Skip to main content

தியேட்டரை திறக்கணும்னா மினிஸ்டரை கவனிங்க... அ.தி.மு.க. அமைச்சருக்குத் தொடர்பா? அதிர வைத்த ஆடியோ தகவல்!

Published on 08/06/2020 | Edited on 08/06/2020

 

theatre


கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பள்ளிகள், கல்லூரிகள், கோவில்கள், வழிபாட்டுத் தலங்கள், மிகப்பெரிய மால்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகளை மூட அரசு உத்தரவிட்டிருந்தது. தியேட்டர்கள் மூடப்பட்டதால் அதிலுள்ள தொழிலாளர்களும் கடும் பாதிப்புக்கு உள்ளானார்கள். கனவு தொழிற்சாலையான திரைத்துறை மிகப்பெரிய அளவில் பணப்புழக்கம் உள்ள தொழில். பெரும் தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், வெளிநாட்டில் உள்ளவர்கள் என பல்வேறு தரப்பினருடைய பணமும் இதில் புழங்கும்.
 


தியேட்டர்கள் திறக்கப்படவில்லை என்பதால், "பொன்மகள் வந்தாள்' ஓ.டி.டி. தளத்தில் ரிலீசானது. இப்படத்திற்கு வரவேற்பு இருந்தாலும், பெரிய பட்ஜெட் படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆனால்தான் அதிக வசூலைப் பார்க்க முடியும், தொழிலாளர்களுக்குச் சம்பளம் அளிக்க முடியும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சொல்லி வருகின்றனர்.

பல்வேறு கட்டுப்பாடுகள், விதிமுறைகளுடன் தற்போது தளர்வுகள் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் தியேட்டர்களை திறக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தபோது, அமைச்சர், அதிகாரிகளுக்கு ரூ. 5 கோடி லஞ்சமாகக் கேட்கப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்குப் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த சிங்காரவேலன், சென்னை ஆலந்தூர் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகம் அலுவலகத்தில் கொடுத்த புகார் திரையுலகினர் உள்பட பலரையும் 'ஷாக்' ஆக வைத்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் அமைந்துள்ள ஒரு திரையரங்கத்தின் உரிமையாளர், அவர் சார்ந்துள்ள திரையரங்க உரிமையாளர்களுக்கான வாட்ஸப் குரூப்பில் பகிர்ந்து கொண்ட ஒரு ஆடியோ செய்தி எங்களுக்குக் கிடைத்தது. அதன் அடிப்படையில் விசாரித்தபோது, தமிழகத்தில் உள்ள அனைத்துத் திரையரங்க உரிமையாளர்களும் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டத்தை நடத்தி, ஐந்து அம்ச கோரிக்கைகளைத் தீர்மானமாக இயற்றி, சம்பந்தப்பட்ட துறை அமைச்சரையும், அதிகாரிகளையும் அணுகி தங்களது கோரிக்கைகளின் அடிப்படையில் அரசாணை பிறப்பித்துத் தருமாறு கேட்டதாகவும், அதற்கு அரசு தரப்பில் ரூ.5 கோடி லஞ்சமாக கேட்கப்பட்டதாகவும், இதற்காக அனைத்துத் திரையரங்க உரிமையாளர்களிடமும் பணம் வசூல் செய்ததாகவும் தெரியவருகிறது. அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்குத் தர வேண்டும் என்று கூறி திரையரங்க சங்க நிர்வாகிகள் வசூல் வேட்டையை நடத்தி உள்ளனர். இதுகுறித்து விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறது அந்த மனு.

லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ள புகார் கடிதத்துடன் இணைக்கப்பட்ட ஆடியோவும் வைரலாகத் தொடங்கியுள்ளன. அதில் உள்ள சங்கதிகள் அதிர வைக்கின்றன.
 

 


''டிக்கெட் ரேட்டை பொறுத்த வரையில் அரசே ஏற்றிக் கொடுத்து விட்டது. அது ஒரு பக்கம் இருக்கட்டும். எல்லாவற்றையும் கிளீயர் பண்றத்துக்கு மந்திரி 5 கோடி பணம் கேட்கிறாருன்னு சொல்லி பேசி தமிழ்நாடு பூரா வசூல் பண்ணாங்க. எவ்வளவு வசூல் பண்ணாங்க. எவ்வளவு மந்திரிகிட்ட கொடுத்தாங்க. மந்திரிகிட்ட கொடுத்ததுல எந்தக் கோரிக்கையும் ஏற்கவில்லை. மெயின்டனன்ஸ் சார்ஜ் மட்டும் ஏ/சி தியேட்டருக்கு ஒரு ரூபாய் இருந்ததை 4 ரூபாயா ஆக்குனாரு. ஏ/சி இல்லாத தியேட்டருக்கு 50 பைசா இருந்ததை 2 ரூபாயா ஆக்குனாரு. இதுதான் நடந்தது. மீதி எதையுமே காதுல மந்திரி எடுத்துக்கல. எவ்வளவு தமிழ்நாட்டில் வசூல் பண்ணாங்க. எவ்வளவு கொடுத்தாங்க. அதுதான் இன்னைக்கு உள்ள கேள்வி. மீதிப் பணம் யாருக்கிட்ட இருக்கு? எவ்வளவு இருக்கு?

இப்ப உள்ள சங்க நிர்வாகிகள் நீடிக்கிற வரைக்கும் மிடில் கிளாஸ் தியேட்டர் ஓனர்ஸ் வாழ முடியாது. மேக்சிமம் தியேட்டர்களை வைத்திருப்பதாலும் அவங்க பகுதி மந்திரிக்கு பினாமின்னு சொல்றதாலும் அவர் செல்வாக்கா இருக்கிறதுக்கு நம்மள ஊறுகாயா பயன்படுத்துறாரு.

மார்ச் 17இல் இருந்து 3 மாதமாக தியேட்டரை மூடி வைச்சிருக்கோம். தியேட்டர் பிரச்சனை நிறைய இருக்கிறது. அதற்காக ஒரு மனு கொடுத்திருக்கலாம். அரசு செய்யுது, செய்யல அது அடுத்த பிரச்சனை. தலைவரா இருந்து என்ன பயன்? 100 தியேட்டரில் 90 தியேட்டர்கள் லீஸ் பார்ட்டித் தான் நடத்துறாங்க. அவரும் லீசுக்கு நடத்துறாரு. மிடில் கிளாஸ் தியேட்டர் நடத்த முடியல. சம்பளம் போட முடியல. மந்திரி 5 கோடி கேட்குறாருன்னு வசூல் பண்ணியது எங்கே போனது. அதுக்கு முதல்ல விளக்கம் சொல்ல சொல்லுங்க.

தமிழ்நாடு கவர்மெண்ட்டே நாங்கதான். கொங்கு மண்டல மந்திரி நாங்க எது சொன்னாலும் கேட்பாரு. துறை மந்திரி என்ன சொன்னாலும் கேட்பாரு. நாங்க சொன்னா மந்திரிங்க எல்லாரும் கேட்பாங்கன்னு சொல்றார்ல. தமிழ்நாட்டுல தியேட்டர் திறப்பதெல்லாம் மத்திய அரசு முடிவு பண்றது. இவர் செய்த தவறை பத்தி சென்ட்ரல் கவர்மெண்ட் ஹோம் செகரட்டரியிடம் மனு கொடுப்போம். அதுக்கான ஏற்பாட்டைப் பண்ணுங்க. கரெக்டா இருக்கும்'' என முடிகிறது அந்த ஆடியோ.
 

http://onelink.to/nknapp


இந்த ஆடியோவில் பேசப்பட்டிருக்கும் சங்கதிகள் உண்மையா? நோய்த் தொற்று நேரத்திலும் தியேட்டர் திறப்பைக் காரணம் காட்டி வசூலும் கல்லா கட்டுதலும் நடக்கிறதா? லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை தொடங்கி நேர்மையாகத் தொடர்ந்தால், வெள்ளித்திரையில் பளிச்செனத் தெரியும் படம் போல எல்லாமும் தெரிந்துவிடும்.

- வேல். 

 

 

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.