தனர். இன்று ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு அதைப்பற்றி யாரும் எதுவும் பேசாமல் செல்கிறார்கள். இந்தக் கட்சிக்கு ஒற்றைத் தலைமை வருவதை அவர்கள் விரும்பவில்லை.
 

ஒற்றைத் தலைமை வருவதை யார் விரும்பவில்லை?
 

ஒற்றைத் தலைமை வருவதை தலைமை நிர்வாகிகள்தான் விரும்பவில்லை. உண்மையான தொண்டர்கள் ஒற்றைத் தலைமையை விரும்புகிறார்கள். ஒற்றைத் தலைமை இல்லாததால்தான் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. தன் மகனை வெற்றி பெற வைக்க பாடுபட்ட ஓ.பன்னீர்செல்வம், ஒருங்கிணைப்பாளராக முறையாக செயல்பட்டு மற்ற தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற ஏன் பாடுபடவில்லை. மகனை அழைத்துக்கொண்டு மத்திய அரசில் உள்ள எல்லோரையும் பார்க்கும் ஓ.பன்னீர்செல்வம் மக்களுக்கான நலத்திட்டங்களை ஏன் பெறவில்லை. 
 

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா இந்த கட்சியை வழி நடத்த வேண்டும் என்றும், அவரை பொதுச்செயலாளராக இருக்க வேண்டும் என்று கெஞ்சியது, காலில் விழுந்தது இப்போதுள்ள முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சர் உள்பட அனைவரும்தான். இன்று சசிகலாவை ஒதுக்கி வைத்துவிட்டு ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் என இரட்டை வேடம் போடுகிறார்கள். இந்த ஆட்சியே இருக்கக்கூடாது என்று வாக்களித்தவர் ஒருங்கிணைப்பாளர், ஏத்திவிட்ட ஏணியை எட்டி உதைத்தவர் இணை ஒருங்கிணைப்பாளர். இவர்கள் இந்த கட்சியை எப்படி வழிநடத்துவார்கள் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. இவர்களது செயல்பாடுகளை பார்த்தால் ஜெயலலிதாவின் எண்ணங்களை குழித்தோண்டி புதைத்துவிடுவார்கள் என்றுதான் தோன்றுகிறது. 
 

ஒற்றைத் தலைமைதான் வேண்டும். அதுவும் சசிகலாதான். ஏனென்றால் ஜெயலலிதாவுடன் இருந்து செயல்பட்டவர். ஜெயலலிதா எப்படி ஒவ்வொருத்தரையும் பெயர் சொல்லி கூப்பிட்டார்களோ, அதைப்போலவே தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கட்சியினரையும் தெரிந்தவர் சசிகலா. மேலும் தமிழகத்தில் எங்கு கட்சி பலவீனமாக இருக்கிறது. பலமாக இருக்கிறது என்பது அவருக்கு மட்டுமே தெரியும். அதிமுக மீது உண்மையான அக்கறை கொண்டவர் சசிகலா மட்டுமே. 
 

ஒற்றைத் தலைமை தேவையில்லை. இரண்டை தலைமையே நன்றாக செயல்படுகிறது என்று கூட்டத்திற்கு பிறகு சொல்கிறார்களே?
 

நன்றாக செயல்பட்டிருந்தால் ஏன் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தார்கள்.
 

சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளார்களே...
 

எதற்கு அந்த கட்டுப்பாடுகள். எதற்கு செய்தியாளர்களை சந்திக்க கூடாது. ஒற்றைத் தலைமை வேண்டும் என்று சொல்லக்கூடாது. அவர்கள் பற்றிய குறைபாடுகளை வெளியே சொல்லக்கூடாது என்பதற்காக, தங்களைப் பற்றிய உண்மை வெளியே வந்துகொண்டிருப்பதால் என்பதற்காக செய்தியாளர்களை சந்திக்க கூடாது என்று சொல்லுகிறார்கள். பா.ஜ.க.வால்தான் அதிமுக தோற்றது என்று சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் சொல்லியிருக்கிறார். அதுதான் உண்மை. சிவி சண்முகம் சொன்ன கருத்தை நூற்றுக்கு நூறு ஏற்றுக்கொள்கிறேன். 


 

 

kallakurichi mla prabhu


 

சபாநாயகர் உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். அது எந்த நிலைமையில் இருக்கிறது...
 

நாங்கள் இந்த ஆட்சிக்கு எதிராக போகக்கூடியவர்கள் கிடையாது. இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்றோ, திமுகவுடன் கைக்கோர்க்க வேண்டும் என்றோ எங்களுக்கு எண்ணம் கிடையாது. ஆட்சிக்கு எதிராக செயல்பட்டுவிடுவார்களோ என்ற பயத்தில் கொடுத்திருக்கிறார்களே தவிர, இந்த கட்சிக்கோ, ஆட்சிக்கோ எந்தவித அவப்பெயரும் ஏற்படுத்தும் விதத்தில் நான் செயல்படவிலலை. 
 

டிடிவி தினகரனை சந்தித்துப் பேசியதாக...
 

இப்போது ஆட்சியில் இருப்பவர்கள்தான் போயஸ் கார்டன் இல்லத்திற்கு சென்று சசிகலா காலில் விழுந்து அவரை பொதுச்செயலாளராக பதவியேற்க சொன்னார்கள். இந்த வீடியோவை உலகமே பார்த்தது. நாங்கள் என்ன தப்பு செய்தோம். திமுகவுடன் சென்றோமா? வேறு கட்சிக்கு சென்றோமா? நான் இன்று வரை அதிமுகவில்தான் இருக்கிறேன். 
 

 

 

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.