Skip to main content

"நிலையான புகழோடு சிலையாக திகழும் சிவந்தி ஆதித்தனார்...!  பத்திரிகை உலகின் முடிசூடா மன்னன்..!!

Published on 22/02/2020 | Edited on 22/02/2020

இனிய தமிழை எளியநடையில் இயம்புகின்ற 'தினத்தந்தி' நாளிதழை தொடங்கி, படிக்காத பாமரனையும் படிக்க வைத்தார் சி.பா.ஆதித்தனார். அவரது மகன் சிவந்தி ஆதித்தனார், பத்திரிகை மட்டுமின்றி, விளையாட்டு, ஆன்மீகம், தொழில் என சகலகலா வல்லவராக திகழ்ந்தார். அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில், திருச்செந்தூரில் மணிமண்டபம் கட்டி திறந்திருக்கிறது தமிழக அரசு. 60 சென்ட் நிலத்தில் ரூ.1.34 கோடி செலவில் கட்டப்பட்ட மணிமண்டபத்தையும், திருவுருவச் சிலையையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்திருக்கிறார்.


 

sivanthi athithnar


சிவந்தி ஆதித்தனார் வரலாறு:

சி.பா.ஆதித்தனார்–கோவிந்தம்மாள் தம்பதிகளின் மகனாக 1936 செப்டம்பர் 24ஆம் தேதி பிறந்த சிவந்தி ஆதித்தன், சென்னை ராமகிருஷ்ணா உயர்நிலைப்பள்ளியில் படித்தார். பின்னர் மாநிலக் கல்லூரியில் படிப்பைத் தொடர்ந்தார்.

சி.பா.ஆதித்தனார், 1942ல் தினத்தந்தியைத் தொடங்கி, பத்திரிகை உலகில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தினார். எளிய மக்களுக்கும் பத்திரிகை படிக்கும் வழக்கத்தை உண்டாக்கினார். தந்தையைப் பின்பற்றி, பத்திரிகைத் துறையில் சிவந்தி ஆதித்தன் ஈடுபட்டார்.

 

sivanthi athithnar

 

சிவந்தி ஆதித்தனிடம் 1959ஆம் ஆண்டு, ‘தினத்தந்தி’யின் நிர்வாகப் பொறுப்பு வந்தது. அவரது நிர்வாகத் திறமையில், தினத்தந்தி நாளுக்கு நாள் வளர்ந்து, இப்போது பெங்களூர், மும்பை, புதுச்சேரி உள்பட 15 நகரங்களிலும், துபாய், இலங்கை போன்ற வெளிநாடுகளில் இருந்தும் வெளிவருகிறது. இன்றும் அதிக வாசகர்கள் கொண்ட பத்திரிகை என்ற பெருமையை  தினத்தந்தி தக்க வைத்திருப்பதற்கு காரணம் சிவந்தி ஆதித்தனாரின் உழைப்பு தான்.

விளையாட்டிலும் சாதனை:

பத்திரிகை துறையில் மட்டுமல்லாமல், அகில இந்திய கராத்தே பெடரேஷன் நிறுவன தலைவர்,  இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் என விளையாட்டுத் துறையிலும் பங்களிப்பை வழங்கினார். பொறியியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரி தொடங்கி திறம்பட நிர்வகித்து வந்த சிவந்தி ஆதித்தனார், ஆன்மீகப் பணிக்கு அள்ளிக் கொடுக்கும் வள்ளலாக திகழ்ந்தார். தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கோபுரத்தை கட்டிக் கொடுத்து, இன்றும் அந்த பகுதி மக்களால் இரண்டாம் பராக்கிரம பாண்டியன் என்றே அழைக்கப்படுகிறார்.

 

sivanthi athithnar


வாரி வழக்கும் வள்ளல்:

வள்ளல்களுக்கு 'இல்லை' என்று சொல் தெரியாது என்பதை சிவந்தி ஆதித்தனோடு பழகியவர்களுக்கும், அவருக்கு கீழே வேலை பார்த்தவர்களுக்கும் தெரியும். உதவி என்று கேட்டு செல்பவர்களுக்கு அள்ளிக் கொடுப்பதற்கு நிவர் அவரே. இன்றும் பல ஊர்களில் சிவந்தி ஆதித்தனார் பெயரை தாங்கி நிற்கும் பள்ளிக்கட்டிடங்களும், திருமண மண்டபங்களும், வணிக வளாகங்களும் அதற்கு சாட்சி.

இலக்கியம் மற்றும் கல்வித்துறையில் சிறந்த சேவை புரிந்ததற்காக, சிவந்தி ஆதித்தனுக்கு கடந்த 2008ஆம் ஆண்டில் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.

"மல்லிகைப் பூமணக்கும் என்பது சொல்லித் தெரிவதில்லை. அதைப் போல் உலகம் உள்ளவரை பத்திரிகை உலகின் முன்னோடி" என்ற பெருமை சிவந்தி ஆதித்தனாரையே சாரும்.! 

 

 



 

சார்ந்த செய்திகள்

Next Story

எந்த ஊரில் பள்ளிக்கூடம் இல்லையோ, அந்த ஊரில் பள்ளிக்கூடம் கட்டிக்கொடுத்தவர் சிவந்தி ஆதித்தனார் - முதல்வர்

Published on 22/02/2020 | Edited on 22/02/2020

பத்திரிகை மட்டுமின்றி அனைத்துத் துறைகளிலும், கோலோச்சிய டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபம் இன்று திருச்செந்தூர் வட்டம், வீரபாண்டியன்பட்டணம் கிராமத்தில் திறந்து வைக்கப்பட்டது. மணிமண்டபத்தினை திறந்து வைத்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் உரையிலிருந்து., "மரியாதைக்குரிய டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மண்டபத்தினை இன்று திறந்து வைத்ததில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். பத்திரிகையின் அனைத்து துறைகளிலும் கற்றுத் தேர்ந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் ஆற்றிய பணியினை கண்ட அவரது தந்தையார், ‘தினத்தந்தி’-யின் நிர்வாகப் பொறுப்பை 1959ஆம் ஆண்டு ஒப்படைத்தார்.  அச்சமயத்தில், சென்னை, மதுரை, திருச்சி ஆகிய மூன்று இடங்களில் இருந்து மட்டுமே தினத்தந்தி நாளிதழ் வெளிவந்து கொண்டிருந்தது. டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் நிர்வாகத் திறமையால், தினத்தந்தி நாளுக்கு நாள் வளர்ந்து, இப்போது பெங்களூர், மும்பை, புதுச்சேரி உள்பட 15 நகரங்களில் பதிப்பாகி வெற்றிகரமாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த பெருமைக்குச் சொந்தக்காரர் மறைந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் தான் என்றால் அது மிகையாகாது.

 

edappadi palanisamy in sivanthi athithinar function


தினத்தந்தி வெள்ளி விழா நிகழ்ச்சியில் பங்கேற்று அன்று தலைமை உரையாற்றிய பேரறிஞர் அண்ணா அவர்கள் கீழ்கண்டவாறு குறிப்பிட்டார். " ஓர் அமைப்பை தோற்றுவிப்பது என்பது கடினம். ஆனால் நல்ல முறையில் அமைந்த ஓர் அமைப்பினை யாரிடத்தில் ஒப்படைக்கிறோமோ, அவர்கள் அதில் ஒரு துளிகூட அக்கறை காட்டவில்லை என்றால், எவ்வளவு திறமையாக அந்த அமைப்பை அமைத்து இருந்தாலும், வெகு விரைவிலேயே அது கலைந்து விடக்கூடிய ஆபத்து உண்டு. அந்த விதமான நிலையில்லாமல் ஆதித்தனார் அமைத்துக் கொடுத்த ‘தினத்தந்தி’ நல்ல முறையில் இன்னும் நல்ல வளர்ச்சி அடையத்தக்க வகையில், மேலும்  பல்லாயிரக்கணக்கான மக்கள் விரும்பி படிக்கும் தன்மையிலேயே தினத்தந்தி நாளிதழ் இன்றைய தினம் நடக்கிறது என்றால், அதன் நிர்வாகப் பொறுப்பை ஏற்று நடத்திக் கொண்டிருக்கும் நம் மதிப்பிற்குரிய நண்பர் ஆதித்தினாரின் திருமகன் சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு உரிய பங்கு உண்டு என்று அப்பொழுது தெரிவித்தார்.  ஆதித்தினார் ஒரு நல்ல அமைப்பை ஏற்படுத்திக் கொடுத்தது மட்டும் அல்லாமல், அந்த அமைப்பை தொடர்ந்து நடத்த  தக்க பிள்ளையையும் பெற்றெடுத்தார் என்பது அவரது தனிச் சிறப்புக்கு எடுத்துக் காட்டாகும்"என்று, திரு சிவந்தி ஆதித்தன் அவர்களை பாராட்டிப் பேசினார்கள்.

 

edappadi palanisamy in sivanthi athithinar function


தினத்தந்தி பத்திரிகை மட்டுமின்றி, 1962ஆம் ஆண்டு ‘ராணி’ வார இதழ் தொடங்கப்பட்டது.  திரு. ஆதித்தனார் அவர்கள் பாமர மக்களையும், நாளிதழ் படிக்க வைத்தார் என்றால், பட்டி தொட்டி மக்களிடம் வார இதழ் படிக்கும் பழக்கத்தை உருவாக்கித் தந்தவர் மறைந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்கள். இதனைத் தொடர்ந்து ‘ராணி முத்து’, ‘ராணி காமிக்ஸ்’ ஆகிய  இதழ்களையும் தொடங்கினார்கள். இன்று தமிழ்நாடு  மக்களின் வீடுகளை அழகுபடுத்திக் கொண்டிருக்கும் ‘ராணி முத்து’ காலண்டர்களை வெளியிட்டவரும் திரு. பா.சிவந்தி ஆதித்தன் அவர்கள்தான்.

 இவர் திருச்செந்தூர் பகுதியில் பல கல்வி நிறுவனங்களை நிறுவி, அப்பகுதியில் உள்ள ஏழை மக்கள் கல்வி கற்க வழிவகை செய்தார்."இளைஞர்கள் படிக்க வேண்டும். அப்போதுதான் சமுதாயமும், நாடும் முன்னேற்றம் அடையும். படிக்க எந்த ஊரில் பள்ளிக்கூடம் இல்லையோ, அந்த ஊரில் பள்ளிக்கூடம் கட்டிக் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன்"  என்று  கூறியதோடு மட்டுமல்லாமல், அதை செயல்படுத்தவும் செய்தார் மரியாதைக்குரிய மறைந்த திரு. சிவந்தி ஆதித்தன் அவர்கள். தமிழ்நாடு முழுவதும் ஏராளமான இடங்களில் புதிய பள்ளிக்கூடங்கள் அமைக்கவும், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளுக்கு கட்டடங்கள் கட்டவும் தாராளமாக நிதி உதவி செய்தார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 15 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், சி.பா.ஆதித்தனார் நூற்றாண்டு மாளிகையை கட்டிக் கொடுத்தவரும் மரியாதைக்குரிய சிவந்தி ஆதித்தனார் அவர்கள்.

 

edappadi palanisamy in sivanthi athithinar function


தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத் தலைவராக இருந்த அவர், 1987ஆம் ஆண்டு இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆசிய ஒலிம்பிக் சங்க துணைத் தலைவர் பதவி வகித்த அவர், ஆசிய ஒலிம்பிக் சங்கம், சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் பல விருதுகளைப் பெற்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்தவர். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் வாழ்நாள் தலைவராக 2000-ஆவது ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இந்திய துணைக் கண்டத்தில், பத்திரிகை, விளையாட்டு, கல்வி, தொழில் முதலான பல்வேறு துறைகளிலும் பெரும் சாதனையாளராகத் திகழ்ந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் தொண்டினை வருங்கால சமுதாயத்தினரும் அறிந்து கொள்ளும் வகையிலும், அன்னாருக்கு வரலாற்றில் நீங்கா இடம் கிடைத்திடும் வகையிலும், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் பெருமைக்கும், புகழுக்கும் சிறப்பு சேர்க்கும் வகையில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், வீரபாண்டியன்பட்டணம் கிராமத்தில் மணி மண்டபத்தினை திறந்து வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்." என உரையாற்றி மகிழ்ந்தார்.  

 

 

Next Story

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்புவிழா...!! 

Published on 22/02/2020 | Edited on 22/02/2020

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூர் வீரபாண்டி பட்டணத்தில் ஒரு கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு அரசு சார்பில் அவரது சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.

 

Dr. Pa.sivanthi Adithanar Manimandapam Opening Ceremony ... !!


இன்று அந்த மணிமண்டபத்தை திறந்து வைக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்றார். மணிமண்டபம் திறக்கும் இந்த நிகழ்வில் தினத்தந்தி இயக்குனர் சி.பாலசுப்ரமணியன் ஆதித்தன், மாலைமலர் நிர்வாக இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன், தந்திடிவி இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்றனர்.

 

Dr. Pa.sivanthi Adithanar Manimandapam Opening Ceremony ... !!


அதன்பிறகு எடப்பாடி பழனிச்சாமி, பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதேபோல மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த நூலகத்தையும் அவர் பார்வையிட்டார். இந்த விழாவில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வமும் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகிய இருவருக்கும் தினத்தந்தி குழும நிர்வாக இயக்குனர் நினைவுப் பரிசை வழங்கினார்.

 

Dr. Pa.sivanthi Adithanar Manimandapam Opening Ceremony ... !!

 

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து பேசிய பாலசுப்ரமணியன் ஆதித்தன், பத்திரிகை, கல்வி, விளையாட்டு, ஆன்மீகம், பொது சேவை என்று பல துறைகளில் அனைத்து தரப்பு மக்களுக்கும் உதவியதால் என் தந்தை பா.சிவந்தி ஆதித்தனாருக்கு ஐந்து பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டம் கொடுத்து கௌரவித்தனர், மத்திய அரசு பத்மஸ்ரீ பட்டம் வழங்கி சிறப்பித்தது. இந்த சிறப்புகளுக்கு எல்லாம் வலுசேர்க்கும் வகையில் முதல்வர் உத்தரவின் பெயரில் அழகான மணிமண்டபத்தை இன்று தமிழக அரசு அமைத்துள்ளது. உழைப்போம் உயர்வோம் என்பதை தாரக மந்திரமாக கொண்டிருந்தார் சிவந்தி ஆதித்தனார். ஓய்வறியாத உழைப்பு அவரிடம் இருந்தது. அவருடைய உழைப்பை இந்த மணிமண்டபம் பிரதிபலிப்பது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. எதிர்காலத்தில் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இந்த மணிமண்டபம் திகழும் என பேசினார்.