Skip to main content

ஒட்டப்பிடாரத்தில் ஜெயலலிதாவிற்கு சீட்..?

Published on 23/04/2019 | Edited on 23/04/2019

மே 19-ம் தேதி நடக்கும் 4 தொகுதி இடைத் தேர்தலுக்கான மனுத் தாக்கல் நேற்றே (22-04-2019 ) துவங்கிவிட்டது. எதிர்க்கட்சியான திமுகவும், தினகரனின் அமமுகவும் வேட்பாளர்களை களம் இறக்கிவிட்டது. ஆனால், ஆளுங்கட்சியில் இன்னமும் வேட்பாளர் தேர்வில் இழுபறி நீடிக்கிறது. இதுதொடர்பாக அதிமுக தலைமைக்கு நெருக்கமானவர்களிடம் பேசினோம். ஒவ்வொரு தொகுதியிலும் மாவட்ட செயலாளர்களின் தலையீடு காரணமாக வேட்பாளர் தேர்வில் இழுபறி நீடிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

 

Sheet for Jayalalithaa in Ottapidaram

   
"மதுரை மாவட்டத்தில் அமைச்சர்கள் ஆர்.பி உதயக்குமார், செல்லூர் ராஜூ ஆகியோர் ஆளுக்கு ஒரு ஆளை சிபாரிசு செய்கின்றனர். இதுதவிர ஓபன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும் முன்னாள் திருமங்கலம் எம்.எல்.ஏவுமான முத்துராமலிங்கம் ஆகியோரும் 'சீட்' கேட்டு ஒற்றைக் காலில் நிற்கிறார். இதனால், அங்கு முடிவு எடுக்க முடியவில்லை. சூலூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் செ.ம. வேலுச்சாமிக்கு தான் 'சீட்' என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் மறைந்த கனகராஜ் குடும்பத்திற்கு சீட் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக இருப்பதால், அங்கும் முடிவு எடுக்க முடியவில்லை.

 

   
அரவக்குறிச்சியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி களம் காண்பதால், வலுவான ஆளை போட்டிக்கு நிறுத்த வேண்டும் என முடிவு செய்த கட்சித் தலைமை, முன்னாள் சென்னை மேயரும் கரூரை பூர்வீகமாக கொண்டவருமான சைதை துரைசாமியை நிற்க சொன்னது. ஆனால், செந்தில்பாலாஜியின் பிரச்சார வியூகத்திற்கு தம்மால் ஈடு கொடுக்கமுடியாது என்று அவரே விலகிக்கொண்டார். இதனால், கரூர் ஒன்றிய செயலாளரும் அமைச்சர் தங்கமணியின் உறவினருமான கமலக்கண்ணன், இளம்பெண்கள் பாசறையை சேர்ந்த செந்தில் நாதன், அதிமுக பேச்சாளர் நிர்மலா பெரியசாமி உள்ளிட்டோர் தங்களுக்கு 'சீட்' கிடைக்கும் என மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட மாஜி எம்.எல்.ஏ மோகன், ஆவின் சேர்மன் சின்னத்துரை, முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவர் ஜெயலலிதா உள்ளிட்டோர் மனு செய்துள்ளனர். ஆனால், சீட் யாருக்கு என்பதை கட்சித் தலைமை இன்னும் முடிவு செய்யவில்லை.

 

   
ஒட்டப்பிடாரம் தொகுதியைப் பொறுத்தவரை சின்னத்துரையும், மோகனும் இப்போது மந்திரி கடம்பூர் ராஜூ பின்னாடியே சீட்டுக்காக சுற்றி வருகின்றனர். சின்னத்துரைக்கு 'சீட்' வாங்கி கொடுத்தால், நாளைக்கு நமக்கே எதிரியாக வந்து நிற்பார். அதேபோல், மோகனுக்கு 'சீட்' வாங்கி கொடுத்தால், ஜெயித்த பிறகு தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் பக்கம் போய்விடுவார் அல்லது முன்னாள் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பக்கம் சேர்ந்துகொண்டு நமக்கு குடைச்சல் கொடுப்பார். ஏனெனில் மோகனும், மார்க்கண்டேயனும் தொழில் முறை கூட்டாளிகள். இந்த விஷயம் எல்லாம் மந்திரி கடம்பூர் ராஜூ கண் முன்னே வந்து, அவருக்கு உள்ளுக்குள் பயத்தை ஏற்படுத்துகிறது.

 

jayalalitha

   
அதனால் ஓட்டப்பிடாரம் ஒன்றிய முன்னாள் துணைத் தலைவர் ஜெயலலிதாவுக்கு சீட் கொடுத்தால், பெண்ணுக்கு சீட் கொடுத்தது மாதிரியும் ஆச்சு. நம்முடைய அதிகாரத்தை யாரும் பறிக்க முடியாது என கடம்பூரார் நினைக்கிறார். முன்னாள் மாவட்ட அவைத் தலைவர் தங்கராஜின் மகள் தான் ஜெயலலிதா. பாரம்பரிய அதிமுக குடும்பம். எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசி தங்கராஜ். அதனால் தான் தனது மகனுக்கு அண்ணா, ராமச்சந்திரன் என்றும் மகளுக்கு ஜெயலலிதா என்றும் பெயர் வைத்தார். எனவே, ஜெயலலிதாவுக்கு சீட் கொடுக்கலாம் என சில நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் ஜெயலலிதாவின் சகோதரர்கள் ஏற்கனவே சில மோசடிகளில் சிக்கி பெயரை கெடுத்திருக்கின்றனர் என்றும் காதைக் கடிக்கின்றனர்" அதிமுக மூத்த நிர்வாகிகள்.

 

Sheet for Jayalalithaa in Ottapidaram

    


ஏற்கனவே நடந்த 18 தொகுதிகளுக்கு இடைத் தேர்தலில் பணத்தை வாரி இறைத்தும், எதிர்க்கட்சிகளுக்கு தான் ஓட்டு அதிகம் விழுந்திருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. ஆட்சியை தக்க வைக்க குறைந்தது 10 தொகுதிகளிலாவது ஜெயிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலையில், நான்கு தொகுதிகளிலும் இப்படி ஆளுக்கு ஒரு பக்கம் வண்டியை திருப்புவதால், யாருக்கு 'சீட்' வழங்குவது என்பதில் ஓபிஎஸ்சும் - இபிஎஸ்சும் விழி பிதுங்கி நிற்கின்றனர்.
 

 

 

 

 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்