Skip to main content

இருட்டு அறையில் முரட்டு குத்து தெரியும்.. மம்முட்டி, மோகன்லாலை மிரட்டிய ஷகிலா படங்கள் தெரியுமா?

Published on 10/05/2018 | Edited on 11/05/2018

'இருட்டு அறையில் முரட்டு குத்து' திரைப்படம் கௌதம் கார்த்திக் நடிப்பில் கடந்த வாரம் வெளியாகி வசூல் ரீதியாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றி கிடைத்தது இளைஞர்களால்தான் என்கிறார்கள். ஏனென்றால் படம் முழுவதும் இரட்டை அர்த்த வசனங்கள்தான், இல்லை இல்லை கிட்டத்தட்ட அனைத்தும் வெளிப்படையான வசனங்கள் என்று படம் பார்த்தவர்கள் சொல்கிறார்கள். இந்தத் திரைப்படம் ஒரு சாராருக்கு மகிழ்ச்சியையும் கிளர்ச்சியையும் அளித்திருந்தாலும், பலரின் கோபத்தையும், எதிர்ப்பையும் பெற்றுவருகிறது. திரைத்துறையை சார்ந்தவர்களே இந்தப் படத்திற்கு  எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அடுத்து வெளியாகும் திரைப்படங்களின் வசூலையும் இந்தப் படம் பாதிக்கும் என்றும் புலம்புகின்றனர். 
 

iamk

 

 



இப்படி தமிழ் சினிமாவில் ஒரு சின்ன சலசலப்பை இந்த 'A' சான்றிதழ் ஏற்படுத்தியுள்ளது. "இந்தப் படத்தால் தமிழகத்தின் திரையரங்குகள் ஒவ்வொன்றும் பரங்கிமலை ஜோதி' போலாகிவிட்டதாக நடிகர் பொன்வண்ணன் வருத்தம் தெரிவித்திருந்தார். 'பரங்கிமலை ஜோதி' என்ற இந்தப் பெயர் இன்றளவும் பேசப்படுகிறது (ஒரு மாதிரியாகத்தான்). இன்று அந்தத்  திரையரங்கு  புதுப்பிக்கப்பட்டு, புதிய படங்கள் திரையிடப்பட்டாலும் அன்று அது ஏற்படுத்திய தாக்கம் குறையவில்லை. ஒரு காலத்தில், ஒவ்வொரு ஊரிலும் இது போன்ற திரையரங்குகள் இருந்தன. 'சாஃப்ட் பார்ன்' என்று அழைக்கப்படும் A சான்றிதழ் பெற்ற படங்கள் அங்கு திரையிடப்பட்டன. நாளடைவில் இணையம், மொபைல் போன்கள் பெருக்கத்தால் அவற்றுக்கான தேவையில்லாமல் போய் இப்பொழுது அந்த வகை திரையரங்குகள் கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டன. ஆனால், ஒரு காலத்தில், இந்த வகை படங்கள் மலையாள சினிமா உலகையே கைப்பற்றிய கதை தெரியுமா? 1995ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரை இரண்டு சூப்பர் ஸ்டார்களின் படங்களையே ஓடவிடாமல் இரண்டு நாயகிகள் அவர்களின் வசம் மலையாள திரையுலகை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள், தெரியுமா?

 

dubai

 


தமிழ்நாட்டிலிருந்து சென்று கேரளாவில் புகழ்பெற்றதில் மலர் டீச்சருக்கு முன்னவர் 'டிரைவிங் ஸ்கூல்' டீச்சர். ஆம், 'டிரைவிங் ஸ்கூல்' என்பது ஷகிலாவின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று. ஷகிலா நடித்த 'சாஃப்ட் பார்ன்' வகை படங்களின் ஆதிக்கம் 1995க்கு மேல் மெல்ல ஆரம்பித்து 2000ஆம் ஆண்டுகளில் தொடக்கத்தில்  மலையாள சினிமாவையும், அங்கிருந்த முன்னணி நடிகர்களையும் மிகவும் பாதித்தது. எந்த அளவிற்கு பாதித்தது என்றால் 2001ஆம் ஆண்டு, மம்முட்டி நடிப்பில் 'துபாய்' என்ற படம் அப்போது மலையாளத்துக்கு பெரிய பட்ஜெட் என கருதப்பட்ட  ஐந்து கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானது. இந்தத் திரைப்படம்தான் அப்போது மம்முட்டி நடித்த திரைப்படங்களிலே அதிக பட்ஜெட் திரைப்படமாகும். ஆனால், ஷகிலாவின் படங்கள் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்ததால் மம்முட்டியின் திரைப்படம் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்தது. மம்முக்காவின் படம் மட்டுமல்ல லாலேட்டனின் படங்களும் தப்பவில்லை. மோகன்லால், ரம்யாகிருஷ்ணனின் நடிப்பில் நான்கு கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி, 2002ஆம் ஆண்டு வெளியான 'ஒன்னம்மான்' திரைப்படமும் மிகப்பெரிய தோல்வியடைந்தது. ஏனென்றால் அந்த வருடமும் ஷகிலாவின் திரைப்படங்கள் தியேட்டர்களில் கல்லாகட்டிக் கொண்டிருந்தது.

 

 

onnamaan



கோடி கோடியாக பணம் போட்டு எடுத்த படங்களெல்லாம் தோற்கிறதே, ஷகிலா படங்களின் பட்ஜெட் எவ்வளவாக இருக்கும் என்று பார்த்தால் 5லிருந்து 20 லட்சத்திற்குள்தான். ஆனால் வசூல் இரண்டு கோடி, மூன்று கோடி என்று போனது. இதனாலே ஷகிலாவின் சம்பளம் நாள் ஒன்றிற்கு இரண்டு லட்சம் ஆனது. அப்போது மலையாள திரைப்பட உலகில் ஷகிலாவின் ஒரே போட்டியாக இருந்தது ஷர்மிலி மட்டுமே. ஆம், அந்த வகை படங்களில் அவர் சூப்பர் ஸ்டார் என்றால் இவர் உலகநாயகி.  2001ஆம் ஆண்டு மலையாளத்தில் 89 படங்கள் வெளியாகின. அதில் 57 படங்கள் A சான்றிதழ் பெற்ற  'சாஃப்ட் பார்ன்' படங்கள் ஆகும். 

 

shakeela movie

 

 



இந்த மாதிரி படங்கள் பெரிய நடிகர்களை மட்டுமல்லாது துணை நடிகர்களையும், திரையரங்குகளையும் பாதித்தது. மொத்தத்தில் சினிமா துறையையே பாதித்தது. 'இந்த மாதிரியான திரைப்படங்களை நாங்கள் திரையிடமாட்டோம் என்று உறுதியாக இருந்தன இதனால் அவையெல்லாம் திருமண மண்டபங்களாகவும், வணிக வளாகங்களாகவும் உருமாறின. அங்கு பிரபலமான குணச்சித்திர நடிகர்களான ஸ்ரீவித்யா, முரளி போன்றோரெல்லாம் சின்னத்திரைக்கு சென்றனர். இந்தப் போக்கைத் தடுக்க மம்முட்டி இதனை எதிர்த்து சில நடவடிக்கைகள் எடுத்து அப்போதைய முதல்வர் அந்தோணி கவனத்திற்குக் கொண்டு சென்றார். பின்னர், திரையரங்குகள் கண்காணிக்கப்பட்டு சென்சார் செய்யப்படாத காட்சிகளைத் திரையிடும் திரையரங்குகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. அப்படியும் சில மாதங்களுக்கு மேல் அந்த வகை படங்கள் ஆட்சி செய்தன. பின்னர் மெல்ல, மலையாள சினிமாவில் அடித்த புதிய அலையும் மோகன்லால், மம்முட்டி இருவரும் கொடுத்த நல்ல படங்களும் சேர்ந்து மலையாள திரையுலகை கரை சேர்த்தன. 

 

இப்படி, கல்வியறிவில், அரசியல் தெளிவில், சித்தாந்த அடிப்படையில் முன்னணியில் இருக்கும் ஒரு மாநிலத்தில் கலைவடிவமும் மாஸ் மீடியாவுமான திரையுலகை 'அந்த' வகை படங்கள் கைப்பற்றிய வரலாறு இன்னும் பலருக்கும் புதிராகத்தான் இருக்கிறது. தமிழிலும் அவ்வப்போது கவர்ச்சி அதிகமான, இரட்டை அர்த்த வசனங்கள் மிகுந்த படங்கள் வந்திருக்கின்றன, வசூலையும் அள்ளியிருக்கின்றன. ஆனால், அந்த அளவுக்கு, நேரடி A சான்றிதழ் ஷகிலா, ஷர்மிலி படங்கள் ஆதிக்கம் செலுத்துவது இங்கு நடந்ததில்லை. அப்படி நடந்துவிடுமோ என்ற பயமும் இருக்கத்தானே செய்யும்.       

Next Story

மின்னணு வாக்குப்பதிவு குறித்த புகார்; உச்ச நீதிமன்றம் அதிரடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Complaint about electronic voting; The Supreme Court is in action

தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் ஒப்புகை சீட்டையும் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘ஒப்புகைச் சீட்டு இயந்திரம் கடந்த 2017 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதில் வெளிப்படையாக தெரியும் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஒப்புகை சீட்டு உள்ளே விழுகிறதா? என்பது கூட வாக்காளர்களுக்கு தெரியவில்லை. ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் உள்ள ஒரு சட்டப்பேரவை தொகுதியில் ஏதாவது 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகை சீட்டு சரிபார்க்கப்படுகிறது. இது வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே சரி பார்ப்பாகும். இதிலும் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதனைத் தடுக்க மின்னணு வாக்குப்பதிவை மக்கள் நம்பாத பட்சத்தில் ஒப்புகை சீட்டுகளை அதனுடன் ஒப்பிட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்தியாவில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1960ல் 50 லிருந்து  60 கோடிகளில் தான் இருந்தது. ஆனால் தற்பொழுது 97 கோடிக்கு மேல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சராசரியாக 65 சதவீதம் பேர் வாக்களிக்கிறார்கள், என்றால் கூட அத்தனை வாக்குகளையும் ஒப்புகை சீட்டுகளையும் எப்படி, எப்போது எண்ணி முடிப்பது? இத்தனை கோடி வாக்கு ஒப்புகை சீட்டுகளை எண்ணி முடிக்க 12 நாட்கள் ஆகும் எனத் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது என நீதிபதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எந்த விதத்திலும் தவறாக பயன்படுத்த முடியாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. இதுவரை தவறாக பயன்படுத்தப்படுவதில்லை என்றும் கூறுகிறது. ஆனால் எதிர்காலத்திலும் இவ்வாறு நடக்காது என்று  சொல்ல முடியாது எனவே. 100% ஒப்புகை சீட்டுகளை சரி பார்ப்பதற்கு உத்தரவிட வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இரண்டாவது முறையாக இன்று (18.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். அவர் அப்போது வாதிடுகையில், “கேரளா மாநிலம் காசர்கோடு சட்டமன்ற தொகுதியில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் ஒரு முறை வாக்குப்பதிவு இயந்திரத்தின் பொத்தானை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டுகள் விழுவதாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனையடுத்து இது குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை பற்றி பல்வேறு கேள்விகளையும் நீதிபதி எழுப்பியுள்ளனர். 

Next Story

திருமணத்தின் போது மணமகனின் அநாகரிக செயல்; அதிரடி முடிவு எடுத்த மணப்பெண்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
The bride who broke off the wedding in kerala

கேரளா மாநிலம், பத்தனதிட்டம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 32 வயது வாலிபர். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மேலும், இவர்களது திருமணம் அங்குள்ள ஒரு தேவாலயத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருமண நாள் அன்று, மணமகன் மது குடித்துவிட்டு போதையில் மணமேடைக்கு வந்து கொண்டிருந்தார். இதனைக் கண்ட, மணப்பெண் உள்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், மது போதையில் இருந்த மணமகன், பாதிரியாரிடமும், மணபெண்ணின் உறவினர்களிடம் தகராறு செய்துள்ளார். இதனைக் கண்டு கோபமடைந்த மணப்பெண், திருமணம் வேண்டாம் என்று அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனால், அவர்களது திருமணம் பாதியில் நின்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து, இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், அங்கு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட அங்கிருந்தவர்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இரு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மணப்பெண் குடும்பத்தினர், ‘தங்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றும், திருமணத்திற்கு பெரும் தொகை செலவு செய்ததால், அந்த தொகையை நஷ்ட ஈடாக திரும்ப தர வேண்டும். இல்லையென்றால், மணமகன் மீதும், அவரது உறவினர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.

அதற்கு, மணப்பெண் குடும்பத்தினர் செலவு செய்த தொகையான 6 லட்ச ரூபாயை நஷ்ட ஈடாக திரும்ப கொடுக்க மணமகனின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, அனைவரும், அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே, மது போதையில் அனைவரிடமும் தகராறு செய்ததற்காக மணமகனின் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.