Skip to main content

47 வருடத்திற்கு முன்பே இன்றைய நீட் தேர்வுக்கு விதை போட்ட ஒற்றைச் சம்பவம் ; மாநிலங்களுக்கு எதிராக கரகாட்டமாடும் மத்திய அரசுகள்

Published on 11/11/2022 | Edited on 11/11/2022

 

ரதக

 

தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் கல்வியை பொதுப் பட்டியலிலிருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை அதிக அளவில் எழுந்து வருகிறது. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட பிரதமர் மோடியை மேடையில் வைத்துக்கொண்டே கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வைத்தார். பொதுப் பட்டியல், மாநில பட்டியல் என்றால் என்ன என்ற குழப்பமும் சிலருக்கு வரலாம். அதற்கான சிறிய விளக்கமும், இன்றைக்குக் கல்வியை ஏகபோக உரிமையாக மத்திய அரசு தன் கையில் வைத்திருப்பதற்கு எது காரணமாக அமைந்தது என்பது குறித்து இங்குப் பார்க்கலாம்.

 

இந்திய அரசியலமைப்பு ஏழாவது அட்டவணையில் மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டான அதிகாரங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மத்திய மாநில அரசுகளுக்கான பொதுவான அதிகாரங்களையும் வகைப்படுத்தியுள்ளனர். அதன்படி மத்திய பட்டியலில் 100 அதிகாரங்களும், மாநில பட்டியலில் 66 அதிகாரங்களும், பொதுப்பட்டியலில் 52 அதிகாரங்களும் இருப்பதாக அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் மத்திய பட்டியலில் உள்ளவற்றைப் போலவே பொதுப்பட்டியலில் உள்ள அதிகாரங்களையும் மத்திய அரசு மாநில அரசுகளிடம் இருந்து பறித்து கபளீகரம் செய்து வருகிறது.

 

குறிப்பாக பொதுப்பட்டியலில் உள்ள அதிகாரங்கள் என்பது ஒத்திசைவு தன்மை அதிகாரங்களைக் கொண்டது. மத்திய அரசு அதில் உள்ள பிரிவுகளில் சட்டங்களை இயற்றும்போது மாநில அரசின் அனுமதியைக் கேட்க வேண்டும். அவர்கள் அனுமதி அளிக்கும் பட்சத்தில் புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். ஆனால் பொதுப்பட்டியலில் கல்வி உள்ளிட்ட சில துறைகள் உள்ளதால் மத்திய அரசை ஆள்பவர்கள் எவ்வித கேள்விகளையும் மாநில அரசிடம் கேட்காமல் நீட் போன்ற தேர்வை தங்கள் விருப்பத்துக்குக் கொண்டு வருகிறார்கள்.

 

இதனால் பொதுப் பட்டியலில் இருந்தாலும் தங்களால் எதுவும் செய்ய முடியாமல் மாநிலங்களை ஆள்பவர்கள் கையை பிசைந்து வருகிறார்கள். அதையும் தாண்டி கல்வி என்பது 1975ம் ஆண்டு வரை மாநில பட்டியில்தான் இருந்து வந்தது. இந்திரா காந்தி பிரதமராக இருக்கும்போது கொண்டு வரப்பட்ட அவசர நிலை பிரகடனத்தின்போது கல்வியை மாநில பட்டியலிலிருந்து மத்திய பட்டியலுக்கு அவர் மாற்றினார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 42வது திருத்தத்தின் மூலம் இதை இந்திரா காந்தி சாத்தியப்படுத்தினார். 

 

அதன்பிறகு இந்த 47 ஆண்டுகளில் எத்தனையோ அரசுகள் டெல்லியில் கோலோச்சினாலும் அவசர நிலையின்போது பறிபோன இந்த உரிமையை மாநிலத்திடம் கொடுக்க எந்த அரசுக்கும் மனமில்லை. குறிப்பாக இந்தியாவில் எது நடந்தாலும் நேரு, இந்திராவே காரணம் என்று கூறும் பாஜக கூட இந்திராவின் இந்தச் சட்டத்தை நீக்காமல் ஏற்றுக்கொண்டுள்ளது. இன்றைக்கு உயர்சாதி ஏழைகள் விவகாரத்தில் எப்படி இருவரும் ஒருவர் மாறி ஒருவர் ஆதரவு தெரிவிக்கிறார்களோ, அதைப்போலவே இந்த விஷயத்திலும் பாஜக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் கோரிக்கைகளைக் காதில் விழாதது போலவே இருந்து வருகிறது. மாநிலத்துக்கு அதிகாரத்தைக் கொடுக்க ஆள்பவர்கள் விரும்புவார்களா என்ன?

 

 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

“2019ல் நம்பிக்கையோடு வந்தேன், 2024ல்...” - பிரதமர் மோடி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 PM Modi campaign and says he came with confidence in 2019 at assam

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளான தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

அந்த வகையில், மொத்தம் 14 தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன்படி, முதற்கட்ட தேர்தலானது வரும் ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தலானது ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டத் தேர்தலானது மே 7ஆம் தேதியும் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் உள்ள சில தொகுதிகளில் நடைபெறும் முதற்கட்ட தேர்தல் நாளை மறுநாள் (19-04-24) நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்திலும், வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அசாம் மாநிலத்தின் நல்பாரி மாவட்டத்தில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று(17-04-24) நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அதில் அவர், “இன்று நாடு முழுவதும் மோடியின் உத்தரவாதம் நடந்து கொண்டிருக்கிறது. மோடியின் உத்தரவாதத்திற்கு வடகிழக்கு பகுதியே சாட்சி.

70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை வசதிகள் வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தேன். அவர்களின் சிகிச்சையை எந்தவித பாரபட்சமும் இல்லாமல் பார்த்துக்கொள்வேன். பி.எம். கிஷான் யோஜனா திட்டத்தின் கீழ் இங்குள்ள விவசாயிகள் ரூ.1000க்கு மேல் பெற்றுள்ளனர். இப்போது, ​​பாஜக இந்தத் திட்டத்தைத் தொடர்வதாக அறிவித்துள்ளது, இதன் மூலம் அசாமின் விவசாயிகளுக்கு எந்தவித பாகுபாடும் இல்லாமல் உதவி மற்றும் அதிகாரம் அளிக்கிறது.

2014ஆம் ஆண்டில் எதிர்பார்ப்புடன் மக்களைச் சந்திக்க வந்தேன். 2019ஆம் ஆண்டில் நம்பிக்கையோடு வந்தேன். தற்போது 2024ல் உத்தரவாதத்தோடு வந்திருக்கிறோம். நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் அணுகி அவர்களுக்குத் தகுதியான வசதிகளை வழங்கத் தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவு செய்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்கு மேலும் 3 கோடி புதிய வீடுகள் கட்டித் தரப்படும். பாகுபாடின்றி அனைவருக்கும் அவை கிடைக்கும்” என்று கூறினார்.